இன்னும் இருள் பிரியாத காலையில் வாசலை திறந்து வெளியே வந்ததும் சிறிய கேட்டில் மாட்டியிருந்த பையில் பால் பாக்கெட்டை வெளியில் எடுத்தான் தரணிதரன்.
“வாசத்தெளிக்காம இந்தம்மா எங்க போச்சு? இந்நேரத்துக்கு வந்திருக்கனுமே?…” என பேசியபடி வெளியே எட்டி பார்த்தான்.
அக்கம்பக்கத்தினர் வீட்டு வாசலில் கோலங்கள் போட ஆரம்பித்திருந்தனர். அதனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் உள்ளே சென்று பால் பாக்கெட்டை வைத்துவிட்டு லுங்கியை மடித்து கட்டியபடி வந்தான்.
வாசலை பரபரவென பெருக்கிவிட்டு வெளியே வீட்டு குழாயில் தண்ணீரை பிடித்தவன் வாசலில் தெளிக்க ஆரம்பிக்க,
“எப்பா தரணி, வந்துட்டேன்ய்யா. என்னத்துக்கு நீ செய்யிற?…” என்றார் அந்த பெண்மணி.
“என்னத்துக்குன்னா? நேரம் என்னாகுது பார்த்தீங்களா? நீங்க நேரமே வந்து வாசல பெருக்கி கோலம் போடுததுக்கு தான் காசு. விடிஞ்ச பொறப்படு வந்தா என்னத்துக்கு?…” என்றான் அவன் மெதுவாய்.
“இந்த குளுருல நடந்து வரமுன்ன நேரமாகி போச்சுப்பா…” என்றவரை முறைப்பாய் பார்த்தான்.
“பொய் சொல்லாதீங்க. இங்க வரதுக்கு முன்னாடி புதுசா ரெண்டு வீட்டுக்கு முடிச்சுட்டு தான் வரீங்கன்னு தெரியும். எதுக்கு இந்த பொய்? உங்களுக்கு ஆகலைன்னா சொல்லிருங்கம்மா. நான் வேற ஆளை வச்சிக்கறேன். சும்மா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்க முடியாது…” என்றான் பட்டென்று.
“அப்படி இல்ல தம்பி. அவங்க நேரமே வர சொன்னாங்க. அதான்…” என்று அவர் தயங்க,
“நானும் தான் நேரமே வர சொன்னேன். இந்த நேரத்துக்கு என்னால முடியாது. எப்பவும் போல சீக்கிரம் வராதா இருந்தா வாங்க. இல்லைன்னா வேண்டாம். எனக்கு ஒத்துவந்தா தான் நான் வேலைக்கு வச்சுக்க முடியும்…” என சொல்ல,
“சரி சரி வரேன். ஆனாலும் நீ இம்புட்டு கறாரா இருக்க கூடாதுப்பா…” என்றவர் அங்கிருந்த கோலமாவு கிண்ணத்தை எடுத்துக்கொண்டார்.
“கோலம் போட்டுட்டு உக்காருங்க. டீ கொண்டுவாரேன்…” என சொல்லிவிட்டு தரணிதரன் உள்ளே சென்றான்.
“ஹ்ம்ம், இந்த பைய போடற டீ ருசில நான் காபியவே மறந்துட்டேன்…” என முணுமுணுத்தபடி கோலத்தை அவர் போட,
“என்ன மங்களத்தம்மா, காலையிலையே தரணிக்கிட்ட பேச்சு வாங்கியாச்சா?…” என பக்கத்து வீட்டில் நின்ற கோகிலா கேலியாய் கேட்க,
“என்னத்த சொல்ல? கொஞ்சமும் எறங்கி வரமாட்டேன்றானே? நல்ல புள்ள தான். ஆனா அடம் பண்ணுறான். இதென்ன பொம்பள பொழங்கற வீடா? நேரமே கோலத்த போடுன்னு நிக்க?…” என அவர் பெருமூச்சு விட,
“பொம்பள பொழங்குதுன்னா உங்களுக்கு இங்க என்ன சோலி இருக்க போகுது? ரெண்டுபேரும் ஆம்பளைங்க. வேற என்ன செய்வாங்க? அதுக்காக தான உங்களை வேலைக்கு அமத்திருக்கான்…” என்றார் கோகிலா.
“அதுவும் சரித்தேன். காலாகாலத்துல ஒரு கலியாணத்த பண்ணுதியானா, அதுவும் நடக்கமாட்டிக்கு. முப்பத்தஞ்சு தாண்டிருக்குமா இந்த பயலுக்கு…” என ரகசியமாக அவர் குரலை சுருக்கியபடி கேட்க,
“கூடிருக்கும். நமக்கென்னத்துக்கு மங்களத்தம்மா? நல்ல பய தான். நல்ல சம்பாத்தியம். ஆனா பொண்ணுன்னு வாரவளுங்க அப்பனை பார்க்கமாட்டேன், ஆசிரமத்துல சேருன்னா எந்த புள்ளை ஒத்துக்கும்? அதுவும் தாய போல அப்பனை பார்த்துக்குது தரணி…” என்ற கோகிலா,
“காத்தாலேயே பாடு பேசி முடியலையாக்கும்?…” என வந்தான் தரணிதரன்.
“என்னப்பா எங்களுக்கு எல்லாம் டீ இல்லையாக்கும்?…” என கோகிலா சிரிப்புடன் கேட்க,
“எல்லாருக்கும் டீ போடனும்ன்னா நான் டீ கடை தான் வைக்கனும். வாங்குன பாலுக்கு அளவா தான போட முடியும்?…” என்று சிரித்தவன் கையிலிருந்த தம்ளரை மங்களத்திடம் தந்தான்.
