“ட்ரெஸ் எல்லாம் எடுத்து வை. உன்னை கூட்டிட்டு போய் ப்ளாட்ல விட்டுடறேன்…” சுள்ளென்று அவன் சொல்ல,
“வீடு பார்த்தாச்சா அப்போ?…” என்றதும் இன்னும் கடுப்பானது.
“இங்க இருந்து போறதுக்குள்ள பார்த்திடலாம். நோ வொர்ரி ஷ்ராவணி…” என்று பல்லை கடித்தபடி பேசியவன் கோபம் ஷ்ராவணிக்கு திகைப்பை உண்டாக்க,
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்?…” என்றாள்.
“ஒன்னும் சொல்லவேண்டாம். அதான் சொன்னியே வீடு பார்த்தாச்சான்னு, சித்தி சொன்னதுல தப்பில்லைன்னும். என்னை யார் நினைக்கா?…” என்றவன் கையிலிருந்த ஒரு ட்ரெஸ்ஸை தூக்கி கட்டிலில் வீசிவிட்டு வெளியே வந்து அமர்ந்தான்.
சாந்தினி பேசியதும் முதலில் விளக்கி சொல்ல ஆரம்பித்தவன் பின் அவர் புரிந்துகொள்ளாமல் பேச கோபம் தான் மூண்டது.
சட்டென முறித்து பேசவும் மனம் வரவில்லை. தன்னுடைய சூழ்நிலையை நினைக்காமல் நாங்கள் முடிவு பணிவிட்டோம், உன் சித்தப்பா சொல்கிறார் என தன்னையே சரி செய்ய பார்க்க அத்தனை உளைச்சல்.
இவை எதையும் முன்பு உணர்ந்ததே இல்லை அவன். இப்போது ஒன்று தொட்டு ஒன்று அவனுக்கு அதிகளவு கோபத்தையும் வருத்தத்தையும் தந்தது.
அதிலும் இப்போது ஷ்ராவணி பேச்சும். சாதாரணமான பேச்சும் கூட வேறொரு உருவகத்தை தந்தது.
சோபாவில் சாய்வாய் அமர்ந்தவன் பார்வை வட்டத்தில் தூரத்தில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெற்றோர்களின் புகைப்படத்தில் நிலைத்தது.
அனுசரித்து போகும் ரகமாக இல்லாது வளர்ந்துவிட்டவனுக்கு வாழ்வில் இப்போது நிறைய மாற்றங்கள்.
அதனை மனமுவந்தே செய்தாலும் என்னவோ ஒரு அழுத்தம் அவனை வட்டமிட்டுகொண்டு தான் இருந்தது.
என்றுமே தனக்கு ஏன் இப்படி என நினைத்திராதவன் அந்த நொடி நினைத்தான். சிறு விஷயம் கூட பெரிதாய் தெரிந்தது.
பேசி தீர்க்கும் விஷயம் கூட எரிச்சலை தந்தது அப்படி பேசி சரி செய்யவேண்டுமா என்று.
இப்படியான யோசனைகளில் மனது தாய் தந்தையின் வாழ்க்கையை அசைபோட்டது.
அவர்கள் இணைந்து வாழும் வரை எப்படி வாழ்ந்திருப்பார்கள்? ஒற்றுமையாகவா? இல்லை இப்படி தன்னை போல் தான் தன் தந்தையும் தாயிடம் நடந்திருப்பாரா?
உறவுகளிடம் அவர் எப்போதும் வளைந்து கொடுத்து செல்லும் ரகமில்லை. அதனால் தான் மனைவி இறந்த பின்னரும் தனியாய் மகனை நெஞ்சுரத்துடன் சிறக்க வளர்த்தார்.
இப்போது யோசித்தபடி அமர்ந்திருந்தவன் அருகே ஷ்ராவணி வந்தமர்வதை உணர்ந்தான்.
“கோவமா?…” என்ற அவளின் குரலில் திரும்பி பார்க்காதவன் அப்படியே தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
அவளிடத்தில் எதையும் கடைபிடிக்க முடியவில்லை. இப்போது இதோ தன்னினைவுகளில் சுழன்றாலும் அவள் அருகாமையை தான் நாடினான் வம்சி. அவளின் அருகாமை அவனுக்கு ஆசுவாசத்தை தந்தது.
“பேசுங்க ப்ளீஸ், நான் எதாச்சும் தப்பா சொல்லிட்டேனா?…” என்று தழுதழுப்பாய் அவள் கேட்கவும் தான் திரும்பி பார்த்தான்.
“ஹேய் என்னடா இது? அதெல்லாமில்லை…” என்றவனுக்கு அவள் என்ன விதத்தில் அதனை அர்த்தம் எடுத்திருப்பாள் என்று புரிந்துபோனது.
கோபத்தில் புலப்படாதது இப்போது நிதானத்தில் வெளிச்சமாக தலையசைத்து அவள் முகத்தை துடைத்தான்.
“நத்திங் ரா…” என மென்னகை புரிந்தவன்,
“நேனே தப்புரா…” என்றான் ஒப்புமையுடன்.
ஏன் என்ன என்று பார்வையால் அவள் கேட்க அவனால் முழுதாய் உரைக்க முடியவில்லை.
“ஓகே, என்னவாச்சும் செஞ்சு தரேன்னு கேட்டியே? இப்ப இல்லையா?…” என்றதும் அவனை முறைத்தவள்,
“சரி என்ன வேணும்?…” என்றாள்.
அவன் அப்போது சொல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. முகவாட்டம் பெரிதாய் ஷ்ராவணியை பாதிக்க மேலும் அவனை துருவவில்லை அவள்.
“என்ன செய்ய வரும் உனக்கு? ஆமா இவ்வளோ வாங்கியிருக்க. சமைக்க தெரியுமா ரா?…” என்றான் கிண்டலாக.
“அம்மா அளவுக்கு இல்லைன்னாலும் நல்லா செய்வேன்…” என்றவள்,
“ராமேஸ்வரத்துக்கு டூரிஸ்ட் வரவங்களுக்கு அங்க தங்கறவங்களுக்கு சமைச்சு தர ஆடர் வரும். அம்மா செய்யும் போது நானும் தான் சேர்ந்து செய்வேன். அதனால பயப்பட வேண்டாம்…” என்றாள் மிதப்பாய்.
“ஓகே, வா போய் சமைக்கலாம்…” என்றவன் அந்த சூழ்நிலையை மாற்ற அவளை கையில் ஏந்திக்கொள்ள,
“எனக்கு நடக்க வராதா?…”
“வந்தா என்ன? வரலைன்னா என்ன? எனக்கு தோணும் போது தூக்கிப்பேன்…” என்று கிட்சனிற்குள் நுழைந்து இறக்கிவிட்டான்.
“என்ன செய்ய போற நிலா?…”
“பர்ஸ்ட் டைம். அதனால ஸ்வீட்ல இருந்து ஆரம்பிக்கலாம்…”
“அதென்ன பர்ஸ்ட்? அதான் நேத்து நைட்டே பால் காய்ச்சிட்டோமே?…” என்று வம்சி கண் சிமிட்ட,
“வாய் வாய்…” என்று அவன் வாயில் லேசாய் அடித்தவள்,
“இது அந்த ஸ்வீட் இல்லை. இதுதான் ஸ்வீட்…” என விளக்கம் வேறு வெட்கத்துடன் சொல்ல வேண்டுமென்றே அவன் வம்பு வளர்க்க என்று அந்த பொழுதுகள் ரசனையாய் இனிப்போடு நகர்ந்தது.