மகேஸ்வரன் அவன் தங்கியிருந்த வீட்டில் பரிதியையும் அவனின் குடும்பத்தையும் இறக்கிவிட்டவன் பரிதியின் கையில் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு,
“டேய்….இனி நீ பார்த்துக்க….நான் வீட்டுக்கு போய் பார்க்குறேன்….அப்புறம் அப்பா பேசினது தப்பா எடுத்துக்காத….அவரு…”என்று மேலே கூற வந்தவனை தடுத்த பரிதி,
“விடு….அவருக்கு இனி என் மேல நம்பிக்கை இருக்காது….அதை விடு நீ உன் வேலையை விட்டுடாத…..இதுக்காக தான் இவ்வளவு கஷ்டமெல்லாம் பட்டோம்……அதனால அதை பாரு….”என்றுவிட,
“டேய் என்ன நீ இப்ப திடீர்னு பின்வாங்குற…நீ இல்லாம நான் எதுவும் செய்யறதா இல்லை…நியாபகம் இருக்கட்டும்…”
“கண்டிப்பா நான் இல்லாமலா….என் பணமும் இருக்கே….ஆனா உங்க அப்பா கிட்ட என்னை பத்தி பேசி பிரச்சனை உருவாக்கிக்காத….”என்று கூற அவனை அணைத்துக் விடுவித்தவன்,
“எனக்கு என் அப்பா பத்தி தெரியும் இந்த தடவை அந்த பரதேசியால தான் அவர் இப்படி தப்பு பண்ணிட்டாரு….நீ முதல்ல தங்கச்சியை பாரு நான் வரேன்….”என்றுவிட்டு யாரையும் பார்க்காமல் சென்றுவிட்டான்.இப்போது இருக்கும் மனநிலையில் அவனால் யாரையும் எதிர் கொள்ள முடியவில்லை முதலில் தந்தையை சரி செய்ய வேண்டும் என்பது மட்டுமே மனதில் நின்றது அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு விரைந்தான்.
பரிதி மிருதுளாவை தூக்கிக் கொள்ள மற்ற இருவரும் இறங்கினர்.அவன் திவ்யாவிடம் சாவியை நீட்டிவிட்டு ஆட்டோ டிரைவரிடம்,
“இருங்க வந்துடுறேன்…”என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.அது ஒரு ஓட்டு வீடு சுற்றிலும் மரம் செடி கொடிகள் என்று நிறைந்திருந்தது.அது மாணிக்கம் முதன் முதலில் வாங்கிய வீடு அவரின் ராசியான வீடு என்பதால் மகனின் பெயருக்கு மாற்றி வைத்திருந்தார்.அங்கு தான் மகேஸ்வரன் இத்தனை நாள் தனி குடுத்தனம் இருந்தான்.
திவ்யா வீட்டை திறந்து உள்ளே செல்ல அங்கு வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் இருந்தன,நல்ல விஸ்தாலமான வரவேற்பறை மூன்று படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு.ஒரு படுக்கை அறையில் மிருதுளாவை படுக்க வைத்துவிட்டு வந்தவன்.
“நான் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரேன்….”என்றுவிட்டு சென்றுவிட,நாயகி மகளை பிடித்துக் கொண்டார்.
