“நேத்து கல்யாணமான பொண்ணு பேசற பேச்சா? போரடிக்கும், அவ்வளோ தானே? நான் பார்த்துக்கறேன். இப்ப ஜஸ்ட் ஒரு குட்டியா பாத் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி அறைக்குள் சென்றான்.
அவன் சொல்லிவிட்டு சென்றாலும் அப்படியே அமர முடியாமல் காய்கறிகள் தனியே, பலசரக்குகள் தனியே என பிரித்து எடுத்து வைத்தாள்.
பாத்திரங்களை எங்கே வைக்க என்று கிட்சன் கப்போர்டை திறந்து பார்த்தவள் யோசனையுடன் நிற்க,
“சொல்லிட்டு தானே போனேன்?…” அதட்டலாய் வம்சியின் குரல்.
“ஆமா, ஆனா இந்த காய்கறி எல்லாம் எடுத்து வைக்கனுமே. அப்படியே வச்சா பாழாகிடும்…”
“ப்ரிட்ஜ்ல வைக்கனுமே? அப்போ ப்ரோசன் ஐட்டம்ஸ் என்ன பண்ண?…” வம்சி யோசனையுடன் கேட்க,
“அது அங்கயே இருக்கட்டும். இதை நான் இங்கயே வச்சுப்பேன்…”
“எப்படி?…”
“இதோ இப்படி…” என்றவள் மெல்லிசான ஒரு காட்டன் துப்பட்டாவை எடுத்து நனைத்துவிட்டு வந்தாள்.
“இதை வச்சு என்ன பண்ணுவ? ஊஞ்சலா கட்ட போற?…” வம்சி கேலியாய் சிரிக்க,
“முதல்ல பாருங்க மில்டரி…” என்றவள் ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்துவிட்டு கழுவி வைத்த காய்கறிகளை அதில் நனைத்து ஈரத்துடன் அந்த ஈர துப்பட்டாவின் மீது அடுக்கினாள்.
“ப்ரிட்ஜ் அளவு இல்லைன்னாலும் இதுவும் ரெண்டு நாள் ப்ரெஷா தான் இருக்கும். அதுக்கப்பறம் வேற வாங்கிக்கலாம்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், வெல்…” என்றான் புருவம் உயர்த்தி.
“எங்க வீட்டுல இப்பவும் ப்ரிட்ஜ் கிடையாது. இப்படித்தான் யூஸ் பண்ணிப்போம்…” என கூறியவள்,
“இங்க கீழயே சூப்பர்மார்க்கெட் இருக்கே. அப்பப்ப டெய்லி கூட காய்கறி வாங்கிக்கலாம்…” என்றதும் வம்சியின் முகத்தில் சிறு சோர்வு புன்னகை.
“நீ இருக்கற வரைக்கும், அதுக்கப்பறம் யார் வாங்க போறா இதெல்லாம்?…” என்று சொல்லியதும் ஷ்ராவணிக்கு சுருக்கென்றானது.
“ஓகே, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?…”
“ம்ஹூம். இல்லை, இது முடிச்சாச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுக்கலாம்…” எனவும் தோளை குலுக்கியவன் சோபாவில் சென்று அமர்ந்துகொண்டான்.
ஒரு இதமான மனநிலை கருமேகம் சூழ்ந்ததை போலானது. அவனை பார்த்தபடி ஷ்ராவணியும் வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள்.
“சாப்பிட எதாச்சும் செய்யட்டுமா?…” என அவள் கேட்க,
“ஹ்ம்ம், இப்பவா? என்ன செய்வ?…” முயன்று முறுவலித்து அவளிடம் கேட்டான்.
அவன் கேட்டதற்கு மாறாய் தனக்கு தோன்றியதை ஷ்ராவணி கேட்டதும் மீண்டும் ஒரு புன்னகை வம்சியிடம்.
“லவ், மேரேஜ் இப்படி ஒன்னு என் லைப்ல நடக்கும்ன்னு நான் நினைக்கலை நிலா. ரொம்ப திமிரா இருப்பேன். எப்பவும் நான் ஒரே மாதிரி தான் இருப்பேன்னு. ஆனா நேத்துல இருந்து. ஹ்ம்ம். ஓகே லீவ் இட்…”
அதற்கு மேல் அதனை பற்றி பேசி அவளையும் கலக்கமுற செய்ய மனதில்லாமல் போனது வம்சிக்கு.
