“ஏன் சரிப்பட்டு வராது? யாரோ மூணாவது மனுஷன்கிட்ட பொண்ணு வேலைக்கு வரா. கொஞ்சம் பார்த்துக்கோங்கன்னு சொல்லும் போதெல்லாம் இது தெரியலையோ?…” என்றான் அவனும்.
‘சுத்தம், இவன் என்ன பேசுகிறான்?’ என ஷ்ராவணி சஞ்சலத்துடன் பார்த்தாள் வம்சியை.
“கல்யாணம் பண்ணிக்கறது மட்டும் எப்படி சரிவராது? எங்க ரெண்டுபேருக்கும் பிடிச்சிருக்கு…” என்றவன் குரலில் பிடிவாதம்.
பெண்ணை கேட்பவன் போலல்லாது விரைப்புடன் சண்டைக்கு நிற்பவன் போல அவனிருக்க அதுவே சுத்தமாய் பிடிக்கவில்லை ராமனுக்கு.
மற்றவையும், சம்பந்தம் செய்வதும் ஒன்றா என கோபமாய் பார்த்தவர் அவனிடம் பேச விருப்பப்படவில்லை.
“எதுவும் பேசவேண்டாம், வெளில போங்க…” என ராமன் சொல்ல,
“அதானே? வெளில போங்க முதல்ல. வந்துட்டாங்க. ஒரு பொண்ணு லட்சணமா கண்ணுக்கு தெரிஞ்சிட கூடாதே?…” என ரமேஷ் சத்தத்தை கூட்ட,
“ஏய் நீ யார் இதை பேச?…” என்று விரல் நீட்டியவனின் உருண்டு திரண்ட புஜத்தை பார்த்ததும் ரமேஷ் பின்வாங்கினாலும்,
“இங்க பாருங்க மாமா, இந்த சம்பந்தத்துக்கு நீங்க ஒத்துண்டா எங்களை தலை முழுகிருங்க…” என மிரட்டல் விடுக்க கூடத்தில் இருந்த தண்ணீர் பானையை பார்த்தான் வம்சி.
அவனின் பார்வையே சொல்லியது ‘தண்ணியை எடுத்து தலைக்கு ஊற்றி வெளியே தள்ளிவிடுவேன்’ என்று.
அதை சரியாக படித்துவிட்டவன் முனங்கியபடி திண்ணைக்கு சென்று அமர்ந்து வழக்கம் போல பேச ஆரம்பித்தான் வழியில் செல்வோரை நிறுத்தி.
“போதுமா? உங்களால எங்க குடும்பமே ரெண்டாகிரும் போல…” என்ற ராமன்,
“இங்க பாரு வணி, என் பேச்சை மீறின நான் விஷத்தை தின்னுட்டு போய் சேர்ந்துருவேன். அவ்வளோ தான்…” என வம்சியிடம் வேலைக்காகாது என்று மகளிடம் குதித்துக்கொண்டு நின்றார்.
வம்சியின் பார்வை அவரின் மிரட்டலில் இடுங்க இப்போது ஷ்ராவணியை பார்த்தான்.
“ப்ளீஸ்…” என ஷ்ராவணி வம்சியிடம் இறைஞ்ச,
“சத்தமா சொல்லு…” என்றான் அவன்.
“நான் பேசறேன். கண்டிப்பா அப்பாட்ட பேசறேன். இப்ப வேண்டாம்…” என வம்சியிடம் கெஞ்ச,
“என்ன பேசினாலும் என் மனசு மாறாது…” ராமன் அதற்கும் பேச, வம்சிக்கு கோபம் கரையுடைக்க பார்த்தது.
“சென்னைக்கு வந்து பேசறேன். புரிஞ்சுக்கோங்க. நான் பேசறேன்…”
“நாளைக்கு தானே?…” என்றான்.
