“நிலா பெட்ரோல் பங்க் வரை போய்ட்டு வந்திடறேன்…” என கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்தான் வம்சி.
“இப்பவா? ஏன்?…” என்றாள் பாத்திரங்களை எடுத்து கழுவிக்கொண்டே.
“நாளைக்கு எர்லி மார்னிங் கிளம்பனுமே. அப்படியே மெக்கானிக் ஷாப் போய்ட்டு வந்திடறேன், ஏர் செக் எல்லாம் பார்க்கனும்…” என்று சொல்லியவன் கார் சாவியுடன் கிளம்பினான்.
“டோர் லாக் பண்ணிக்கோ. வந்து நானே ஓபன் பண்ணிப்பேன். ஒரு ஒன் ஹவர் தான்…” என்று கதவை சாற்றிவிட்டு புன்னகையுடன் கிளம்ப ஷ்ராவணி உள்ளே வந்தாள்.
கோபமும் வேகமும் அவனிடத்தில் தான் எத்தனை இருக்கிறது? நினைத்துக்கொண்டே சோபாவில் வந்து அமர்ந்துவிட்டாள்.
மனம் முழுவதும் வம்சியை பற்றி தான். அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் அசைபோட்டபடி அமர்ந்திருந்தாள்.
கழுவிக்கொண்டிருந்த பாத்திரங்கள் அப்படியே இருக்க மீண்டும் ஞாபகம் வந்து கழுவ சென்றாள்.
வேறு வேலைகள் எதுவும் இருக்கவில்லை. இனி மறுநாள் சமையல் தான். வேறு உலகத்திற்கே வந்துவிட்டதை போலொரு தோற்றம்.
அது அத்தனை பிடித்திருந்தாலும் இன்னும் ஒரு வாரம் தானே? அதற்கு மேல் விடுமுறை எடுக்க இயலாது என்பதால் மனதிற்குள் கவலைகள் வேறு.
அடுக்களையை சுத்தம் செய்து ஒதுக்கி முடித்தவள் வந்து முகத்தையும் கழுவிவிட்டு இரவு உடைக்கு மாறியிருந்தாள்.
டிவியை போட்டுவிட்டு அமர்ந்திருந்தவள் பார்வை அதில் கூட இல்லை. சற்று நேரத்தில் போன் சத்தமிட எழுந்து சென்று பார்த்தவளுக்கு சந்தோஷமும் அதே நேரம் அத்தனை ஆதங்கமும்.
ஆனால் ஆதங்கத்தை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை ஷ்ராவணிக்கு. உடனே எடுக்க,
“வணிம்மா…” என்றார் சுலோச்சனா.
“ம்மா, எப்படி இருக்கீங்க?…” மகளின் குரலிலும் தழுதழுப்பு தாயின் கண்ணீர் சத்தத்தில்.
“இருக்கேன்டா கண்ணு. நீ நல்லாருக்கியா? அந்த தம்பி உன்னை நல்லா பார்த்துக்கறாரா?…” என்றதும் ஷ்ராவணி அதனை கவனித்ததை போல காட்டிக்கொள்ளவில்லை.
‘ஏன் மருமகன், மாப்பிள்ளை என்று சொன்னால் தான் என்ன?’ என கேட்கவும் நினைக்கவில்லை.
இவையெல்லாம் தானாகவே நடக்கவேண்டும் என்று அமைதியானவள் அதனை விடுத்து,
“அது போதும்டா. அது போதும். இங்க உனக்கு போன் பண்ண கூட முடியலம்மா. ஒரே சண்டையும், சச்சரவும்…”
“ஹ்ம்ம்…”
“நாம ஊர்ல இருந்து வந்ததுமே அக்கம்பக்கத்துல எல்லாம் வந்துட்டாங்க. சொந்தக்காரங்கன்னு வந்து ரொம்ப பேச்சாகிருச்சு. இப்படி பண்ணி வச்சுட்டீங்கன்னு…”
“ஓஹ்…”
“எல்லாம் மாப்பிள்ளையால தான். அவர் இங்க ஊருக்கு வந்து சேரமுன்னமே போன் போட்டு அவ்வளோ பேசி வச்சுட்டாரு…”
“ஹ்ம்ம்…” என்றவளுக்கு ‘அவர் மட்டும் மாப்பிள்ளையாமா?’ என்று மனதில் உறுத்த ஆரம்பித்தது.