“இந்தாடீ…நாம இங்க இருக்க வேண்டாம்….வா போகலாம்….”என்று கூற தாயை கோபமாக முறைத்த திவி,உள்ளே சென்று மிருதுளாவை பார்த்துவிட்டு,
“சொல்லுமா….”என்று நிதானமாக கேட்க,
“என்னத்தை சொல்ல சொல்லுற….இங்க பாருடீ….அந்த தம்பி உனக்கு உதவி செஞ்சது பெரிய விஷயம் தான் நான் இல்லைனு சொல்லல ஆனா….இது….இது போல எல்லாம் நம்மளால அலைய முடியாது….அந்த பொண்ணை பார்த்தா பாவமா தான் இருக்கு….அதுக்கு உன் வாழ்க்கையும் சேர்த்து பாழாக்கக் கூடாதுல….”என்றவர் திவியின் கையை பிடித்துக் கொண்டு,
“நான் சொல்லுறத புரிஞ்சிக்கடீ…..எனக்கு இங்க இருந்தா சுருக்கு சுருக்குனே இருக்கும்….எப்போ என்ன நடக்குமோனு….”என்று கூற,திவி பொறுமையாக அனைத்தையும் கேட்டவள்,
“சரிம்மா….அண்ணன் வரட்டும் போயிடலாம்…..”என்றுவிட்டு தனது கைபேசியை எடுக்க,மகள் இப்படி உடனே ஒத்துக் கொள்வாள் என்று அறியாத நாயகி திகைத்துவிட்டார்.
“என்னம்மா….உடனே ஒத்துக் கிட்டேன்னு பார்க்குறியா….அதான் சொல்லிட்டியே என் வாழ்க்கையும் சேர்ந்து பாழா போகும்னு…..”என்று எங்கோ பார்த்து அழுத்தமாக கூற நாயகி புரியாமல் திரும்பியவர் நெஞ்சம் நடுங்க நின்றுவிட்டார்.அங்கு வாசலில் நின்றிருந்தான் இளம்பரிதி.
அவனைக் கண்டவுடன் நாயகிக்கு மனது நடுங்க பேச நா எழவில்லை.அத்தனை பயம் அவனிடம் அதனை உணர்ந்தவன் திவ்யாவிடம் நெருங்கி,
“ஒரு….ஒரு பத்து நிமிஷம் இரு….நான் வந்துடுறேன்….”என்று சொல்லிவிட்டு அங்கு மேஜையின் மீது இருந்த தனது பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.திவ்யாவும் தனது கைபேசியுடன் யாருக்கோ அழைத்துக் கொண்டு வெளியில் செல்ல நாயகி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.
அவருக்கு தான் செய்வது சரியா,தவறா என்று தெரியவில்லை.மனது இங்கமங்கு அல்லாடியது.மிருதுளாவை அவருக்கு பிடிக்கும் தான் ஆனால் திவ்யா அவரின் மகள் அல்லவா என்னதான் மிருதுளாவை அவர் தன் மகள் என்று கூறிக் கொண்டாலும் ரத்த சொந்தம் என்பது தான் என்றும் நிலைக்கும் போல.நாயகி இடிந்து அமர்ந்திருக்க அவரின் தோள்களில் ஒரு கை விழவும் பயந்து எழ,
“ம்மா…நான் தான்….ஏன் இப்படி பயப்படுற….என் கூட வேலை பார்க்குறாள்ல ரேகா அவ கிட்ட பேசியிருக்கேன்…அவங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்குனு கடையில பேசிக்கிட்டு இருந்தா…அதான் பேசிட்டு சொல்லுனு சொன்னேன்….நான் பழைய வீட்டுல இருக்குற சாமான் எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்…”என்று விட்டு நகர,அவளின் கையை பிடித்த நாயகி,
“நா…நான் உன் நல்லதுக்கு தான் சொன்னேன் திவி….எனக்கு மிருதுளா மேல எந்த கோபமும் இல்லை…..”என்று தன்னை விளக்க முயற்சிக்க,
“அது…அதில்லடீ…இப்ப அந்த பிள்ளை எந்திரிச்சு கேட்குமே….நா…நான் என்ன பதில் சொல்லுவேன்….”என்று கலங்க அவரின் கண்களை துடைத்துவிட்ட திவி,
“நான் சொல்லிக்கிறேன்….நீங்க கஷடப்படாதீங்க….”என்றுவிட,நயாகிக்கு தான் மனது ஏதோ போலவே இருந்தது.திவ்யா கூறியது போல தனது வீட்டிலேயும்,மிருதுளாவின் வீட்டிலேயும் இருக்கும் சாமான்களை எல்லாம் மூட்டை கட்டி ஒரு சிறிய டெம்போ பிடித்து ஏத்தி வந்துவிட்டாள்.அவள் வீட்டின் வாசலில் வரும் போதே பரிதியின் சத்தம் வாசல் வரை கேட்க,வேகமாக உள்ளே நுழைந்தாள்.
