சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் இரவு பத்துமணி போல ராமேஸ்வரம் வந்து சேர்ந்துவிட்டனர் மூவரும்.
முன்னிருக்கையில் சந்துரு அமர்ந்துகொள்ள பின்னால் வம்சியும், ஷ்ராவணியும் இருந்தனர்.
கோபத்துடன் தம்பியை திட்டிக்கொண்டே வந்தவளுக்கு அத்தனை எரிச்சல். ட்ரைவரை வைத்துக்கொண்டு ஒன்றும் பெரிதாய் பேசவும் முடியாமல் முணுமுணுத்து கொண்டே தான் வந்தாள்.
“க்கா, வீடு வந்திருச்சு இறங்கு…” என சந்துரு சொல்ல,
“ஏன்டா இப்படி பன்ற? இவரோட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்ட்ட நீ…” என்றவள் இறங்கமுடியாமல் இருக்க,
“ஓகே, நான் இறங்கி உன்னை கூப்பிட்டுக்கறேன்…” என்ற வம்சி தன் பக்க கதவை திறந்து இறங்கவுமே பதறி போனாள் ஷ்ராவணி.
விட்டால் தன்னை கைகளில் தூக்கிவிடுவான் இவன் என வம்சியின் பேச்சிலேயே தெரிந்துபோக,
“எல்லாம் வம்புக்கு பன்றது…” என புலம்பியபடி இறங்கினாள் ஷ்ராவணி.
“வணி உனக்கு தான் வீடா? அதுக்கு தான் சந்துரு கேட்டானா?…” அந்த வீட்டின் உரிமையாளர் அவளை பார்க்கவும் திகைப்புடன் கேட்க சங்கடமானது ஷ்ராவணிக்கு.
“வீடு எல்லாம் சுத்தமா இருக்கா?…” என அவரை தன் பக்கம் திசை திருப்பினான் வம்சி.
ஏற்கனவே அந்த வீதியில் கார் வந்து நின்றதும் அக்கம்பக்கத்தில் ஒரு பார்வை பார்த்து நிற்க இப்போது ஷ்ராவணி என்றதும் வீட்டிற்குள் இருந்தவர்களையும் அழைத்து காண்பித்தனர்.
“வீடெல்லாம் எப்பவும் சுத்தம் தானுங்க தம்பி. அதான் வேற யார்க்கிட்டயும் சொல்லாம சந்துரு நம்ம வீட்டை சொல்லவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே?…”
“நம்ம வீடா? சந்துரு சொல்லவே இல்லை?…” என்று சிரித்த வம்சி,
“ஓகே, நாளைக்கு பார்க்கலாம்…” என்று ஷ்ராவணி கையை பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல போக,
“வணிம்மா…” என வந்துவிட்டார் சுலோச்சனா.
அவர் இதனை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இப்படி சொல்லாமல்கொள்ளாமல் வந்ததுமின்றி எதிர் வீட்டில் தங்குவதற்கு பிடித்ததை நம்பவே முடியவில்லை.
“ம்மா, எப்படி இருக்க? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா?…” என தாயை பார்த்ததும் அணைத்துக்கொண்டாள் ஷ்ராவணி.
“என்னம்மா, என்ன இங்க வந்துட்டு? வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்…” என முதலில் சுலோச்சனா வீட்டிற்கு அழைக்க வம்சியை பார்த்தாள் ஷ்ராவணி.
“வாங்க தம்பி, தயவு செஞ்சு இப்படி இங்க யாரோ மாதிரி வந்து நிக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு…” என்றவர் சந்துருவை அடித்துவிட்டார் முதுகில் பலமாய்.
“நீ அவ்வளோ பெரிய மனுஷனாடா? என்ன பண்ணிவச்சிருக்க நீ?…” என சொல்லும் பொழுதே அழுகை வந்துவிட்டது அவருக்கு.
“நான் தான் வீடு வேணும்னு சொல்லியிருந்தேன். ஹோட்டல்னா நானே புக் பண்ணியிருப்பேன். ஆனா வீடுன்னதும் சந்துருவுக்கு தெரிஞ்சதுன்னா பெட்டர்ன்னு தோணுச்சு. இதுல என்ன இருக்கு?…” என்றான் வம்சி.