“ஆமா…”
“நீ அங்க வா, பேசிக்கறேன்…” என கடித்து துப்பியவன்,
“மிஸ்டர் ராமன், இங்க இங்க என்னை பாருங்க…” என சொடுக்கிட்டு அழைக்க அவர் வேண்டா வெறுப்பாய் திரும்பி பார்த்தார்.
“நான் அந்த பக்கம் போனதும் இங்க ஏதாவது இவளை கட்டாயப்படுத்தி தப்பா எதாச்சும் பண்ணுனீங்க? ம்ஹூம், பண்ண கூடாது. பண்ணினா எனக்கு தெரிஞ்சிரும்…”
“என்ன மிரட்டுறியா?…” ராமன் மரியாதையை விட்டு அவனிடம் பேச,
“ஆமா, மிரட்டல் தான். நாளைக்கு அவ சென்னை கிளம்பனும். இல்லைன்னா நாளை மறுநாள் நான் இங்க வருவேன்…” என்று சொல்லிவிட்டு சாந்தினியை பார்க்க அவர் ஷ்ராவணியின் தலையை கோதியவர்,
“தைரியங்கா உண்டு…” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
பொறுமையாக பேச வந்த இடத்தில் அதனை காட்டமுடியாமல் ஷ்ராவணி கன்னத்தில் அப்பியிருந்த விரல் தடங்கள் வம்சியை இன்னும் நிலைகுலைய செய்திருக்க கொஞ்சமும் நிதானமில்லாமல் போனது.
அவன் சென்ற பின்னர் வீடு இன்னும் ரணகளம். ஷ்ராவணி அந்த ஒற்றை அறைக்குள்ளேயே முடங்கிவிட்டிருந்தாள்.
ராமன் கொதித்து போயிருக்க ரமேஷிற்கு இதனை எப்படியும் பிரித்தே ஆகவேண்டும் என்று அவரை தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தான்.
“பேசாம நம்ம சம்பத்துக்கு கட்டி வையுங்க மாமா…” என்று சொல்ல அதனை சிவரஞ்சனியும் ஆமோதிக்க சந்துரு வெகுண்டுவிட்டான்.
“என்ன பேசறீங்க? அவருக்கு போய் ரெண்டாந்தாரமாவா? அதுவும் அவர் வயசென்ன?…” என சந்துரு கேட்க,
“க்கா, எல்லாம் உன் வீட்டுக்காரறால தான். இல்லைன்னா யாருக்கு தெரியும்?…” சந்துருவுக்கு பொறுக்கவில்லை.
“என் வீட்டுக்காரர் என்னவோ இல்லாததையா பேசினாரு? ஆத்தமாட்டாம வெளில கொஞ்சம் புலம்பிட்டார். அதுக்குன்னு அவரை தப்பு சொல்லுவியா நீ?…” என அவனை அதட்டிவிட்டு சிவரஞ்சனி தகப்பனிடம் பேச,
“நீயல்லாம் ஒரு அக்காவா? வாய மூடுடி…” என சீறிவிட்டார் சுலோச்சனா.
“இங்க பாருங்க, என் பொண்ணு இப்படியே கூட இருக்கட்டும். மூத்தவ சொல்றான்னு எதாச்சும் செஞ்சீங்க, நான் என் பொண்ணை கூட்டிட்டு மெட்ராஸ்க்கு போயிருவேன். பார்த்துக்கோங்க…” என சத்தம் போட்டுவிட்டு இளையமகளை தேடி சென்றார்.
அன்று சென்னை கிளம்பவேண்டும். வீட்டில் போகாதே என சொல்ல மனதில்லை.
போனால் தானே சம்பளம். அடுத்த மாதத்தை எப்படி ஓட்டுவது? அதனால் அதை தடுக்கமுடியாமல் இருந்தவர் அவள் கிளம்பும் நேரம்,
“இங்க பாரு. என்னை மீறி எதுவும் செய்யமாட்டேன்ற நம்பிக்கையில தான் உன்னை நான் அனுப்பறேன்…” என்றதுமே தகப்பனை நிமிர்ந்து பார்த்தாள் ஷ்ராவணி.
