முதல்நாள் இரவே ராமன் பிடித்து அத்தனை திட்டி பேசியிருந்தார் தாயையும் மகனையும்.
“என்னை அசிங்கப்படுத்தனும்னே எல்லாம் செய்வாளோ இவ? இப்பத்தான் இந்த பேச்சு அடங்கி இருக்கு. இப்படி வந்து எவ்வளவு திண்ணக்கமா எதிர்வீட்டுல தங்குவா? என் உயிரை எடுக்கன்னே பிறந்து தொலைஞ்சிருக்கா…”
“ம்மா, நான் தான் வீட்டை பேசி குடுத்தேன். இங்க தான்னு அக்காவுக்கு வர வரைக்கும் தெரியாது…” சுலோச்சனாவிடம் பேசினான் சந்துரு.
தந்தையிடம் பேசுவதை குறைத்திருக்க இப்போது மீண்டும் நேரடியாய் பதில் சொன்னால் இன்னுமே பேச்சு நீளும் என முடித்துக்கொண்டு சென்று படுத்துவிட்டான்.
பயண அலுப்பில் உறங்கியிருக்க எழுந்த நேரம் வீட்டில் கரைச்சல். சத்தமாய் பேசியபடி சிவரஞ்சனி கோபத்துடன் இருந்தாள்.
வந்துவிடுவாள் என்று தெரியும். ஆனால் இத்தனை சீக்கிரம் என தெரியாமல் போக சத்தமில்லாமல் கிளம்பி வெளியே சென்றுவிட்டான் சிவரஞ்சனி அழைக்க அழைக்க.
“என்னடா கனவா?…” ஷ்ராவணி அவன் காலில் அடிக்க,
“ஆமா, இங்க கனவு காண்கிற மாதிரி தான் எல்லாம் நடக்குதா? நீவேற போக்கா….” என சலித்தவன்,
“காலையில சிவாக்கா கூப்பிட கூப்பிட என்னன்னே கேட்காம வந்துட்டேன். இன்னும் வீட்டுக்கு போகலை. அம்மா என்ன பண்ணுவாங்களோன்னு இருக்கு. பாவம்…”
அவனின் முகத்தில் மிதமிஞ்சிய கவலை தென்பட ஷ்ராவணி அமைதியாக பார்த்தாள்.
“அப்பா நேத்து உன்னை ரொம்ப திட்டிட்டாங்களா?…”
“இல்லைன்னு சொல்லமுடியாது. திட்டியிருப்பாங்க…”
“அப்படின்னா?…”
“நான் தூங்கிட்டேன் க்கா. என்ன பேசினாங்களோ? காலையில அம்மாட்ட கேட்போம்ன்னா இவ வந்து நிக்கிறா. அப்பாக்கிட்ட அவ்வளவு பேசறா. அப்பாவும் தலையாட்டிட்டு இருக்கார்…”
சந்துரு சொல்லிக்கொண்டிருக்க சுலோச்சனாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது ஷ்ராவணிக்கு.
“என்ன?…” என அவன் கேட்கவும் ஒன்றுமில்லை என தலையசைத்தவள்,
“ம்மா நான் மட்டும்ன்னா? நான் வரலை…” என உடனே சொல்ல வம்சியும், சந்துரும் புரிந்துகொண்டனர்.
“வணிம்மா…”
“அப்பா கூப்பிடறார்ன்னு சந்தோஷமா வர சொல்றியா நீ? அவர் நேத்து எங்களை பார்த்து என்னவோ பார்த்திருக்கவே கூடாதுன்ற மாதிரி போனாங்க. ஓகே, என் மேல கோவம். ஆனா இப்ப நான் மட்டும் வரனும்னா? வரமாட்டேன்…”
“இப்ப நான் என்னடி பன்றது?…” சுலோச்சனாவிற்கு எந்த பக்கமும் பேசமுடியாமல் தர்மசங்கடமாக போனது.
“இங்க வாங்க, இங்க வர ஒன்னும் பிரச்சனை இல்லைன்னா வாங்க. இல்லையா நான் வந்த வேலையை முடிச்சுட்டு போறேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டாள்.
“என்னக்கா ஆரம்பிச்சாச்சா?…” சந்துரு கேட்கவும்,
“நீ சும்மா இருடா. இருக்கற டென்ஷன்ல…” என அவனை சொல்லியவள் சாப்பிட்டு முடித்தவற்றை அப்புறப்படுத்தினாள்.
“எத்தனை மணிக்கு வராங்களாம் எல்லாரும்?…” சந்துரு வம்சியிடம் கேட்க,
“ட்வெல்குள்ள வரேன்னு சொன்னாங்க…” என்று தனது வாட்சை பார்த்தான்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு தலையை சீவி முகத்தை சீர் படுத்திக்கொண்டு தனது பேக்குடன் வந்து அமர்ந்தாள் ஷ்ராவணி.
