“இங்க அப்பா ஒரு ஆட்டம் ஆடிட்டார். அத்தனை பேச்சு. அம்மா அழுதுட்டே இருக்காங்க…”
“ப்ச், பின்ன உன்னை பாராட்டவா செய்வாங்க? இல்லை கொஞ்சுவாங்களா என்னை மாதிரி…”
“என்ன?…”
“நா தல்லி கதான்னு சொல்ல அவங்க என்ன வம்சி சைத்ரயேஷா?…” என கிண்டல் பேசவும் கோபத்தில் வாயை மூடிக்கொண்டாள்.
“பிரேமன்ட்டே ஏன்ட்டிம்மா தல்லி? சூடு….”
“ஹ்ம்ம்…” என முனங்கலாக அவள் சொல்ல,
“என்ன இன்னும்? இனி பேஸ் பண்ணி தான் ஆகனும்….”
“ஹ்ம்ம்…”
“ப்ச், உன்னை சென்னைக்கு போக வேண்டாம் அப்படி எதுவும் சொன்னாங்களா?…”
“இல்லையே?…”
“பின்ன, சரியாகிடும்…”
“ஓகே, நான் சமாளிச்சுப்பேன்…”
“என்னன்னு? நீ இவ்வளோ கேர்லெஸ்ஸா இருப்பன்னு நம்பவே முடியலை…” இன்னும் நினைத்து சிரித்தான் அவன்.
“சிரிக்காதீங்க. ஏதோ ஒரு ஞாபகத்துல போனை லாக் எடுத்து குடுத்தா சந்துரு அம்மாட்ட குடுத்து அம்மாட்ட இருந்ததை குழந்தைக்கு வீடியோ காமிக்கறேன்னு அக்கா வாங்கி போட்டோஸ், சாட்ஸ் எல்லாம் பார்த்துட்டா…”
“அசிங்கமாவே இல்லையா உங்க அக்காவுக்கு?…” இதில் வம்சிக்கு அத்தனை கோபம் தான்.
“என்ன நீங்க?…”
“தப்புரா. என்னதான் விஷயம் இதுமூலமா தெரிஞ்சதுன்னு சந்தோஷம்ன்னாலும் வெரி பேட் பிஹேவியர். இன்னொருத்தரோட பர்ஸனல்…” என சூடாக அவன் பேச,
“ஓகே ஓகே கோவப்படாதீங்க…”
“நீ எங்க இருக்க?…”
“இப்ப மாடில வந்து பேசறேன்…”
“உன் அக்கா எங்க?…”
“நான் வரவும் என்ன செய்யறேன்னு பின்னாடியே வந்து நிக்கறா…”
“அதான் மேடம் சோகத்தை கூட ஹஸ்கி வாய்ஸ்ல செப்புறீங்களோ?…” என கிண்டலுடன்.
“ப்ச்…”
“எதாச்சும் குடுத்தியா நிலா?…” குறும்பாய் அவன் குரல்.
“என்ன நடந்துரும்? ஒண்ணுமே இல்லை. நீ வொர்ரி பண்ணிக்காத. என்னைக்கு ரிட்டர்ன்?…”
“நாளை மறுநாள்…”
“ஹ்ம்ம், நான் வந்து பேசனுமா?…” என கேட்க,
“அச்சோ வேணாம். வேணாம். நானே சமாளிச்சுப்பேன். நீங்க வரவேண்டாம்…” என்ற பொழுதே பின்னால் ராமனின் குரல் கர்ண கொடூரமாக கேட்டது.
“நீ அடங்கமாட்டயில்ல. உன்னை…” என்று கேட்டபடி ஷ்ராவணி கன்னத்தில் அடித்திருக்க போனில் லைனில் இருந்தவனும் அதனை கிரகித்தான்.
மொபைலை உடனே சுவிட்ச் ஆஃப் செய்தவள் கீழே சென்றுவிட அதற்குள் அக்கம்பக்கத்தில் சில பேச்சுக்கள்.
