ஒருவழியாய் பேசி கிளம்பி குழந்தையுடன் சென்னை வந்து சேர அன்று காலை தான் திருமணம்.
ஆனந்தின் வீட்டிற்கு வந்து கிளம்புவது நேரமாகும் என்பதால் கோவிலின் அருகே ஒரு ஹோட்டலில் ரூம் போட சொல்லி தந்தையிடம் சொல்ல அங்கே தனக்கு என்ன தெரியும் என அவர் விழித்தார்.
திருமணத்திற்கு வருகிறார்களே என்று வம்சி தான் ஆனந்திடம் சொல்லி பார்க்க சொல்ல குளித்து கிளம்பி கோவிலுக்கு அவர்கள் வரும் முன் வந்து சேர்ந்திருந்தார்கள் இருவீட்டு சொந்தங்களும்.
ஷ்ராவணி பக்கத்தில் அவளின் பெற்றோர், உடன் பிறந்தோர், குமுதா இப்படி இருக்க, வம்சியின் பக்கம் அவனின் சித்தி குடும்பமும், ஆனந்தின் குடும்பமும் மட்டுமே.
திருமணம் தான் எளிமையே தவிர ஷ்ராவணிக்கு என தேவையானவை எடுத்திருந்ததில் ஒரு குறைவும் இல்லை.
உள்ளே நுழைந்த சிவரஞ்சனி ஷ்ராவணியின் அலங்காரத்தில் மூச்சடைத்து போய் நின்றுவிட்டாள்.
வந்தவள் வாழ்த்தவும் இல்லை. சிரிக்கவும் இல்லை. வேறு எந்த சிந்தனையும் இல்லை.
அவளின் அலங்காரத்தை தான் கவனித்தது. புடவையே கண்ணை பறித்தது. லட்சக்கணக்கில் இதற்கே செலவாகியிருக்கும் என்பதில் வயிறெரிய பார்த்தால், சுலோச்சனா பூரிப்புடன் பார்த்தார்.
தங்களால் ஒரு சவரன் கூட போட முடியாத சூழ்நிலையில் அதனை பற்றி எதையும் கேட்காமல் பொண்ணை மட்டும் கேட்டு அவளை மரியாதையுடன் மனைவியாக்கிக்கொள்ளும் வம்சியின் மீது பிடிப்பும், பிரமிப்பு தான்.
சுலோச்சனா, சந்துருவிற்கு முகத்தில் வெளிப்படையாக தெரிந்த சந்தோசம் ராமனுக்கு கொஞ்சமேனும் உள்ளுக்குள்.
ஆனாலும் ஊரார், உறவுகள் என்ன பேசும் என ஒருபக்கம் கலக்கத்தில் சுழன்றுகொண்டு தான் இருந்தது. அதில் கொஞ்சம் வெறுப்பு தான் மகள் மீது.
நினைத்ததை இரு நாட்களில் நடத்திக்கொன்டாளே என மனம் குமையாமலும் இல்லை.
நன்றாக இருந்தால் போதும் என்று தேற்றிக்கொண்டார். இத்தனை போட்டு மகளை கரையேற்றும் பாக்கியமோ, சக்தியோ தனக்கில்லை என்ற உண்மையும் அவரை வாயடைக்க செய்திருந்தது.
திருமணம் இருவீட்டாரின் முறைப்படியும் இல்லாது பொதுவாக நடந்தேற நினைத்ததை சாதித்துவிட்ட சந்தோஷத்தில் ஆளுமையான பாவனையுடன் தன் நிலவோடு கைகோர்த்துக்கொண்டான் வம்சி சைத்ரயேஷ்.
திருமணம் முடிந்து அருகிருந்த ஹோட்டலில் உணவை முடித்துக்கொண்டு ஆனந்தின் வீட்டிற்கு செல்ல,
“நாங்களும் புறப்படறோம்…” என்றார் ராமன்.
அனைவருக்குமே அதிர்ச்சி தான். மணமக்களை அழைக்காமல் போகிறேன் என்று சொல்பவரை கையை பிசைந்துகொண்டு பார்த்த சுலோச்சனா,
“என்ன இப்படி சொல்றீங்க? நம்ம வீட்டுக்கு கூப்பிட?…” ராமன் பேசும் முன்,
“இல்லைங்க, நாங்க டெல்லி கிளம்பறோம். போய்ட்டு நேரமிருந்தா வரோம்…” என்று உடனே சொல்லிவிட்டான் வம்சி.
ஷ்ராவணி உள்ளுக்குள் உடைந்து போனாள் தகப்பனின் இந்த தன்மையில். இதற்கு இவர்கள் நடத்தி வைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்ற அமைதியாக பார்த்தபடி இருந்தாள்.
“கிளம்பறோம்ங்க. எப்ப சௌகரியமோ அப்ப வாங்க…” என சொல்லவிட்டு வேறு எதுவும் பேசவில்லை.
“என்னங்க பொண்ணு…” சுலோச்சனா பதறி தவித்தார்.
“இவ்வளவு பெரிய முடிவெடுத்த உன் பொண்ணுக்கு இதென்ன பெரியவிஷயமா?…” என வார்த்தைகளை கடித்து துப்பியவர்,
“நானே ஊர்ல என்னென்ன பதில் சொல்லன்னுமோன்னு இருக்கேன். வாயை மூடிட்டு வா. அதான் அவ ஆசைப்பட்டது நடந்திருச்சே…” என்று மீண்டும் முருங்கைமரம் ஏற,
“அதானே? இவளுக்கு இங்க வந்து நின்னு நடத்தினதே பெருசு…” என்ற சிவரஞ்சனி வம்சியின் பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.
