வீட்டிற்குள் கடன் கொடுத்த ஆட்கள் மூன்றுபேர் உள்ளே வர இங்கே ராமனுக்கோ உதறியது.
வம்சி அவர்களை அழைப்பானா என பார்க்க அவனிடமிருந்து வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை.
அழைக்காமல் நிற்கிறானே என்று தோன்றியவர் அவனை நிமிர்ந்து பார்க்கவுமில்லை.
ஆனால் வம்சி அவர்களை பார்த்ததுமே தலையசைத்து புன்னகைத்திருந்தான் வரவேற்கும் விதமாய்.
“என்னம்மா அப்பா கூட இங்க தான் இருக்கார் போல?…” என கணக்கர் என்னும் ஒருவர் சிரித்தபடி ராமனின் அருகே வந்து அமர்ந்தவர்,
“உக்காரு ராமா…” என்று அவரையும் அமர வைத்துக்கொண்டார்.
“குடுத்துவச்சவர்ய்யா ராமா நீ. இப்படி மக, மருமகன் கிடைக்க எந்த காலத்துல புண்ணியம் பண்ணுனியோ?…” என்று ராமனின் தோளை தட்டி சொல்ல இன்னுமே குன்றி போனார்.
எல்லாம் உடைந்த பின்னர் இப்போது புத்தி தெளிந்து என்ன செய்ய? இப்போதும் கூட எங்கே பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்துவிடுமோ என்று தான் தவித்தபடி இருந்தார்.
“நேரத்துக்கு வந்துட்டேனா?…” என அவர்களை பார்த்து கேட்க வம்சி மட்டுமே தலையசைத்தான்.
“சரியான நேரம் தான். கரெக்ட்டா வந்துட்டீங்க. நீங்க பேசிட்டிருங்க….” என்றவன் அறைக்குள் செல்ல ஷ்ராவணி செய்வதறியாமல் நின்றாள்.
அதிலும் ராமனுக்கு கண்கள் கலங்கிவிட்டது இப்போது தன்னை எந்த நிலையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு கிளம்புகிறாளே என மகளை நிமிர்ந்து பார்த்தவர் முகம் வெளுத்திருந்தது.
“வணிம்மா…” என்ற சுலோச்சனாவிடம்,
“வந்திடறேன் ம்மா…” என்று சொல்லிய மகள் உள்ளே சென்றாள்.
அங்கே வம்சி ஒற்றை கையால் நெற்றியை பிடித்தபடி அமர்ந்திருந்தான் தரையில்.
அவனிடம் பேச வந்தவள் அவனின் தோற்றத்தில் அருகே அமர்ந்துகொள்ள தன் மீது சாய்த்துக்கொண்டான் ஷ்ராவணியை.
வம்சி கையில் பேக்குடன் வர நெஞ்சே நின்றுவிட்டது ராமனுக்கு. அவன் கிளம்பிவிட்டான் மகளுடன் என புரிந்துபோக உடலெல்லாம் வியர்வை அரும்ப துவங்கியது.
முடிந்தது. இனி இவர்களிடம் என்ன பேசுவது என்று யோசனை செய்ய கூட முடியாமல் திக்பிரம்மை பிடித்ததை போல அமர்ந்திருந்தார்.
“வாங்க தம்பி…” என இன்னொருவர் புதிதாய் வந்து அமர்ந்திருக்க அவரை பார்த்து தலையசைத்தான்.
“என்னம்மா வணி நல்லாயிருக்கியா? உன் கல்யாணத்துக்கு கூட உங்கப்பா ஒரு வார்த்தை எங்களை கூப்பிடலை. அவரா வந்து முடிச்சு வச்சுட்டார்…” என பேச,
“சூழ்நிலை அப்படி…” ஷ்ராவணி மெல்லிய குரலில் சொல்லிவிட்டு சந்துருவை பார்த்தாள்.
இறுகி போய் நின்றிருந்தான் அவன். சுலோச்சனா வழக்கம் போல கண்ணீரும் கவலையுமாய் இருந்தார் அடுத்து என்னவென்று புரியாமல்.
மகளிடம் சொல்லிவிட முடியுமா நீ பணத்தை கொடுத்துவிட்டு செல் என? அத்தனை பேச்சையும் பேசி அவளை நோகடித்துவிட்டு இப்போது இப்படி சொல்லி பேசுவதில் விருப்பமில்லை.
மகள் செல்லட்டும், யோசிக்காமல் பேசிய இவருக்கு இப்போதாவது புத்தி வரட்டும் என தோன்றியது சுலோச்சனாவிற்கு.
