வீட்டில் புதிதாய் ப்ரிட்ஜ், பாத்திரங்கள் என்று இருக்க அதுவும் பிரித்து வைக்கப்பட்டிருக்க சாந்தினிக்கு புரிந்தது.
வம்சிக்கு அவரின் பார்வை தெரிந்தது. ஆனாலும் ஷைலுவிடம் தான் என்ன செய்யவேண்டும் என்று அதிகமாய் சொல்லிவைத்தான் மனைவிக்காக.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவள் தான் பார்த்துக்கொள்வதாய் ஒப்புதல் தந்துவிட மனதே இல்லாமல் கிளம்பி சென்றான்.
இதுவரை எங்கு சென்ற போதிலும் எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளிலும் மனது இத்தனை தவித்ததில்லை.
இப்போதோ தனக்கு மிகப்பெரிய பொறுப்பும், தன்னை மட்டுமே நம்பி தனக்கென ஒருத்தியின் காத்திருப்பும் அவனின் கவனத்தை மிகைப்படுத்தியது.
தனியாய் கிளம்பும் முன் அவனை அணைத்துக்கொள்ள பரபரத்த மனதோடு ஷ்ராவணி தவிக்க, எங்கே தனியாய் சென்றால் அவளை விட்டு செல்ல முடியாதோ என வம்சி அந்த தருணத்தின் வாய்ப்பை அவளுக்கு தரவே இல்லை.
இதில் அவனின் மன உணர்வை அங்கே அவள் படித்துவிட்டது தான் அவனின் பெரும் அதிர்ஷ்டம்.
“என்னை விட்டுட்டு இருந்துருவீங்களா? அவ்வளோ பயமா தனியா வந்தா போக முடியாதோன்னு? மில்டரி கெத்தெல்லாம் எதுவுமே இல்லைல…” கிண்டலாய் செய்தி அனுப்பியிருந்தாள் வம்சிக்கு.
“நிலா…” என்று மட்டும் அவன் பதில் அனுப்பியிருந்தான்.
“சரியான பயந்த கோழி. முகத்தை பார்க்கனுமே? விட்டா ஸ்கூலுக்கு போற மாதிரி அழுதிருப்பீங்க தானே? நான் தான் பார்த்தேனே?…” பங்கமாய் அவனை கலாய்த்தாள் தன் மனதை மறைத்து.
அவள் சொல்லியது அத்தனையும் உண்மை தானே? வம்சிக்கு அப்படி ஒரு சிரிப்பு அவள் கண்டுகொண்டதில்.
தன்னை எந்தளவு கவனித்திருகிறாள் என்று. சற்றே வெட்கமாகவும் இருந்தது மனைவியின் கிண்டல்.
“சும்மா இருடி. வந்து வச்சிக்கறேன் உன்னை…” என்று வெட்கம் சுமந்த பொம்மைகளை அனுப்பிவைக்க கவலை மறந்து வாய்விட்டு சத்தமாய் சிரித்துவிட்டாள் ஷ்ராவணி.
சாந்தினியும், ஷைலுவும் வந்து எட்டி பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டனர் ஒரு சிரிப்போடு.
வெகு நேரம் அவனுடன் சாட்டிங்கில் நேரம் கழிய வம்சிக்கு இராணுவ விமானம் தயார் நிலையில் இருக்கும் செய்தி வர ஷ்ராவணியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவர்களின் பேச்சுக்களை மீண்டும் மீண்டும் பார்த்து படித்து அதில் திளைத்தவள் இரவு உறக்கமும் இல்லாமல் படுக்கையில் புரண்டபடி இருந்தாள்.
என்றோ வம்சி அவளிடம் சொல்லியது ஞாபகம் வர இப்போது அதனை எழுந்து தேட ஆரம்பித்தாள் ஷ்ராவணி.
தங்களுடன் அந்த அறையில் வந்து உறங்க சாந்தினி அழைக்க மறுத்துவிட்டாள் ஷ்ராவணி.
வம்சியின் அறையில் அவளுக்கு துணையாய் வந்து உறங்க முடியாத சங்கடத்துடன் ஷைலுவை பார்க்க,
“உண்மையை சொல்லுங்க. அண்ணா கால் வந்தா பேச தானே தனியா இருக்கேன்னு சொல்றீங்க?…” என்று சொல்ல இன்னுமே புன்னகை தான் ஷ்ராவணிக்கு.
“ஓகே, என்ஜாய்…” என்றவள் சென்றதும் தான் நிம்மதியானது.
இதோ இப்போது அதுவும் நல்லதாக போக விளக்கை போட்டு தேட ஆரம்பித்தாள்.
மெதுவாய் நிதானமாய் அவள் தேட தேட தேடியது கிடைத்தும் விட்டது விடியலை நெருங்கிய வேளை.
அப்படி ஒரு சந்தோஷம். அதனை கையில் எடுத்து பார்த்தவள் மீண்டும் மீண்டும் அதனை வாசித்துக்கொண்டே இருந்தாள்.
