தானே இன்று கிளம்பி வந்திருப்பதென்ன? இது அவளின் மூன்றாவது டெல்லி பயணம்.
முதல் இருமுறை டெல்லி வந்தது போலில்லாமல் இங்கேயே வம்சியுடன் குடும்பமாய் இருக்க போகும் மகிழ்ச்சி.
மனதிற்கினியவன் மார்பினில் சாய போகும் உவகை என்று எல்லாம் அவளை புன்னகையுடன் பேரழகியாக செய்திருந்தது.
கால் டாக்சி புக் செய்து கிளம்பிவிட்டாள் வீடு நோக்கி. தனது ஹேன்ட் பேக்கில் தன்னிடம் இருக்கும் அந்த கீயை எடுத்து பார்த்துக்கொண்டாள்.
நினைத்து நினைத்து தானே ஒரு ரகசிய புன்னகை. தன்னை பார்த்ததும் வம்சி என்ன செய்வான் என்று ஒரு எதிர்பார்ப்பு.
“ம்க்கும், மில்ட்ரிக்கு மீசை வளர்ந்த அளவுக்கு இதெல்லாம் தெரியாது…” என்றும் கிண்டலாய் முணுமுணுக்க, ‘சந்திரமுகி கொழுப்பு ரா உனக்கு’ என அவன் மீசையை முறுக்கி முறைப்பதாக மனக்கண்ணில் தோன்றியது.
அதற்கொரு புன்னகை கிளுக்கென்று சிரிக்க ட்ரைவர் திரும்பி பார்த்துகொண்டார் அவளை.
‘லூசு மாதிரி பன்றேன். வணி சும்மாருக்கமாட்ட நீ?’ என தன்னையே கடிந்துகொண்டவள் பார்வை வெளியே படிந்தது.
அப்பார்மென்ட் நெருங்கவும் உள்ளங்கால்கள் எல்லாம் குறுகுறுப்பு. லக்கேஜை இறக்கி வைத்துவிட்டு காரை அனுப்பியவள் லிப்ட்டில் நுழைந்து மேலே தங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தாள்.
கதவை திறந்து உள்ளே வர வீட்டின் சுத்தம் அவளை எப்போதையும் போல வியக்க வைத்தது.
ஆனால் அவள் ஆச்சர்யப்பட்டது அவள் சென்ற அன்று வைத்துவிட்டு சென்ற அவளின் பிரத்யோகமான சில பொருட்கள் அப்படியே அங்கேயே தான் இருந்தது.
“ஹ்ம்ம், மில்டரி…” என ஆசையுடன் சொல்லிக்கொண்டவளுக்கு அப்போதே பார்க்க ஆவல் அலையாட முதலில் குளித்துவிட்டு வந்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
சென்றதாக எந்தவித அறிகுறியும் காணப்படவில்லை. அதுவே சொல்லியது அவன் கிளம்பிவிட்டான் என்று.
வந்துவிடுவானே? கிளம்பிவிட்டான் என்றால் எப்போது? இப்போதா? இல்லை முன்னாடியே கிளம்பி இருப்பானா? என யோசனைகள் சுழன்றது.
“கிளம்புனா சொல்றதே இல்லை. மரமண்டை, மரமண்டை. என்னை மட்டும் பேசறது, யூஸ்லெஸ், பொறுப்பில்லை. அறிவில்லைன்னு. அங்க ரொம்ப வழியுற மாதிரி தான்…” என திட்டியபடி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
கிட்டத்தட்ட வெகு நாட்கள் அவன் அங்கே இல்லாதிருந்திருக்க அடைத்து வைத்திருந்த வீட்டின் வாசனை மூக்கை நெருடியது.
ஜன்னல்களை திறந்துவிட்டவள் காற்றை உள்ளே வராவிட்டாள் முதலில். அதன் பின்னர் மற்ற வேலைகள்.
கொண்டுவந்த ட்ராலியை ஓரமாய் வைத்துவிட்டு எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருந்தாள்.
அதனோடே குமுதாவிற்கு, சந்துருவிற்கு, மாலதிக்கு என அழைத்து டெல்லி வந்துவிட்டதை சொல்ல மாலதிக்கு அத்தனை வருத்தம்.
