தனுஷ்கோடி கடற்காற்று ஆவேசமாய் காற்றை அள்ளி புழுதியுடன் வேகத்தை கிளப்பிக்கொண்டு அதிர்ந்து வீசியது.
மாலை நேரமாகியிருக்க சுற்றுலாவிற்கு என அங்கே சுற்றி திரிந்தவர்கள் கூட சென்றிருந்தனர்.
ஆட்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து ஓரிருவர் தான் கண்களில் தென்பட்டனர்.
ஒருகாலத்தில் கடல் வாணிபத்திற்கு சிறந்த துறைமுகமாகவும், வங்க கடலும், இந்திய பெருங்கடலும் ஒன்றே சங்கமிக்கு சிறப்புவாய்ந்த இடமாகவும் விளங்கிய தனுஷ்கோடி.
சிதைந்த கட்டிடங்களும், சருகாய் குப்பையென நொறுங்கி சரிந்திருந்த குடிசைகளும் என்று மனதில் நீங்கா வடுவை தடம் பதித்து சென்ற பெரும்புயலின் சீற்றத்தால் சூறையாடப்பட்டு அழிந்த நகரம்.
ஆக்ரோஷத்துடன் பொங்கி வரும் அலையையும், கடல்பரப்பை தனது கேமராவினால் படம் பிடித்துக்கொண்டு இருந்தான் வம்சி சைத்ரயேஷ்.
“ஸார் கிளம்புவோமா? இருட்ட போகுது….” என்ற ட்ரைவரை திரும்பி பார்த்தவன்,
“நாக்கு பாக தெலுசு…” என அழுத்தமாய் சொல்லி மீண்டும் புகைப்படம் எடுத்தவன்,
“வெய்ட் பண்ணுங்க வரேன்…” என்றான் மீண்டும் திரும்பி பாராமல் கேமராவில் கண் பதித்து.
அவனுடன் வந்திருந்த கார் ட்ரைவருக்கு கதி கலங்கியது. வீசும் காற்றும், அலையும் அவரை கிலி பிடிக்க வைத்தது.
சத்தமில்லாமல் அங்கேயே அவனை விட்டுவிட்டு சென்றுவிடுவோமா என்று கூட யோசித்துவிட்டார்.
“பாதி பேசறது ஒன்னும் புரியலை. முரட்டு ஆள் வேற. மில்ட்ரிக்காரன்ட்ட என்னத்துக்கு வம்பு?…” என்று முனகலுடன் பின்னே நகர்ந்து நின்று சாமியை வேண்டியபடி பார்த்தார்.
மேலும் பத்துநிமிடம் பிடித்தது அவன் படம் பிடித்து முடித்து வருவதற்கு. இவர் நின்றவிதத்தையும் முன்னேறி வந்தவன் படமெடுத்ததை கவனிக்கவில்லை.
“லெட்ஸ் கோ…” என்ற சத்தத்தில் திடுக்கிட்டு பார்த்தவர்,
“என்னங்க ஸார்? இன்னும் எவ்வளவு நேரம்?…” என்றார் மலங்க மலங்க விழித்தபடி.
“இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு போகலாமா?…” என வம்சி உடனே.
“இங்கயா? ஐயோ?…” என்று நெஞ்சை பிடித்துவிட்டார் அவர்.
அவரின் பதற்றத்தில் வம்சிக்கு சிரிப்பு பிறக்க அதனை கண்களில் மட்டும் காட்டியவன் தலையசைத்துவிட்டு காரை நோக்கி விரைந்தான்.
“என்னை இந்த மனுஷன்கிட்ட இருந்து எப்படியாச்சும் காப்பாத்திரு சாமி…” என மனதிற்குள் அழுதபடி அவனை பின் தொடர்ந்தார்.
காரில் ஏறி அமர்ந்தவனுக்கு அந்த அமைதியான சூழலை விட்டு செல்லவே மனம் வரவில்லை.
அதற்கு மேல் அங்கிருக்க அனுமதியும் இல்லை என்னும் காரணத்தால் கிளம்பிவிட்டான்.
முக்கால்மணி நேரத்தில் வம்சி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வண்டியை விட வம்சி அமைதியாக வேடிக்கை பார்த்தபடி வந்தான்.
இடையில் ஓரிரு இடங்களில் வண்டியை நிறுத்த சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டான் அவன்.
“சச் எ நைஸ் பிளேஸ்…” என அவனின் அழுத்தமான அதரங்கள் சில்லாகிக்க அடர்ந்த மீசைக்கடியில் புன்னகையை கண்டுகொள்ளமுடியவில்லை.
முதல்நாள் கிளம்பி வந்ததில் இருந்து இதோ இப்போது வரை அவனை கணிப்பிற்குள் கொண்டு வரமுடியவில்லை.
திடீரென்று தெலுங்கில் பேசுவான், திடீரென்று தமிழில் கேள்வி கேட்க என்று அவனிடத்தில் ட்ரைவர் திண்டாடி போனார்.
‘இந்தாள் குடும்பத்து மனுஷங்க பாவம்’ என்று மனதிற்குள் நினைக்க அவன் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.
“டின்னர் முடிச்சிட்டு கிளம்பலாம். வெய்ட்…” என சொல்லிவிட்டு செல்ல தலையசைத்துவிட்டு சீட்டை சாய்த்து படுத்துக்கொண்டார் அவர்.