“சந்துரு அப்பா வருவாங்கன்னு நினைக்கறேன். உள்ள சேர் இருக்குல. அதை எடுத்து போடு….” என்று தனது பேக்கில் இருந்த பத்திரங்களை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எல்லாம் ரெடியா தானே இருக்கு நிலா? ஏன் திரும்ப…”
“இல்லை சும்மா பார்த்தேன். கொஞ்சம் மலைப்பா இருக்கு…” என்றாள் பெருமூச்சுடன் அவனை பார்த்து.
வம்சி ஒன்றும் சொல்லவில்லை. அவளின் விடுதலை உணர்வின் நிம்மதி முகத்தில் தெரிய அதனை கவனித்தவன் முகத்திலும் மென்னகை.
“இதெல்லாம் நீங்க இல்லாம…” என்ற வார்த்தைகளை அப்படியே தன் பார்வையால் நிறுத்திய வம்சி,
“ஷட்அப் நிலா…” என அதட்டவும் செய்தான்.
உண்மையில் கோபமே வந்துவிட்டது அவளின் இந்த பேச்சில். அதனை மறைக்காமல் முகத்திலும், குரலிலும் காண்பித்திருக்க ஷ்ராவணிக்கு அது அன்பின் வெளிப்பாடாக தான் தெரிந்தது.
“என்னக்கா? என்ன திட்டு வாங்கற?…” சந்துரு சேர்களை எடுத்து போட வெளியே ஆட்கள் வரும் அரவம்.
“அதுக்குள்ள வந்துட்டாங்களா?…” என ஷ்ராவணி பின்னால் சாய்ந்து எட்டி பார்க்க வெளியே ராமன் வந்துகொண்டிருந்தார்.
“சந்துரு அப்பா…” என அவள் எழுந்துகொள்ள,
“நிலா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து உள்ள வச்சிட்டு வா…” என்றான் வம்சி.
“ஹ்ம்ம்…” என்றவள் பேக்கினுள் வைத்தவள் உள்ளே வைத்துவிட்டு வந்து,
“வாங்கப்பா…” என்றாள் தகப்பனை.
மிகையான சந்தோஷமும் இல்லை. என்னை அழைக்கவில்லையே என்று காண்பித்துக்கொள்ளவுமில்லை.
மரியாதையான அழைப்பாகவே அவள் அழைக்க வம்சி வாங்க என்பதோடு நின்றுகொண்டான்.
“உட்கார சொல்லு நிலா…” என ஷ்ராவணியிடம் சொல்ல, நிலா என்ற பெயர் அழைப்பும் இப்போது தெளிவாக விளங்கியது வீட்டினருக்கு.
திருமணத்தின் பொழுதே அவன் அப்படி அழைத்ததாக ஞாபகம் இருந்தாலும் அன்றைய சூழல் அதனை சிந்திக்க விடவில்லை.
இப்போதும் வம்சி அழைக்க இதென்ன நிலா? என தோன்றத்தான் செய்தது ராமனுக்கு.
‘ம்க்கும், செல்ல பேர் வேறையா?’ என நொடித்த பார்வையுடன் நின்ற சிவரஞ்சனி,
“ப்பா கேளுங்கப்பா…” என்றாள்.
“உட்காருங்கப்பா…” என்ற ஷ்ராவணியை தட்டமாட்டாமல் அமர்ந்த ராமன்,
“கடனை எல்லாம் இன்னைக்கே அடைக்க போறதா அம்மா சொன்னா….” என்றார் விறைப்பாகவே.
அந்த நேரம் திடுதிடுவென்று வேகமாய் உள்ளே ஓடி வந்தான் ரமேஷ். மூச்சிரைக்க வந்தவன்,
“லேட்டாகிருச்சு. சிவா போன் பண்ணவும் அப்படியே கிளம்பி வந்தேன் மாமா…” என்று சொல்லியவன் வம்சியையும், ஷ்ராவணியையும் கண்டுகொள்ளாமல் தானாகவே ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்தான்.
“நல்லது. மத்தவங்க முன்னாடி அசிங்கப்படறதுக்குள்ள என்ன விவரம்ன்னு கேட்டுப்போம்…” என திமிராய் பார்த்தவன்,
“என்ன வணி, என்னவோ இன்னைக்கே மொத்தமா கடனை எல்லாம் அடைக்க போறதா உங்கம்மா சொல்றாங்க. நம்ம கோவில் கணக்கரும் நீ போன் பண்ணி செட்டில் பண்ண போறேன், வாங்கன்னு கூப்பிட்டதா சொல்லிட்டிருக்கார்….” என கேட்க,
“ஆமா…” என்று மட்டும் சொன்னாள் ஷ்ராவணி.
“உனக்கு என்ன மறை கழண்டிடுச்சா?…” என்றான் தெனாவெட்டாக.
ஷ்ராவணி கோபமாய் பார்த்தாலும் உள்ளுக்குள் அத்தனை பதட்டம். வம்சியையும் பார்க்க தவறவில்லை அவள்.
