“நீங்க சொல்லுங்க. நான் பணத்தை கட்ட வேண்டாம்ன்னா அவங்களுக்கு என்ன காரணம் சொல்ல? கட்டுன்னா கட்டிட்டு கிளம்பறேன். நீங்க சொன்ன மாதிரி என்னை இதோட தலை முழுகிடலாம்…” மனதை இரும்பாக்கிக்கொண்டு அவள் பேச,
“வணி என்னம்மா இது பேச்சு?…” சுலோச்சனா பதறிவிட்டார்.
“இதுவே அப்பா சொல்லும் போது எனக்கும் இப்படித்தானேம்மா துடிக்கும். கேட்டீங்க தானே? நான் இவரோட முன்னாடியே பழகி, இங்க ஆக்ஸிடன்ட் அப்டின்னு ஏமாத்தி கூட்டிட்டு வந்திருப்பேன்னு சந்தேகமா இருந்துச்சுன்னு சொன்னதை…”
“கேட்கும் போது அவ்வளோ சந்தோசம் எனக்கு. அப்படியே குளிர்ந்து போய்ட்டேன். லவ் பன்றது தப்புன்றது சொல்ற வரை சரி. ஆனா நான் இப்படி செஞ்சிருப்பேன்னு எந்த நினைப்புல இப்படி சொல்ல முடிஞ்சது அப்பாவால?…”
“அப்போ என்ன நினைச்சு என்னை வேலைக்கு அனுப்பி வச்சாங்க? என் மேல எவ்வளோ நம்பிக்கை? அப்போ லவ் பண்ணினாலே இப்படித்தான் பொண்ணுன்னு முடிவு பண்ணுவீங்களா?…” என கேட்கும் பொழுதே தான் கடந்துவந்தவை எல்லாம ஞாபகம் வர இன்னுமே அழுத்தம் கூடியது.
“ஒவ்வொரு நாளும் நான் சென்னையில எப்படி இருந்தேன்னு தெரியுமா? இதுக்கு செலவு பண்ணினா என்னாகுமோ? அதுக்கு செலவு பண்ணினா உங்களுக்கு அனுப்பறதுல குறைஞ்சிருமோன்னு வெளில ஆசைப்பட்டதை சாப்பிட கூட யோசிச்சு மனசை கட்டுப்படுத்திப்பேன்…”
“இதுக்கு மேல நான் என்னதான் செஞ்சிருக்கனும்? இப்பவும் உங்களுக்காக தானே வந்தேன். என்னவோ உங்களை எல்லாம் பிரச்சனையில மாட்டிவிட போறதா எவ்வளோ பேசறீங்க? இவ்வளோ பணம் எங்க இருந்து வந்ததுன்னு அக்கறையில கேட்டா கூட சந்தோஷபட்டிருப்பேன். ஆனா…”
“வணிக்கா அழாத நீ…” என்று அக்காவை கையை பிடித்துக்கொண்டவன்,
“இவ்வளோ பேசறீங்களே வேலைக்கு போனதுல இருந்து வணிக்கா ட்யூஷன் எடுத்தா தெரியுமா உங்களுக்கு? ஆபீஸ்லயும் வெளிய முடிச்சு ஈவ்னிங், லீவ் நாள் பார்ட் டைம்மா வேலை பார்த்து அந்த பணத்தையும் சேர்த்து வச்சு தான் படிக்க வைக்கிறா…”
சந்துரு சொல்ல சுலோச்சனா, ராமன் இருவருமே திகைத்து போனார்கள். ராமனுக்கு தன் தவறு இன்னும் பெரிதாய் தெரிந்தது.
“அவளுக்கு என்னப்பா அவசியமா?…” என்று கேட்கையில்,
“அதானே பார்த்தேன்…” என்று வந்தாள் சிவரஞ்சனி.
இவள் எங்கே மீண்டும் என திரும்பி பார்க்க வந்தவள் அங்கே ஜன்னலோரம் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டாள்.