“அதுக்குன்னு நம்ம வீடு இருக்கும் போது…” வம்சி ஒரு தலையசைப்புடன் கொண்டுவந்த பெட்டிகளை எடுத்து உள்ளே வைத்தான்.
“வணி அவர்கிட்ட சொல்லும்மா…” சுலோச்சனா சொல்ல,
“ம்மா எனக்கு இங்க நம்ம வீட்டுக்கு முன்னாடி வரோம்ன்னு தெரியாதும்மா. மத்யானம் கிளம்பும் போது தான் சந்துரு சொன்னான்…”
ஷ்ராவணிக்கு தான் சங்கடமாக இருந்தது. பரிதவிப்புடன் தாயையும் கணவனையும் மாற்றி மாற்றி பார்க்க,
“நிலா உள்ள வா…” என்றான் வம்சி.
“என்னங்க…” என்றவளின் அருகே வந்தவன்,
“ஹ்ம்ம், வீடு நல்லா இருக்கு. நீட் அன்ட் கிளீன்…” என சந்துருவை தட்டிக்கொடுத்தான்.
“ஓகே, ரொம்ப டயர்ட், ரெஸ்ட் எடுக்கனும் நான். எதுவானாலும் உள்ள வந்து பேசுங்க…” என்று சொல்லிவிட்டு சுலோச்சனாவையும் பார்த்து,
“உள்ள வாங்க…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
இரண்டு அறைகள் படுக்கை அறை போல இருந்தது. இரண்டுமே மிக சிறியது தான்.
முன்னடியில் ஒரு ஹால், அதனை ஒட்டி இன்னொரு ஹால் போன்ற அமைப்பு என கச்சிதமாய் இருக்க எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒரு அறையை திறந்து அங்கே பெட்டிகளை வைத்தான்.
அக்கம்பக்கத்தில் அதற்குள் ஆட்கள் சேர அந்த நேரம் உள்ளே வரவும் ஒருமாதியிருந்தது சுலோச்சனாவிற்கு.
இதில் இவர்களை எப்படி வீட்டிற்கு அழைக்க வைப்பது என யோசித்தவருக்கு ராமன் இறங்கி வருவாரா என்று தெரியவில்லை.
“வணிம்மா அம்மாவுக்காக…” என்று முன்னறைக்கு வந்து அழைக்க,
“இல்லம்மா. நீ வருத்தப்படாத. கவலைப்படாம இரு…”
“எப்படிம்மா? கல்யாணமாகி முதல் முதல்ல இங்க வந்திருக்க? இப்ப உன்னை…” என சொல்லும் பொழுதே சந்துரு தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் என்று ஒரு கவரோடு நுழைந்தான்.
“என்னடா இது?…” மகனிடம் சுலோச்சனா கேட்க,
“கார்ல வரும் போதே வாங்கிட்டு வந்துட்டாங்க அங்கிள். அதான் ட்ரைவர் கூப்பிட்டு குடுத்தார்…”
“உன்னை என்ன பன்றது? வீட்டுக்கு வா. பேசிக்கறேன்…” என திட்ட,
“ம்மா சும்மா இருங்கம்மா…” என உள்ளே சென்றுவிட மகளை இயலாமையுடன் பார்த்தார் சுலோச்சனா.
“ம்மா, ஒன்னும் இல்லை. நீ சங்கடப்படாத. நாங்க சந்தோஷமா தான் இருக்கோம். அங்க வந்தா தானா? ஏன் எதிர்ல தானே இருக்கேன்? நீ வந்து பார்த்துக்கோ…” என்றாள் சமாதானமாக.
“அப்ப உனக்கும் வர விருப்பமில்லையா?…”
“இல்லைன்னு சொல்ல முடியலைம்மா. நான் நினைக்க கூடாதுன்னாலும் மனசுல ஒரு வேற்றுமை தெரியுதும்மா…”
“வணி என்னடா?…”
“ஹ்ம்ம், அக்கா கல்யாணம், அவ வீட்டுக்காரருக்கு மதிப்போ? இல்லையோ? ஆனா நம்ம வீட்டுல அவருக்கான வரவேற்பு, இதெல்லாம் தானாவே ஒப்பிட்டு பார்க்க தோணுது ம்மா…” என மெதுவாய் சொல்லவும் தாய்க்கு அதில் தவறு எதுவும் தெரியவில்லை.