“என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்க….”என்று கத்திக் கொண்டிருந்தான் பரிதி,எதிரில் மிருதுளா சலனமே இல்லாமல் நின்றிருந்தாள் பக்கத்தில் நாயகியோ அவளின் கையை இறுக்கமாக பிடித்தபடி நிற்க வேகமாக நுழைந்த திவி,
“என்ன ராசா உன் சத்தம் வாசல் வரை கேட்குது….என்ன விஷயம்….”என்று கேட்டுக் கொண்டே மிருதுளாவையும்,நாயகியையும் அமர செய்ய,
“ஏய் இங்க பாருடீ….நீ என்ன பைத்தியமா….நீ மட்டும் இல்ல உனக்குள்ள இன்னொரு உயிரும் இருக்கு….அதனால ஒழுங்கா சாப்பிடு….”என்று கூறிக் கொண்டே பரிதி பிரித்து வைத்திருந்த சாப்பாட்டை அவளிடம் கொடுக்க அவள் எதுவும் கூறாமல் உண்டாள்.
“ம்மமா…நீங்களும் சாப்பிடுங்க….கிளம்புனும்ல…ரேகா வீடு இருக்கு வாங்கனு சொல்லிட்டா…என்ன வாடகை தான் கொஞ்சம் அதிகம்னு சொன்னா….நான் பரவாயில்லைனு சொல்லிட்டேன்….”என்று கூறிக் கொண்டே தன் சாப்பாட்டை சாப்பிட,நாயகி மிருதுளாவை தான் பார்த்தார் அவளோ எதுவும் கூறாமல் தன் சாப்பாட்டில் கவனமாக இருக்க,பரிதியை காண அவனோ மிருதுளாவை தான் முறைத்தபடி இருந்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க அனைத்தையும் ஒதுங்க வைத்த திவ்யா,மிருதுளாவிடம் வந்து,
“மிருது….நா…நான் கிளம்புறேன்….அம்மா….”
“பத்திரமா இருடீ….அம்மாவை பார்த்துக்க….எதாவதுனா போன் பண்ணு….ம்ம்….”என்று கூறியவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தான் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.இதற்கு மேல் அங்கு நின்றால் கண்டிப்பாக உடைந்துவிடுவோம்.நேற்றே முடிவெடுத்துவிட்டாள் இனி தன்னால் திவ்யாவிற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று போதும் அவர்கள் எனக்காக செய்தவரை போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.அதனால் தான் திவ்யா கிளம்புகிறேன் என்றவுடன் எதுவும் கூறாமல் போ என்றுவிட்டாள்.
பரிதி அனைத்தையும் பார்க்கும் பார்வையாலன் மட்டுமே எதுவும் கூறவில்லை நாயகியிடம் சண்டையிட்டவன் திவ்யா கிளம்புகிறேன் என்றவுடன் எதுவும் கூறவில்லை.ஆனால் உடலும்,உள்ளமும் இறுகி போய் இருந்தது.திவ்யாவும்,நாயகியும் சென்றவுடன் மிருதுளா இருக்கும் அறைக்கு வந்த பரிதி,
“சரி பார்த்துக்க….எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு….”என்றுவிட்டு செல்ல,
“இந்த வீடு யாரோடது….”என்றாள் மிருதுளா
“மகேஸ்வரனோடது….”
“வேற வீடு பாருங்க…..”
“என்கிட்ட அவ்வளவு பணமில்ல….”
