உள்ளிருந்து பத்திரங்களுடன் வந்த வம்சி அதனை ராமனின் முன்னால் நீட்டினான்.
“எழுந்திருங்க…” என்று சொல்ல அமர்ந்திருந்தவர் திடுக்கிட்டு பார்த்தார்.
“எழுந்திருங்கன்னு உங்களை தான் சொன்னேன். சொல்லும் போதே எந்திச்சிருங்க…” என்றான் அழுத்தமாய்.
அனைவரும் மிரண்டு பார்க்க என்ன நடக்க போகிறதோ என அதிர்ச்சி விலகாமல் பார்த்த மனைவியிடம்,
“நிலா உள்ள போய் எல்லாம் பேக் பண்ணு. கிளம்புவோம்…” என்றான். அவள் பேசும் முன்,
“மூச், எதுவும் பேசாத நீ. கிளம்பு ஷ்ராவணி…” என சொல்லவும் வாயை மூடிக்கொண்டாள்.
பதில் பேசமுடியாமல் அவள் நிற்க சந்துருவை பார்த்தவன் கண்ணசைத்து அழைத்தான்.
“நாங்க கிளம்பறோம், நீ கிளம்பனும்னா வா. வெளில கார் ட்ரைவரை ரெடியாக சொல்லு…” என்று அவனை அனுப்ப,
“இப்ப மாமா என்ன கேட்டாங்கன்னு இப்படி அவமானப்படுத்தறீங்க?…” என்றான் ரமேஷ்.
எகிறியபடி பேசியவனின் வார்த்தைகளாய் வம்சியின் பார்வை மரியாதையுடன் முடிக்க வைத்தது.
“நீ யார் இங்க பேச? இந்த குடும்பத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல நீ வெளில போ…” வம்சி தீயாய் பார்த்தபடி கேட்டான்.
“அவர் என் புருஷன். இந்த குடும்பத்தோட மூத்த மருமகன். இங்க என்ன பிரச்சனைன்னாலும் அவர் தான் முன்னாடி நிப்பார். அவர் பேசாம யார் பேச முடியும்?…” சிவரஞ்சனி வேகமாய் பேச,
“அப்ப இந்த கடன் எல்லாம் அவரே பார்த்துக்கட்டும். மூத்த மருமகனாச்சே. முன்னாடி நிக்கட்டும்…” என்று நக்கலாய் வம்சி சொல்ல,
“என்ன? யார் வாங்கின கடனுக்கு யார் பொருப்பேத்துக்கறது?…” என கோபமாய் வந்தான் ரமேஷ்.
“அப்ப வாய மூடிட்டு ஓரமா நில்லுடா. எப்பவும் பன்ற வேலையை மட்டும் பாரு…” என வம்சி சொல்லவும்,
“இங்க பாருங்க..” என்றார் ராமன்.
“உங்களை தான் பார்த்தேன், எவ்வளோ பேசறீங்க? அவ்வளோ அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நீங்க நிக்கவே வேண்டாம். நீங்க வாங்கின கடன் பத்திரம் இதோ இருக்கு. எல்லாம் நீங்களே வச்சுக்கோங்க. நீங்களே இதை டீல் பண்ணிக்கோங்க…” வம்சி அவரிடம் நீட்ட ராமன் ஆடி போய் பார்த்தார்.
“என்ன எங்கப்பா கடனை அடைக்கனுமா? அவரே இப்ப ஓய்ஞ்சு போயிருக்கார். அவரை அடைக்க சொல்றீங்க?…” சிவரஞ்சனி நிற்காமல் பேச,
“அப்ப நீங்க அடைக்க வேண்டியது தானே? அப்பா மேல எவ்வளவு பாசம். அவங்களுக்கு ஒரு அவமானம்ன்னா வரீங்களே? நீங்களே இனி இதை பார்த்துக்கோங்க. வரவங்கட்ட உங்களை கை காட்டிட்டு கிளம்பறோம்…” என்றான் அவளிடம்.
“என்ன? நானா?…”
“ஆமா, நீங்க தான். இவ்வளோ நேரம் என்ன பேச்சு? ஆமா ஷ்ராவணிக்கு சம்பளம் எவ்வளவு இருந்த உங்களுக்கு என்ன?…” என்றான்.
