“ஆமா, இன்னைக்கு வரை ஒரு காய்கறி வாங்கி குடுத்திருப்பியா இந்த வீட்டுக்கு? இல்லை இந்தா இதை செலவுக்கு வச்சுக்கோன்னு சொல்லியிருப்பியா? இன்னைக்கு கூட குழம்பு மட்டுமா பொரியல் செய்யலைன்னு கேட்கிற. நீ என்ன இங்க செஞ்சு கிழிச்ச?…”
சந்துரு பேச பேச சிவரஞ்சனிக்கு அத்தனை ஆத்திரம். இப்படி கேள்வி கேட்கிறானே என்று.
“நானும் அவளும் ஒண்ணா? அவக்கிட்ட என்ன பேச்சுன்னு கேட்டதுக்கு எவ்வளோ பேச்சு?…” என்றவள்,
“அப்பா…” என்றாள்.
“நான் பேசினா என்கிட்டே பேசு. எதுக்கு அவரை கூப்பிடற?…” என்றான் தீயாய் பார்த்தபடி.
“ஏன்டா அவளும் நானும் ஒண்ணாடா? நான் மதிப்பா வீட்டுல பாத்த மாப்பிள்ளையை பதவிசா தலைகுனிஞ்சு ஏத்துகிட்டேன். அவ அப்படியா? ஊர் சிரிக்க வச்சுட்டா…”
“அதைத்தான் சொல்றேன். அப்படின்னா அவளோட எதுவும் வேண்டாம்ன்னு சொல்லேன். கஷ்டமோ நஷ்டமோ நான் பார்த்துக்கறேன்னு சொல்லேன்…”
“சொல்லு சொல்லுன்னா? நான் என்ன வேலைக்கா போறேன்?…”
“போயேன். நீயும் படிச்சிருக்க தானே?…” இன்று அவளை விடுவதாய் இல்லை என்பதை போல அவ்வளவு பேச்சு விட்டு விளாசினான்.
மகன் பேசுவது அத்தனையும் உண்மை என்பது பெற்றவர்களுக்கு இன்னுமே வலியை தான் தந்தது.
தெரிந்த விஷயமாக இருந்தாலும் பேசுகையில் அதன் வார்த்தைகள் இன்னுமே கஷ்டத்தை தந்தது.
“சந்துரு விடுப்பா…” சுலோச்சனா மகனிடம் சொல்ல,
“இப்ப சொல்லு விடுப்பான்னு. அவனை அம்புட்டும் பேசவிட்டுட்டு இப்ப வந்து சமாதானம் பன்ற மாதிரி பேசற நீ. குளுகுளுன்னு இருந்துச்சா? அதுவும் உன் மக வேற அப்படி இடத்துல இருக்கா. இன்னும் பூரிப்பு தான்…” என்றவள்,
“எல்லாம் இதால தான?…” என சந்துரு கையிலிருந்த போனை பிடுங்கி வீசி எரிய சுவற்றில் பட்டு சுக்குநூறானது.
“போனை குடுத்தா தான் உனக்கு போன். இன்னும் நாலு நாள் இங்க தான் இருப்பேன். உன் புருஷனை கூட கூப்பிடு….” என்றவன் ராமனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த சிதறிய போன் துண்டுகளை எடுத்தான்.
“அப்பா…” என சிவரஞ்சனி தந்தையிடம் போக அவர் வெளியேறிவிட்டார் உடனே.
“இவருக்கு இதை தவிர வேற ஒன்னும் தெரியாது…” என்றுவேறு சொல்லியவள் கிளம்பி சென்றுவிட்டாள்.
“என்னப்பா என்ன இப்படி பண்ணிட்ட?…” சுலோச்சனா கேட்க,
“ம்மா, நீங்க சும்மா இருங்க…” என்று சொல்லிவிட்டு சிவரஞ்சனியின் போனை சுவிட்ச் ஆஃப் செய்து ஒளித்து வைத்துக்கொண்டான்.
மறுநாள் வம்சியிடம் பகுதி நேர வேலை சம்பந்தமாக பேசவேண்டும் என நினைத்திருக்க அதற்குள் சுலோச்சனாவிற்கு முடியவில்லை.
காலையிலேயே போனை தா என்று ரமேஷுடன் வந்து கேட்க சந்துரு முடியவே முடியாதென்று மறுத்துவிட்டான்.
“வாங்க போங்கன்னு தானே பேசினேன்? அப்பறம் என்ன? இல்லைன்னா அந்த போனை நீங்க வாங்கி தாங்க….” என்றதும் ரமேஷ் சிவரஞ்சனியை முறைத்துக்கொண்டு வந்து நின்றான்.
“உனக்கு இடம் கொடுத்து வச்சதுக்கு தேவைதான். அனுபவி. பேச்சு பேச்சா இல்லாம எதுக்கு நீ போனை உடைச்ச? என்னால உனக்கும் இன்னொரு போன் வாங்கி தர முடியாது….” என்றான் அவளிடம் கோபத்தோடு.
“ஆமா திமிரு? என்னை ஊர் ஊரா கூட்டிட்டு போய் சுத்தி காமிச்சு குளுகுளுன்னு வச்சிருக்கீங்க பாருங்க. அந்த திமிரு. இந்த ராமேஸ்வரத்தை தாண்டி என்னை எங்கியாச்சும் கூட்டிட்டு போயிருப்பீங்களா? என் தலையெழுத்து…”
இப்படி ரமேஷை பேச ஆரம்பித்தவள் தன் தங்கையின் வீட்டையும் தன் வீட்டையும் ஒப்புமை செய்து பார்த்தே அவனை வாட்டி எடுத்தாள் நடுவீட்டில் வைத்து.
