உண்மைக்கும் சொல்கிறானா? இல்லை விளையாடுகிறானா என்று ஒரு நொடி யோசித்து அவனை மீண்டும் பார்க்க அதே நிலையில் தான் நின்றான் வம்சி.
“நிஜமாவா கேட்கறீங்க ஏன் வந்தேன்னு?…”
இதனை கேட்பதற்குள் உதடு துடிக்க ஆரம்பித்துவிட லேசாய் ஏமாற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்ரமிக்க ஆரம்பித்தது ஷ்ராவணியை.
“இதுல ஏன் வந்தன்னு கேட்டா இதுல என்னரா டவுட் உனக்கு?…” என்றான் சலிப்பாய்.
“நிஜமாவே தான் கேட்டீங்களா?…” என மீண்டும் அவனை நெருங்கி கேட்க அவளை அணைத்துக்கொண்டவன்,
“நிஜங்கா நிலா…” என்றான் வருத்தமாய்.
கோபமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனிடமிருந்து விலகி ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் நுழைய போக,
“ப்ச், என்னன்னு கேட்கமாட்டியா நீ? பேசாம போற?…” என்றான் கை பிடித்து நிறுத்தி.
“அதான் சொல்லிட்டீங்களே ஏன் வந்தன்னு? இப்ப எங்க போக நான்? அதுவும் பொய் சொல்லி இங்க வந்தேன்ல எனக்கு தேவை தான்…” என்றவளுக்கு கோபத்தில் அழுகை வந்தாலும் அதனையும் மீறிய ஆவேசம்.
ஏமாற்றத்தின் ஆதங்கம் கூட பெரிதாய் தான் வெளிப்பட்டது. இருந்தால் சண்டையாகிவிடும் என விலக நினைத்தாள்.
சண்டை போடும் மனநிலையும் இல்லை. அவனுக்காக தவித்ததென்ன? காத்திருந்ததென்ன? இப்படி ஒரே கேள்வியில் தன்னை கீழே சரித்துவிட்டானே என தொண்டை அடைத்தது.
திருமணம், அதற்கு முந்தைய நாட்களில் கூட இவ்வளவு உணர்ந்ததில்லை அவன் மீது தனக்கிருக்கும் நேசத்தின் அளவை.
குடும்பத்தின் சூழ்நிலையே பெரும்பாலும் அவளை ஆக்கிரமித்திருக்க இதனை எல்லாம் எண்ணி பித்து பிடிக்கும் நிலைக்கு என்றைக்குமே சென்றதே இல்லை.
எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டு தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை எந்தவித சஞ்சலங்களும் இன்றி வாழவேண்டும் என படாதபாடுபட்டு இன்று இங்கே வந்தால் அவனின் இந்த கேள்வி.
“நிலா லிசன்…”
“உங்க லெசன் எனக்கு வேண்டாம். இப்ப எதுவும் பேசாதீங்க. என்னை கொஞ்சநேரம் தனியா விடுங்க…” என்றவள் படுக்கையறைக்குள் நுழைய அங்கே இன்னுமே மூச்சு முட்டியது.
அங்கிருந்த தருணங்கள் இப்போது முள்ளாய் அவள் முன் எழுந்து நின்று அவனை தேடி தவித்த மனதை பதம் பார்த்தது.
“ச்சே, எனக்கு தேவை தான். இந்தாளுக்கு இதெல்லாம் எங்க புரிய போகுது? ஏன் வந்தன்னு கேட்கறார்…” என்று மூக்கை உறிஞ்சியவள் கண்ணீரை அடக்கினாள்.
கோபத்தையும், வார்த்தைகளையும் அடக்க அடக்க உள்ளூர படபடப்பு. அது வியர்வையாய் ஊற்றெடுக்க அந்த வீட்டினுள் இருக்கவே முடியவில்லை.
வம்சி எதையும் பேசாமல் அவளையும், அவள் தடுமாற்றத்தையும் பார்த்தபடி நின்றிருந்தான்.
