“ஓகே, யோசி. முழுசா குடுத்து முடிச்சா வட்டி கட்ட வேண்டியது இருக்காது. வட்டி பணம் மிச்சம். அசல் மட்டும் எனக்கு எப்போ தருவியோ தா. நோ இஷ்யூஸ்…” என்றவன்,
“அதை நான் நம்ம குழந்தைங்களுக்கு பிக்சட்ல போட்டு வச்சுப்பேன்…” என கள்ளச்சிரிப்புடன் வம்சி சொல்ல ஷ்ராவணி முகம் பூவாய் மலர்ந்தது.
“உங்களை…”
“என்னை தான். என்ன? என்ன?…” என்றான் சிரிப்போடு.
“ஹ்ம்ம், யோசிக்கறேன்…” என்று அவள் சொல்லவுமே வம்சிக்கு ஏக சந்தோஷம்.
தன்னால் முடிந்தளவு அவளின் சுமையை குறைக்கவே விரும்பினான். அவளின் தயக்கம் ஏற்கனவே அவன் அறிந்தது தானே காபி ஷாப்பில் வைத்து.
அதுவே ஷ்ராவணியை யோசிக்க வைக்கிறது என எண்ணியவள் இதழ்களில் சிறு புன்னகை.
ஷ்ராவணியும் யோசித்தாள். வம்சி சொல்லுவதை போல மொத்தமாய் செலுத்திவிட்டால் பெரிய நிம்மதி.
கணக்கீட்டில் வட்டிக்கே பெரும்பாலான தொகை சென்றுகொண்டிருக்க இது இன்னும் சில வருஷங்கள் நீளும் என்னும் பொழுது மன அழுத்தம் தான் மிச்சம். தாயாவது நிம்மதியாய் இருப்பார் என நினைத்தாள்.
டெல்லி வந்த பின்னர் சந்துருவிடமும் இதை பற்றி கலந்தாலோசித்துவிட்டு செயல்படுத்துவோம் என்று முடிவுக்கு வரவும் தான் பாரமிறங்கிய உணர்வு.
அப்படி கடனை மொத்தமாய் அடைத்தால் வகுப்பெடுக்க கூட செல்ல வேண்டாம். அரக்கபரக்க ஓட வேண்டாம். இப்படி பல நினைவுகள் கற்பனையில்.
அதனுடன் நில்லாது பணி மாற்றத்திற்கான வரைமுறைகளையும் தேடி கவனித்து அவளின் மேலதிகாரியிடம் மெயில் மூலம் பேசியிருந்தாள் அதனை பற்றி.
இந்த மணாலி பயணம் வாழ்வில் மறக்க முடியாததாய் மாறியிருந்தது ஷ்ராவணிக்கு.
ஒரு நொடி கூட இருவரின் முகமும் வாடியிருக்கவில்லை. வம்சியிடம் எல்லாவற்றையும் அனுபவித்திருந்தவள் தாய் போன்ற அரவணைப்பையும் அங்கே தான் அனுபவித்தாள்.
இவனுக்குள் இன்னும் என்னென்ன இருக்கிறதோ என்ற வழக்கமான யோசனை. குழப்பமில்லாமல் சந்தோஷத்துடன் கூடிய களிப்பான யோசனைகள் தாம் அத்தனையும்.
விரைவில் இடமாற்றத்தை வாங்கிக்கொண்டு வம்சிக்கு இன்ப அதிர்ச்சி தரவேண்டும் என்று நினைத்தபடி கனவுகளில் மிதந்தவண்ணம் டெல்லி வந்து சேர்ந்தாள்.
இன்னும் இரு நாட்களில் சென்னை கிளம்ப வேண்டும். இருவருமே மனதின் தேடல்களை வார்த்தைகளில்லாமல் மற்றவர்களிடம் பறைசாற்றியபடி பிணைந்திருந்தனர்.
அவன் வாங்கி வந்திருந்த உடைகளை தான் இனி அணியவேண்டும் என்று சொல்லியிருக்க அவற்றை ஆசையுடன் எடுத்து வைத்தாள்.
சென்னை கிளம்பும் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தாள் அவனுக்காகவே.
மறுநாள் காலை விமானம். முதல்நாள் அன்று அதிகாலையே விழித்துவிட்டவளுக்கு அவனின் அணைப்பிலிருந்து விலக மனமில்லை.
மெதுவாய் எழுந்து அறையை விட்டு குளித்து வெளியே வந்தவள் அவனுக்கு என்னென்ன வேண்டும் என்று செய்ய ஆரம்பித்திருந்தாள்.
வம்சி எழுந்து வரும் பொழுது பாதி வேலைகள் முடிந்திருக்க அவளை பார்த்தபடி பின்னே வந்து நின்றான்.