“குடிச்சிட்டு தம்ளர கழுவி வச்சிட்டு போவனும். அப்படியே வச்சுட்டு போயி நான் வெளில வாரப்ப காஞ்சு கருத்துருது…” என ஒரு கண்டிப்புடன் சொல்ல,
“சரி சாமி…” என்றார் அவரும்.
சொல்லியதோடு சரி. உள்ளே சென்றுவிட்டான் தரணிதரன். அதன் பின்னர் நிற்க நேரமில்லை அவனுக்கு.
தந்தை நடராஜை எழுப்பியவன் அவரை தூக்கிக்கொண்டு குளியலறைக்கு வந்தான்.
“ராத்திரிக்கு சரியா தூங்கலையோ அய்யா?…” என தரணி கேட்க தலையை அசைத்தார் நடராஜ்.
மெல்லிய சிரிப்புடன் மகனிடம் இல்லை என்பதை போல சைகையில் சொல்லியவரின் ஒரு கரங்கள் அவனின் தலையை ஆதரவாய் வருடியது.
சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் கை, கால்கள் செயலிழந்து பேச்சுமின்றி போனது நடராஜிற்கு.
மகனின் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்க ஒரு குழந்தையை விபத்திலிருந்து காப்பாற்ற முயன்றவரை அரசு பேருந்து வீசி எறிந்திருந்தது அந்த குழந்தையுடனே.
அதிலிருந்து அவர் மகனுக்கு குழந்தையாகி போனார். மகனின் திருமணமும் இந்த காரணத்தினால் தடைபட வெகுவாய் சுருண்டுவிட்டார்.
எத்தனை ஆளுமையான நடையுடை கொண்டவர்? தரணிக்கு அவ்வப்போது கண்ணை கரித்துக்கொண்டு வரும்.
ஆனாலும் சமாளித்துக்கொள்வான். பேசப்பட்டிருந்த திருமணம் இதனாலேயே நின்றுவிட அதன்பின் பெண் தர வருபவர்கள் எங்கே நடராஜனை பார்த்துக்கொள்ளவேண்டி வந்துவிடுமோ என மறுத்துவிட்டனர்.
சொந்தத்தில் பெண் தர வந்து நடராஜனை ஆசிரமத்தில் சேர்த்துவிடும்படி அறிவுறுத்தினார் அவனின் மாமா முறையில் இருந்தவர்.
“வாய்ல நல்லா வந்துரும், உங்க சங்காத்தமே வேணாம். என்னமோ ஒவ்வீட்டு மவ வந்து எங்கப்பனுக்கு அள்ளி போடற மாதிரில பேசறீங்க? நாளைக்கு இது உங்களுக்கு நடந்து உங்க மருமக இதை சொன்னா ஏத்துப்பானா உங்க மவன்?…” என எகிறிவிட்டான் தரணிதரன்.
இத்தனைவருடங்கள் கடந்து வயதும் ஏறிவிட திருமணம் பற்றிய கவலைகள் எதையும் தலையில் வைத்துக்கொள்ளவில்லை.
‘இவனுங்க என்னடா எனக்கு வாழ்க்கை குடுக்கறது? ராஜாவாட்டம் இருக்கேன். போவீங்களா’ என அறிவுரை சொல்ல வந்தவர்களையும் அருகில் சேர்த்துக்கொள்ளவில்லை.
இப்போது வரை தந்தையை பிள்ளையாய் பேணி பார்த்துகொள்கிறான் தரணிதரன்.
“அவ்வளோ தான், குளிச்சாச்சு. கொஞ்ச நேரம் சாய்ஞ்சு உக்காருங்க. நான் குடிக்க சத்து காஞ்சி கொண்டு வரேன். அதுக்கு முன்னாடி இந்த சுடுதண்ணியை குடிங்க…” என ஒரு தம்ளர் வெதுவெதுப்பான சுடுநீரை கொடுத்தான்.
“பத்துநிமிஷம் கழிச்சு சாப்பாட்டுக்கு முன்ன போடற மாத்திரை போடனும். டிவி போட்டுவிடறேன். நியூஸ் பாருங்க…” என்று சொல்லி டிவி ஸ்விட்சை போட வெளியில் என்னவோ சத்தம்.
உள்ளிருந்தே தலையை நீட்டி எட்டி பார்த்தான். பெரிதாய் ஒரு லாரி வந்து நின்றிருந்தது.
“எதிர்வீட்டுக்கு ஆள் வந்துட்டாங்க போல?…” என தந்தையிடம் சொல்லியவன் அடுக்களைக்கு சென்றுவிட்டான்.
பரபரவென சமையலை செய்துவிட்டு நடராஜிற்கு சத்து கஞ்சியை போட்டுவிட்டு தானும் குளித்தவன் தன்னுடைய கடையை திறக்க தயாராய் வந்து நின்றான்.
அவருக்கு கஞ்சியை புகட்டிவிட்டு தானும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவன்,
“இந்த நேரத்துக்கு கோபி வந்திருக்கனுமே? எங்க?…” என நேரத்தை பார்த்தபடி இடுப்பில் கைவைத்து நின்றான் தரணிதரன்.
அவன் நினைத்துக்கொண்டிருக்கையிலேயே கோபியும் தன் சைக்கிளை முன் கேட்டினுள் கொண்டுவந்து நிறுத்துவிட்டு வேகமாய் உள்ளேவந்தான்.