வாசல் திண்ணையில் வைத்து ரமேஷ் ராமனுக்கு புத்தி சொல்வதை போல பேச விஷயம் வெளியே கசிந்துவிட்டது.
“சென்னைக்கு வேலைக்கு அனுப்புனீங்களா இல்லை வேற எதுக்குமா?…” என பேசியிருக்க அதற்கும் சேர்த்து ஷ்ராவணியிடம் தான் வந்து காய்ந்தார்.
“அவன் பர்ஸ்ட் டைம் வந்தன்னைக்கே அத்தனை தோரணை. யாருக்கும் அடங்கமாட்டேன்னு நின்னானே? புது வீடுன்ற மாதிரியா பேசினான்? எவ்வளோ அதிகாரமா பேசினான். எனக்கென்னமோ முன்ன இருந்தே பழக்கம்ன்னு தான் தோணுது…”
இப்படி வாய்க்கு வந்தபடி பேசி பேசியே ராமனை மூர்க்கமாக்கியிருந்தான் ரமேஷ்.
இயலாமையும், கோபமும், அவப்பேச்சுக்களும் என ராமன் கொந்தளித்து மகளை வாய்க்கு வந்தபடி எசிவிட்டார்.
எதற்கும் ஷ்ராவணியிடம் பதிலில்லை. பேசினால் அதனை கொண்டேனும் இன்னும் பேசுவார்கள் என மௌனமாகிவிட்டாள்.
“பேசாம இங்க யாருக்காச்சும் புடிச்சு கட்டி வைங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலைக்கு போகட்டும்…” என சிவரஞ்சனி யோசனை வேறு சொல்ல,
“அக்கா, உன் வேலையை பாரு…” என ஷ்ராவணி கத்த,
“நீ பார்த்து வச்ச வேலையை தான் பார்த்தேனே? எப்படிலாம் பேசியிருக்க நீ?…” என்று சிவரஞ்சனி புகைச்சலுடன் பேசினாள்.
“இந்த மகளை தான் தலையில வச்சு கொண்டாடிட்டு இருக்கீங்க…” என்று ராமனுக்கு எற்றிவிடவேறு செய்தாள்.
வீட்டில் இருக்கவே தலைவேதனையாக போனது ஷ்ராவணிக்கு. சுலோச்சனா மகளிடம் இப்படி ஒன்றை எதிர்பாராததில் அழுதுகொண்டே இருக்க சந்துருவுக்கு இது சரியா தவறா என்று தெரியவில்லை.
ஷ்ராவணியை ஆதரிக்கவும் மனது வரவில்லை. அதே நேரம் வீட்டினர் தன் அக்காவை இப்படி பேசுவதையும் ஏற்கமுடியவில்லை.
அதுவும் வம்சியை ஷ்ராவணி விரும்ப கூடும் என்று நினைத்தும் பார்க்கவில்லை சந்துரு.
வம்சியை சென்னையில் வைத்து ஒருமுறை மட்டுமே பார்த்திருந்தான். பார்த்த பொழுது கூட இருவரிடத்திலும் இப்படி எதையும் கவனித்ததாக தெரியவில்லை.
அவனின் பேச்சுக்களில் அக்கறையும், அதில் தொனிக்கும் அதட்டலும் மட்டுமே கவனித்திருந்தான் சந்துரு.
இப்போது இருவரும் விரும்ப கூடும் என நினைத்திராதவன் பாவமாய் பார்த்தபடி ஒதுங்கி நின்றான்.
அன்றைய நாள் அப்படியே கழிய மறுநாள் காலை யாருமே எதிர்பாராதது. விடிந்த சில மணி துளிகளிலே வந்து சேர்ந்துவிட்டான் வம்சி, தனது சித்தி சாந்தினியுடன்.
இப்போதைக்கு திருமணம் செய்வதாக இல்லை என சொல்லி அங்கிருந்து கிளம்பும் எண்ணத்தில் அவளிருக்க திடீரென்று வந்து நின்றவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
“குட்மார்னிங்…” என அவளை பார்த்து கடினமான முகத்துடன் சொல்ல இன்னும் ஷ்ராவணி அதிர்விலிருந்து வெளிவரவில்லை.
