“சந்துரு அவனை கிளம்ப சொல்லு. நாம போய் பார்த்துப்போம்…” என்றவர் உடனே மனைவியை கிளம்ப சொல்லி துரிதபடுத்த,
“வரீங்களா?…” என கேட்ட வம்சி,
“ஓகே…” என்றுவிட்டான்.
வீட்டிலிருந்து அவர்கள் கிளம்பி இரவு வந்து சேரும்வரை வம்சி தான் ஷ்ராவணியுடன் இருந்தான்.
அத்தனை திட்டு அவளுக்கு. எப்போதும் வெளியில் சாப்பிட யோசிப்பவள் இது தேவையா என கேட்டு கேட்டு திட்டிருந்தான்.
“பாடி டிஹைட்ரெட்டாகற அளவுக்கு நீ ஹெல்தியா இருந்திருக்க. என்ன சாப்பிடற நீ? இதுல ஜுரம் வேற வருது….” என்று முறைத்துக்கொண்டே அவளுக்கு ஜூஸை புகட்ட,
“காய்ச்சலே உங்களால தான். சும்மா இருந்தா கூட நானே சமாளிச்சிருப்பேன். நீங்க வந்து பேசி எவ்வளோ பெரிய பிரச்சனை…” என்று இருவரும் வாக்குவாதம் செய்ய பேசவும் முடியாமல் அத்தனை சோர்வு.
இரவு ராமனும், சுலோச்சனாவும் சந்துருவுடன் வரும் நேரம் மாத்திரையின் உபயத்தில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஷ்ராவணி.
“எங்க, எங்க என் பொண்ணு?…” என சுலோச்சனா வர பகலில் கூட பேசமுடியவில்லை அவரால் மகளிடம்.
இப்போதும் அதே பதட்டத்துடன் வந்தார். பேசமுடியாதளவிற்கு மகளுக்கு என்னவோ என்று ராமனுக்குமே உள்ளூர பயம்.
“ப்பா இந்த ரூம் தான்…” என சந்துரு காண்பிக்க கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
சேரில் அமர்ந்தபடி கையில் மேகஸின் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வம்சி.
“அதை நீங்க சொல்லகூடாது. நீங்க வந்தா நான் போய்டனுமா?…” என்று மல்லுக்கு நின்றான்.
“என்னாச்சு ஸார்?…” என சந்துரு தவிப்புடன் கேட்க,
“ஃபூட் பாய்சனாகிருக்கு…” என்று அவனிடம் சொல்ல முதலதை விட்டுவிட்டு பாய்சன் என்பது மட்டும் ராமனுக்கு கேட்க,
“பாய்சனா? விஷமா? என் பொண்ணா?…” என்று அதிர்ச்சியுடன் அவர் நெஞ்சை பிடித்துவிட,
“சாப்பாடு எதோ விஷம், அதான்…” என அவர் அழுகையை புரியாமல் பார்த்தபடி சொன்னான் வம்சியும்.
“விஷத்தை சாப்பிட்டாளா என் பொண்ணு?…” என சுலோச்சனா அதற்கு மேல் அழுகையை கூட்ட சந்துருவும், வம்சியும் விழித்தனர்.
“கேட்டீங்களா? நான் அப்பவே சொன்னேனே? என் பொண்ணு இந்த விஷயத்துலையாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு யோசிக்க சொன்னேனே? கேட்டீங்களா? பாருங்க எந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க…”
சுலோச்சனா ராமனை பிடித்து வாங்கிக்கொண்டிருக்க ராமனும் உடைந்து போனார்.
“இல்லப்பா…” என்று விஷயத்தை விளக்க சென்ற சந்துருவின் கையை இறுக்கமாய் பிடித்துவிட்டான் வம்சி.
“கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?…” என்று வம்சி அவனை அதட்ட,
“ஸார்…”
“டேய் சும்மா இருடா…” என்றான் மீண்டும் அழுத்தமாய்.
“இந்த கல்யாணம் நடக்க நானே படாதபாடு பட்டுட்டு இருக்கேன். குட்டையை குழப்பிடாத. இல்லன்னா அந்த ரமேஷ் மாதிரி ஒருத்தனை கட்டிவச்சிருவாங்க உன் அக்காவுக்கு….” என சந்துருவின் வாயடைக்க,
“அதை நீ சொல்லனுமா? நான் பார்த்துக்கனும்னா முதல்ல கல்யாணமாகனும்…” என சலிப்புடன் சொல்ல சந்துரு அமைதியானான்.
ஏற்கனவே வீட்டில் ரமேஷும், சிவரஞ்சனியும் அராஜகத்தின் உச்சம் சென்றிருக்க இப்போது இதுதான் சரி என்று பட்டது அவனுக்கும்.
அவனளவில் வேறு யோசிக்க தோன்றவில்லை. அக்கா நன்றாக இருக்கவேண்டும் என்றுமட்டுமே தோன்றியது.
‘இவங்களுக்கு என்ன நல்லது செஞ்சாலும் என் அக்கா பேச்சு வாங்கத்தானே செய்யறா?’ என எப்போதும் வலுத்துக்கொண்டிருக்கும் எண்ணம் இப்போது வம்சியின் பக்கம் தான் சாய செய்தது.
அதில் முதல்நாள் நிகழ்வுகள் பெரும்பங்கு வகித்திருந்தது என்றால் மிகையில்லை.
ராமன் ஒருவழியாக இந்த ஒன்றிலேயே மனதளவில் துவண்டிருக்க அமைதியாக பார்த்திருந்தவன் அவர்களிடம் பேசலானான்.