தன்னுடைய மாற்றம் நல்லதா, கெட்டதா என்று கூட யோசிக்கவில்லை. ஆனால் இதற்கு மேல் எந்த விதத்திலும் தன் மனைவி தன்னால் சங்கடப்பட கூடாதென்று உறுதியாய் இருந்தான்.
திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே சந்துருவின் மூலம் ஷ்ராவணியின் நிலை அவளின் வீட்டில் என்னவாக இருந்தது என்று தெரியவந்தது.
அவனளவு அனுமானித்தது ஒருவகை என்றால், சிறுவன் சந்துருவிற்கு அவனின் பக்குவத்தின் அளவு ‘என் அக்காவை இப்படியெல்லாம் பேசுகிறார்கள், கஷ்டப்படுத்துகிறார்கள். நீங்க இனி நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்ற ரீதியில் எல்லாம் ஒப்புவித்திருந்தான்.
தன் மீதும் இப்போது யோசிக்க யோசிக்க தானும் செய்த சில தவறுகள் தெரிய ஆரம்பித்திருந்தது.
அதுவும் காலையில் ஷ்ராவணி உணர்த்திய ‘ஊருக்கு சென்றுவிடுவேன்’ என்ற பொருள் அவனை உள்ளுக்குள் உடைக்க ஆரம்பித்தது.
தனிமை தாய் இருந்தவரை உணர்ந்தானா என்றால் தெரியவில்லை. எதுவும் வம்சிக்கு ஞாபகமில்லை. அதற்குள் அவரின் மறைவு.
தந்தையிடம் பாசமும் இருக்க அதைவிட கண்டிப்பும் இருந்தது. அதில் ஒரு அனுசரணையை பெரிதாய் உணர்ந்தானில்லை.
தன்னால் முடியும், தனியாய் முடியும் என்று அத்தனை தூரம் துணிந்து இருந்தவன் மனதிற்குள் இப்போது மீண்டும் தனியாய் அந்த வீட்டில்? உள்ளுக்குள் சிறு நடுக்கம் தன் எண்ணங்களின் சுழற்சியில்.
தன்னையே பார்த்தபடி அமர்ந்திருப்பவளை திரும்பி பார்த்தவன் கண்சிமிட்டி புன்னகைக்க,
“என்னை எதாச்சும் திட்டனுமா?…” என்று கேட்டாள் ஷ்ராவணி.
“ஹ்ம்ம், ஆமா. ஏன் இவ்வளவு யோசிக்கிறன்னு திட்டனும்…” என்று இரு கைகளாலும் அவள் முகம் பற்றி சொல்ல,
“நீங்க தான் யோசிக்க வைக்கறீங்க. அதான் இவ்வளோ யோசனை…”
“ஓகே, அது வேண்டாம். வேற பேசலாம்…” என்னும் பொழுதே மீண்டும் சாந்தினியிடமிருந்து போன்.
பார்த்ததும் கொஞ்சம் டெண்ஷனாகிவிட்டான். மொபைலை முறைத்தபடி இருந்தவன் போன் அட்டன் செய்யவில்லை.
“உங்களுக்கு தான் கூப்பிடறாங்க…” ஷ்ராவணி சொல்ல,
“எனக்கு தெரியாது பாரு…” என்று கடுகடுவென்று சொல்ல,
“பேக் டூ ஃபார்ம்…” என்று சிரித்தாள் ஷ்ராவணி.
“எடுத்து பேசுங்க, ப்ளீஸ்…” என்றவள் அவன் அப்போதும் அப்படியே இருக்க,
“சரி நான் வேணும்னா உள்ள போகட்டுமா?…” என எழுந்தவளை வேகமாய் பிடித்திழுக்க தொப்பென்று அவன் மேலேயே விழுந்து நகர்ந்தமர்ந்தாள்.
“ஸ்ஸ்யப்பா , வலிக்குது…” என சோபா கைப்பிடியில் கை இடித்திருக்க அதனை தேய்த்துவிட்டுக்கொண்டே கூறவும்,