“இந்த காலத்துல எந்த பிள்ளை இப்படி இருக்கும்? நீ சாதிச்சிட்டம்மா. உன் அப்பா கடனை ஒத்தை மனுஷியா நின்னு அடைக்க நினைச்சிருக்க. அதுக்கு உன் புருஷன் சம்மதிக்கிறது பெரிய விஷயம்மா…” என அவளை சில்லாகித்து பேச பேச ராமன் குறுகி போனார்.
தன் புத்திக்கு எட்டாத ஒன்று மற்றவர்கள் சொல்லி கேட்கயில் தனது வறட்டு பிடிவாதமும், மூர்க்கமான எண்ணங்களும் சேர்ந்தே தலைகுனிந்தது.
“சரி பேசிக்கிட்டே இருக்கோம். வந்த வேலையை பார்ப்போம்…” என்று சொல்லவும் ,
“நான் என் அப்பாக்கிட்ட ஒருநிமிஷம் பேசனும். பேசிட்டு…” ஷ்ராவணி சொல்ல,
“அதுக்கென்னம்மா தாராளமா பேசு…” என்றவர்,
“நாங்க வெளில இருக்கோம்….” என்று எழுந்தார் கடன் வாங்க வந்ததில் ஒருவர்.
“இல்லை நீங்க இருங்க…” ஷ்ராவணி சொல்ல,
“வந்தப்பவே கவனிச்சோம். என்னவோ சங்கடம்ன்னு. நீங்க பேசிட்டு கூப்பிடுங்க…” என கணக்கர் எழுந்து நின்றார்.
“இதென்ன நம்மளை வரவழைச்சிட்டு…” என இன்னொருவர் கேட்கவும்,
“அவங்க பணத்தை குடுக்க தான வர சொல்லியிருக்காங்க. அதுக்குள்ளே என்னய்யா அவசரம்? பேசிட்டு சொல்லட்டும். வாரும்…” என அதட்டிவிட்டு வெளியே செல்ல மற்றவர்களும் சென்றனர்.
ராமன் அமர்ந்தபடியே தான் இருந்தார். எந்தவித பாவனையும் சிறிதும் இல்லை முகத்தில்.
“நான் இப்ப என்ன செய்யட்டும் சொல்லுங்க ப்பா?…” என்றாள் ஷ்ராவணி.
“இப்ப பணம் குடுக்கனுமா? வேண்டாமா? நீங்க சொல்லுங்க நான் தரேன். உங்களுக்கு விருப்பமில்லைன்னா நான் கிளம்பறேன் என் புருஷனோட…” என்று கேட்க பதிலில்லை ராமனிடம்.
“க்கா நீ கிளம்பு, ஒன்னும் குடுக்க வேண்டாம். இவ்வளோ நேரம் சிவாக்கா பேசும் போது மட்டும் அவ்வளோ பேசினார்ல. இப்ப வாய் திறக்க முடியலையோ?…” சந்துரு கொதித்துக்கொண்டு இருந்தான்.
“எதையும் நீ செய்யாத க்கா. இனி மாசமாசம் என்ன வட்டி கட்டனுமா நான் வேலைக்கு போய் கட்டறேன். நான் பார்த்துக்கறேன்…” என்றான்.
“சந்துரு, நீ சும்மா இரு. உன் படிப்பு…” ஷ்ராவணி அதட்ட,
“அதான் வருஷமெல்லாம் இந்த கஷ்டத்துக்குள்ளையே தான் பிள்ளைங்க இருக்கனும்னு என்னை பெத்தவர் ஆசைப்படறாரே? ஆனா அதுக்காக அதுவும் இவருக்காக நான் என் படிப்பை விடமாட்டேன்….” என்றவன்,
“பகல்ல படிச்சா நைட்ல செய்ய வேலையா இல்லை? நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு…” என்றான் முடிவாய்.
“சந்துரு…” வம்சி அவனை தன் பக்கம் அழைத்து தோளில் கை போட்டுக்கொள்ள,
“எதுவும் ஈசியா கிடைச்சா வேல்யூ இல்லை அங்கிள். எங்கப்பாவுக்கு நானும், வணிக்காவும் ரொம்ப ஈஸி. அதுவும் வணிக்கா எதையும் நினைக்க கூட கூடாது எங்கப்பாவை மீறி. ஆனா அவர் மாடா உழைச்சு கொட்டுன்னு சொன்னா வணிக்கா கொட்டனும்…” என்றான் தழுதழுத்த குரலில்.