“என்கிட்ட இருக்கு….”என்று தனது பையில் இருந்த நாலாயரத்தை எடுத்து அவனிடம் கொடுக்க,
“இது எந்த மூளைக்கு பத்தும்….இப்ப உடனே எல்லாம் வீடு பார்க்க முடியாது….கொஞ்ச நாள் இங்க தான்….”என்று எங்கோ முகத்தை வைத்துக் கொண்டு கூற,
“ஓஓ…சரி…அந்த சார் திரும்பியும் வந்து நம்மளை கழுத்தை பிடிச்சி வெளில தள்ளட்டும்….அப்ப போயிக்கலாம்….”என்று அவள் கூறி முடிக்க,
“ஏய்ய்ய்…..”என்று அவளின கழுத்தை பிடித்துவிட்டான் பரிதி.அவளோ எந்த சலனமும் இல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.பின் என்ன நினைத்தானோ தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்,
“இங்க பாரு….நான் செஞ்சது தப்பா இருந்தாலும் ஒருவிதத்துல நமக்கு நல்லது தான்……சொந்தமா தொழில் தொடங்க தான் இப்படி செஞ்சோம்….இன்னும் கொஞ்ச நாள்ல தொடங்கவும் போறோம்….இனி நமக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்….”என்று அவளின் கன்னம் தாங்கி கனவுகளுடன் அவன் கூற மிருதுளாவிற்கு,
“ஓவென்றிருந்தது….இவனுக்கு தான் செய்தது தவறு என்றே தோணவில்லையா….எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்ற உணர்வேயில்லை…இனி இவனிடம் பேசி பயனில்லை….”என்று உணர்ந்தவள் அவனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.
மகேஸ்வரன் தனது வீட்டிற்கு வந்து தன் தந்தையுடன் பேச முயற்சி செய்ய அவரோ மகனை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.வைரத்திற்கும் சேதி தெரிந்ததிலிருந்து வருத்தம் தான் மகன் இவ்வாறு செய்துவிட்டானே என்று அதனால்,
“ஏன் கண்ணா….இந்த அம்மா கிட்ட கேட்டா பணத்தை கொடுத்திருக்க மாட்டேனா இப்படியா செய்யுறது….இது தப்பு கண்ணா….எனக்கு நீ செஞ்சது பிடிக்கலை….”என்றுவிட்டார்.தாய்,தந்தை இருவரும் முகத்தை திருப்ப என்ன செய்வது என்று அவனிற்கு புரியவில்லை.மேலும் ஒரு மாதம் எப்படி ஓடியது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.
மிருதுளாவிற்கு எட்டாம் மாதம் தொடங்கியது.அவள் இப்போது வேலைக்கும் செல்லவில்லை அதனால் வீட்டின் அனைத்து செலவுகளும் கணவன் தான் பார்த்துக் கொள்கிறான்.மிருதுளா பரிதியிடம் அவசியத்தை தவிர்த்து பேசுவதை தவிர்த்துவிட்டாள்.பரிதியும் அவளிடம் பேச முயலவும் இல்லை.சரி தான் போடீ என்கிற எண்ணம் எங்கு சென்றுவிடுவாள் என்னிடம் தானே வரவேண்டும் என்கிற மிதப்பு அதனால் அவளை கண்டு கொள்ளவில்லை.
திவ்யா தன்வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு அரிசி மில்லில் வேலைக்கு சென்றுவிட்டாள்.நாயகிக்கு தான் மனது அவ்வபோது மிருதுளாவை நினைக்கும் ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். ஆக ஒருவருக்கும் ஒவ்வொரு மனநிலையில் தான் பொழுதுகள் கழிந்தது.