“குட்மார்னிங் மில்டரி…” என்று அவளாகவே அவனை அனைத்து முத்தமிட்டுவிட்டு,
“பொடி எல்லாம் திரிச்சு வச்சிருக்கேன். சாம்பார், குழம்பு வரை. செய்வீங்களா தெரியலை. செஞ்சா இதோ இருக்கு. மேல எழுதி ஒட்டியிருக்கேன்…”
“ஹ்ம்ம்…”
“ரைஸ் இருக்கு. தண்ணி அளவு மறந்துடுச்சுன்னா எனக்கு கால் பண்ணனும். நான் சொல்ல சொல்ல செய்ங்க…”
“ஹ்ம்ம்…”
“சட்னி கொஞ்சம் வச்சிருக்கேன். புளி காய்ச்சல் இருக்கு. ரசப்பொடி எல்லாமே இருக்கு. டக்குன்னு செய்யற மாதிரி தான் இருக்கும் உங்களுக்கு…”
“ஹ்ம்ம்…
“அப்பறம்…” என அடுத்து சொல்லும் முன் அவளை தன் புறமாய் திருப்பியவன்,
“நீ என்னோட குடும்பம் நடத்த கல்யாணம் செஞ்சியா? இல்லை எனக்கு சமைக்க கத்து குடுக்க கல்யாணம் செஞ்சியா?…” என்றான் கோபமாய்.
“இல்லை உங்களுக்கு கஷ்டமா…”
“நீ இல்லைன்னா தான்டி கஷ்டம். அது உனக்கு புரியுதா?…” என்றவன் ஆவேசமாய் அணைத்துக்கொண்டான்.
அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனால் சுத்தமாய் ஏற்க முடியவில்லை.
“எதையும் கத்துக்கமாட்டேன். எல்லாத்தையும் தூக்கி குப்பைல போட போறேன். நீ வந்து வச்சு குடு. இல்லைன்னா விடு…”
“மூச்சு விட முடியலைங்க. விடுங்க…” என்று அவனின் கைகளுக்குள் அவள் துவள,
“எனக்கும் கஷ்டமா இருக்கு ரா தல்லி…” என்றவள் குரல் கலங்கி இருந்தது.
ஒவ்வொன்றையும் செய்து வைத்துவிட்டு கற்றுக்கொள் என்று சொல்ல அதன் பின்பொருள் ‘நானிருக்கமாட்டேன் உன்னுடன்’ என்றிருக்க வம்சிக்கு மீண்டும் தனியாய் அங்கே இருக்கவேண்டாம் என்றிருந்தது.
“நான் சாட்டர்டே சண்டே வந்துட்டு போகட்டா?…” என அவனின் சஞ்சலம் கண்டு கேட்க,
“நீ என்ன வீக்லி வொய்பா? கொன்னுடுவேன் பார்த்துக்க…” என்றவன் அவளின் மிரட்சியில்,
அதன் பின்னான நேரங்கள் அவனின் நெருக்கத்திற்குள் கரைய நேரமும் கரைந்தது.
மீண்டும் அவனிடமிருந்து எழுந்து வந்தவள் சமைத்து முடித்து வம்சியை வந்து எழுப்பினாள்.
“ஹ்ம்ம், நிலா…” என்றவன் விழிகள் மூடியபடியே இருந்தது.
“இன்னும் சாப்பிடலை நீங்க. வாங்க…”
“நீ மட்டும் சாப்பிட்டியா என்ன?…” என்றான் அதற்கும் கிண்டலாய் கேட்டுக்கொண்டு படுக்கையை விட்டு எழுவேனா என பிடிவாதமாய்.
“தாஜ்மஹால் போவோமா?…” என ஷ்ராவணி கேட்டதும் எழுந்தமர்ந்தான் வேகமாய்.
திருமணத்திற்கு பிறகு அங்கே செல்லவில்லை. செல்லவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
ஆனாலும் செல்லாமல் இருக்க இப்போது ஷ்ராவணியே கேட்டதும் எழுந்துவிட்டான்.
“கூட்டிட்டு போறீங்களா?…” என்றாள் ஆசையுடன்.
“இப்படி முகத்தை வச்சு கேட்டு, போய் சுத்திட்டு வந்து என்னை விட்டுட்டு போவ நீ…” என்று சொல்லியவன்,
“ஓகே வரேன்…” என்று கிளம்ப சென்றான்.
“முதல்ல சாப்பிட்டு…”
“வேண்டாம். பசியில்ல. வற்புறுத்தாத நிலா…” என்றவனுக்கு அப்போதைக்கு வேறு எப்படி மனதை திசை திருப்புவது என்றும் தெரியவில்லை.
நேரம் செல்ல செல்ல ஏன்தான் செல்கிறதோ என்னும் எரிச்சல் மூண்டது. அதனுடனே குளித்து உடை மாற்றி கிளம்பி வந்தான்.
