“ம்ஹூம், நான் போகலை. ப்ளீஸ். இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கட்டுமா?…”
“நிலா?…”
“ம்ஹூம், வாங்க வீட்டுக்கு போவோம். நான் ஆபீஸ்ல பேசிக்கறேன். வாங்க வாங்க…” என அவனின் கையை பிடித்தபடி வெளியே அழைக்க வம்சிக்கு அவளின் பிடிவாதத்தில் அப்படி ஒரு புன்னகை.
மனமெங்கும் ஒரு தேன்மழை சாரல் வீச புன்சிரிப்புடன் லேசாய் தோளோடு அணைத்து நின்றான்.
அன்றும் தன்னால் தான் அழுதுகொண்டு இங்கிருந்து சென்றாள். இன்றும் தன்னால் தான் அழுதுகொண்டு செல்ல மறுக்கிறாள்.
ஆனால் சூழ்நிலைகள் தான் வேறு. ஏன் தானும், தன் மனநிலையுமே இப்போது வேறு தானே?
அன்றைக்கு போல அலட்சியமாய் சொல்லவும் முடியவில்லை. அப்படியே அனுப்பவும் முடியவில்லை.
“நிலா கீப் கொயட்…” என்ற வம்சியின் அதட்டல் இப்போது வேலை செய்தது.
“அப்போ நான் போகனும். அதானே?…”
“ஆமா, கிளம்பு…” என்றான் தன் தவிப்பை மறைத்தவனாக அவளை முறைத்துக்கொண்டு.
“நேத்து நைட் என்னவோ பேசினீங்க?…”
“தெரியாம பேசிட்டேன். நீ கிளம்பு முதல்ல. அநோன்ஸ் பண்ணிட்டாங்க பாரு…”
“எனக்கு தெரியும். அன்னைக்கும், இன்னைக்கும் இப்படித்தான் நான் அழ அழ அனுப்பறீங்க. இனி நீங்களா கூப்பிடாம வரமாட்டேன்…” மூக்கை உறிஞ்சிக்கொண்டு கோபமாய் சொல்லியவள் அவன் கையிலிருந்த தன் ஹேன்ட் ட்ராலியை பிடுங்கிக்கொண்டாள் வெடுக்கென்று.
“கோவமா பொம்மாயி…”
“பொம்மையா? எதாச்சும் பேசினீங்க கடுப்பாகிருவேன்…”
“காதுடா, நுவ்வு இப்புடு சந்திரமுகி…” என அவளின் முறைப்பை பார்த்து கிண்டலாய் சொல்ல,
“இவ்வளவு நாள் நிலாவா தெரிஞ்சவ இன்னைக்கு சந்திரமுகியா? ஹஸ்பண்ட்ஸ் ஆல்வேஸ் ஹஸ்பண்ட்ஸ் ஒன்லி…” மூக்கு விதைக்க அவள் விழிகளில் கோப கனல்.
“தெலுங்கு அர்த்தமாயிந்தா நிலா?…” என்று கேலி செய்தவன்,
“சந்திரமுகி கூட நிலா தானே? மீனிங் கரெக்ட் ரா…” என மீண்டும் சீண்ட,
“இனி எதாச்சும் நீங்க செப்பிங். நான் கடுப்புல கன்னத்துல அப்பிங். போயா யோவ். என்ன புருஷ் நீங்க?…” என்று கடுப்பில் ஏக வசனத்தில் கத்திவிட்டு அவனை அணைத்து விடுத்து வம்சியின் நெஞ்சில் ஓங்கி குத்தியவள் விறுவிறுவென உள்ளே நடந்தாள்.
“நீ போறது வேற வழிடா நிலா…” என்ற வம்சியின் குரலில் திடுக்கிட்டு நின்று சுற்றி பார்த்தவள் தான் சரியான வழியில் செல்வதை கவனித்து பின் வம்சியை முறைத்தாள்.