பரிதி மகேஸ்வரனிடம் தெளிவாக கூறிவிட்டான் நமது வேலையை விட்டுவிட்டால் நமக்கு பெரிய நட்டம் ஏற்பட்டு விடும் அதனால் வேலையை தொடங்கிவிடு என்று அதனால் மகேஸ்வரன் கேரேஜின் ஒரு பக்கத்தில் அதற்கு உண்டான வேலைகளை செய்ய தொடங்கினான்.மாணிக்கம் அனைத்தையும் பார்த்தார் தான் ஆனால் எதுவும் கேட்கவோ,பேசவோ முயற்சி செய்யவில்லை.மகன் தன்னைவிட்டு தூரம் சென்றுவிட்டான் என்று நினைத்தவருக்கு மனது வலித்தது.இதில் பரிதி வேறு அவ்வபோது எந்த உறுத்தலும் இல்லாமல் வந்து போக ஒருவித எரிச்சல் மண்டியது.
“எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது என்று….”சில நேரங்களில் அதை மகேஸ்வரனிடம் வைரம் மூலம் கூறவும் செய்வார்.அவனுடன் கவனமாக இருக்கவும் என்று அனைத்தையும் கேட்கும் மகன் பரிதியின் விடயத்தில் எதையும் காது கொடுத்து கேட்கவில்லை.அதனால் மாணிக்கத்தின் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்த நேரம் பரிதி தங்களின் வீட்டில் தான் தங்கியிருக்கிறான் என்ற செய்தி அவரின் கோபத்தை எல்லை கடக்க வைத்துவிட்டது.
அவரின் நண்பன் மூலம் தான் விஷயம் தெரிய வந்தது.தங்கள் பழைய வீட்டில் யாரோ குடியிருக்கிறார்கள் என்று அவர் கூற யார் என்று விசாரித்த போது தெரிந்தது அது பரிதி தான் என்று.அத்தனை கோபம் அவரிற்கு தன் வீட்டில் அவன் எப்படி இருக்கலாம் என்று முதலில் வேகமாக அந்த வீட்டிற்கு தான் சென்றார்.அவர் சென்ற நேரம் மிருதுளா வாசலை தன் வயிற்றை பிடித்துக் கொண்டு கூட்டிக் கொண்டிருக்க கோபமாக வந்தவரின் நடை நின்றது அவனிடம் இருக்கும் கோபத்தை இந்த பெண்ணிடம் காட்டி என்னவாக போகிறது என்று நினைத்தவர் மீண்டும் திரும்பி வந்துவிட்டார்.ஆனால் மனது உலைகளம் போல கொதித்துக் கொண்டிருந்தது.
பரிதியின் மீது வன்மம் எல்லாம் இல்லை ஆனால் அதீதகோபம் இருந்தது. தன்னை மீறி அனைத்தும் செய்கிறான் என்கிற கோபம்.உண்மையில் அவன் பணத்தை எடுக்கவில்லை தான் ஆம் மகேஸ்வரன் தான் பணத்தை எடுத்தது.ஆனால் பணத்தை எடுக்க தூண்டியது பரிதி தான் என்று அவருக்கு நன்கு தெரியும்.பரிதி கூறியவுடன் செய்ய போகும் காரியத்தின் வீரியம் புரியாமல் மகனும் செய்திருக்கிறான் அப்படி என்ன அவனின் வார்த்தைக்கு இருக்கும் மதிப்பு தனக்கு இல்லையா என்று தான் மாணிக்கம் நினைத்தார்.அதன் தாக்கம் அடுத்தநாள் வெளிப்பட்டது பரிதியிடம்.