“என்னை அந்த பக்கம் அடிச்சு அனுப்பிட்டு இங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா? என்னவோ ட்யூசன் எடுத்தான்னு சொல்லிட்டிருக்க? போனை வச்சிட்டு போனதால தான தெரியுது உங்க லட்சணம்…” என்று குதிக்க,
“வாய மூடு நீ முதல்ல…” என கத்திவிட்டாள் ஷ்ராவணி.
“என்னையே அதட்டி பேசற அளவுக்கு உனக்கு திமிரா? என்ன உன் புருஷனை விட்டு கடனை அடைக்க சொல்லி பயமா காட்டுற நீ?…” என்றாள் அவள்.
அதுவரை இருந்த பொறுமை கூட பறந்தது ஷ்ராவணிக்கு. இவளிடம் நல்ல முறையில் பேச நினைக்கவே கூடாதென்று முடிவுக்கு வந்தாள்.
“ஆமா, அப்படித்தான். என் புருஷனை விட்டு பயம் காட்டத்தான் செஞ்சேன். உன் புருஷன் பயந்து தான போனாரு? என்ன செய்வ அதுக்கு?…” ஷ்ராவணி கேட்க,
“பார்த்தீங்களாப்பா? இப்ப புரிஞ்சதா இவ யாருன்னு…” என்று ராமனை அழைத்தாள் துணைக்கு.
“நான் பேசினா என்கிட்டே பேசு. எதுக்கு அவரை கூப்பிடற? ஏன் என்கிட்டே பேச பயமா?…” என்றதும் சிவரஞ்சனி வெகுண்டாள்.
“என்னையே பயமான்னா கேட்கற? உனக்கு தான் பயம் விட்டு போச்சு. அதான் இப்படி கண்டகண்ட காரியங்களை பன்ற…”
“என்னடி எகத்தாளம் பேசற. வேலைக்கு போறேன்னு இவனோட அங்க தனியா வாழ்ந்தவ தானே நீ? நீயெல்லாம் பேசலாமா?…” என்ற வார்த்தையை முடிக்கும் முன் கன்னம்கன்னமாய் பழுக்க அறைந்திருந்தாள் ஷ்ராவணி.
“இன்னொரு வார்த்தை என்னை பேசின. அவ்வளோ தான்…” என தன் அக்காவை எச்சரிக்க சிவரஞ்சனி கன்னம் தீயாய் எரிந்தது.
“ஏன்டி உனக்கு இந்த வேலை? போனை எடுக்க வந்தா எடுத்துட்டு போயேன். ஏன் இவ்வளோ பேசற?…” என சுலோச்சனாவும் திட்ட,
“அவ என்னை அடிக்கிறா? பார்த்துட்டு இருந்துட்டு என்னையே சொல்லுவியா நீ?…” என்று தாயிடம் எகிறியவள்,
“காசு கொட்டிக்கிடக்குதுன்னு தான துள்ளுற? உன் கையை எதிர்பார்த்து நிக்கிறாங்கன்னு தானே உனக்கு திமிர்…” என தங்கையிடம் மீண்டும் பேச,
“ஆமா, அப்படியே வச்சுக்கோ. போதுமா? திமிர் தான். நீயும் செய்யேன் செஞ்சு உன் திமிரை காமி. ஒன்னும் பண்ணாமலே இவ்வளோ திமிர் உனக்குன்னா, இங்க நாட்டாமை செய்வன்னா, எல்லாமே பன்ற நான் செய்யமாட்டேனா?…”
“ஆமா, சொல்லித்தான் காமிப்பேன். நான் செய்யறேன். அதை சொல்லி காமிக்கிறதுல என்ன தப்பு? அப்படித்தான். போதுமா? இன்னும் வேற என்ன சொல்ல போற நீ? சொல்லேன். கேட்கறேன். எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்…”