“வெல், வெரி வெல் மேன். இனிமே இந்த பேரை மட்டும் தான் சொல்லனும். இனி நிலான்னு சொன்ன சுடுதண்ணி வச்சு மூஞ்சில ஊத்திருவேன், போயா…”
ஷ்ராவணியின் ஆவேசத்தில் வம்சி பேந்த பேந்த விழித்தான். தான் என்ன தவறாக கேட்டுவிட்டோம் என அவனுக்கு புரியவே இல்லை.
அவளின் பேச்சில் திகைத்து பார்த்திருந்தாலும் இந்த நேரத்தில் கையில் எதையும் எடுக்காமல் எங்கே செல்கிறாளோ என கவனித்தவன்,
“எங்க போற? அதுவும் இந்த லேட் நைட்?…”
“ஓஹ், மில்ட்ரிக்கு இப்பதான் லேட் நைட்ன்னு தெரியுதோ? ஏன் வந்தன்னு கேட்கும் போது இது எல்லாம் எங்க போச்சு?…”
“ப்ச், நிலா ரிலாக்ஸ். இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?…”
“தப்பே இல்லை. நான் தான் தப்பு. உன் கூட சேர்ந்ததுக்கு பிராடுத்தனம் பண்ணி பொய் சொல்லி வந்தேன்ல. எனக்கு இது தேவை தான்…”
“பொய்யா என்ன பண்ணின? என்ன சொல்லி வந்த? நிலா நில்லு….” என்றவனின் கழுத்தை பிடித்துவிட்டாள்.
“உனக்கெதுக்கு அது? இனி எதாச்சும் பேசின, அவ்வளோ தான். போறேன்….” என்றவள்,
“ஆனா நான் வேற எங்க போக? சென்னைக்கா? அங்க இனி என்ன வேலை எனக்கு?…” என்றதும் வம்சியின் கண்கள் அகன்றது.
“அதான் மொட்டைமாடிக்கு போறேன். கீழ ஒன்னும் விழமாட்டேன். உன்னோட வாழனும்னு வந்தேன்ல. வாழாம? உன் கூடவே இனி இருக்கலாம்ன்னு வந்தேன்ல. போயா போயா…” என தன் நெற்றியில் அடித்துக்கொண்டாள்.
வம்சிக்கு அவள் சொல்லியதில் அத்தனை ஆச்சரியமும், இன்ப அதிர்ச்சியுமாய் இருக்க அதனை காண்பிக்க கூட முடியாமல் ஒருவித உணர்வு குவியாலாய் மாறியிருந்தான்.
தன்னோடா? இனி தன்னிடம் மட்டுமேவா? தன் நிலவு தன்னருகே. தனக்காகவே வந்துவிட்டாளா? இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.
அவள் தன்னிடம் வர எப்படியும் ஆறேழு மாதங்களாவது கடந்துவிடும் என நினைத்திருக்க இப்படி இத்தனை விரைவில் வந்து சேர்வாள் என நினைக்கவே இல்லை.
அந்த சந்தோஷத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஒருவித தள்ளாட்டம் மனதிலும், உடலிலும்.
பார்வைகள் அவளிடமே நிலைத்திருக்க அவனை தீயாய் முறைத்து பார்த்தாள் ஷ்ராவணி.
அவன் பார்க்க, பார்க்க என இவளின் ஆத்திரங்களும் கூடிக்கொண்டே தான் சென்றது.
“எப்படி பார்க்கறான் பாரு?…” என்றாள் முணுமுணுத்து.
நின்றால் இன்னும் சண்டை வலுத்துவிடும். அதுவும் வம்சியும் நிதானமாக இப்போது இருக்க தன் பேச்சில் எப்போது வேண்டுமானாலும் அவன் எரிமலையானால் வேறு எதையாவது பேசினால் தன்னால் தாங்கவியலாது.
அதற்கு முதலில் அவன் கண்முன்னிருந்து அகல்வதே சிறந்தது என எண்ணியவள் அழுகையை அடக்கி கதவின் தாழ்ப்பாளில் கை வைக்க,
“மே ஐ…”
“நீ ஒன்னும்…” என்றவள் அவனை கையை எடுத்து வாயை மூடுமாறு வைத்தவள்,
“என் பின்னாடி வர கூடாது. லீவ் மீ அலோன்…” என்றாள் மிரட்டல் தொனியில்.