“அது…” என்று அவள் பேசும் முன்,
“ப்ச், இங்க இதுல பேச உங்களுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. நீங்க யாரோ. என் டைமை உங்களை பேசி வேஸ்ட் பண்ண வேண்டாம்ன்னு பார்க்கறேன். எதாச்சும் பேசினீங்க?…” என பார்வையால் எச்சரித்தவன்,
“இங்க பாருங்க, இனி இந்த குடும்ப விஷயத்துல என் வொய்ப் தலையிடவே மாட்டா. நீங்க சொன்ன மாதிரி தலைமுழுகினது அப்படியே இருக்கட்டும்…” என்ற வம்சி,
“இது நீங்க வாங்கின கடனோட டாக்குமெண்ட்ஸ். வச்சுக்கோங்க. இனி நீங்க என்ன செஞ்சாலும் சரி. யாரும் கேட்க போறதில்லை. நாங்க வர போறதும் இல்லை. நீங்க அசிங்கப்படவும் தேவையில்லை…” என்றவன்,
“அதுக்காக இந்த ஊர் பக்கமே வர கூடாதுன்ற வார்த்தை எல்லாம் விடாதீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. உங்க வீட்டோட வாசல் வரைக்கும் தான் உங்க லிமிட். அதுக்கு மேல எங்களை அதிகாரம் பண்ணாதீங்க…”
“என்ன சொன்னீங்க? முன்னாடியே பழகி இருப்போம்ன்னு சந்தேகமா? உங்களுக்கு வெக்கமா இல்லையா உங்க பொண்ணையே இப்படி பேச?…” என்ரானின் ஆக்ரோஷத்தின் முன் ராமன் கூனி குறுகினார்.
“இவ்வளோ ரோஷம் இருந்தா நீங்க ஏன் வேலைக்கு அனுப்புனீங்க? அப்போ நான் யாரோவா இருந்தப்போ என்கிட்டே வந்து என் பொண்ணை பார்த்துக்கோங்கன்னு நீங்க சொன்னது தப்பில்லையா?…”
“தப்பு மொத்தமும் எங்க மேலையே இருக்கற மாதிரி பேசறதும் இல்லாம இப்பவும் என்ன நினைச்சுட்டு பேசறீங்க? தலையில எதாச்சும் இருக்கா?…” என்றுவிட்டான் அவன்.
வார்த்தைகளை கடினமாக விட்டுவிடுவானோ என்று ஷ்ராவணி வந்து அவனின் கையை கோர்த்துக்கொள்ள அவற்றை அழுத்தமாய் பிடித்தான்.
“ஏய் எவ்வளவு தைரியமிருந்தா என் முன்னாடியே மறை கழன்றுச்சான்னு கேட்ப நீ? ஒரு நிமிஷம் ஆகாது உன் மறை கழட்ட. வரியா? இனி என் முன்னாடி பேசு நீ…” என்றான் முஷ்டியை மடக்கியபடி உதட்டை மடித்துக்கொண்டு மிரட்டலாய்.
“என்ன இங்க உங்களை யாரும் கேட்க முடியாதுன்னு மிரட்டறீங்களா?…” சிவரஞ்சனி பேச,
“வரட்டும். யாரும் கேட்கட்டும். நானும் பேசறேன்…” வம்சியின் கோபத்தில்,
“இப்ப நாங்க இவக்கிட்ட திடீர்ன்னு இவ்வளவு பணம் எப்படின்னு கேட்க தானே வந்தோம்? எதுவும் பிரச்சனையில மாட்டிக்க கூடாதே தங்கச்சின்னு ஒரு பாசத்துல…”
“ஏய், ச்சீ எதாச்சும் பேசிருவேன். தங்கச்சியாம், பாசமாம்…” என்று பாய்ந்தேவிட்டான் வம்சி.
என்ன மனிதர்கள் இவர்கள், இவர்களுக்கு நல்லது நினைத்தால் கூட அதிலும் கேள்வி கேட்டு காயப்படுத்தி எத்தனை செய்கின்றனர் என்று அத்தனை கோபம்.
“என்ன என்னையே?…”
“சிவா பேசாத…” என ரமேஷ் சொல்ல அதனை சிவா காதில் வாங்கவே இல்லை.
எங்கே பேசியே தன்னை இதில் இழுத்துவிட்டுவிடுவாளோ என்று அவன் அவளை அடக்கவே பார்த்தான்.
எத்தனை தான் சமாளிக்க முடியும்? இதில் தன்னை கை காண்பித்துவிட்டு ராமன் எங்காவது சென்றுவிட்டால்?
