“ஹே நிலா…” இன்னும் விடாமல் சிரித்தான் அவள் அங்குமிங்குமாய் தேடுவதை பார்த்து.
வம்சியின் பார்வைகள் சிரிப்பிலிருந்து மெல்ல ரசனைக்கு மாற ரசனை உரிமைக்கு தாவ மனம் போகும் திசையில் உடனே காலை கட் செய்தான்.
“நன்னே ஆலஸ்யம் செய்யலான்னே செஸ்துந்தி ஈ பில்லா…” (என்னை தவிக்க விடன்னே பன்றா இந்த பொண்ணு) என்று தலையை கோதிக்கொண்டு முகத்தை மூடியபடி அமர்ந்துவிட்டான்.
மீண்டும் ஷ்ராவணி போன் செய்ய எடுக்கவில்லை வம்சி. ஏற்கனவே வீட்டில் திருமணம் எப்போது என சாந்தினி நச்சரித்துக்கொண்டு இருக்க காத்திருப்புகள் வேறு அவனை கரைத்துக்கொண்டிருந்தது.
தள்ளி நின்று பார்த்து தவிக்கும் இந்த நிலையை அறவே வெறுத்துக்கொண்டிருந்தான்.
தானே பேசலாம் என்றால் அதற்கும் இடமளிக்காமல் அவள் தவிர்க்க அதுவே கோபத்தை கிளறியது.
கடந்த ஒருமாதமாக இன்னும் அதிகமான கேள்விகள் அதிலும் அவனின் சித்தப்பாவும் அழைத்தே கேட்டிருந்தார்.
‘திருமணம் செய்யும் முடிவா? இல்லையா?’ என நக்கலாக கேட்டுவைக்க அதுவேறு அவனை இன்னும் கடுப்பை கிளப்பியிருந்தது.
கண்களை மூடியபடி படுக்கையில் சாய அடுத்தடுத்து ஷ்ராவணியிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது.
சிலநொடிகள் அதனை பார்த்தபடி இருந்தவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“அதுக்குள்ளே என்ன கோவம்? ஏன்?…”
“ப்ச், நிலா. கால் கட் பண்ணினா உடனே கோபம் தானா? இல்லை உன்கிட்ட கோபமா மட்டும் தான் பேசறேனா?…” ஆயாசத்துடன் அமைதியாக கேட்க அது அவனின் தனிமையின் வலி என்பது விளங்கவில்லை ஷ்ராவணிக்கு.
“இல்லையா? நான் கூட…” என்றவள்,
“நான் வீடியோ கால் வரேன்…”
“வேண்டாம்…”
“ஏன்?…”
“வேண்டாம்ன்னா வேண்டாம். நீ தூங்கு…”
“இல்லை அந்த புக் எடுத்துட்டேன். உங்களுக்கு விஷ் பண்ண…” என்று படபடப்பாய் சொல்லவும் வம்சியின் முகத்தில் மென்மை படர்ந்தது.
“வேண்டாம். தமிழ்லோனே சொல்லுரா தல்லி…” என்றான்.
அவனின் பிரத்யோக அழைப்பு வம்சியிடமிருந்து வந்த பின் தான் ஷ்ராவணிக்கு நிம்மதியானது.
“ஹப்பா, நான் பயந்துட்டேன்…” என்று சொல்லும் பொழுதே வம்சிக்கு கஷ்டமாகிவிட்டது.
“ஸாரி ரா…” என்றான் மெதுவாய்.
“அதெல்லாம் இல்லை….” என்றவள் பேசும் முன் அந்த பேச்சுக்களை மாற்ற,
“சந்துரு விஷ் பண்ணிருந்தான்…”
“இப்போவா?…”
“ம்ஹூம், உன்னை வீடியோ கால் கூப்பிட்டேன்ல. நீ கால் பன்ற அந்த கேப்ல. சந்துரு, ப்ரணவ், ஷைலு, சித்தி, ஆனந்த் எல்லாரும் கால் பண்ணினாங்க…”
“ஓஹ்…” என்றாள்.
சந்துரு போன் செய்ததும் சந்தோசம் தான். ஆனால் இன்னும் வம்சியை ஒரு வெல்விஷர், ஃப்ரென்ட் என்ற முறையில் தான் அழைத்து பேசியிருக்க ஷ்ராவணிக்கு உள்ளுக்குள் உறுத்தியது இப்படி மறைக்கிறோமே என்று.
வம்சி எதையும் சொல்லிக்கொள்ளவில்லை சந்துருவிடம். ஷ்ராவணியையும் சொல்ல விடவில்லை.
“படிப்பு முடியட்டும். இப்ப எதுவும் சொல்லவேண்டாம். நாமலே அவனோட மைண்ட்ல எதையும் ஏத்த வேண்டாம். அதுவும் நீ இன்னும் ஓகே சொல்லாதப்போ இது அனாவசியம்…” என்றிருந்தான்.