வகுப்பெடுக்க சென்ற பொழுது கூட ஷ்ராவணியை தினமும் பார்க்க முடிந்திருக்க அங்கிருந்து நின்ற பின்னர் போனில் பேசுவதோடு சரி.
இப்போது வீட்டிற்கு சொல்லாமல் திடீரென்று கிளம்பி சென்றதும் இன்னுமே வருத்தம் தான்.
“ப்ளீஸ் க்கா. உங்கட்ட நேர்ல வந்து சொல்லிட்டு போக முடியலை. நிறைய வேலை. இங்க வந்துட்டு சொன்னா நல்லாயிருக்காது. அதான் சொன்னேன். இப்ப வந்ததும் கால் பன்றேன்…” என சமாதானம் செய்தாள்.
“ஆமா, எவ்வளோ ப்ராமிஸ் வாங்கிட்டு சொன்ன நீ? உனக்காக தான் இன்னும் ஆனந்த்கிட்ட கூட சொல்லலை….” என்றவள்,
“சரி பத்திரமா இரு. அண்ணா வரவும் போன் செய்…” என்று வைத்துவிட்டாள்.
வேகமாய் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மீண்டும் கசகசக்க குளித்து முடித்து வந்து பருப்பு, ரசம் வைத்து துவையல் அரைத்து வைத்தவள் அவனுக்கு வேறு என்ன செய்ய என்று பார்த்தாள்.
இரவு நேரம், இதுவே போதும் என்று ஒரு மனம் சொல்ல பசி வேறு வயிற்றை கிள்ளியது.
வெகு நாட்களுக்கு பின் வீட்டு சாப்பாடு. அதுவும் தான் செய்தது. வயிறு வா வா என்றது.
ஒரு காபியை போட்டு குடித்தவள் பசியை மட்டுப்படுத்தினாள். மீண்டும் வீட்டை ஒரு வலம்.
வேறு என்ன வாங்கவேண்டும் என்று பார்த்தவள் வந்த அன்று வம்சி சொல்லியது ஞாபகம் வந்தது.
“ப்ரிட்ஜ் வாங்கித்தான் ஆகனும் போல?…” என்று உடனே ஆன்லைனில் ப்ரிட்ஜ் விலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
ஒவ்வொன்றாய் வரிசையாய் பார்த்தவள் இரண்டை தேர்வு செய்துவிட்டு வந்து பால்கனியில் அமர்ந்தாள்.
இரவு குளிர் வேறு வாட்ட சுடிதார் துப்பட்டாவை சுற்றி போர்த்தியபடி கீழே வேடிக்கை பார்த்துகொண்டு நின்றாள்.
“இன்னுமா வரலை? இந்த நேரம் வந்திருக்கனுமே?…” என மனது ஒருபுறம் அலைபாய்ந்தது.
“வேலை இருக்குமோ? ஆபீஸ் போய்ட்டு தான் வருவாங்களோ? இதெல்லாம் தெரியலையே?…” என சொல்லிக்கொண்டவள்,
“இதெல்லாம் என்கிட்டே சொல்லிட்டா முத்து உதிர்ந்திரும் போல இந்த மில்ட்ரிக்கு. இனி வச்சிக்கறேன். எல்லாம் தெரிஞ்சுக்கறேன்…” என அவனை திட்டவும் மறக்கவில்லை.
அவ்வளவு பேச்சு அவனை வைத்து பேசியபடியே தான் இருந்தாள். ஒரு நொடி கூட தனியே இருப்பதாய் தோன்றவில்லை.
மானசீகமாய் அவனை கண்முன்னால் நிறுத்தி பேசிக்கொண்டிருந்தவளுக்கு வெளியே இருந்த அரவங்கள் அவனில்லாத இருப்பை அவ்வப்போது உணர்த்தியது.
‘இன்னும் வரலை’ என தலையில் தட்டிக்கொண்டாலும் அங்கே இத்தனை நாள் எப்படி தனியாய் அவன் இருந்தானோ என மனது கலங்கி தவித்தது.
அவன் வருவதற்குள் ஒருவழியாகி இருந்தாள் ஷ்ராவணி. உள்ளுக்குள் உருகுலையும் உணர்வு.
தான் இத்தனை தூரம் பித்து பிடித்ததை போலாகிவிட்டேனே என தன்னை குறித்தே கவலையானாள்.