வம்சி கண்சிமிட்ட மறந்து அவளின் மிரட்டல் தோரனையை பார்த்தவன் இப்போது அவள் கதவை திறந்து செல்லவும் வாயிலிருந்த கையை எடுத்துவிட்டு புன்னகையுடன் தலையை கோதினான்.
அப்படி ஒரு ஆசுவாசம். மனமெல்லாம் குளுமை நிறைந்த உணர்வு. அகமெங்கும் ஆசைகள் வாசனையாய் பூ தொடுக்க மூச்சை இழுத்து சுவாசித்தான்.
மீண்டும் ஒரு பார்வை அவள் இருந்தது நிழலோ என்ற ஒரு நொடி பிரம்மை அவளின் வாசத்தையும், உணவின் வாசனையையும் காண்பித்து பிரம்மையை விரட்டியது.
“சந்திரமுகி ரா நுவ்வு…” என சில்லாகித்துக்கொண்டவன் பயண களைப்பு தீர பொறுமையாய் குளித்தான்.
குளித்து இலகுவாய் உடை மாற்றிவிட்டு தண்ணீரை குடித்தவன் அவளின் மொபைல் அங்கேயே இருப்பதை பார்த்து எடுத்தான்.
அப்போது தான் ஆன்லைனில் ப்ரிட்ஜ் பார்த்து வைத்ததும், அதில் லிஸ்ட்டில் சேர்த்து வைத்ததையும் கவனித்தவனுக்கு முகம் கொள்ளா புன்னகை.
இருவருக்கும் இனி பிரிவில்லாத வாழ்க்கை. இனி காலையில் கண் விழிக்கும் பொழுது தன்னருகில் அவள் இருப்பாள் என்ற நினைவே தித்தித்தது.
மொபைலை எடுத்து உள்ளே சார்ஜில் போட்டவன் அவள் கொண்டுவந்தவற்றை எல்லாம் பொறுமையாக பார்த்துவிட்டு வெளியே வந்தான்.
இன்னும் அவளும் உண்டிருக்கமாட்டாள் என்பதால் இருவருக்குமான உணவை, தண்ணீரை எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு நிதானமாக மாடிக்கு சென்றான்.
தான் வந்ததும் தன் பின்னே வருவான் என எதிர்பார்க்க அவனோ அரைமணி நேரம் கடந்தும் வந்திருக்கவில்லை என்பது இன்னுமே அழுகையை கூட்ட கண்ணீர் வந்துவிட்டது.
“திருந்தவே மாட்டான். இவன் இருக்கானே? திருந்தமாட்டான். எப்ப பாரு என்னை தலையில தட்டற மாதிரியே தான் பேசறது. ஹர்ட் பன்றது. நான் வந்திருக்கவே கூடாது…” என விசும்பிக்கொண்டே தனியே புலம்பிக்கொண்டிருந்தாள்.
“எவ்வளவு ஈசியா போச்சு நான் வந்தது? நான் ஒருத்தி என்னை பார்த்தா சந்தோஷப்படுவாங்கனு நினைச்சேன்ல. என் தப்பு. இவர்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்கலாமா? நான் தான், என்னால தான்…”
டெல்லியின் குளிர் மிக அதிகமாக இருந்தது. உடலை ஊசியாய் துளைக்கும் அந்த குளிரிலும் அவள் அசையவில்லை.
உடல் வெடவெடக்க நடுங்கியபடி நின்றாலும் அதனை உணரவிடவில்லை மனதின் வெம்மை.
“ஏன் வந்தேனா? அப்படித்தான் வருவேன். இங்க தான் இருப்பேன். வேணும்னா வீட்டுல வேற ரூம்ல தனியா இருந்துக்கட்டும் மில்டரி…” சகட்டுமேனிக்கு அவனை போட்டு பந்தாடிக்கொண்டிருந்தாள்.