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை. என் பொண்ணை கூப்பிட்டு வீட்டுல வச்சு பேச வக்கத்து போயிருக்கேனே?…”
“ம்மா, ம்மா. என்ன நீ?…” என்று அவரின் கண்ணீரை துடைத்தவள்,
“எதுக்கு வந்தோம்ன்னு கேட்கமாட்டியா?…”
“என்ன கேட்க? உங்கப்பா இப்ப இருந்தா பேசிருப்பேன். அவர் தேவிப்பட்டினம் வரை ஒரு வேலையா போயிருக்கார். வரட்டும்…”
“சரி இருக்கட்டும். நாளைக்கு ஒரு முக்கியமான நாள்…”
“என்னம்மா? உன் வீட்டுக்காரருக்கு பிறந்தநாளா?…” என்றார் சுலோச்சனா ஆர்வமாக.
“அதெல்லாம் இல்லை. நாளைக்கு கடனை எல்லாம் செட்டில் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்…” என்றதும் அதிர்ச்சியானார் சுலோச்சனா.
“என்ன? அவ்வளோ பணத்துக்கு என்ன பண்ணின?…” என்றதும் சுலோச்சனாவிடம் உண்மையை சொல்லிவிட வந்த ஷ்ராவணியை வம்சியின் வருகை சுதாரிக்க செய்தது.
“உக்கார்ந்து பேசவேண்டியது தானே? ஏன் நின்னுட்டே இருக்கீங்க?…” என்று வந்து சேரை நகர்த்தி போட்டு தானும் அமர்ந்துகொண்டான்.
அவன் இரவு உடைக்கு மாறியிருக்க அதற்கு மேல் அங்கு இருப்பது நாகரீகமில்லை என சுலோச்சனா,
“நான் கிளம்பறேன்….” என்றார்.
“சரிம்மா, நாளைக்கு பேசுவோம்…” ஷ்ராவணி சொல்ல,
“காலையில நானே சமைச்சு கொண்டு வரேன் வணி. தம்பிட்ட சொல்லிரு…”
“இல்லை அது சரிவராது. வேண்டாம்…” என்றான் வம்சி.
மீண்டும் ஷ்ராவணி தாய், கணவனுக்கிடையே மாட்டிக்கொண்டு பாவமாக விழித்தாள்.
சுலோச்சனா மகளிடம் பேசு என்பதை போலிருக்க வம்சியின் முகத்தில் பிடிவாதம்.
“ம்மா, விடு. இன்னொருநாள் சமைச்சு தா. இப்ப வேண்டாம். நாளைக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும்…” என தாயை பேசியபடி அழைத்து வாசலுக்கு வந்தாள்.
“என்னடாம்மா, அம்மாவுக்கு தாங்கவே முடியலை….” என புடவை முந்தானையால் கண்ணீரை துடைக்க,
“ம்மா உங்களுக்கு உங்க பாசம். அவருக்கு தன்மானம். இப்ப உங்களுக்காக இறங்கினா பின்னால அதுவே அவருக்கு தலையிறக்கமா போகும். நீங்கன்னா ஒண்ணுமில்லை. ஆனா அக்கா முன்னாடி…” என்றதும் அவருக்குமே சரி என்று பட்டது.
“நீ சொல்றதும் சரி தான்….” என புரிந்துகொண்டவர்,
“அவ்வளோ பணத்துக்கு என்ன பண்ணின? ஏன் திடீர்ன்னு இந்த முடிவு?…”
“அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்மா…”
“இல்லம்மா, எல்லார்ட்டயும் போய் குடுத்துட்டு…”
“இல்லம்மா போன்ல வரும் போதே பேசிட்டோம். நாளைக்கு இங்கயே வரேன்னு சொல்லிட்டாங்க. ஒட்டுக்கா குடுத்திடலாம்ன்னு…”
“வந்து வாங்கிக்கறேன்னு சொன்னாங்களா?…” அடுத்த ஆச்சர்யம் அவருக்கு.
“ஆமா, சந்துருவும், அவரும் தான் பேசினாங்க. நான் வரமுடியுமான்னு கேட்டேன். அதுக்கென்னம்மா, வந்துட்டா போச்சுன்னு சொல்லிட்டாங்க…”