இத்தனை நாட்கள் இளைய பெண் பார்த்துவிட்டாள். மகனும் வெளியூரில் படிப்பு.
அவனும் கண்காணாமல் வம்சியோடு சென்றுவிட்டால் எங்கே கடன் தன் தலையில் விடிந்துவிடுமோ என பயந்துகொண்டே இருந்தான் பேச்சு போகும் திசையில்.
நாட்டமை செய்து சற்று தனது கெத்தை காண்பித்துவிட்டு செல்வோம் என வந்திருக்க இங்கானால் இப்படி ப்ளேட்டையே திருப்பி போடும் விதமாக வம்சி கையை விரிக்க அரண்டுவிட்டான்.
இனியும் இங்கே பேச்சை வளர்க்க கூடாதென்று பின்தங்கிய நேரம் சிவரஞ்சனி துள்ளிக்கொண்டிருக்க அவளை அடக்கி அழைத்து செல்ல பார்த்தான் அவன்.
“அப்ப இவ்வளவு பாசம்ன்னா கடனை நீங்க அடைங்க. என் பொண்டாட்டி இத்தனை வருஷம் அவளால முடிஞ்சதை செஞ்சுட்டா. செஞ்ச வரைக்கும் போதும்…”
“திரும்ப திரும்ப நாங்களா? அவ தான் வேலைக்கு போறா….” சிவரஞ்சனி கொதித்து பார்க்க,
“இனி போக தேவையில்லை. அவ போனதுக்கும் போனவரை உங்களுக்கு அனுப்பினதுக்கும் சரியா போச்சு. ஷ்ராவணி பக்கம் அவளால முடிஞ்சதை செஞ்சுட்டா. நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க…” என்றான் வம்சி.
“நாங்க எதுக்கு பண்ணனும்? அவ தான்…” என்ற சிவரஞ்சனியின் கன்னத்தில் பொளீரென அறை.
யாரும் எதிர்பாராத நேரம் அவளை பாய்ந்து அடித்திருந்தான் ரமேஷ். அத்தனை வேகத்தில் அறை விழுந்திருந்தது.
“பேசாதன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப பேசற நீ? பேசுவியா? நான் சொல்லியும் நீ பேசுவியா? பேசுவியா?…” என கன்னத்திலும் வாயிலும் மாற்றி மாற்றி அடிக்க ராமன் அதிர்ந்து பார்த்தார்.
“நான் என்ன பேசிட்டேன்? இப்ப போய் எல்லாரையும் வர சொல்லிட்டு கடனை கட்டமாட்டேன்னு சொன்னா சும்மா விடவா?…” சிவரஞ்சனி அழுதுகொண்டே பச,
“உனக்கேன் அந்த கவலை? என்னவும் பண்ணிட்டு போகட்டும்? உன்னை கேட்டாங்களா?…” என்று ரமேஷ் அடிக்க,
“எல்லாரும் வந்தா இந்த பேப்பர்ஸ் என் வொய்ப்ட்ட இருந்துச்சு. கடனை அடைக்க போறதா கேட்டுவிட்டாங்க. அதான் குடுக்க வந்தோம்ன்னு சொல்லிடுவேன். ஏன் முடியாதா என்னால?…” வம்சி பேச பேச ரமேஷிற்கு ஆத்திரங்கள் கூடியது.
“உன்னை கட்டின பாவத்துக்கு நான் எல்லாம் செய்யனுமா? பெருசா பேச கூப்பிட்டு வந்துட்ட. இங்க சம்பந்தமில்லைன்னு சொல்லவும் கிளம்ப வேண்டியது தான? விட்டா எல்லாத்தையும் என்னை சுமக்க வச்சிருவ போல?…” என சொல்லி சொல்லி அடித்தான்.
வம்சியை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையும், கோபமும் அவனை அப்படி செய்ய வைக்க, போதாததற்கு தன்னால் முடியாததை அவன் சொல்லி காண்பிக்க கொந்தளித்து போனான்.
அதனை வம்சியிடம் காண்பிக்கமுடியாத கோபம், தனது வார்த்தையை கண்டுகொள்ளாத மனைவியின் மீது விழ மொத்தமாய் அவளை சாற்றிவிட்டான்.