வம்சியின் பேச்சுக்கள் மிகுதியையும் கரைத்திருக்க மகளா, மற்றவையா என்று வருகையில் மகளை இழந்துவிட்டால் அதன் பின்னர் தங்கள் வாழ்க்கை என்னும் பயமும் ஒருபக்கம் இருந்தது.
இப்படி ஒரு முடிவிற்கு மகள் வந்திருக்க இதைவிட தன்னுடைய பிடிவாதமா முக்கியம் என்று ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதித்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில் திருமணம் என்னும் வகையில் வம்சி கடகடவென்று முடிவே எடுத்துவிட்டான்.
எங்கேயும் நிற்கவில்லை. எதை பற்றியும் யோசிக்கவில்லை. சாந்தினிக்கு அழைத்து அவரின் மூலமாக சித்தப்பாவிற்கு சொல்லி என அதிக கூட்டத்தை சேர்க்கும் மனதில்லை.
மிக மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம். ராமன் விரும்பினால் அவர்கள் ஊரில் வரவேற்பு.
இல்லை என்றால் அதுவும் வேண்டாம் என்றிருக்க சாந்தினி நெல்லூரில் கண்டிப்பாக வரவேற்பு வைக்கவேண்டும் என முடிவாக சொல்லிவிட்டார்.
இப்படி அந்த ஒற்றை இரவில் எல்லாம் முடிவாகியிருக்க ஷ்ராவணி விழிக்கையில் திருமணம் என்ற செய்தி தான் அவளுக்கு சொல்லப்பட்டது.
ஆனந்தின் குடும்பம் வந்துவிட்டார்கள் காலையிலேயே. அவர்கள் ஷ்ராவணியின் பெற்றோரை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல மனதே இல்லாமல் தான் கிளம்பி சென்றனர்.
“என்னம்மா இப்படி பண்ணிட்ட? உன்னை விடவா நாங்க மத்ததை பெருசா நினைப்போம்…” என சுலோச்சனா அழ,
“அதான் அவளே சரியாகிட்டாளே. விடு. ஆகவேண்டியத பார்ப்போம்..” என சொல்லிய ராமன் மகளிடம் பேசவே இல்லை.
மருத்துவமனையில் இருந்து ஷ்ராவணி நேராக ஹாஸ்டலுக்கே சென்றாள். வம்சியை முறைத்தபடி தான் இருந்தாள் தம்பியின் மூலம் எல்லாம் கேட்டு.
வம்சி எதையும் கண்டுகொள்ளவில்லை. இதை விட்டால் மீண்டும் திருமணம் என எந்த பேச்சிற்கும் அவள் ஒத்துவருவாளா என தெரியவில்லை.
மாலதியை வைத்தே திருமணத்திற்கு தேவையானதை செய்தவன் ராமனிடம் எதையும் செய்யவைக்கவில்லை.
சந்துருவிடம் ஒரு தொகையை கொடுத்து பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டான் வம்சி.
ஆனந்தின் குடும்பத்தினர் வேறு வம்சியை அப்படி புகழ அவனின் வேலை, இப்போதைய சம்பளம், வேறு பிக்கல், பிடுங்கல் இல்லாதது, சில சொத்துக்கள் என்று சொல்லியிருக்க சுலோச்சனா ராமனிடம் தனியாக,
“இவளாச்சும் நல்ல ஏகபோகமா வாழ்வாங்க. நம்ம வணி மனசு போல அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை…” என்று சொல்ல,
“அவருக்கு யாருமில்லைன்றதும் தான் குறை. என்ன செய்ய? இனி யோசிக்கற நிலமையில நாம இல்லை. எல்லாம் கை மீறிடுச்சு…” என்றார்.
மூத்தவளுக்கு போன் போட்டு திருமண விஷயத்தை சொல்ல தாம் தூம் என்று குதிக்கத்தான் செய்தனர்.
“நான் வரவே மாட்டேன். அவனுக்கு கட்டிவச்சா நாங்களும் இல்லைன்னு நினைச்சுக்கோங்க. அவ சும்மா என்னத்தையோ முழுங்கி உங்களை பயம் காட்டிருக்கா. ஏன் விஷத்தை முழுங்கனும்ன்னா இங்க ரெண்டு நாள் இருந்தப்பவே முழுங்கிருக்கனுமே…”
“இப்ப நீ வரியா இல்லையா?…” என சுலோச்சனா தான் பேசினார் கடைசியில்.
“வரமாட்டேன். எனக்கு மானம், மரியாதை தான் முக்கியம்…” என்று போனை வைத்துவிட்டவளுக்கு நிலைகொள்ளவில்லை.
அங்கே என்ன நடக்கிறதோ என தெரிந்துகொள்ளாமல் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
மீண்டும் தாய்க்கு அழைத்து ரமேஷிடம் அழைக்கும்படி சொல்லி வைத்துவிட்டாள்.
அவனிடமும் ஏற்கனவே சொல்லியிருக்க அவன் பங்கிற்கு ஒருபாடு ஆடியிருந்தான்.
எப்படியும் வம்சியை உள்ளே நுழையவிட கூடாது என்றிருந்தவனுக்கு இது பெரும்அடி.
முன்பை போல தன் அதிகாரம் இங்கே செல்லுமா என்று கலங்கிபோய் இருக்க திருமணத்திற்கு செல்லவேண்டும் என்று பிடிவாதமாய் இங்கே சொல்லிக்கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.