அதோ இதொவென்று நேரம் கடந்தது. பத்துமணி போல தான் கிளம்பியே வந்தான் வம்சி.
முகம் சற்று உப்பியிருந்தது. நன்றாக உறங்கி எழுந்திருப்பான் என்பதை காட்டிக்கொடுக்க பேக்கை பின் சீட்டில் போட்டுவிட்டு முன்னால் வந்து அமர்ந்தான் வம்சி.
அதற்கு மேல் எதற்கு வம்பு என்று எதுவும் கேட்கவில்லை ட்ரைவர். வந்ததை போல சென்று இறக்கிவிட்டுவிட்டால் போதும் என்று கிளம்பினார்.
ராமேஸ்வரம் விட்டு கிளம்பியவன் பாம்பன் பாலத்தில் சில மணி துளிகள் செலவு செய்துவிட்டு அந்த இரவிலும் வீசிய அனல் காற்றை அனுபவித்தபடி நின்றுவிட்டு கிளம்பினான்.
திருச்சியை நெருங்கும் முன் ஓரிடத்தில் காரை நிறுத்தி டீ குடித்து தூக்கத்தை விரட்டிவிட்டு சற்று ஆசுவாசம் கொண்டவர்கள் அதன் பின்னர் பயணத்தை தொடர்ந்தனர்.
———————————————————–
அந்த மருத்துவமனையின் வளாகத்தின் கைபிடி சுவரில் நின்று வானில் கடந்து சென்ற நிலவை பார்த்துக்கொண்டு இருந்தான் வம்சி சைத்ரயேஷ்.
“ஸார்…” என்ற மருத்துவரின் அழைப்பில் திரும்பியவன்,
“எஸ், எப்டி இருக்காங்க?…” என்றான்.
“ஷீ இஸ் ஆல்ரைட். டூ த்ரி ஹாவ்ர்ஸ்ல மயக்கம் தெளிஞ்சிரும். பயத்துல தான் மயங்கிருக்காங்க…” என்றதும் அவரிடம் தலையசைத்து,
“தேங்க் யூ டாக்டர்…” என்றான்.
“நீங்க உங்க வொய்பை பார்க்கனும்னா பார்க்கலாம். கான்ஷியஸ் வரவும் கூப்பிடுங்க. மார்னிங் செக்கப் முடிச்சு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்…”
“சூர் டாக்டர்…” என்று தலையசைத்து புன்னகைத்தான்.
மருத்துவர் நகரவும் அவ்விடத்தை விட்டு தானும் நகர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தான்.
“ஸார் இந்த பெல் குடுத்தா நாங்களே வருவோம். இந்த செலைன் முடியவும் இன்னொன்னு மாத்தறோம்…” என்று சொல்லி சென்றாள் செவிலி பெண்.
“ஊஃப்…” என்று தலையசைத்துவிட்டு வம்சி அறையை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.
கட்டிலில் உடல்களில் அத்தனை சிராய்ப்புகளும், தலையில் பெரிய கட்டுடனும் படுத்திருந்தவளை பார்க்கவும் கோபம் ஒருபக்கமும், குழப்பம் ஒருபக்கமும் அவனை தழுவியது.
“இடியட்…” என்று இதழ்கள் முணுமுணுக்க அங்கே இருந்த விசிட்டர் பெட்டில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
உறங்க தோன்றவில்லை. வெளியில் அவன் வந்த கார் நின்றிருக்க அவருக்கு அழைத்தான்.
“ஸார் கிளம்பலாமா?…” பவ்யமாய் அவர் கேட்க,
“நோ, நீங்க தூங்குங்க. மார்னிங் பார்க்கலாம்…” என்று போனை வைத்துவிட்டான்.
“இந்த மனுஷனால நான் ஊர் போய் சேர முடியாது போல? இல்லாத வம்பை இழுத்து புடிச்சிக்கிட்டு சுத்தறாரே…” என்று புலம்பிய ட்ரைவர் பின் சீட்டில் ஏறி படுத்துக்கொண்டார்.
வம்சி இருந்த அறைக்குள் அந்த பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவளை ஒட்டிய ஜன்னலில் நிலவு காய்ந்துகொண்டிருந்தது நகராமல்.
இரவும் நிலவும் அவனின் ரசனைகளுக்கு தீனி போடுபவை. பெரும்பாலும் அதனுடன் கிடைக்கும் நேரத்தை செலவிடுபவன் இன்று அதனை ரசிக்கும் மனநிலையில் இல்லை.
மறுநாள் பணியில் சேரவேண்டும். எடுத்த விடுமுறை இரவோடு முடிய அடுத்த நாள் இதற்கொரு காரணம் சொல்லவேண்டுமே?
மொபைலை எடுத்தவன் தன்னுடன் பணிபுரியும் ஆனந்திற்கு அழைப்பு விடுத்தான் வம்சி.
“என்ன வம்சி இந்த நேரம்? ரீச் ஆகியாச்சா?….” அவனின் குரல் அப்பட்டமான தூக்கத்தை சுமந்திருந்தது.
“நோ ஆனந்த், திருச்சி க்ராஸ் பண்ணிட்டேன். அங்க ஒரு ஊர்ல ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்…”