“நிலா வம்சி சைத்ரயேஷ்…” என்று அவனின் கையெழுத்தில் நிரப்பப்பட்டிருந்த அந்த மருத்துவ படிவம்.
அதில் கணவன் என்ற இடத்தில் வம்சி சைத்ரயேஷ் பெயரும், அவனின் கையெழுத்தும்.
அத்தனை கவனமாய் இத்தனை நாள் இதனை பாதுகாத்து வைத்திருப்பான் என்று அவன் சொல்லும் வரை நினைக்கவே இல்லை.
இப்போது அதனை பார்த்ததும் மனதிற்குள் ஒரு குத்தாட்டம் போட்டவள் உடனே அதனை போட்டோ எடுத்து வாட்ஸ்ஆப்பில் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
மீண்டும் அதனை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வம்சி பார்ப்பதற்கு காத்திருக்க அரைமணி நேரமானது அவன் ஆன்லைன் வர.
வந்ததும் பார்த்துவிட்டதற்கான ப்ளூ டிக் வர என்ன சொல்லுவான், என்ன கேட்பான் என மனது படபடத்தது.
“ஹேய் நிலா, நைட் எல்லாம் இதான் வேலையா உனக்கு? ஐடி படிச்சதுக்கு போலீஸ்க்கு படிச்சிருக்கலாம் நீ. தூங்காம என்ன பண்ணிட்டிருந்த? உன்னை தனியா இங்க விட்டுட்டு ஷைலு என்ன பன்றா? அவளுக்கு லைட் போட்டா தூக்கம் போய்ருமே. தனியாவா இருந்த? ஏன் தூங்கலை?…”
பார்த்ததும் புன்னகைப்பான், சந்தோஷப்படுவான், இல்லை ஏதாவது அந்த நினைவுகளை சொல்லி பேசுவான் என்று நினைக்க வரிசையாய் கேள்விகள்.
“உங்களை எல்லாம் எவன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க சொன்னான்? உங்களுக்கு போய் அனுப்பினேன் பாருங்க….” என பதிலுக்கு கோபமாய் அனுப்பி வைக்க உடனே போனில் அழைத்துவிட்டான்.
“ஏன் தூங்கலைன்னா என்னை பேசுவியா நீ?…”
“ஹ்ம்ம், இப்படி எடுத்து வைக்க தெரிஞ்ச மனுஷனுக்கு அதோட மெமரீஸ் ஷேர் பண்ணிக்க மட்டும் தெரியாது. ப்ராட் மில்டரி…”
“அன்னைக்கு எதோ ஞாபகத்துல கீழே போடாம வச்சிருந்தேன். அதுவுமே ஒரு செக்யூரிட்டி ரீசன்க்கு தான். பின்னால பிரச்சனை வர கூடாதேன்னு. வேற ஒண்ணுமில்லை…” என வம்சி நமுட்டு சிரிப்புடன் சொல்ல,
“இந்த உலகத்துல யார் என்ன சொன்னாலும் நம்புவேன். நீங்க சொன்னா மட்டும் நம்பவே மாட்டேன்…” என்றதும் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“சரி நம்பாத. ஆனா மெமரீஸ் கேட்ட தானே? அதை நான் அங்க வந்து ஷேர் பண்ணிக்கறேன். இப்ப முடியாதும்மா…” என்றான்.
அப்போது தான் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய் அவன் பேசுவதை உணர்ந்தாள் ஷ்ராவணி.
“ஓகே, கால் கட் பன்றேன். ப்ரீயானதும் கூப்பிடறேன் நிலா…”
“நீங்க எதாச்சும் ஏடாகூடமா பாடி அதை நான் எங்கையாச்சும் பாடி வச்சா? இதுலயும் உங்களை நம்பவே மாட்டேன்…”
“உன்கிட்ட பாடினா நீ ஏன் வெளில எல்லார் முன்னாடியும் பாடற? என்கிட்ட மட்டும் தனியா பாடு. என்கிட்ட மட்டும் மாட்டிக்கோ. போதாதா?…”
“உங்களுக்கு இந்த வாய் மட்டும் இல்லைன்னா?…” என்று நாக்கை கடித்துவிட,
“பேசு, நீதான் தைரியமான ஆளாச்சே. பேசு. இது அடுத்து எல்லாம் தெரியும். இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன்னை பார்த்துக்கறேன். இப்ப என்னை என் ட்யூட்டி பார்க்கவிடு சந்திரமுகி…”
அவளிடம் சொல்லியவன் அழைப்பை துண்டிக்க சிரிப்போடு அதனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஷ்ராவணி.
சென்றவன் வர பத்து நாட்களானது அவன் சொல்லியதை போலவே. கஷ்டமாக இருந்தாலும் அதனை நன்றாகவே சமாளித்தாள்.
பகலில் அலுவலக வேலை நேரம் போக மற்ற நேரம் சாந்தினிடமும், ஷைலுவிடமும் வம்சிக்கு பிடித்த அவர்கள் வகை சைவ சமையலையும் கற்றுக்கொண்டாள்.
