“மீரா பார்த்து இறக்கு. சாமி போட்டோலாம் இருக்கு…” என்று உள்ளிருந்து யாரோ சொல்லும் குரல் கேட்க,
“சரிங்க பெரிம்மா…” என்றாள் மீரா.
இதனை எல்லாம் பார்த்தபடியே தரணிதரனும் கிளம்பி சென்றான். அருகில் தான் அவனின் மெடிக்கல் ஷாப்.
கடைக்கு வந்ததும் தாழ்வாக போடப்பட்டிருந்த கூரைபந்தலின் கீழ் பைக்கை நிறுத்திவிட்டு கடையை திறந்தான்.
மங்களம் அவன் வரும் முன்னமே அந்த வாசலையும் பெருக்கி வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தார்.
கடையை திறந்தவன் உள்ளே சுத்தம் செய்துமுடித்து கையை கழுவிவிட்டு வந்து அங்கிருந்த சாமி படங்களுக்கு அகர்பத்தி பொருத்தி சாமியை கும்பிட்டு முடிந்தவன் அதன் பின்னரே இருக்கையில் அமர்ந்தான்.
—————————————————–
பூனேயில் இருந்து வீட்டை கலை செய்து வந்தாகிற்று. எல்லா பொருட்களையும் அங்கங்கே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
வந்ததில் இருந்து ஒருவரும் சாப்பிடவில்லை. நாச்சியாரும், மீராவும் என்ன பொருட்கள் எங்கே என தேடுவதில் இருக்க,
“இன்னும் எவ்வளோ நேரம் அந்த ரவை டப்பா இருக்கற பொட்டிய தேடுவ நாச்சி?…” என்ற பேச்சியம்மாள்,
“நீ போய் அங்கிட்டு ஒக்காரு. முடியாததோட மூச்சு வாங்க என்னத்ததேன் செய்யிவியோ? இழுத்து போட்டு மறுக்கா ஒனக்கு ஆவாம போச்சுன்னா புள்ள தான் கிடந்து அல்லாடுவா…” என நாச்சியாரை தனியே கூட்டிவந்து அமர வைத்தார்.
“ராகவி அந்த டேபிள் ஃபேன தூக்கிட்டு வா…” என பேத்தியிடமும் சத்தம் கொடுத்தவர் அவள் கையில் இன்னும் இருந்த பால் தம்ளரை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
“பால காய்ச்சி எம்புட்டு நேரமாச்சு? வந்த வேகத்துல கரண்டடுப்ப வச்சு காய்ச்சினது? ஆறி அலந்து போச்சு. கையில இருக்கற போன புடுங்கி ஒடைக்கறேன் பாரு….” என கத்தினார் பேத்தியை பார்த்து.
ராகவி அவரின் அதட்டலுக்கு பயந்து கையிலிருந்த போனை வைத்துவிட்டு பாலை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.
“நீ என்ன நின்னுட்டே இருக்க?…” என்ற பேச்சி பாயை எடுத்து விரித்துவிட்டு,
“இங்கினவே ஒக்காரு. இல்லையா கட்டய சாயி. எல்லாத்தையும் நா அடுத்து வெச்சிக்கிடுவேன்…” என நாச்சியாரை அதட்டிவிட்டு ஒற்றை மனுஷியாய் அவ்வளவையும் எடுத்து அடுக்க ஆரம்பித்தார்.
அன்று தான் அந்த ஊருக்கு குடிபெயர்ந்திருந்தனர். மீராவுக்கு அந்த ஊர் அரசு மருத்துவமனையில் பணி மாற்றலாகி இருக்க வந்து சேர்ந்திருந்தனர்.
வாடகைக்கு பிடித்திருந்த வீட்டில் அவர்களின் மொத்த உடமைகளும், சாமான்களும் வந்திறங்கி வீட்டையே நிறைத்திருந்தது.
இன்னும் எந்த பொருள் எங்கே இருக்கிறது என தெரியாமல் தேடிக்கொண்டிருந்தார்கள்.
“என்னோட புக்ஸ் எல்லாம் எங்க வைக்க பாட்டி?…” என்றாள் ராகவி.