அடுத்தநாள் காலை பரிதி வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் அவனிடம் வந்த மாணிக்கம்,
“என் பையனை மயக்கி என் வீட்டுலேயே குடியிருக்க….உனக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா….எப்படி இப்படி இருக்க….”என்று நேரிடையாக கேட்க,
“நான் வெளில வீடு பார்த்துட்டேன் தான் ஆனால் அவன் தான் போகவிடாம தடுத்தான்….அதோட என்னால முடிஞ்ச வாடகையை நான் அவன்கிட்ட கொடுத்துட்டு தான் இருக்கேன்….”என்றுவிட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்.அவனின் நிமிர்வான பதில் மாணிக்கத்திற்கு கோபத்தை கொடுக்க,
“இந்த இடம் என்னொடது இதுல உனக்கு எந்த பங்கும் இல்லை….நீ என் பைனோட இருக்காத….உன்னோட பணத்தை நான் தரேன்….”என்றுவிட,பரிதி ஏதோ பேச வரும் முன்,
“ப்பா…”என்ற சத்தத்தில் திரும்ப கண்கள் கலங்க மகேஸ்வரன் நின்றிருந்தான்.வேகமாக தனது தந்தையிடம் நெருங்கியவன்,
“என்னப்பா இது….ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க….நீங்களாப்பா இது….”என்றவன் பரிதியை பார்க்க அவனோ எதையும் பேசாமல் வெளியில் சென்றிருந்தான்.அவன் செல்வதை நெஞ்சம் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.பரிதி மதிய உணவை மறந்து வைத்துவிட்டு வந்துவிட அதை அவனிடம் கொடுக்க வந்திருந்தவள் மாணிக்கம் பேசியது அனைத்தையும் கேட்டுவிட கொஞ்சநஞ்சம் இருந்த மனதும் விட்டு போனது.அதன் தாக்கம் அவளின் உடலை பாதித்தது.
பரிதி அந்த கடற்கரையை வெறித்தபடி இருக்க அவனின் அருகில் வந்து அமர்ந்தான் மகேஸ்வரன்.
“டேய்…ப்பா ஏதோ கோபத்தில பேசிட்டாரு டா….அவருக்கு நான் உனக்கு முக்கியத்துவம் கொடுக்குறேன் அதனால கோபம்….”என்று புரிய வைக்க முயல,பரிதி எதுவும் பேசவில்லை.ஆனால் மனதில் ஏதோ அழுத்தம் பரவியிருந்தது.
“டேய் என்னடா ஏன் ஒருமாதிரி இருக்க….எதாவது பிரச்சனையா….”என்று கேட்க,
“ஒண்ணுமில்ல….இன்னைக்கு உங்கப்பா சொன்ன மாதிரி தான் அன்னைக்கு அந்த குட்டி பிசாசும் சொல்லிட்டு போச்சு….”என்றுவிட்டு அன்று திவ்யா கூறியதைக் கூறி அவள் வெளியில் தங்கியுள்ளாள் என்பதையும் கூற,
“அடேய்….ஏன்டா இதை என்கிட்ட முன்னாடியே சொல்லல….அவளை ஏன் போகவிட்ட…இப்ப எங்க இருக்கா….”என்று பதட்டத்துடன் கேட்க,
“நான் அவளை கவனிச்சிகிட்டு தான் இருக்கேன்….நீ ரொம்ப பதறாத….ஏற்கனவே உங்கப்பா நான் உன்னை ஏதோ கெடுத்துட்டேன்ற மாதிரி பேசுறாரு….இதுல நீ இதையும் சேர்த்துவிட்டுடாத….”என்று கூறிக் கொண்டிருக்கும் போது அவனின் கைபேசி அழைத்தது.எடுத்து பார்த்தவன் அதை கண்டு கொள்ளாமல் வைத்துவிட,
“டேய் யாருனு பாரு….”என்று மகேஸ்வரன் கூற,
“என் பொண்டாட்டி தான்….பேசறதே இல்லைடா என்கிட்ட…திமிரு….அவ ஊட்டாம நான் சாப்பிட மாட்டேன்னு தெரியும் அதுகூட செய்யமாட்டேங்குறா….அவ்வளவு கொழுப்பு அவளுக்கு….சரிதான் போடீ….விட்டுடேன்….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அழைப்பு வர,அதை பரிதி கண்டுகொள்ளவில்லை ஆனால் மகேஸ்வரன் அவனிடம் இருந்து பிடுங்கி எடுத்துவிட்டான்.