இத்தனை நாள் எப்படி இருந்தோம்? என்ற எண்ணத்தில் இப்போதைய பொறுமையற்ற தன்மை அவளை அலைகழித்தது.
“எப்படா வருவா…” என சத்தமாகவே சொல்லிவிட க்ளிக் என்ற சத்தம்.
வாசல் கதவை திறந்துகொண்டு வம்சி உள்ளே நுழைவதை இங்கிருந்தே கவனித்தாள்.
உள்ளே வந்ததுமே அதன் மாற்றத்தை கண்டுகொண்டவன் முகம் முதலில் நிதானத்தில் இருந்து, பின் பரபரப்பாக, தேடலில் திளைத்து, கையிலிருந்த பேக்கை சோபாவில் போட்டவன் அங்குமிங்கும் சுழற்றினான் விழிகளை.
“நிலா…” என்றவன் அழைப்பில் அவ்வளவு தேடல்.
பார்த்தவளுக்கு அசைய தோன்றவில்லை. இவ்வளவு நேரம் அவனை தேடியதற்கான உணவாய் அவற்றை அனுபவித்து பருகிக்கொண்டிருந்தாள்.
“நிலா எங்கடா?…” என்றவன் சத்தமான அழைப்பில் அவள் இன்னும் நன்றாய் திரும்ப கொலுசு சத்தத்தில் அவனின் பார்வை பால்கனி திசையில் நிலைத்தது.
திரைகள் காற்றிலாட அதற்கு பின்னே பாதி திறந்திருந்த கண்ணாடி கண்ணாடி கதவிற்கு பின்னே அவனின் நிலவு இரவின் இருளின் முன்னில் வெளிச்சமாய்.
“சொல்லவே இல்ல நீ?…” என்றவன் பேச்சோடு முத்தங்களும் கழுத்தை, கன்னத்தை அழுத்தமாய் உரசி நிறைக்க பேச கூட அவளுக்கு நேரமிருக்கவில்லை.
மூச்சு திணறலை போல பேச்சு திணறல். அவனின் அபரிமிதமான மகிழ்ச்சியை கண்ணுற்றவள் பேச்சற்று தான் இருந்தாள்.
“நிலா ரா, நா தல்லி…” என்றவள் எத்தனை கடுமையோ அத்தனை மென்மையுமாய் அவளை தன் அதரங்களால் கோபமும், கொஞ்சலுமாய் அர்ச்சித்துக்கொண்டிருந்தான்.
அத்தனை உணர்வு குவியலாய் இருப்பினும் அதில் அவ்வளவு சுதாரிப்பு போல வம்சி அவளை நகர்த்தி ஹாலுக்கு இட்டு வந்திருக்க கண்களை மூடியிருந்தவள் விழி திறந்ததும் சிரித்துவிட்டாள்.
“இப்ப கூட உள்ள வந்ததே தெரியலை எனக்கு…” என கிண்டலாய் சொல்ல அதனை கேட்டதும் நெற்றியில் முட்டியவன்,
“ஒன்ஸ்மோர்…” என்றான் பால்கனியை காண்பித்து.
“மில்டரி…” என சிணுங்கியபடி அவன் நெஞ்சில் அடிக்க,
“உனக்கு ரிப்பீட்டட்ல டெமோ காமிச்சே என் லைஃப் போய்டும் ரா…” என்றான் வம்சி.
“அதுல ரொம்ப வருத்தமோ?…” என்றவள் கேலியில் முகம் கொள்ளா புன்னகை வம்சியிடம்.
அவளை அணைத்து தூக்கி சுழற்றியவன் அவளுடனே கிட்சனுக்கு சென்று உணவின் வாசனையை வாசம் பிடித்து நுரையீலில் நிறைத்தான்.
“வாவ், டிவைன்…” என்றான் கண்மூடி இன்னும் வாசம் பிடித்து. உடனே கண்ணை திறந்தவன் பின் முறைத்தபடி,
“ஆமா, நீ ஏன் இப்ப வந்த நிலா? அதுவும் எதுவுமே சொல்லாம?…” என்றான் சற்றே அதட்டலாய் வம்சி சைத்ரயேஷ்.
“என்ன?…”
“ஏன் வந்தன்னு கேட்டேன். காதுல விழுந்துச்சு தானே?…” என்றவன் இன்னும் முறைப்புடன் இருக்க ஷ்ராவணி திகைத்தாள்.