“இப்பத்தான வந்து இறங்கிருக்கோம். மொத எல்லாத்தையும் எடுத்து அடுக்கிட்டு அடுத்து அத பாப்போம்…” என்றார் கண்டிப்புடன்.
“சரி…” என்றவள் உடைகள் மட்டுமிருந்த பெட்டிகளை எல்லாம் எடுத்து தனியே வைத்துக்கொண்டிருந்தாள்.
கொண்டுவந்திருந்த நாளிதழ்களை எல்லாம் அலமாரியில் விரித்து எடுத்து வைக்க தயார் செய்ய வெளியே சின்ன கம்பி கேட் திறக்கும் சத்தம்.
“பாட்டி சித்தி வந்துட்டாங்க…” என்றாள் ராகினி. பேச்சியின் மகள் வயிற்று பேத்தி.
“வரட்டும். நீ இந்த அடுப்ப ஒரு கை புடி…” என பேச்சி அதனை தூக்கிக்கொண்டு அடுக்களையில் வைக்க உதவினாள் ராகவி.
“நான் வர வரைக்கும் வெய்ட் பண்ணலாமே பெரிம்மா. என்ன இது?…” என்றாள் மீரா.
அவள் கையிலிருந்த பொருட்களை பார்த்தவர் பேச்சி அதனை வாங்கி அடுப்பு மேடையில் பிரித்தார்.
“ரவை தான் இருக்குல. அதை முதல்ல காலி பண்ணிட்டு வாங்கிருக்கலாம்…” என்று முறைப்பாய் பார்க்க,
“இந்த கூட்டத்துல எதுல வச்சோம்ன்னு தேடுவீங்க? பாதி பேக்கேஜ் பிரிஞ்சிருக்குன்னு மாத்தி மாத்தி அள்ளி போட்டிருக்கானுங்க…” என சலித்தபடி குப்பையாய் கொண்டுவந்து குமித்திருந்தவற்றை பார்த்தாள் மீரா.
“கூட ஆயிரம் போவுதுன்னு நல்ல வண்டியாவே பாத்து புடிச்சிருக்கலாம். தெரிஞ்சவருன்னு அவர் சொன்ன வண்டிய புடிச்சு சாமானுங்களை ஏத்திவிட்டதுக்கு தேவை தான்…” என்றவர்,
“சரி நீ போய் மத்ததை பிரி. நான் சட்டுன்னு ரவையை கிண்டி வைக்கறேன். சாப்பிடுவோம்…” என்றார் பேச்சியம்மாள்.
———————————————————-
மெடிக்கல் ஷாப்பில் கூட்டமின்றி இருக்க இருக்கும் மருந்துகளின் தேதிகளை எல்லாம் சரிபார்த்துக்கொண்டிருந்தான் தரணிதரன்.
“ரெண்டு டோலோவும், ரெண்டு சிட்ரிசினும் குடுங்க…” என்றவளின் குரலில் திரும்பி பார்த்தவன் சட்டென அடையாளம் கண்டுகொண்டான் அவளை.
அன்று காலை தான் எதிர்வீட்டில் புதிதாய் குடியேறி வந்திருந்த வீட்டின் பெண் என்று.
ஒரு நொடிதான் அவனின் பார்வையும் ஆராய்ச்சியும். மீராவின் கையை பார்க்க அதில் பணம் மட்டுமே இருந்தது.
“மருந்து சீட்டு இல்லாம மாத்திரை தரதில்லைங்க…” என கறாராக அவன் சொல்ல,
“இது காய்ச்சலுக்கு தானே?…” என்ற மீராவிடம்,
“எதுக்கானா என்ன? இப்ப மாத்திரைகளை எதுக்கெல்லாம் யூஸ் பன்றாங்கன்னு யார் கண்டா?…” என கேட்டு வைக்க மீராவின் முகத்தில் திகைப்பு.
“இல்லைங்க, என்னோட அம்மாவுக்கு காய்ச்சல். நாங்க இன்னைக்கு தான் இந்த தெருவுல குடிவந்திருக்கோம். மெடிஸின் பாக்ஸ் மிஸ்ஸாகிடுச்சு. அதான் அவசரமா வேணும்…” என்றவள்,
“நான் ஒரு டாக்டர். இங்க கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ண போறேன்…” என்றவளை இன்னும் யோசனையுடன் அவன் பார்த்தான்.
