விமான நிலையம் செல்லும் வழியில் சிக்னல் விழுந்துவிட கன்னத்தில் கை வைத்தபடி எதிரே பாதையை பார்த்தபடி அமர்ந்திருந்தான் வம்சி சைத்ரயேஷ்.
அவனருகே முன்னிருக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் ஷ்ராவணி தன்னை மறந்து தூங்கிக்கொண்டு இருந்தாள்.
அவளை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் பச்சை விளக்கு எரிகிறதா என்று பார்த்தான்.
மனதினோரம் ஒரு ஆசையும் கூட. பேசாமல் தாமதமாகி விமானத்திற்கு செல்லமுடியாமல் போனால் தான் என்ன? என சிறுபிள்ளையாய் ஒரு எண்ணம் உதிக்க தன்னை குறித்தே சிறு வெட்கம்.
கன்னத்திலிருந்த கை மீசையை நீவி இதழ்களில் விரியவிருந்த புன்னகையை மறைக்க முயன்றது.
அப்படியே மீண்டும் திரும்பி ஷ்ராவணியை பார்த்தவன் வலிக்க கன்னத்தை கிள்ளி எழுப்பிவிட்டால் தான் என்ன என்று பரபரத்த விரல்களை அடக்கிக்கொண்டான்.
முதல்நாள் இரவு யமுனையாற்றில் வைத்து தான் பிதற்றியவை எல்லாம் ஞாபகம் வர இன்னுமின்னும் வியப்பே தன்னுடைய வார்த்தைகளில்.
இந்தளவு இவள் தனக்குள் இறங்கியிருக்கிறாளே என எண்ணுகையில் களிப்பு, கவலையும் ஒருங்கே பிறந்தது.
தன்னுடைய பணிக்கு இந்தளவிற்கு தேடல், தவிப்பு சரியா என்று அவனறிவு சுட்டிக்காண்பித்தது.
அறிவிற்கும், மனதிற்கும் எப்போதுமே அவனிடம் ஒரே இடம் தான் இருந்துவர அது அவனின் நிலா விஷயத்தில் கொஞ்சமும் எடுபடவில்லை.
இப்போது இரண்டும் முரண்பட்டு நிற்க அதில் பெருமளவு தடுமாறிக்கொண்டிருந்தான் வம்சி.
இப்போது தன் எண்ணங்களை பகிர்ந்தால் நிச்சயம் சண்டை தான் என நினைக்கையில் லேசாய் சிரிப்பு கூட வந்தது.
“நான் வேணும்னா இன்னும் ஒன் வீக் லீவ் எடுத்துக்கவா?…” என முதல் நாள் அவனின் பேச்சில் ஷ்ராவணியே கேட்டுவிட,
“ஒன்னும் தேவையில்லை. இன்னும் என்னை வீக்காக்கும். நோ…” என சர்வநிச்சயமாக அவளின் பேச்சை மறுத்தான்.
“வேற என்னதான் செய்ய?…”
“நீ கிளம்பற மாதிரியே கிளம்பு. எப்ப வரனுமோ வா…” என்று பேச மனதெல்லாம் சஞ்சலம் குடிகொண்டது ஷ்ராவணிக்கு.
“எப்ப வரனுமோன்னா? நான் வேணும்னே கிளம்பற மாதிரி பேசறீங்க?…”
“இப்ப என்ன சொன்னேன்? எதுவும் சொல்ல கூடாதா?…” என அதற்கும் காய்ந்தவனிடம் வேறு என்னதான் சொல்ல?
“நான் இங்க ட்ரான்ஸ்பர்க்கு ரெடி பன்றேன். அங்க போனா தான் பேச முடியும்…”
“யூர் விஷ்…” விட்டேற்றியாக சொல்லியவனை நங்கென்று நடு மண்டையில் கொட்டினால் தான் என்ன என்று வந்தது.
“எனக்கு மட்டும் உங்களை விட்டு போக ஆசையா? ரொம்பத்தான்…” என்று முறைக்க,
“ப்ச், ஷ்ராவணி…” என்றான் வம்சி.
“இப்ப மட்டும் என் பேர் ஞாபகம் வரும். இல்லையா?…”
“ஆமா, அப்படித்தான்…” என்றவன் மீண்டும் மௌனமாக ஆற்றை பார்த்தான்.
“ப்ளீஸ், இப்படி இருக்காதீங்க. போறதுக்குள்ள திரும்ப சண்டை வேண்டாம்….”
“நான் சண்டை போடறேனா? வெல்…” என்று தோளை குலுக்கிக்கொண்டவன் அடுத்து பேசவே இல்லை.
அவளை அணைத்த கையை விலக்கவும் இல்லை. அவளின் அருகாமையை தவிர்க்கவும் இல்லை. ஆனால் வார்த்தைகளற்ற ஒரு உணர்வை அவளுக்குள் கடத்திக்கொண்டிருந்தான்.
வம்சியின் பார்வையும், அலைபாயும் விழிகளில் கொட்டும் தவிப்பும் ஷ்ராவணியை இன்னும் பலவீனமாக்கியது.
“நான், நான் வேணும்னா ரிசைன் பண்ணிடட்டுமா?…” என கேட்டு முடிக்கும் முன் கண்களில் நீர் நிறைந்துவிட அவனுக்குன் காட்டாமல் மறைத்தாள்.
முகத்தை மறைத்தவளால் குரலை மறைக்க இயலவில்லை. அதில் கண்டுகொண்டவன் அணைப்பு இன்னும் அழுத்தமாகியது.