அவன் பை என்பதை போல மீசையை நீவிய தன் ஐந்து விரல்களை விரித்து அசைக்க, தன் கை கொண்டு தட்டிவிட்டாள் ஷ்ராவணி.
“ப்ளையிங் கிஸ், யார் கேட்டா இந்த மில்டரிட்ட. மீசைக்கடில குடுத்தா தெரியாதாமா? அப்படியே கேமரால கேப்சராகாம க்ளவர்ரா தராராம். யாருக்கு வேணும்?…”
உள்ளே வந்ததிலிருந்து மனதிற்குள் அவனை திட்டுவதும், கலங்கும் கண்களை துடைப்பதும் என்று அப்படி ஒரு போராட்டம்.
இதே மனநிலையுடன் தன்னால் வேலை பார்க்க முடியுமா என்ற ஐயமும் தோன்ற ஊர் சென்று சேர்ந்ததும் முதலில் ட்ரான்ஸ்பர் கேட்டு வாங்க வேண்டும் என முடிவெடுத்தாள்.
“ம்ஹூம், தப்பு ஷ்ராவணி. பண்ணாத மில்ட்ரியை கொஞ்சம் தவிக்க விடு. அப்பத்தான் உன்னை புரியும். எவ்வளவு ஈசியா போச்சு? சிரிச்சுட்டே வழியனுப்பி வைக்கறார்…”
“நான் கேட்டும் கிளம்பு கிளம்புன்னு நிக்கிற மனுஷனை சும்மா விடமாட்டேன். தேடி வாங்க பேசிக்கறேன்…” என உதடு துடித்தது.
மீண்டும் கண்ணீர் பொங்க உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள். தண்ணீர் வேண்டும் என்பதை போல் தாகமாக இருந்தது.
அழுகையை விழுங்கவாவது தண்ணீர் வேண்டும். ஆனால் அசையாமல் அமர்ந்திருந்தாள் அவளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்.
யாரோ ஒரு பெண்மணி வந்து அமர்வது தெரிந்தது. ஹலோ சொல்ல அவரை பார்க்காமல் தானும் அதனை சொல்லிவிட்டு கண்களை மூடி சாய்ந்தவள் விமானம் கிளம்பும் அறிகுறி தெரிய மீண்டும் விழிகளை திறந்தாள்.
ஜன்னலோர இருக்கை. இரு கைகளால் ஊன்றியபடி கண்ணாடி வழியே கீழே வம்சியை பார்வையால் தேடினாள் ஷ்ராவணி.
அவன் அங்கே இருக்க போவதில்லை என்று தெரிந்தாலும் மனதிற்கு புரியவில்லை.
அலைபாயும் கண்கள் அவனை கண்டவிட துடிக்க கண்ணீர் இறங்கிவிட்டது கண்களில் இருந்து.
என்ன முயன்றும் விம்மலை அடக்கமுடியவில்லை. தான் சொல்லியும் தன்னை வம்படியாக அனுப்பி வைத்துவிட்டானே என ஆத்திரம்.
அத்தனை ஆத்திரமும் அழுகையாக வெடிக்க ஒரு கையால் வாயை மூடிக்கொண்டவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதுவும் அவன் தன்னை எந்தளவிற்கு தேடுகிறான் என்று உணர்ந்து அவனுக்காக பார்க்க, இப்போது தனக்கே அவனில்லாமல் கிளம்ப மனதில்லை.
கையால் கண்ணீரை துடைக்க துடைக்க பொங்கியபடி இருக்க அவளின் தோள் சுற்றி படர்ந்தது வலிய கரமொன்று.
“யாரு…” என வெடுக்கென்று திரும்பியவளை தன் தோளில் சாய்த்திருந்தான் வம்சி.
முகமெல்லாம் வர்ணஜாலம் அவன் வந்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.
கூடவே கோபம் ஒருபக்கம், தன்னிடம் சொல்லி சேர்ந்தே வந்திருக்கலாம் தானே இவன் என்று.