அதிலேயே லேசாய் குறுகி போனவர் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அதே இறுக்கத்துடன் மகளை பார்த்தார்.
“என்ன பார்க்கற? போனோமா வேலை பார்த்தோமான்னு தான் இருக்கனும். திரும்ப அவனோட பழக்கவழக்கம்ன்னு போன உங்கம்மாவுக்கு தாலி இல்லை…” என்று மிரட்டியவர்,
“வீட்டை விட்டு போனவனுக்கு உயிரை வெறுத்து போகவும் தெரியும். புரியுதா? கொஞ்சம் நாள்ல நானே நம்ம பக்கத்துல பையனை பார்த்து உனக்கு மதிப்பா கல்யாணம் பண்ணி வைப்பேன்….” என்றார் அழுத்தமாக.
எதற்கும் பதிலில்லை. தன்னுடைய பேக்கை எடுத்து தோளில் போட்டுக்கொண்டவள்,
“அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். என்னால அவரை மறக்க முடியாது. மறக்கவும் மாட்டேன். அதை நீங்க புரிஞ்சுக்கோங்க…” என்று சொல்லியவள் விடுவிடுவென்று வாசலில் இறங்கிவிட்டாள்.
தெருவெங்கும் அத்தனை பேச்சுக்கள் ஷ்ராவணியை பற்றி. சில நல்லதும். சில கேட்க முடியாதவையும் என்று கலவையாக இருந்தது.
“காலாகாலத்துல கல்யாணம் செஞ்சு வச்சிருந்தா இந்த அவமானம் தேவையா உனக்கு?…” என ராமனையும் பேசினார்கள்.
பஸ் ஸ்டாண்ட் வந்தவள் வம்சியின் மெசேஜ் பார்த்து கிளம்புவதாக அனுப்பிமட்டும் வைத்துவிட்டு மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.
யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை அவள். அத்தனை மன அழுத்தமும், வேதனையும்.
எத்தனை பேச்சுக்கள் பேசிவிட்டார்கள்? பெற்ற மகளென்று பாராமல் அவ்வளவு கீழிறக்கி தரமில்லாமல் பேச்சுக்கள்.
இந்த வேலையும், வீட்டில் கஷ்டமும் இல்லை என்றால் நிச்சயம் தன்னை இங்கேயே வைத்து வேறு முடிவுக்கு வந்திருக்க கூடும் என்று தெரிந்தது.
முத்த நாளிலிருந்தே சாப்பிடவில்லை. ஹேண்ட்பேக்கில் பிஸ்கட் இருக்க அதை மட்டும் சாப்பிட்டு தண்ணீரை குடித்துக்கொண்டாள்.
இடையே உணவுண்ண பஸ் நிற்க நின்ற இடம் வம்சியை தான் ஞாபகப்படுத்தியது.
தனது ஹேன்ட்பேக், போன் சகிதம் கீழ் இறங்கியவள் ட்ரைவரிடமும் சொல்லிவிட்டே உண்ண சென்றாள்.
அந்த தாபாவில் சாப்பிடவும் பிடிக்கவில்லை. வேறு வழியின்றி இருந்ததை வாங்கி உண்டுவிட்டு கிளம்பியவள் சென்னை வந்து சேர அலுவலகம் செல்லும் முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
ஷ்ராவணிக்கு அழைத்துக்கொண்டே இருந்தான் வம்சி. வந்து சேர்ந்தாளா இல்லையா என எதுவும் தெரியவில்லை.
அவளுக்காக லீவை நீட்டித்து சென்னையில் காத்திருக்க நேராக ஹாஸ்டல் வந்துவிட்டான்.
ரிசப்ஷனில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொல்லவும் அடித்து பிடித்து கிளம்பி சென்றவன் மயக்கத்தில் இருந்தவளை தான் பார்த்தான்.
“ஹலோ ஸார்…” என உடனிருந்த குமுதா அவனை பார்த்ததும் அழைக்க,