“என்னவோ அக்சப்ட்டே பண்ணாத மாதிரி பேசறீங்க?…” என்றவளிடம்,
“ஆமா, அக்சப்ட் பண்ணின மாதிரியும் இல்லையே? இருந்தா என்னை உன் வீட்டுல பேச விட்டிருப்ப தானே?…” என்றிருந்தான்.
அந்த விதத்தில் அத்தனை கோபம் வம்சிக்கு. பணவிஷயம் தானே பிரச்சனை. உன் சம்பளம் எப்போதும் போல உன் வீட்டிற்கே தந்துகொள் என்றும் சொல்லி பார்த்துவிட்டான்.
ஆனாலும் ஷ்ராவணி ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் கொஞ்சம் நாள். கொஞ்சம் நாள் என்று தள்ளி போட்டுக்கொண்டு இருந்தாள்.
இதற்கு மேல் அவளிடம் எப்படி பேசவென்றும் தெரியவில்லை. அதுவே சில நேரத்தில் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு நிறுத்தியது அவனை.
ஷ்ராவணி நிலையோ எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததை போல இன்னுமே ஊசலாட்டம் தான்.
சிவரஞ்சனியின் மகப்பேறில் ஆரம்பித்து குழந்தைக்கு என ஒவ்வொன்றும் பெற்றோர்களை பந்தாட அந்த பந்து ஷ்ராவணியின் தலையில் வந்து விழுந்தது.
முடிந்தளவு மகளின் சுமையை குறைக்கவென்று சுலோச்சனா வரும் சமையல் வேலைகளை இழுத்து போட்டு பார்க்க அவருக்கும் அதில் முடியாமல் போனது.
“ம்மா, நீ எந்த வேலையும் ஒப்புக்காத. சின்ன குழந்தை இருக்கற வீட்டுல எவ்வளவு வேலை இருக்கும்? இதுல நீ சமைக்கவும் போறேன்னா உன் உடம்பு என்னவாகும்? பேசாம இரு. சமாளிக்கலாம்…” என்றாள்.
ராமனுக்கு இன்னும் அதே நிலை தான். வேறு எங்கும் வேலை என்று தேடவும் தோன்றவில்லை.
“எங்கையாச்சும் பகுதிநேர கணக்கு எழுதற வேலையோ, கடைகண்ணில வேலையோ கேட்கலாமேங்க…” என சுலோச்சனா கேட்க,
“எனக்கு இதை விட்டா வேற என்ன வேலை தெரியும்ன்னு வேற வேலைக்கு போக சொல்ற?…” என்று வீட்டில் அதற்கும் சண்டை.
“அவளும் எவ்வளவு தான் சுமப்பா? பாவமில்லையா?…” என இளையமகளுக்கு பரிந்து பேச,
“இந்த கஷ்டம்லாம் வரும்னு தான் ரெண்டுவருஷம் பொறுத்து மகனை படிக்க வைக்க சொன்னேன். கேட்டாளா இவ? அவனும் ஆளுக்கு முன்னாடி போனான்…”
அவர் அதிலேயே தான் நின்றார். அத்தனை கோபம். அதிலும் குழந்தை பிறக்கவும் செலவுகள் கட்டவிழ வீட்டில் தட்டுப்பாடு வர வர ஆத்திரம் கிளர்ந்தது.
மூத்த மகள் வேறு என் பிள்ளைக்கு இது குறை, அது குறை என்று எப்போதும் பேச அங்கே சொல்ல முடியாததெல்லாம் மனைவி, மகளிடம் தான் கொட்டுவது.
“இதுவே வணி சம்பாதனை பண்ணாம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்போம்? அதை யோசிங்க…” என்று பொறுக்காமல் சுலோச்சனா சொல்லிவிட உணவை வீட்டில் கூட மறுத்தார் ராமன்.
கோவிலில் பிரசாதத்தை உண்டு, அங்கேயே நேரம் கழிந்து வர என வீட்டில் இருக்கவே பிடித்தமில்லாமல் போனது.
எந்த நேரமும் மூத்த மகள் நச்சு நச்சென்று எதையேனும் சொல்லி குத்தி பேச மருமகன் வேறு என்னவோ பிள்ளையை சரிவர கவனிக்காததை போல ஊராரின் முன்னால் பேசிவைக்க என்று ரத்த அழுத்தம் தான் கூடியது ராமனுக்கு.
விடுமுறை என்று வீட்டிற்கு வந்த மகனின் முகத்தை கூட பார்க்காமல் அத்தனை வீராப்பு வேறு. கோபத்தை எப்படியெல்லாம் காட்டமுடியுமோ அப்படி மற்ற பிள்ளைகளிடம் காட்டினார்.