“ஹலோ…..”
“சார்…..நீங்க பரிதிங்களா….சார் உங்க பொண்டாட்டிக்கு முடியல சார்….”என்று ஒருவரின் குரல் பதட்டமாக கேட்க,
“என்ன இதோ வந்துட்டோம்….எங்க இருக்காங்க….”என்று பரிதியிடமும் கண்ணை காட்ட,அவனுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது,
“என்னடா யாரு….”என்று பதட்டத்துடன் கேட்க,
“டேய் தங்கச்சிக்கு முடியலை வா போகலாம்….”என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.மருத்துவமனையின் உள்ளே இருவரும் நுழையும் போது அவர்களுக்கு அழைத்தவர் இவர்களை அடையாலம் கண்டு கொண்டு அழைத்து சென்றார்.அங்கு பிரசவ அறையில் மிருதுளாவின் சத்தம் கேட்க பரிதிக்கு இதுவரை பிடித்து வைத்திருந்த அனைத்தும் வடிந்தது.மகேஸ்வரன் பரிதியின் எண்ணிலிருந்து திவ்யாவிற்கு அழைத்து தகவல் கூறிவிட்டான்.
பிரசவ அறையில் மிருதுளாவின் சத்தம் அதிகமாக அதிகமாக பரிதியின் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.ஏதோ ஒன்று தன்னை விட்டு தூர செல்லுவது போல மனக்கண்ணில் வர,
“ஏய் சண்டகாரி….வந்துடுடீ….”என்று மனதில் ஜபம் போல கூற தொடங்கிவிட்டான்.மிருதுளாவை பார்த்த மருத்துவர் வெளியில் வந்து,
“அவங்களுக்கு குறிச்ச தேதிக்கு முன்னாடியே வலி வந்திடுச்சி….குழந்தை தலை வேற திரும்பல சிசேரியன் தான் பண்ணும்….”என்று கூற,பரிதிக்கு அவர் பேசுவது ஏதோ புரியாத பாஷையில் பேசுவது போல இருந்தது. மகேஸ்வரனுக்குமே எதுவும் புரியவில்லை அவன் தவித்துக் கொண்டிருக்கும் நேரம்,
“டேய் கண்ணா…நீ எங்கடா இங்க….”என்று வைரத்தின் குரலில் அவரிடம் ஓடியவன்,
“ம்மா…..நீ இங்க வாம்மா…..டாக்டர் ஏதோ சொல்லுறாங்க என்னனு கேளேன்……எனக்கு புரியலை அவன் என்னடானா உயிர் இல்லாதவன் போல இருக்கான்….எனக்கு பயமா இருக்குமா வாம்மா…ப்ளீஸ்….”என்று கலங்கியவாரே அழைக்க வைரம் என்ன ஏது என்று மேலும் துருவாமல் அந்த மருத்துவரிடம் விபரம் கேட்டவர் பரிதியிடம் நெருங்கி,
“அவங்க சொல்லுற இடத்துல கையெழுத்து போடுப்பா….சீக்கிரம்….”என்று கூற பரிதியின் முகத்தில் ஈரப்பசையே இல்லை.அதற்குள் திவியும்,நாயகியும் பதறி அடித்துக் கொண்டு வந்துவிட்டனர்.மகேஸ்வரன் பரிதியை பிடித்து கையெழுத்தை வாங்கி கொடுக்க,பரிதிக்கு கொஞ்சநஞ்சம் இருந்த தைரியமும் போனது போல இடிந்து அமர்ந்துவிட்டான்.எங்கே செல்ல போகிறாள் தன்னிடம் தானே வரவேண்டும் என்று மமதையில் இருந்தவனின் மமதை இருந்த இடம் தெரியவில்லை மனதெங்கும் ஒரே ஜபம் தான் தன்னவள் தன்னிடம் வந்துவிட வேண்டும் என்பது மட்டுமே.