வம்சி வந்ததும் மேலும் இரு நாட்கள் இருந்துவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பிவிட அதன் பின்னான நாட்கள் எல்லாம் சுவர்க்கலோகம் தான்.
வம்சியின் தனிமை எந்தளவு குறைந்ததோ அந்தளவு இன்னும் இருவரும் மனதினால் நெருங்கினர்.
இடையில் ஒருமுறை நெல்லூர் சென்றுவிட்டு வர அருகிருந்த சொந்தங்கள் முன் தன் மனைவியை அறிமுகப்படுத்திவைத்தான்.
திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று குறைபட்டவர்களிடம் பெரிதாய் பதில் கூறாமல் புன்னகையுடன் கடந்துவிட்டான்.
இரு நாட்கள் மட்டுமே அங்கே வாசம். அந்தளவிற்கு அங்கே ஒட்டுதலில்லை என்பதால் அவனை அங்கே இருக்கவேண்டும் என்று எந்தவித உணர்வும் இழுத்து பிடிக்கவில்லை.
ஷ்ராவணிக்கு அப்படி அல்லவே. அவன் பிறந்தகம் என்ற ஒன்று போதுமாக இருந்தது அந்த வீட்டையும், அங்கே அவனின் குழந்தை பருவ புகைப்படங்கள் என்று அத்தனை பிடித்தது.
பெற்றோர் அன்பு முழுமையாய் கிடைக்காத ஏக்கமெல்லாம் வம்சி மனதில் இருந்தாலும் என்றுமே காட்டியதில்லை.
உணர்வால் மட்டுமே ஷ்ராவணி உணர்ந்து அவனை தாங்கிக்கொண்டாள். வார்த்தைகளில் என்றைக்கும் அவன் வெளிப்படுத்தியதில்லை.
எப்போதாவது சோர்வுறும் நேரங்களில் அவள் மடியில் உறக்கம், அவள் கையால் உணவு. வேறு எதையும் அவன் தேடமாட்டான்.
வாழ்க்கை வண்ணமயம் தான். வர்ண கோலம் தான். பின்னால் நினைத்து பார்த்து சந்தோஷம் கொள்ள லட்சாதிலட்சம் நினைவுகளை சேகரித்தான்.
இதோ ஷ்ராவணி அவன் வசம் வந்து சேர்ந்து முழுதாய் சில மாதங்கள். இப்போது பிள்ளையை சுமக்கும் நிறைமாத நிலவாய் அவனின் கண்களுக்கெதிரே பாந்தமாய் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தாள்.
ஏழாம் மாத வளைகாப்பு. நெல்லூரில் வம்சியின் வீட்டில் வைத்து. வரவேற்பை தான் செய்ய முடியவில்லை என்று சாந்தினி வருத்தப்பட வளைகாப்பை சிறப்பாய் பெரிதாய் நடத்திவிட்டான் வம்சி.
அழைக்கும் மனதும் இல்லை. இப்போது பெரிதாய் பேச்சுக்கள் இல்லை. ஒரே ஊரில் இருந்தாலும் தந்தை உழைத்து பிழைக்க நெருங்கினால் தான் செய்ய வேண்டியதாகிவிடுமோ என அவளும் வந்துசெல்லவில்லை.
ஆனால் இருப்பு கொள்ளாமல் அங்கே நிலவரங்களை தெரிந்துகொள்ள என அவ்வப்போது சுலோச்சனாவிடம் பேசினாலும் அவர் பிடிகொடுக்காமல் பேசி வைத்துவிடுவார்.
இப்போது இதற்கும் பேசுவாள் என தெரியும். அதை பற்றி எல்லாம் நினைக்க முடியாமல் இளைய மகளுக்கு இந்த ஒன்றையாவது திருப்தியாக செய்துவிட மாட்டோமா என்று தான் கேட்டனர்.
“என் வொய்ப்க்கு நான் தான் எல்லாம் செய்யனும்னு நினைக்கறேன். அதனால இதுல யாரும் தலையிட வேண்டாம். இது என்னோட ஆசை மட்டுமில்லை, நிலாவோட ஆசையும்….” என்று தன்மையாக மறுத்துவிட்டான் வம்சி.
சொல்லியதை போலவே தான் கவனித்துக்கொண்டான். டெல்லியில் வைத்து இராணுவ மருத்துவமனையில் ஆண் மகவை ஈன்றெடுத்தாள் ஷ்ராவணி.
அவளை பக்குவம் பார்ப்பதெற்கென்று சாந்தினி, பிரணவ் மனைவி, ஷைலஜா, சுலோச்சனா அத்தனைபேரும் டெல்லியில் தான் வந்து இருந்தனர்.
மனம் போல் வாழ்க்கை என்பதற்கிணங்க மனதால் நெருங்கி, உயிரால், உயிராய் தான் உறவை மேற்கொண்டனர் வம்சியும் அவனின் நிலவும்.