மூத்தவளிடம் காட்டினால் அதுவேறு இன்னும் பெரிய பிரச்சனையாக தான் முடியும் என்று அங்கே பல்லை கடித்துக்கொண்டவருக்கு இளையவர்கள் இளக்காரம். வடிகாலாகி போனார்கள்.
இதில் வெளியே நக்கல் பேச்சுக்கள் அவரை சுற்றிக்கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை வருடம் மகளை வைத்து பிழைப்பை ஓட்டுவது என்று கேட்டு.
கோபம் வந்தாலும் மாறாக வேறு வழியும் இருக்கவில்லையே என அதையும் சகித்து போகத்தான் செய்தார்.
ஒரு வருடத்தில் குழந்தைக்கான சீர்வரிசைகள் எல்லாவற்றையும் ஒரு குறைவின்றி பெற்றுக்கொண்டாள் சிவரஞ்சனி.
“பொண்ணா பிறந்திருக்கு? ஆம்பிளை பிள்ளை தானே? இப்ப செஞ்சா அடுத்து அவன் கல்யாணத்துக்கு தான் செய்ய போறீங்க. இப்ப குறையே வர கூடாது…” என அவளின் புகுந்தவீட்டிற்கு முன் மகள் திட்டவட்டமாக சொல்லியிருந்தாள்.
மூத்தவள் அனுசரணையாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அவளும் கழுத்தில் கத்தி வைக்க யாரை சொல்லி நோவது என்று பொறுமையாக தான் போனார்கள்.
எத்தனை கஷ்டத்திலும் ஷ்ராவணியிடம் கூடுதலாய் எதையும் வாங்க முடிவதில்லை.
கடன்கள் ஓரளவு அடைபட்டுக்கொண்டே வர சந்துருவின் படிப்பு என்று ஒருபக்கம் செல்ல வீட்டில் கூடுதல் செலவிற்கு தந்தையை தான் சொன்னாள்.
“உங்களுக்கு கிடைக்கிற வேலையை நீங்க ஏன்ப்பா அவருக்கு விடனும்? நீங்க பாருங்கப்பா. நம்ம குடும்பத்தை நாம தான் பார்த்துக்கறோம்ன்றது மட்டுமில்லை. இப்ப அவரோட குடும்பத்தையும் நாம பார்த்துக்கறோம்…” என சொல்லியிருக்க,
“என்ன நினைச்சு பேசற? உன் காசுல வாழுதுன்னா? உன் அக்காவுக்கு நாம செய்யவேண்டியது கடமை…” என்று மகளிடம் எரிந்துவிழுந்தார்.
“கடமை எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்பா. இது அதீதம். ரொம்ப அதிகமாவே அவளுக்கு கொடுத்திட்டிருக்கோம். ஏன் நம்ம கஷ்டம் அவளுக்கு தெரியாதா என்ன?…” என்று கேட்க,
“தெரியுதோ தெரியலையோ? செய்யவேண்டியதை செஞ்சு தான் ஆகனும். ஏற்கனவே ஊருக்குள்ள பேசறாங்க. நீயும் என்னை உன் பங்குக்கு பேசி அசிங்கப்படுத்துறியா? பேசாம சந்நியாசம் வாங்கிட்டு போயிறலாமன்னு இருக்கு…”
எல்லா கோபத்தையும் சின்ன மகளிடம் கொட்டிவிட்டு இரண்டு நாட்கள் சொல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டிருந்தார் ராமன்.
அதிலிருந்து இதை பற்றி பேசவே குடும்பத்தினருக்கு அச்சமாகி போக இவை எதற்கும் அஞ்சாதவன் ராமேஸ்வரம் வந்து சேர்ந்திருந்தான்.
ஏற்கனவே இளையமகளின் மீது அதிருப்தியில் இருந்தவர் அவளின் விஷயம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
ஷ்ராவணி மூலம் வீட்டிற்கு தெரிந்துவிட்டதை கேள்விப்பட்டு பெரிதாய் அதிராமல் எந்தவித அலட்டலுமின்றி அங்கே வந்து சேர்ந்தான் வம்சி அவனின் சித்தியுடன்.
எப்படி தெரிந்தது என்றெல்லாம் ஆராயும் எண்ணமே இல்லை. இப்போதாவது தானாக தெரிந்ததே. அது போதும் என்று உடனே கிளம்பி வந்துவிட்டான் வம்சி சைத்ரயேஷ்.
அவன் வந்த விதமும், குடும்பத்தினரை கவனித்த விதமுமே ஷ்ராவணியை கலங்கடித்தது.
வந்தவன் வந்ததோடு நிற்கவில்லை. தங்கள் திருமணத்தை எப்படி நடத்திக்கொள்ள வேண்டுமோ அப்படி நடத்திக்கொள்ளவும் செய்தான்.