“ஹ்ம்ம், ஆமா. போன வருஷம் பண்ண முடியலை தானே? அதான்…”
“இந்த வருஷம் முடியலைன்னா அடுத்த வருஷம்…”
“ப்ச், எல்லாமே ஈஸி தான் உங்களுக்கு…”
“அதனால தான் நீ இன்னும் அங்க இருக்க. புரியுதா?…” என்றவன் குரல் மாறிவிட ஷ்ராவணி சுதாரித்தாள்.
இனி இந்த பேச்சு எந்த திசைக்கு செல்லும் என்று நன்றாகவே தெரிந்துவிட்டது இந்த ஒருவருட பழக்கத்தில்.
ஆம், அவர்கள் இருவரும் அவர்களின் மனதை பகிர்ந்து இதோ ஒருவருடம் கடந்தே சென்றுவிட்டது.
சந்துரு இப்போது இரண்டாம் வருடத்தில் இருக்க வம்சி ஷ்ராவணியிடம் பொறுமையாகவே இருந்தான்.
அவளிடம் பேசி எல்லாம் அறிந்துகொண்ட பின்னர் திருமணம் எப்போது என்ற பேச்சுக்களை அவன் எடுத்ததில்லை.
ஆனால் அந்த வார்த்தையை தவிர்த்து மற்ற எல்லாவிதத்திலும் பேசி வாட்டி எடுத்துவிடுவான்.
இத்தனை மாதத்தில் அதன்பின் இரண்டுமுறை மட்டுமே அவன் நேரில் சந்தித்திருக்க இப்போதும் அவனின் பிறந்தநாளில் பார்க்கலாம் என நினைத்தவளுக்கு வாய்ப்பே தரவில்லை.
“என்ன சைலண்டாகிட்ட?…”
“ஒண்ணுமில்லை….”
“எஸ்கேபிசம்ரா…” என்றான் அவள் வாய் திறக்காமல் தப்பிப்பதை கண்டுகொண்டு.
“நான் என்ன பண்ணேன்? உங்களை பார்க்கனும்னு கேட்டது…”
“என்ன ஃபைட் பண்ணனுமா?…”
“ம்ஹூம் வேண்டாம்…” என்று அவள் சொன்னாலும் அவன் சூடாகியிருந்தான்.
அவனுக்கும் கொள்ளை ஆசை இருந்தது அவளுடன் நேரம் செலவழிக்க என்று. ஆனால் எதற்கும் ஒத்துவரமாட்டேன் என்று சுற்றலில் விடுகிறாளே?
“நீ ஆனந்த் வீட்டுக்கும் வரமாட்ட. சரி தனியா வெளில மீட் பண்ணலாம்னாலும் கேட்கமாட்ட. ஆனா என்னை பார்க்கனும்…”
“ப்ளீஸ்…”
“என்ன ப்ளீஸ்? நான் என்ன சின்ன பையனா? கல்யாணமாகியிருந்தா இந்நேரம் நீ அம்மா, நான் அப்பா. இப்ப போய் என்னை ரோட்ல நில்லு. பார்க்கறேன்னு சொல்ற. உன்னை என்னதான் செய்ய?…” என காய்ந்துவிட்டான்.
“இன்னைக்கு உங்க பர்த்டே…”
“சோ வாட்?…”
“டென்ஷனாகாதீங்க…”
“போடி…” என போனை வைத்துவிட்டான்.
அவளுக்காக மட்டுமல்லாது தனக்காக்கவுமே தான் நேரில் சென்று பார்ப்பதை தவிர்த்து வந்தான் வம்சி.
மனைவி என்னும் ஸ்தானத்தில் அவளை வைத்திருக்க அப்படி மட்டும் தான் பார்க்க முடிந்தது ஷ்ராவணியை.
அருகில் இருந்தால், நெருங்கி சென்றால் அவளை வற்புறுத்திவிடுவோமோ என்னும் எண்ணம் வேறு.
போதாததிற்கு இந்த மனதின் நச்சரிப்பை போக்க அவளின் தேடலில் குளிர் காய்ந்தான்.
‘நண்ணு ஆலஸ்யம் செஸ்துன்னாவ்? அனந்திசண்டி’ “என்னை தவிக்க விடற தானே? அனுபவி” என உள்ளுக்குள் ரசிக்கவே செய்தான்.
நேரம் கிடைக்கையில் வைத்து செய்வதை போல பேசியே அவளை ஒருவழியாக்கவும் தவறுவதில்லை.