“நீயெல்லாம் மனுஷியே இல்லை. தாய் தகப்பன்னு நினைக்காம அவங்களை ஆட்டிவச்சு இருக்கறதை எல்லாம் சுருட்டிட்டு போற உனக்கு எல்லாம் என்கிட்டே பேசற தகுதியே இல்லை. இனி பேசின பல்லு பேந்துரும். அக்கான்னு கூட பார்க்கமாட்டேன்…”
“உன் பேச்சை கேட்டுட்டு இவங்களும் ஆடினாங்க தானே? அக்கா அக்கான்னு சொல்லி உன்னை பார்த்தாங்களே தவிர என்னையும், சந்துருவையும் யார் பார்த்தா?…” என்றவள் ராமனிடம் திரும்பி,
“ஏன்ப்பா உங்களுக்கு இவளை மாதிரி ஆட்கள் தான் சரி. கம்முன்னு என்ன செஞ்சாலும் மனசுக்குள்ள வச்சுட்டு பணிஞ்சு போய்ருவீங்க. ஆனா உங்களுக்கு கட்டுப்பட்டு உங்க வார்த்தைக்கு மதிப்புக்குடுக்கற எங்க மேல உங்க கோவம், எரிச்சல், அடக்குமுறை எல்லாம் காமிப்பீங்க இல்லையா?…”
“ஏன் என்னைக்காச்சும் இவளை எதிர்த்து கேட்டிருப்பீங்களா ஏதாவது? உனக்கு செஞ்சது போதும், பின்னாடி பிள்ளைங்க இருக்காங்க அவங்களை பார்க்கனும்னு சொல்லன்னும்னாச்சும் நினைச்சிருப்பீங்களா?…”
“எல்லாத்துலையும் அவளை தூக்கி வச்சீங்க சரி. அவளுக்கு செஞ்சீங்க சரி. ஆனா அதுக்கு ஏன் எங்களை போட்டு மிதிச்சீங்க? இவளுக்காக படிக்க வேண்டாம்ன்னு தம்பியை சொல்றீங்க? படிக்க வைக்கறேன்னு நான் நம்பிக்கையா சொன்னா அது உங்களுக்கு திமிர். அப்படித்தானே?…”
“இவ்வளவு ஏன்? கல்யாணமான என்கிட்டே வீட்டுக்கு வான்னு தான் கூப்பிடலை. நேத்து வாசல்ல வச்சு என்னை பார்த்த உங்க முகத்துல என்னை பார்த்தோம்ன்ற சந்தோசம் துளியளவு கூட இல்லையே? அந்தளவுக்கு நான் உங்களுக்கு விஷமாகிட்டேனா?…”
“எல்லாத்துக்கும் மேல இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டீங்களே? ஹப்பா இந்த ஜென்மத்துக்கும் மறக்காது. போதும். இங்க நான் வந்து உங்களை பார்த்ததும் போதும். எல்லாம் போதும். என்னை பெத்து, வளர்த்த கடமைக்கு என் மனசாட்சிக்கு உட்பட்டு இந்த கடனை அடைச்சுவிட்டு நான் கிளம்பறேன்…”
ஷ்ராவணி படபடவென்று தன் மனதில் அழுத்தி வைத்தவற்றை எல்லாம் கொட்டி கவிழ்க்க வம்சி கூட இத்தனை பேசுவாள் என எதிர்பார்க்காத திகைப்பில் தான் இருந்தான்.
“கிளம்பறேன்னா? என்ன அப்படியே கை கழுவிடலாம்ன்னு பார்க்குறியா? கடனை அடைச்சா போதுமா? இங்க சாப்பாட்டுக்கு?…” சிவரஞ்சனி அடங்காமல் பேச,
“ஏன் நீ குடேன்? குடுத்து பார்த்துக்கோ. இவ்வளவு நாள் நான் பார்த்தேன்ல. இனி நீ பாரு…” என ஷ்ராவணி.