“மாத்தி மாத்தி இப்ப வரைக்கும் ஆளுங்க வந்து போய்ட்டு இருக்காங்க. விசாரிக்கறேன்னு ஏற்கனவே எரியுற தீயில எண்ணையை ஊத்தி தான் விடறாங்க….” மூக்கை உறிஞ்சியபடி சொல்ல,
“இதெல்லாம் நடக்கும் தானேம்மா?…” என்றாள் ஷ்ராவணி.
“உன் அப்பா என்னன்னா நாளையில இருந்து வேலைக்கு போகமாட்டேன்னு ஒத்தைக்கால்ல நிக்கிறாரு. என்னை பேசறாங்க. என்னை அசிங்கப்பட வச்சுட்டா. இனி எப்படி வெளில தலைகாட்டுவேன்னு அந்த அறையை விட்டு வெளில வரலை…”
“வணிம்மா…” மகளின் குரலின் பேதத்தை அப்போது தான் கவனித்தார் சுலோச்சனா.
“ஒண்ணுமில்லைம்மா, இவ்வளோ நாள் அக்காவும், அவ வீட்டுக்காரரும் எல்லாமே இங்க இருந்து பறிச்சிட்டு ஒண்ணுமே குடுக்கலைன்னு வெளில அசிங்கப்படுத்தினாங்க. அதெல்லாம் ஒன்னுமில்லையாமா?…” என்ற கேள்வியில் சுலோச்சனா திகைத்தார்.
“வணிம்மா உனக்கு தெரியாதா நம்ம வீட்டு சூழ்நிலை?…” என அழுதுகொண்டே கேட்க அவர்களை மேலும் புண்படுத்த விரும்பவில்லை ஷ்ராவணி.
“நானா ஒன்னும் இப்பவே கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்கலையே? நான் கண்ணு முழிக்கும் போது நீங்க முடிவு பண்ணியிருந்தீங்க. என்னை எங்க பேசவிட்டீங்க? நீங்க சொல்றதுக்கு சரின்னு சொன்னாலும் தப்பாம்மா?…”
“வணிம்மா நீ விஷம் குடிச்சு…”
“அப்ப செத்துருவேன்னு தான் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டீங்க. இல்லைன்னா ஒத்துக்கமாட்டீங்க. அப்படித்தானே?…”
“இதென்னம்மா பேச்சு…”
“இல்லம்மா, நான் ஒன்னும் உடனே பண்ணி வைங்கன்னு சொல்லலை. என்னைக்கா இருந்தாலும் இந்த கல்யாணம் நடந்திருக்கும். ஆனா நடத்தி வச்சுட்டு அசிங்கப்படுத்திட்டான்னு இப்ப பேசறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. நான் கேட்டேனா?…”
“இல்லம்மா, அந்த சூழ்நிலை. பதட்டத்துல என்ன பண்ணன்னு தெரியலை. நீ முக்கியமாப்பட்ட. எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்னு நினைச்சோம்…”
“அது ஏன் ம்மா கல்யாணம் செஞ்சு வச்ச பின்னாடி தெரியலை? அப்பா அப்படி கிளம்பி போனாங்க?…” என்றதற்கு சுலோச்சனா என்ன பதில் சொல்வார்?
ஷ்ராவணிக்கே தன் கேள்வி தாயிடம் தேவையற்றது என்று தோன்றிவிட வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.
தன்னை பேசவிட்டிருந்தால் கூட புரியவைத்திருக்க முடியும். அதிலும் தான் என்னவோ பயமுறுத்தி நினைத்ததை சாதித்துக்கொண்டதை போல பார்த்து சென்ற தந்தையின் பார்வை இந்த நொடி கூட மறக்கமுடியவில்லை.