“எதுனாலும் ஊர் போய் பேசுவோம்…” என சொல்ல பெற்றோர்களே கிளம்புகையில் சந்துருவும் எந்த பக்கம் செல்வது என தெரியவில்லை.
“நீ சந்துரு. நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” ஷ்ராவணி தம்பியிடம் சொல்ல,
“பார்த்தியா…” என்ற ராமன் அந்த வீட்டிலிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
“என்னவோ நீ முடிவு பண்ணின வாழ்க்கை. நல்லாயிரு…” அவ்வளவு தான் மகளிடம்.
வேறு ஒன்றும் பேசவில்லை. சுலோச்சனா மன கலக்கத்துடன் கிளம்பி சென்றார் ஆனந்தின் குடும்பத்திடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, சாந்தினியிடமும் பேசினார்.
சாந்தினி பேசியது புரியவில்லை என்றாலும் அவர் புன்னகையும் ஆறுதலான தொடுகையும் பெரியளவில் நிம்மதியை தந்தது.
ப்ளைட் ஏறும் வரை கூட இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவளின் கையோடு கையை கோர்த்திருக்க ப்ளைட் பறக்க ஆரம்பிக்கவும் அவளின் விரல்களோடு விளையாடியபடி அவன் வர,
“பொய் சொல்லி இப்படி கல்யாணம் பண்ணியிருக்கீங்க. கோவிச்சுக்காம?…”
“அது அவங்களுக்கு தெரியாதே?…”
“எல்லாமே தகிடுதத்தம். அன்னைக்கு உங்க சித்திட்ட என்னை வாய் திறக்கவிடாம பேசி வச்சீங்க. இப்ப கல்யாணமும் இப்படி. இப்படி ஆரம்பிக்கிற வாழ்க்கை…”
“ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். பொய் சொல்லனும்னு இல்லை. நான் உண்மையை சொன்னேன். அவங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. நான் மெய்ண்டெய்ன் பண்ணிட்டேன்…” அசால்ட்டாக சொல்லியவன்,
“ஆனா அவங்க ஆசிர்வாதம் பொய்யில்லையே? நல்லா இருப்போம் ரா தல்லி…” என்று அவளின் தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டான்.
“இல்லைன்னா கர்னலாகும் வரை நீ என்னை வெய்ட் பண்ண வச்சிருவியே? அப்ப பிள்ளை பிறந்து என்னை அப்பான்னு கூப்பிடாம தாத்தாகாருன்னு கூப்பிட்டா என் மனசு உடைஞ்சிடாதா?…” என்று வசனம் பேச,
“எல்லாம் செஞ்சிட்டு அப்படியே மண்டையை கழுவிடறது. என்ன சொன்னாலும் கோபம் தான்….”
“ஓகே, யூர் விஷ்…” என்று புன்னகைத்தவனின் சிரிப்பில் மயங்கவிருந்த மனதை அதட்டி வைத்தாள் ஷ்ராவணி.
“இதை இப்படியே விட்டா எல்லாத்துக்கும் இதைத்தான் செய்வாங்க. வச்சுக்கறேன். இனி இப்படி ஏமாத்த கூடாதுன்னு நினைக்கும்படி வச்சுக்கறேன்…” என யோசித்தபடி முணுமுணுக்க,
“மைன்ட் வாய்ஸா? சத்தமில்லாம பேசு. தென் என்ன பணிஷ்மென்ட்ரா?…” என்றான் கண்சிமிட்டி. அவன் கேட்கவும் திருதிருத்தவள்,
“தள்ளி போங்க…” என்று அவனின் கையை எடுத்துவிட்டாள்.
“நா தல்லி கதா…” என குறும்பாய் மீண்டும் கை போட்டு அணைத்தபடி புன்னகைக்க,
“இனி இந்த கத விடற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம்…” என்று முறைப்பாய் அவள்.
“அவுனா ரா?…” என வம்சி கேலியாய் கேட்கவும் தலையில் கை வைத்தாள்.
“என்னாச்சு?…”
“அந்த புக்கை ஹாஸ்ட்டல்லையே விட்டுட்டு வந்துட்டேன்…” பெரும் கவலையுடன் சொல்ல,
“எந்த புக்?…”
“அதான் உங்க பாஷை புக்…” என பாவம் போல சொல்ல வம்சியின் கண்கள் மின்னியது.
“குட், உனக்கு என்ன தெரியனும். நான் சொல்லி தரேன்…” என்றவன் முகபாவனையில் திகைத்து பார்த்தவள்,
“ஒன்னும் வேண்டாம்…” என்று விலகி ஜன்னலை ஒட்டி அமர அதுவேறு பூமியிலிருந்து பறந்துகொண்டிருந்த உயரத்தை காண்பித்து தலைசுற்ற வைத்தது.
எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் இப்படி அவளின் அனுமதியின்றி வாழ்வில் பல மாற்றங்களை கொண்டுவந்திருக்க அதன் வேகத்தில் தள்ளாடி போயிருந்தாள்.
இந்த மனசஞ்சலத்துடன் எப்படி வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்ற யோசனையுடன் அவள் இருக்க அந்த யோசனையுமே அவனுடன் இருப்பிடம் சென்று சேரும் வரை மட்டுமே.