அந்த கோபத்தில் அவன் மாடிக்கு வந்தது கூட தெரியவில்லை. தன் போக்கில் புலம்பியவளை வந்து பின்னிருந்து அணைத்துக்கொண்டான் வம்சி.
அதுவரை அனத்திக்கொண்டிருந்தவள் அவனின் அணைப்பில் தன்னைப்போல தானும் திரும்பி கட்டிக்கொள்ள,
பேசாதவரை அமைதியாய் கைகளுக்குள் நின்றவள் அவன் மன்னிப்பை கேட்டதும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
“ஸாரி கேட்டா சரியா போச்சா?…” என அவனிடமிருந்து விலகி பின்னால் சென்றவள் அவனின் தோற்றத்தை பார்த்தாள்.
குளித்து வேறுடை மாற்றி புத்துணர்ச்சியாய் அதிலும் அவன் மீது வந்த வாசனை திரவியத்தின் மெல்லிய வாசம் வேறு அவளின் நாசியை அணைக்க கோபம் பற்றிக்கொண்டது.
“உங்களை…” என இரு கைகள் கொண்டு தன் விரல்களையே முறுக்கினாள்.
“ஏன்ட்டி ம்மா நிலா?…”
“என்னவா? நான் சொன்னா அப்போ வராம இருந்துருவீங்களா? இப்ப மேக்கப் போட்டுட்டு வந்து என்னை பார்க்க வரீங்க? அதுவும் இவ்வளவு நேரம் கழிச்சு. உங்களை தேடி வந்தேன்ல…” என மீண்டும் கோபமாய் சொல்ல,
“ஓகே, அப்பறமா திட்டு. இப்ப சாப்பிடு வா…”
“ஒன்னும் வேண்டாம். போங்க போங்க…” என அவனை விரட்டுவதில் குறியாய் இருக்க,
“நிலா…” என அதட்டினான் வம்சி.
“இப்ப தான் இந்த பேர் தெரியுதோ? கீழே மட்டும் ஷ்ராவணி சொன்னீங்க….” என்றவள்,
“நானும் பார்த்துட்டே இருக்கேன் ஓவர துள்ளற. உன்னை…” என்று கைகளில் தூக்கியவன் அங்கிருந்த சிறு கல் மேடையில் அமர்த்தி தானும் அமர்ந்துகொண்டான் அவளுடன்.
“விடுங்க என்னை….” என திமிற,
“பேசாம இருக்கமாட்ட?…” என்றான் மீண்டும் அதட்டலாய்.
கண்ணீர் குளம் கட்டிவிட்டது ஷ்ராவணிக்கு. அவனின் சத்தத்தில் அதட்டலில் லேசாய் உடல் தூக்கி போட அதனை கவனித்துக்கொண்டே அவளின் கன்னத்தை, கைகளை எல்லாம் தேய்த்துவிட்டான்.
“இந்த குளிர் உனக்கு தாங்குமா? அவ்வளோ பிடிவாதம். ஏன் சொல்றேன்னு அங்க இருந்தே கேட்கமாட்டியா நீ?…”
“நான் சொல்லவந்ததை கேட்டீங்களா நீங்க? ஆனா நான் மட்டும் கேட்கனும். முடியாது. கேட்கமாட்டேன். அதான் ஏன் வந்தன்னு கேட்டீங்களே?…” என மீண்டும் மீண்டும் சொல்ல,
“ஓஹ், நிலா நிலா…” என்றவன் அவளை அணைத்துக்கொள்ள புலம்பிக்கொண்டே இருந்தாள் அவன் கைகளுக்குள் இருந்தபடி.
கால்களை சுருக்கிக்கொண்டு அவன் மடியில் சுருண்டு அமர்ந்திருந்தவள் சற்று நேரம் சென்றதும் நடுக்கத்துடன்,
“வெய்ட்டா இருக்கேனா? கீழே இறங்கிடவா?…” என வேறு கேட்க அடக்கமாட்டாமல் ஒரு வெடி சிரிப்பு வம்சியிடம்.