“அம்மா என்னடா பண்ணமுடியும்?…” இயலாமையுடன் அவர் பேச சுதாரித்த ஷ்ராவணி,
“ஸாரி ம்மா. உன்னை போட்டு வாட்டிட்டேன்…” என்றாள் மகள்.
“சரி சாப்பிட்டாச்சா? சந்துரு கால் பண்ணினானா?…” என்று பேச்சை மாற்ற,
“இன்னும் இல்லை. இனிமே தான் சமைக்கனும். இப்பத்தான் ரஞ்சனி மாமியார் வீட்டுல இருந்து வந்துட்டு போனாங்க…” என கூறினார்.
“அக்கா என்ன சொன்னா இதுக்கு?…” என்றதற்கு சுலோச்சனாவிடம் கூட இகழ்ச்சியாய் ஒரு சிரிப்பு.
“உனக்கு செலவு செஞ்சு படிக்க வச்சு வேலைக்கு அனுப்பியிருக்காம். இந்த குடும்பத்தை பார்த்துக்கற கடமை இருக்காம். அதனால வந்து போக கூடாது. ஆனா நீ தான் எல்லாம் செய்யனுமாம்…”
சுலோச்சனா சொல்லவும் ஷ்ராவணிக்கு அத்தனை கோபம். இதனை எந்தளவு காயப்படுத்தும் விதமாய் தன் அக்கா பேசியிருப்பாள் என்று புரிந்தது.
“ம்மா, விடு. அவ நல்லதா பேசினா தான் ஆச்சர்யப்படனும். இது தான் அவ குணம்…”
“இல்லடி, அதெப்படி இவ மட்டும் இவ புருஷனை எதுவும் செய்ய விடக்கூடாதுன்னு சொல்லுவா. இதுவே நீ உன் புருஷனை மீறி செய்யனும்னு சொல்றா? அதுவும் அதிகாரமா…” என்றபடி முன் வாசலில் போடப்பட்டிருந்த பலகையில் வந்து அமர்ந்தார் சோர்வுடன்.
“விடும்மா, இதை பெருசு பண்ணாத. நான் சொன்னது தான். கடன் அடையற வரைக்கும், சந்துரு படிப்புக்கும் நான் செய்வேன். இதை யாரும் சொல்லனும்னு இல்லை. ஆனா இனி அவளுக்கு எதுவும் மாட்டேன்…” என்றாள் உறுதியுடன்.
“அப்பா எங்க? நான் பேசறதை கேட்டுட்டு இருக்காரா?…”
“ம்ஹூம், படுத்துட்டாரு. பகலெல்லாம் ஆளுங்க வந்துபோய்ட்டு இருக்க தூங்கவே இல்ல. ஒரே சண்டை. சாப்பிட கூட இல்லை. கொஞ்சம் முன்ன தான் போய் படுத்தாரு. தூங்கவும் தான் உனக்கு கூப்பிட்டேன்…” என்றவர்,
“அங்க வீடெல்லாம் நல்ல சவுகரியமா?…” என்றார்.
“நல்லாருக்கும்மா. அவங்களோட வீடு தான். என் மாமனார் ரொம்ப வருஷம் முன்னாடியே வாங்கின வீடாம்…”
“நெல்லூர்லையும் இருக்காமே பூர்வீக வீடு?…”
“ஆமாம்மா…”
“அங்க எப்ப போறீங்க? உன் சின்ன மாமியார் வரவேற்பு வைக்கனும்னு சொன்னாங்க?…”
“தெரியலைம்மா, இவங்க லீவ் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணனும்…”
“சரி சரி. நல்லபடியா இருந்தா சரி. உன்கிட்ட ஒன்னும் கோவம் எதுவும் படலை தானே அந்த தம்பி?…”
மீண்டும் ஷ்ராவணியிடம் ஒரு சுணக்கம். இன்னும் தன் தாய் வம்சியை அப்படியே சொல்ல,
“எந்த தம்பி ம்மா?…” என்றுவிட்டாள் உடனே.
“அதான் உன் வீட்டுக்காரர். உன்கிட்ட நல்லவிதமா இருக்காரா?…”