அவன் பார்வை எத்தனை கோபத்தை அடக்க முயல்கிறான் என்பதாக இருந்தது. கெஞ்சலாக அவனை பார்த்தவள் பேசும் முன்,
“திடீர்ன்னு எல்லாரையும் வர சொல்லியிருக்கன்னா அவ்வளோ பணம் ஏதும்மா உனக்கு? திடீர்ன்னு வானத்துல இருந்து கொட்டிருச்சா?…” என்றான் நக்கலாக.
“எனக்கென்னவோ இவ பதுக்கி வச்சிருப்பான்னு தோணுது. சம்பளத்தை பாதியா நம்மக்கிட்ட சொல்லியிருப்பா. இப்ப மொத்தமா பிச்சு விட என்ன செய்யனும்னு பார்த்து எல்லாத்தையும் அடைக்கனும்னு வந்திருப்பா…”
சிவரஞ்சனி வார்த்தைகளை விட ராமன் அதனை ஆமோதிப்பதை போல மௌனமாக கேட்டபடி இருந்தார்.
“என்னடி சிவா உனக்கு பிரச்சனை? அவ கடனை அடைக்கனும்னு வந்திருக்கா. நல்ல விஷயம்ன்னு தானே பார்க்கனும். அதைவிட்டுட்டு இவ்வளோ பேசற நீ?…” என அதட்டினார் சுலோச்சனா.
“ம்மா, இவளுக்கு புத்தியே வராது. என்னைக்கு நல்லதுன்னு தோணியிருக்கு? எப்ப பார்த்தாலும் ஏடாகூடமாவே தான் பேச்செல்லாம்…” என்று சந்துருவும் அதட்டினான்.
“இப்ப எதுக்கு கோவப்படனும்? நான் உண்மையை தானே சொன்னேன். திடீர்ன்னு இப்ப மட்டும் இவ்வளோ பணம் இவளுக்கு எங்க வந்துச்சாம்? அதை கேட்டா பொல்லாதவளா நான்?…” சிவரஞ்சனி பேச,
“அந்த இழவை தான் நான் ஏன் செஞ்சேன்னு யோசிக்கிறேன். தப்பு பண்ணிட்டேன். உன்னை அங்கயே நாலு அறை விட்டு கூட்டிட்டு வந்திருக்கனும். இப்படி அசிங்கப்பட்டிருக்க மாட்டேன்…” என்றவர்,
“எனக்குமே இப்ப தோணுது. நிஜமாவே நீ அந்த விபத்துல தான் இவனை பார்த்தியா இல்லை அதுக்கு முன்னவே பழக்கமான்னு சந்தேகமா இருக்கு. என்னையே என் பொண்ணை பார்த்துக்கோங்கன்னு இவன்கிட்ட சொல்ல வச்சிட்டியோன்னு தோணுது…”
“அப்பா…” என ஷ்ராவணி கத்திவிட்டாள்.
“உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். எல்லாத்தையும் உடைச்சு என்னை அசிங்கப்படுத்தி இப்ப இங்க எதுக்கு வந்திருக்க? கடனை அடைக்கனும்னா அதுக்கு இங்க வந்து எல்லார் முன்னாடியும் நிக்கனுமா நீ?…” என்ற ராமன்,
“உன் மூஞ்சிலையே முழிக்க கூடாதுன்னு இருந்தேன். இப்ப அதையும் கெடுத்து, இங்க வந்து நீ தான் குடும்பத்தை தூக்கி நிறுத்தறனு எல்லாரும் பேசனுமாக்கும். இப்பவும் உன்னை தூக்கிவச்சு பேசனும், என்னை கடனை அடைக்க முடியாத கையாலாகாதவன்னு பேசனும். அதானே?…” என்றார் ராமன்.
“அதான் ப்பா. சரியா சொன்னீங்க. இவளுக்கு தன்னை எல்லாரும் பேசனும். அதான் எல்லாரையும் வரவழைச்சு குடுத்து பேர் வாங்க நினைக்கிறா. அடைக்கனும்னு நினைக்கிறவ பணத்தை மட்டும் அனுப்பவேண்டியது தானே?…” சிவரஞ்சனி ஒத்து ஊத,
“இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது. இப்பவும் நம்மளை உதறி தள்ளாம அவ வந்து நிக்கிறான்னா அதை பார்க்க தோணாதா உங்களுக்கு எல்லாம்…” சுலோச்சனா அழ,
“ம்மா, நீ சும்மா இரு. அப்பா பேசட்டும். அவருக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் இது. எல்லாத்தையும் செஞ்சிட்டு எப்படி நிக்கிறா? நானா இருந்தா…”
என பேசும்பொழுதே அதுவரை ஷ்ராவணிக்காக அமைதியாக இருந்த வம்சி வேகமாய் எழுந்தவன் அந்த சேரை காலால் உதைத்து தள்ளினான்.