“எங்க உங்க அப்பா?…” என்றான் அடுத்ததாய்.
வீட்டில் ராமன் இல்லை. சந்துருவும், சுலோச்சனாவும் மட்டுமிருக்க சிவரஞ்சனி கூட இரவு தான் அவளின் வீட்டிற்கு சென்றிருந்தாள்.
“சந்துரு, உங்கப்பாவுக்கு கால் பண்ணி வர சொல்லு…” என அதிலும் அதிகார தோரணை தான்.
ஷ்ராவணியை ராமன் அடித்ததில் அத்தனை கோபம் வம்சிக்கு. அவன் வந்திருந்த விதமே அப்பட்டாமாய் காட்டியது.
பெண்கள் மீது கை நீட்டுவது என்பதை அறவே வெறுப்பவன். அது இயலாமையின் வெளிப்பாடு என நம்புபவன். ராமனின் செயல் சுத்தமாய் பிடிக்கவில்லை.
“சைத்ரயேஷ் நிஷப்தங்கா உண்டு. நேனு மாட்லாடுதானு…” (சைத்ரயேஷ் அமைதியா இரு. நான் பேசறேன்)
“பின்னி…” என சித்தியை பார்த்தவன் மீண்டும் ஷ்ராவணியை பார்த்துவிட்டு,
“வெல்கம் பண்ணமாட்டியா?…” என்றான் அதட்டலாக.
“வா….ங்க…” என திக்கி திணறி சாந்தினியை வரவேற்றவள் முகத்தில் ஏகத்திற்கும் பீதி.
“நீங்க ஏன் இங்க?…” என வம்சியிடம் கேட்க,
“நீ இங்க தானே இருக்க நிலா…” என்றான் அமர்த்தலாய்.
என்ன நடக்கிறது என தெரியாமல் சுலோச்சனா எல்லாவற்றையும் கலக்கத்துடனே பார்த்து நின்றார்.
“இவங்க நிலா அம்மா…” என்று வம்சி சாந்தினியிடம் அறிமுகம் செய்தான்.
“நமஸ்காரமண்டி…” என்று சாந்தினி அவரிடம் சொல்ல பதிலுக்கு சொல்ல கூட அவருக்கு தோன்றவில்லை.
ஏற்கனவே வெறுமனே வீட்டு பிரச்சனைக்கே சந்நியாசம் என்று பேசியவர் ராமன்.
இப்போது என்ன முடிவெடுப்பாரோ என பயந்து பார்க்க வந்துவிட்டார் அடுத்த நிமிடம் ராமன்.
“இவளை உள்ள போக சொல்லு சுலோ…” என வீட்டிற்குள் நுழையும் போதே அத்தனை சத்தம் ராமனிடம்.
“ப்பா…”
“இப்ப நீ வாயை மூடலை செவில்லையே விடுவேன்…” என்று மகளை அடிக்க பாய,
“எங்க அடிங்க?…” என்று நின்றான் வம்சி ஷ்ராவணி அருகே வந்து.
“மாமா இங்க என்ன நடக்குது?…” என ரமேஷும், அவனின் பின்னே கையில் குழந்தையுடன் சிவரஞ்சனியும் வந்துவிட அவர்களை கண்டு அலட்சியமாய் பார்வையை திருப்பினான்.
“என்ன உங்க பிரச்சனை? நானும் உங்க பொண்ணும் விரும்பறோம். அதான் பிராப்பரா பேச என் சித்தியோட வந்திருக்கேன்…” என்றான் விரைப்பாய்.
“இங்க பாருங்க தம்பி, நீங்க இங்க காரியம் செய்ய வந்தீங்க. வந்த இடத்துல உதவுனீங்க. அதுவரைக்கும் போதும். அதுக்கு மேல எந்த உறவும் வேண்டாம். எங்க குடும்பத்துக்கு இது சரிப்பட்டு வராது…” என்றார் முகத்தை திருப்பியபடி.