“மாப்பிள்ளை விடுங்க என் பொண்ணை…” என சுலோச்சனா தடுத்து மகளை பிடிக்க,
“பொண்ணா? இவளை கட்டினதுக்கு உங்க குடும்பத்தோட என் தலையில ஏறி நின்னுடுவீங்க. உங்க சங்காத்தமே வேண்டாம்…” என்றவன்,
“நீ வர போறியா இல்லையா? இங்க இருக்கனும்னா இனி என் வீட்டுப்பக்கம் வராத. இல்லையா இங்கயே இருந்துக்க. என்னை பத்தி தெரியும்ல உனக்கு…” என்று மிரட்ட,
“வரேன், வரேன்…” என வாயை பொத்தியபடி அழுகையுடன் சொல்லிக்கொண்டே அவனின் பின்னால் சென்றாள் சிவரஞ்சனி.
இப்படி ஒரு திருப்பத்தை யாருமே அங்கே எதிர்பார்க்கவில்லை. ரமேஷ் அடித்து கூட்டி செல்வான் என நினைக்கவே இல்லை.
அதிலும் அவன் பேசிய வார்த்தைகள். முன்பும் பேசுவது தான். என்ன ஒன்று அது வேறுவிதமாக இருக்கும். இப்போது நேரடியாக இருக்க மூக்கறுபட்ட விதமாய் அமர்ந்திருந்தார் ராமன்.
“இங்க பாருங்க, என்ன நினைச்சு இதை பேச வந்தீங்கன்னு தெரியாது. வட்டி அதிகமா போகுதேன்னு நான் தான் தெரிஞ்ச ஒருத்தர்ட்ட சொல்லி ஒரே இடத்துல குறைஞ்ச வட்டிக்கு பணத்தை வாங்கி இங்க சில்லறை கடன்களை எல்லாம் அடைக்க சொன்னேன்…”
“இங்க முடிச்சுட்டா அங்க அசலோட வட்டியை அடைச்சுடலாம். ஒரே இடமாக்கவும்போகும். டென்ஷன் இல்லாம இருப்பான்னு நினைச்சு இந்த ஐடியா குடுத்தேன். நீங்களும் இங்க நிம்மதியா இருப்பீங்கன்னு நினைச்சு முடிவு பண்ணினோம்….”
“ஆனா அது தப்புன்னு புரிஞ்சுருச்சு. இதுக்கு மேல இதுல நானும், என் வொய்பும் இருக்க விரும்பலை. உங்க விருப்பம் போல நீங்களே அடைச்சுக்கோங்க…” என்றான்.
“பிளீஸ்ங்க…” அப்போது தான் ஷ்ராவணி வாயை திறக்க,
“மூச் சொன்னேனா இல்லையா?…” என்றான் அவளிடம்.
“இங்க பாருங்க, இதை நீங்க டீல் பண்ணிக்கோங்க. இனிமே என் வொய்ப் வேலைக்கு போக போறதில்லை. என்னோட டெல்லி வந்திருவா. உங்க குடும்பத்தை நீங்களே பார்த்துக்கோங்க….” என்றவன் சந்துருவை பார்க்க,
“உங்க முடிவு தான் கரெக்ட் அங்கிள். இங்க எந்த காலத்துலயும் வணிக்கா நல்லபிள்ளையாகமாட்டா. இன்னும் இங்க இருக்க இருக்க எங்கையோ கொள்ளையடிச்சுட்டு இவங்க தலையில கட்ட வந்துட்டான்னு கூட பேசுவாங்க. பெத்த பொண்ணெல்லாம் எங்கப்பாவுக்கு ஒரு பொருட்டே இல்லை….”
சந்துரு தன் மன ஆதங்கத்தையும் வார்த்தைகளாக கொட்ட ராமன் தலை கவிழ்ந்து நின்றார்.
அங்கே வேறு என்ன பேச முடியும் என்று தெரியவில்லை. இப்படி சிக்கலை இழுத்துவிட்டுவிட்டோமே என ஒருமனம் சொல்ல, மூத்தமகள், மருமகன் பேச்சுக்கள் பலமாய் காயப்படுத்தி இருந்தது.
இப்போது இவர்களையும் தட்டிவிட்ட விதமாய் பேசியிருக்க நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றிருந்தார் ராமன்.
வெளியே கடன் கொடுத்தவர்கள் வரும் சத்தம் கேட்க வம்சி கிளம்பிவிட்டேன் என்பதை போல ஷ்ராவணி கையை பிடித்து நிற்க விழித்தபடி பரிதாபமாய் நின்றார் ராமன்.