ஷ்ராவணி சென்னை வந்து சேர்ந்து அன்றோடு இருபது நாட்களாகிற்று.
வந்த அன்று அவளை ஹாஸ்டல் வரை வந்து விட்டுவிட்டு அன்றே டெல்லி திரும்பியிருந்தான் வம்சி.
பிரிய மனமில்லை என்றாலும் வேறு வழியிருக்கவில்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும் என தேற்றிக்கொண்டாள்.
தினமும் போனில் பேச்சுக்கள், வீடியோ காலில் பார்த்துக்கொண்டு மௌனமான பார்வைகள் என இருவருக்கிடையே அந்த பிரிவின் தாக்கத்தை கூட்டுவதும், குறைப்பதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தது அந்த காத்திருப்பு.
சில நேரங்களில் பேச்சுக்கள் காரசாரமாக ஆரம்பித்து கனிந்த கனிகளாய் இனிமையுடன் குழையும்.
பல நேரங்களில் அதற்கு அப்படியே நேர்மாறாய் இடியும் மின்னலுமாய் இருவருக்கிடையே வெடிக்கும்.
“இதுக்கு தான் லீவ் எக்ஸ்டன்ட் பன்றேன்னேன். கேட்டீங்களா நீங்க?…” என்று அவன் மீது கோபத்தில் பேசினால் வம்சி தான் சற்று இறங்கி வருவான்.
ஆனால் பெரும்பாலும் அவனை கோபப்படுத்த கூடாதென்று தான் ஷ்ராவணி தழைந்து போக விரும்புவாள்.
தனியாய் இருப்பவன். அவனின் கவலைகள் எல்லாம் அறிந்திருந்தும் இப்படி வாட்டுவானேன் என்று உடனடியாக சரண்டராக அந்த வானிலை மாற்றங்கள் இருவருக்குமே அந்தந்த மனநிலையை பொருத்து மாறுபடும்.
இன்றும் யோசனையுடன் தனது இருக்கையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஷ்ராவணி கிளம்பாமல் இருக்க,
“என்ன ஆபீஸ் விட்டு வர மனசில்லையா உனக்கு?…” என்று குமுதா தோளை தட்டவும் தான் சுயநினைவு வந்தாள்.
“ஏன் வந்தீங்கன்னு கேட்காம இருந்தியே? சந்தோசம்…” என கிண்டலாக சொல்லியவன்,
“ஓகே, கார்ல ஏறு. போய்ட்டே பேசலாம்…” என்று கதவை திறந்துவிட்டான்.
“சொல்லுங்க, எப்போ வந்தீங்க?…”
“என்னோட லஞ்ச் இங்க சென்னையில தான்….”
“நான் கேட்டதுக்கு இதுவா பதில்?…”
“அறிவே, இங்க தான் லஞ்ச் அப்படின்னா எப்போ வந்திருப்பேன்?…”
“ஏன் சொல்லவே இல்லை? போன் பண்ணியிருக்கலாம் தானே? என்னை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா? நேத்து ஏன் கால் அட்டன் பண்ணலை? பிஸின்னு மட்டும் மெசேஜ். நான் என்னன்னு எடுக்க? எங்க இருக்கீங்க? என்ன பன்றீங்கன்னு எப்படி தெரியும்?…”
அவனை பார்த்த சந்தோஷத்துடன் பார்த்ததும் அவன் பேசியவிதத்தில் மனதில் இருந்தவற்றை மடைதிறந்த வெள்ளமென கொட்டிவிட வம்சிக்கு அப்படி ஒரு புன்னகை.
“அதானே பார்த்தேன். என்னடா கேள்வி கேட்கலைன்னு?…” என சிரிக்க,
“பின்ன உங்களை கேட்காம?…”
“கேளு, கேளு. யோவ் சொல்லுவ. வேற என்னலாம் சொல்லுவன்னு நானும் தெரிஞ்சுக்கலாம்…” என கேலி செய்ய அவனின் தோளில் குத்தினாள்.