“ரெடி…” என்று வாட்சை மாட்டியபடி வந்தவன் முன்னால் ப்ளேட்டுடன் வந்து நின்றவள் அவனுக்கு உணவை எடுத்து நீட்ட ஸ்தம்பித்து பார்த்தான்.
“ஹ்ம்ம், சாப்பிடுங்க. எனக்கும் பசிக்கும்ல…” என்று ஷ்ராவணி சொல்ல தன்னைப்போல திறந்து கவளத்தை வாங்கிக்கொண்டவன் பார்வை தன்னையறியாது தன் பெற்றோர்கள் புகைப்படத்தை பார்த்தது.
ஞாபகம் இருக்கும் வரை அவனாக தான் உண்டு பழக்கம். இத்தனைக்கும் அவனின் சித்தி கூட ஊட்டியதில்லை.
அடிவயிற்றிலிருந்து ஒரு உணர்வு எழும்பி அவனின் நெஞ்சை அடைத்து தொண்டையை இறுக்கி பிடித்தது.
அடுத்த கவளத்தை விழுங்கியவனுக்கு புரையேற அவனின் தலையில் தட்டி தண்ணீரை நீட்டினாள்.
“இதுக்குத்தான் ஒரு இடத்துல உக்கார்ந்து சாப்பிடனும்னு சொல்றது…” என்று அவனை சோபாவில் அமர வைத்தவள் அடுத்து ஊட்ட போக,
“நிலா…” என்று அவளின் இடையை சுற்றி கரங்களை கோர்த்துக்கொண்டவன் வேறு ஒன்றும் பேசவில்லை.
கையிலிருந்த பிளேட்டை பிடித்தபடி வம்சியின் உணர்வுகளை அவதானித்தபடி பார்த்து கொண்டிருந்தாள் நேசம் கொண்ட நெஞ்சம் வலிக்க.
“சீக்கிரம் வந்துருவேன்…” என்றுமட்டும் சொல்ல,
“எதையும் பேசாத. பயங்கர கோவத்துல இருக்கேன். பேசவே செய்யாத. எதாச்சும் சொன்னா கூட அது நீ கிளம்பிருவன்னு மட்டும் தான் எனக்கு ஞாபகப்படுத்துது…”
வம்சி சொல்லவும் அவனிடம் பேச்சில்லை. அமைதியாகி போனாள். சிறிது நேரம் பொருத்து எழுந்தவன் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு,
“சாப்பிடு. கிளம்பலாம்…” என்றான்.
“ம்ஹூம். இங்கயே உங்க கூடவே இருக்கேன்…”
“அங்க போனா மட்டும் உன்னை விட்டு எங்க போய்டுவேன்? கிளம்பு நிலா…” என்றவன் அவள் கையிலிருந்த பிளேட்டை வாங்க,
“நானே…” என்றாள் அவள்.
வம்சி முறைக்க என்னவும் முறைத்துக்கொள், நான் தான் ஊட்டுவேன் என்று நீட்டியபடியே இருக்க வேறு வழியின்றி வாங்கிக்கொண்டான்.
இருவரும் கிளம்பி தாஜ்மஹால் செல்ல அதற்குள் இருட்டிவிட்டிருந்தது. அந்த இரவில், அவனின் நிலவோடு கை கோர்த்திருந்தவன் மணலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்.
அவனின் தோளில் சாய்ந்தபடி அந்த நிமிடங்களை எல்லாம் மனதிற்குள் சேமித்து வைத்துக்கொண்டிருந்தவள் மனதின் பேரிரைச்சல் அவனுக்கு எட்டவே இல்லை.
வம்சியின் பார்வை தாஜ்மஹாலை காணாது அங்கே ஒளிர்ந்துகொண்டிருந்த வட்ட நிலவையும், அதன் நிழலில் தன் தோள் சாய்ந்திருந்த பெண்ணிலவின் வரிவடிவத்தையுமே மாறி மாறி சிறைபிடித்துக்கொண்டிருந்தது.
“நிலா…”
“ஹ்ம்ம்…” என்று அவனின் தோளில் இருந்தபடி நிமிர்ந்து பார்க்க அவளின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தவன்,
“இந்த இரவும் என் நிலவும். சம்திங் ஸ்பெஷல் ரா என் லைஃப்ல. ..” என்றான் சிறு புன்னகையுடன்.
“என்னவோ உன்னை திட்டி, பேசி, சண்டை போட்டு, அதட்டி உன்னை கூட வச்சிக்கனும்னு ஆசையா இருக்குடா. வச்சிக்கட்டுமா?…” என்ற வம்சியின் விழிகள் பளபளப்பில் இமைக்க மறந்தாள் ஷ்ராவணி.