மீண்டும் ஷ்ராவணி அழைக்க அலட்சியம் செய்யாமல் உடனே எடுக்கவும் செய்தான் வம்சி.
“என்ன இப்போ?…” என்று எடுத்ததும் காய,
“அந்த ஷர்ட் பிடிச்சிருக்கான்னு கேட்க…”
“ஏன் ஆமான்னு சொன்னா உடனே இங்க வந்து நீயே போட்டுவிடுவியா எனக்கு?…” என்றதும் கப்சிப் ஷ்ராவணி.
மல்லுக்கு நின்றால் இன்னும் பேசுவான் அவன் என்பதை நன்றாக அறிந்துவைத்தவள் அவ்விடத்தில் அமைதியாகி போனாள்.
“இது ஒன்னை நல்லா கத்துவச்சிருக்க நீ…” என்ற போதும் பேச்சில்லை.
“பேசவாவது செய்யேன். வாய்ஸ் கேட்டுக்கறேன்…” அதற்கும் வம்சி குதிக்க,
“பேசினா உங்களுக்கு கோபம் வருதே?…” ஷ்ராவணி மெல்லிய குரலில் சொல்ல,
“ஊர் உலகத்துல இப்படி எவனும் இருக்கமாட்டான். என்னை நீ ரொம்ப படுத்தற ஷ்ராவணி…” என்று சொல்ல திக்கென்றது ஷ்ராவணிக்கு.
அத்திபூத்தார் போன்ற சில நேரங்களில் மட்டுமே அவனின் வாயிலிருந்து அவளின் பெயர் வரும்.
பெயரை சொல்ல சொல்லி அத்தனை மல்லுக்கட்டினாலும் அசையாதவன் அவனின் அதிருப்தி சமையங்களில் பல்லை கடித்துகொண்டு அந்த பெயரை கடித்து துப்புவான்.
இதற்கு சொல்லாமலே இருக்கலாம் என்றளவிற்கு வெறுத்துவிடும் ஷ்ராவணிக்கு.
இப்போதும் அவன் அப்படி சொல்ல மீண்டும் மௌனமாகிவிட அதில் ஏக கடுப்பு.
“இன்கா ஆறு நெலா உந்தி….” என்றவன் பின் அவனே,
“இன்னும் ஆறு மாசம் தான்…” என்றான்.
“என்ன?…”
“என்ன என்ன? காதுல விழலையா? தமிழ்ல தானே சொன்னேன்?…” என அதற்கும் காய்ந்தான்.
“நான் உங்க பர்த்டேக்கு விஷ் பண்ணேன். அதுக்கு தான் கால் பண்ணேன்….”
“தேவையில்லை. இப்படி ஒரு விஷ். என் பக்கத்துல இருந்து விஷ் பண்ணு. வாங்கிக்கறேன்…”
“எதுக்கு இவ்வளோ கோவம்? புரிஞ்சுக்கோங்க…”
“நீக்கு அர்த்தமாயிந்தா? இல்லை நீ புரிஞ்சுக்க ட்ரை பன்றியா?…” அவளுக்கு மேல் அவன் பொரிய,
“நான் காலையில பேசட்டுமா?…” என்றாள் உடனே.
“ஏன்? ஏன்? இப்ப பேசு…” என்றவன்,
“வீடியோ கால் வா…” என அடமாய் அழைத்தான்.
“இப்பவா? இப்ப இந்த நேரம் எப்படி?…”
“ஏன்? இப்ப என்ன? அதான் உன் ரூம் மேட் ஊருக்கு போயிருக்காங்களே?…”
“ஆமா தான். ஆனாலும்…”
“ஓகே பை…” என மீண்டும் கட் செய்ய வெகுநேரம் சுணக்கத்துடனே அமர்ந்திருந்தவள் அரைமணி நேரம் கழித்து அவனுக்கு அழைக்க நினைத்தாள்.
“தூங்கிட்டீங்களா?…” என கேட்க பதிலில்லை. ஆனால் உடனே பார்த்துவிட்டான்.
அழைக்கவா வேண்டாமா என்னும் ஒரு போராட்டம் எழ வம்சியே அழைத்துவிட்டான்.
“பிக்கப்…” என்று செய்தியுடன் அழைப்பும் வர இரவு உடையில் இருந்தவள் உடனே ஒரு துப்பட்டாவை மேலே போர்த்தியபடி அழைப்பை ஏற்றாள்.
“ஹாய்…” என்று அவனை பார்த்ததும் புன்னகைத்து சொல்ல அவனிடம் ஆராய்ச்சி பார்வையே.