“நானா? நல்ல கதையா இருக்கே? அதான் கடனை எல்லாம் மொத்தமா செட்டில் பன்றியே?…”
“செட்டில் பண்ணிட்டா? மொத்தமா ஒரே இடத்துல வாங்கினதை நீ குடுப்பியா? குடுக்கேன்னு சொல்லு அம்மாவையும், அப்பாவையும் நான் என்னோட கூட்டிட்டு போய் வச்சுக்கறேன்…” ஷ்ராவணி சொல்ல அதற்கும் திடுக்கிட்டாள்.
“கூட்டிட்டு போவியா? நீ என்ன என்னையே சொல்லிட்டு இருக்க?…”
“நீ என்னை சொன்னா நானும் உன்னை தான் சொல்லுவேன். இவங்களை இங்கயே வச்சு உனக்கும் உழைச்சு கொட்ட எனக்கென்ன தலையெழுத்து?…”
“ஏய் என்னடி பேசற? என்னவோ எனக்கு அனுப்பற மாதிரி பேசற நீ? என்னை அவமானப்படுத்துறியா நீ?…”
“உனக்கு வெக்கமாயில்லையா இப்படி பேச? கல்யாணமாகி தனி குடித்தனம்ன்னு தான் பேர். ஒருநாளாச்சும் உன் வீட்டுல சமைச்சிருப்பியா நீ? எல்லாம் இங்க இருந்து தானே? உன்னை சொல்லாம?…” என்ற ஷ்ராவணி,
“இங்க பாருங்கம்மா, இனி இவ வீட்டுப்பக்கம் வர கூடாது. வந்தான்னா நான் வாங்கியிருக்கற கடனுக்கு இவளை தான் பொருப்பாளியாக்கிட்டு எங்கியாச்சும் போய்டுவேன்….”
“என்ன?…” என சிவரஞ்சனி அதிர்ந்து பார்த்தவள் என்ன ஏதென்று கூட யோசிக்கவில்லை.
அது சாத்தியமா என கூட ஆராயாமல் அப்படியே கிளம்பிவிட்டாள் விட்டால் போதும் என்பதை போல.
விஷயம் தெரிந்தால் ரமேஷிடம் யார் வாங்கிக்கட்டுவது என பெற்றோரை கூட திரும்பி பாராது கிளம்பி சென்றிருக்க ராமனிடம் முகம் காட்ட கூட இல்லை ஷ்ராவணி.
“சந்துரு எல்லாரையும் வர சொல்லு…” என்றவள் வம்சியை பார்க்க அவன் ஆறுதலாய் விழியமர்த்தினான்.
வெளியில் நின்றவர்களை வரவழைத்து ஒவ்வொருவரும் கடனை பெற்றுக்கொண்டதாய் கையெழுத்திட்டு தர ராமனின் கையெப்பம் அடங்கியிருந்த ஒரிஜினல் பாண்ட் பேப்பரை வாங்கி கிழித்து எறிந்தவள்,
“எல்லாம் முடிஞ்சதும்மா…” என்றாள் தாயிடம்.
“வணிம்மா…”
“நாங்க கிளம்பறோம். உடம்பை பார்த்துக்கோங்க…”
“அம்மாடி அம்மா அப்பாட்ட பேசறேன்டா…”
“ம்ஹூம், வேண்டாம். எதையும் கேட்டு வாங்கி சந்தோஷப்பட்டா அது நிலைக்காது. அதுவும் என் மேல பெரிய அபிப்ராயத்தை வச்சிருக்கறவங்க கிட்ட நான் அப்படி இல்லைன்னு வாதாட முடியாது….”
“என்னதான் அக்கா சொல்லியிருந்தாலும் பெத்தவருக்கு என் மேல அப்படி ஒரு சந்தேகம் வரலாமா? இல்லை என்கிட்டே இப்படி பேசிருக்கலாமா? என்னவானாலும் விட்ட வார்த்தைகளை அள்ள முடியாதும்மா….” என்றவள்,
“இனி நீங்க உங்களை பார்த்துக்கோங்க. நாங்க புறப்படறோம்…” என்று சொல்ல ராமன் எதுவும் மகளிடம் பேசவில்லை.