இன்னும் சிவரஞ்சனி கண்களை விட்டு ஷ்ராவணி இருக்கும் வீடு மறையவில்லை. எத்தனை பெரிது. எவ்வளவு ஆடம்பரம் என உறங்கமுடியாமல் தவித்தாள்.
அதிலும் இன்று வெண்பஞ்சு பனிகளின் நடுவே அவள் அமர்ந்திருந்ததும், அவளின் உடையும், மாற்றமும், முகத்தின் சந்தோஷமும் என ஆத்திரங்களை கிளப்பிவிட்டிருந்தது. அவை பேச்சில் வெளிப்பட்டது.
ஏற்கனவே முடியாததோடு இருக்கும் சுலோச்சனாவிற்கு தலைவேதனையாக போனது.
சந்துரு தான் எல்லாமாக இருந்து தாயை தாங்கிக்கொண்டான். சிவரஞ்சனியை கண்டுகொள்ளவே இல்லை. அவளின் மகனை மட்டும் தூக்கிக்கொள்ள,
“என் பிள்ளையை தொடாதே…” என பிடுங்கினாள்.
“ஓகே, உன் இஷ்டம்…” என அதற்கு இறங்கி போகவில்லை அவன்.
அப்போதே அத்தனை கறாராக அவன் இருக்க பிற்காலத்தில் எப்படியோ என நினைத்து இப்போதே அச்சமாகியது சிவரஞ்சனிக்கு.
இதில் தன்னிடம், தன் கணவனிடம் கொஞ்சமும் இணக்கமில்லாமல், இளையவளிடமும் அவளின் கணவனிடமும் ஒட்டி உறவாடி தலையில் தூக்கி வைத்து பேசுவதை தான் தாங்கமுடியவில்லை.
தங்களை விட மேலிருக்கும் அவர்களை எண்ணி உள்ளுக்குள்ளேயே பொசுங்கிக்கொண்டிருந்தாள்.
அன்று சுலோச்சனாவிற்கு சற்று உடல்நிலை தேறவும் தான் சந்துரு வம்சியிடம் பேசவே செய்தான்.
அதிலும் ஷ்ராவணி அழைத்து பார்த்துவிட்டு, போட்டோக்களும் அனுப்பியிருக்க அது பார்க்கப்படாமல் இருந்தது. உடனே தம்பியின் எண்ணிற்கு அழைத்துவிட்டான்.
“என்னக்கா கிளம்பிட்டியா நீ?…”
“ஆமா ரிட்டர்ன்ல தான் இருக்கோம்டா. என்ன கால் பண்ணேன், அம்மாவுக்கு போகலை?…” என்று கேட்டதும் கடகடவென்று எல்லாம் சொல்லிவிட்டான்.
“நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். என்ன செய்யனும்?…” என்றான் அவன் பேச வருவதை புரிந்துகொண்டு.
“பார்ட் டைம் ஜாப் கிடைக்குமான்னு கேட்கனும்னு இருந்தேன். ரொம்ப நாள் அம்மாவை இங்க விடமுடியாது அங்கிள். அப்பா அவர் இஷ்டம் தான்னு இருக்காங்க. எனக்கு ஈவ்னிங் டைம் நான் ப்ரீ தானே? வேலை கிடைச்சா நல்லாயிருக்கும்…”
“அங்க என்ன வேலை இருக்கும் சந்துரு? ஓகே நான் விசாரிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
“ஹ்ம்ம், வாங்காத மாதிரி தான்…” என்றவள் யோசனையானாள்.
“என்னன்னு சொல்லுரா. சேர்ந்து டிஸைட் பண்ணுவோம்…” என்று கூற,
“இல்லை. இதுவரைக்கும் இறுக்கி பிடிச்சதால கடன் ஓரளவு அடைபட்டுட்டே வருது. பழைய கடனோட அக்காவுக்கு சீமந்தம், குழந்தைக்கு செஞ்சதுன்னு புதுசா சேர்ந்தது தான். அது ஒருபக்கம் போனாலும் சந்துரு படிப்பு…”
“நிலா, சந்துருவுக்கு ஒரு ஜாப் ஏற்பாடு பண்ணி குடுப்போம். அது அவனோட செல்ப் கான்ஃபிடன்ட்க்கு. கஷ்டம்ன்னு நினைக்காத. செய்யட்டும். அவனுக்குள்ள இப்பவும் ஒரு கில்டி திங் இருக்கு. உன்னை கஷ்டபடுத்தறோம்ன்னு…”
“இல்லை அதெல்லாம்…”
“சொல்றேன்ல. செய்யட்டும். இப்பவே பொறுப்பா இருக்கான். வேலையும் பார்த்துட்டு செய்யும் போது இன்னும் பொறுப்பு வரும். அதோட அவனோட லைஃப்ல அடுத்து என்னன்னு அவன் யோசிக்கட்டும்…”
“ஹ்ம்ம்…”
“நீ வேற என்ன யோசிக்கிற?…” என்று கேட்டவன்,
“நான் சொல்றேன்னு சும்மா குதிக்காம கேட்கனும். அமௌன்ட் என்னன்னு சொல்லு. நான் தரேன். நானும் கடன் ஒன்னும் வாங்கி தரலை. என்னோட சேவிங்க்ஸ் சும்மா தான் இருக்கு….” என்றதுமே ஷ்ராவணி முகம் மாறியது.
“இதான் வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்று அவளின் தலையில் கொட்டியவன்,
“அந்த அமௌன்ட் எனக்கு வேணும்னா அனுப்பிரு. ஒரேதா இந்த கடனை முடிச்சிவிட்டா உனக்கும் நிம்மதி தானே?…” என்று சொல்லியது மிக சிறந்த யோசனையாக இருந்தாலும் மனது ஒப்புக்கொள்ளவில்லை.