“ஹேய் நிலா…” என்று அவள் முகத்தை நிமிர்த்தினான்.
அந்த வேலையில் சேர அவள் பட்ட கஷ்டங்கள் என்ன? அந்த வேலையினால் அவள் குடும்பத்தின் பாரம் குறைய முடிந்தது.
எல்லாவற்றுக்கும் மேல் அந்த வேலைக்கு வருவதாக இருந்ததால் மட்டுமே தங்கள் சந்திப்பும் சாத்தியம் என்று நினைத்தவன் அவள் கண்களை துடைத்தான்.
“கூல்…” என்று அவளின் கன்னம் நிமிண்டி சொல்லியவன்,
“நான் தான் எமோஷனலாகிட்டேன்…” என்றான் தன்னை மீட்டுக்கொண்ட விதமாய்.
அவளுக்கு அந்த வேலை எத்தனை முக்கியம் என்று தெரியுமே? அதிலும் இப்போது தான் தன்னிடம் பணம் வாங்குவதை பற்றி நல்ல முடிவிற்கு வந்திருக்க அதனை உடைக்க விரும்பவில்லை வம்சி.
வேலையை விட சொல்ல சுத்தமாய் மனதே இல்லை. அதனை அவன் ஏற்கவும் இல்லை.
இந்த சின்ன பிரிவிற்கு எதற்கு தானும் கலங்கி, அவளையும் கலைப்பானேன்? இதுவே தனக்கு மாற்றுதல் கிடைத்து அவளை அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை என்றால்?
தனது யோசனைகளை திசை திருப்பி தன் மனைவி பக்கமாக நின்று பார்க்க ஆரம்பித்தான்.
தன்னையே பார்த்தபடி நின்றவளின் முகத்தை பற்றி புன்னகைத்தவன் கை கொடுத்து எழுப்பிவிட்டான்.
“இப்ப எதையும் பேசவேண்டாம். ஓகே. நாளைக்கு கிளம்பனும் நிலா…” என்று அழைத்து பிளாட்டிற்கு வந்து சேர நள்ளிரவானது வாகன நெரிசலில்.
வீடு வந்து சேரும் வரை அத்தனை பேச்சுக்கள். இருவருமே பேசியபடி வர அதில் சண்டைகளோ, வாக்குவாதங்களோ இன்றி மனதுக்கு இதமாகவும், பிரிவை எண்ணி கனமாகவும் இருந்தது.
வந்தவள் அடுத்து உறங்கவே இல்லை. எடுத்து செல்லவேண்டிய பயண பெட்டியை எடுத்து வெளியே வைத்தாள்.
காலை நேர விமானம். அதற்கு முன்பே சென்றிருக்கவேண்டும் என்பதால் உறங்கினால் சரிவராது என்று விழித்திருந்து தயாராக,
“நிலா, எதாச்சும் சமைச்சு தாயேன்?…” என்றான் வம்சி அந்த நேரத்தில்.
“இதோ இப்பவே…” என்றவள் மாவை எடுத்து அவனுக்கு தோசை ஊற்ற, சட்னியை எடுத்து வைத்தான் அவன்.
“வேற எதாச்சும் செய்யட்டுமா?…”
“ம்ஹூம், தோசை போதும்…” என்று அவளருகே நின்றுகொண்டான்.
அவனுக்கு தேவையானளவு தோசை சுட்டு தந்துவிட்டு தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
“இவ்வளோ நேரமாகிடுச்சு இல்லையா? பசிக்குது…” என்று சாப்பிட வம்சி தலையசைத்தான் புன்னகையுடன்.
அவன் விழிகள் அவளை தாண்டி அந்த வீட்டை அளந்தது. எல்லா இடத்திலும் அவளுடனான இந்த ஒருவார வாழ்க்கையின் ஞாபகங்கள் மிச்சங்களாய் நிறைந்திருந்தது.
“நான் தான் போகலைன்னு சொல்றேன்ல…” அவனின் கோபத்தில் அழுகை போல பேச,
“நெக்ஸ்ட் வீக் போனாலும் நான் இதைவிட மோசமா ரியாக்ட் பண்ணுவேன். அப்போ இன்னும் ஒருவாரம் தள்ளி போடுவியா? கிளம்பு…” என்று அவளின் ட்ராலியை தள்ளிக்கொண்டு வர அதற்கு மேல் உள்ளே வரமுடியவில்லை.
குறிப்பிட்ட பகுதியில் அவன் நின்றுவிடவும் இனி தனியே அவளின் பயணம். முதன்முறை தனியே விமான பயணம்.
மிரட்சியுடன் அவனின் கைகளை கோர்த்துக்கொண்டு பார்க்க வம்சிக்கு உள்ளுக்குள் உருகியது.
“என்ன நிலா?…” என்றான் அவளின் படபடப்பில்.
“இல்லை நான் இப்ப தான் தனியா போறேன். அதுவும் அதுவும்…” என்று திணறிக்கொண்டு நிற்க,
“பார்ரா, இங்க இருக்கற சென்னை. இதுக்கு இவ்வளோ பயமா?…” அவளை இலகுவாக்கினான்.
“உங்களுக்கு சர்வீஸ். எனக்கு அப்படியா?…”
“அதுக்காக நானும் கூடவா வர முடியும்?…” என சிரிக்க அவனின் சிரிப்பில் உடைந்து போனாள் ஷ்ராவணி.