“என்னோட ஐடி காமிக்கனுமா?…” என அப்போதும் கோபமில்லாமல் அயர்ச்சியாய் அவள் கேட்டுவைத்து,
“நம்பலைன்னா நான் இப்பவே வீட்டுக்கு போய் என்னோட ஐடெண்டி கார்ட் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி திரும்ப,
“அட நில்லுங்க…” என்றான் தரணிதரன்.
“அதெல்லாம் வேண்டாம். மாத்திரை தரேன்…” என சொல்லி எடுத்து தந்து பணத்தையும் வாங்கிக்கொண்டான்.
“இப்ப மட்டும் எப்படி தரீங்க? நான் ஐடி கார்ட் எடுத்துட்டு வரேன்னு சொன்னதாலவா?…” என்றாள் மீரா.
“உங்க ஐடி கார்டை வேணும்னா நான் வீட்டுக்கே வந்து பார்த்துக்கறேன். காலையிலையே பார்த்தேன் உங்களை. எங்க எதிர்வீட்டுக்கு தான் நீங்க குடி வந்திருக்கீங்க….” என தரணிதரன் சொல்ல அதுவரை இல்லாத கோபம் மீராவின் முகத்தில்.
“எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான். இந்த காலத்துல யாரையும் நம்பக்கூடாதுல…” என சொல்லியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு இறங்கி வீடு சென்றுவிட்டாள் மீரா.
“யப்பா ரொம்பத்தான்…” என்று அலட்சியமாக சொல்லியவன் செல்லும் அவளை தான் பார்த்திருந்தான்.
மாத்திரையை வாங்கிக்கொண்டு வந்த மீரா முதலில் தாயை சாப்பிட வைத்து மாத்திரை போட வைத்து இன்னொரு தனி அறையில் அவரை படுக்க வைத்துவிட்டாள்.
“எழுந்துக்காதீங்கம்மா. பேசாம தூங்குங்க. இவ்வளோ நேரம் ட்ராவல் பண்ணினது எல்லாம் உங்களுக்கு முடியலை. இதோட இந்த வேலையையும் பார்க்காதீங்க….” என சோர்வுடன் சொல்ல நாச்சியாருக்கு கண்ணீர் பொங்கியது.
மகளிடம் காண்பிக்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு தலையை மட்டுமே அசைத்தார் அவர்.
“சரி கதவை சாத்தி வச்சிருக்கேன். நான் வேலையை எல்லாம் முடிச்சிட்டு வரேன்…” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல தாயாய் பரிதவிப்புடன் படுத்திருந்தார்.
முத்து முத்தாய் அழகு சித்திரமாய் இரு மகள்களை பெற்றும் ஒன்றுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை, மற்றொன்றிற்கு சந்தோஷமாய் வாழவே கொடுத்து வைக்கவில்லை.
பாவங்கள் சேருமிடம் பிள்ளைகளில் தான் என்பதை வலியுடன் உணர்ந்துகொண்டவர்,
“அஜிம்மா, தெரியாம மீரா பண்ணின தப்புக்கு அவ நிறையவே அனுபவிச்சிட்டா. இனியாவது அவளுக்கு நிம்மதியை குடுத்து நீ தான் தெய்வமா இருந்து உன் தங்கச்சிக்கு ஒரு நல்ல வழியை காமிக்கனும் சாமி…” என உதடுகள் நடுங்க மூத்த மகளின் பெயரை சொல்லி வேண்டிக்கொண்டார்.
அங்கே துடைத்து வைக்கப்படிருந்த புகைப்படத்தில் மகள்கள் அஜிதாவும் மீராவும் புன்னகையுடன் இருந்தனர்.
இறைவனின் காலடி சேர இருள் விலகும் வரை சில வேண்டுதல்கள் எல்லாம் வேண்டுதல்களாக மட்டுமே நிலைபெற்றுவிடும்.