“ஆஆஆ ண்ணா ப்ப்ப்ப்போ….” என்று தன் கழுத்தை வளைத்துக்கொண்டு ஆக்ரோஷமாய் பேச முயன்றாள் மகாலட்சுமி.
“சரோஜாக்கா வெளில வர போறீங்களா இல்லையா?…” என அவன் தட்ட தெருவில் இருந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தனர்.
சிலநொடிகள் கழித்தே கதவு திறக்கப்பட்டது அங்கே. உடலில் உயிர் என்று ஒன்று இருப்பதை அவரின் அசைவுகள் மட்டுமே காண்பிக்கும்.
அத்தனை மெலிவாய், ஒடிசலாய் சதைப்பற்றின்றி கழுத்து நரம்புகள் வெளியே தெரியும் அளவிற்கு இருந்தார் சரோஜா.
எதுவும் பேசாமல் வந்து நின்றவரை பார்த்தவனின் கோபம் தணிந்து ஆதங்கமும், மனவேதனையும் தான் கூடியது.
“எனக்கு ஒரு உதவி செய்யனும். வர முடியுமா?…” என்றான் தன் தொண்டையை செருமிக்கொண்டே.
ஐந்து வருடங்களாகிற்று அவன் அவருடன் பேசி. இல்லை, சரோஜா யாரிடமும் பேசி ஐந்து வருடங்களாகிற்று.
“மகாம்மா, அம்மாவோட நீ இல்லையா பாப்பா?…” என்று துணிகள் சுற்றப்பட்டு மூட்டையாய் கொடுப்பப்பட்ட மகளின் முகத்தை அதற்குள் தேடி தடவியபடி மூர்ச்சையாகியவர் தான்.
நடைபிணம் இப்பொழுது. அந்த இழப்பில் இருந்து அவரை யாராலும் மீட்க முடியவில்லை.
சொந்தங்களும் வந்து பார்த்து, அழைத்துவிட்டு சென்றுவிட்டனர். மகளோடு அவர் வாழ்ந்த அந்த வீட்டின் அச்சுக்கள் எதுவும் மாறாமல் இன்றும் மகளுடன் நினைவாய் ஒரு வாழ்க்கை.
அரூபமாய் தன்னை சுற்றிக்கொண்டே இருக்கும் மகளை உணர முடியாமல் அவளை காற்றில் தேடி அந்த சுவாசத்தை உணர துடித்து அந்த ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டிருக்கின்றது.
இப்போதும் தரணிதரன் அழைக்க சரோஜா எதுவும் பேசாமல் கேள்வியாய் பார்த்தார் அவனை.
அவர்களுக்கு நடுவில் வந்து நின்ற மகாலட்சுமி தரணிதரனை பயமுறுத்த முயன்று முடியாமல் கண்ணீர் வடித்து கெஞ்சுதலாய் பார்த்தது.
மனம் இளகவில்லை அவன். உயிர் பிரிந்து ஊசலாடிக்கொண்டிருப்பவளை விட இப்போது போராடிக்கொண்டிருக்கும் மீராவை காப்பதே முதன்மையாக பட்டது அவனுக்கு.
“எதிர்வீட்டு பொண்ணுக்கு ரொம்ப முடியலை. பாவம் வேற யாருமே இங்க உதவ வரலை. ப்ளீஸ் அக்கா, நீங்க வந்து துணைக்கு இருங்களேன். இங்க இந்த தெருவுல எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுதுங்க…” என்றான் தரணிதரன்.
சரோஜாவிற்கு தெரியுமே அங்கிருப்பவர்களை பற்றி. தனியாக தான் தன் பெண்ணை வளர்ப்பதற்கே எத்தனை பேச்சுக்கள்?
ஆனாலும் அவர் மௌனமாய் நின்று கதவை அடைக்க போக தரணிதரன் விடவில்லை.
“தகப்பன் இல்லாத பொண்ணுக்கா அங்க ரெண்டுபேருமே. வேற யாரும் ஆம்பளை துணை இல்லை. இங்க ரொம்ப அசிங்கமா பேசறாங்க. அந்த ராகவி பொண்ணு கூட நம்ம மகா மாதிரியே இருக்கு….” என்று சொல்லவும் சரோஜாவின் விழிகளில் மழுக்கென்று கண்ணீர்.
“கொஞ்சம் வந்து கூட மட்டும் இருங்கக்கா. வாங்க…” என்றவன் எங்கே கதவடைத்து உள்ளே சென்றுவிடுவாரோ என்று சரோஜாவின் கையை பிடித்தே அழைத்து சென்றுவிட்டான்.
“தரணி…” என்றவரின் அதட்டல் குரல்.
எத்தனை வருடமாகிற்று அவர் அழைத்து. உள்ளம் நொறுங்க பார்த்தவன் நிற்கவே இல்லை.
மீராவின் வீட்டிற்குள் அழைத்து வந்துவிட கோகிலா இதை எதிர்பார்க்கவே இல்லை.
“கூடவே இருக்கட்டும் கோகிலாக்கா. நான் வெளில இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு மீராவை பார்த்தான்.
“நீங்க தைரியமா இருங்க மீரா. நாங்க இத்தனை பேர் இருக்கோம். எதுவுமாகாது…” என்று சொல்லியவன் வெளியே வந்து அவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்துவிட்டான்.
மனிதர்கள் என்றால் எதிர்த்து நின்று என்னவென்று கேட்கலாம். ஆனால் இங்கே என்ன நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்றே தெரியாமல் என்ன செய்துவிட முடியும்?
மகாலட்சுமி தனக்கு அருகில் நின்று கோர முகம் காண்பிப்பதை கண்டு உள்ளம் நடுங்கினாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவன்.
சரோஜாவை அழைத்து செல்லும்பொழுது அவரின் கையை பிடிக்க முயன்றாளே மகா.
“நான் சொல்றேன்னு நினைச்சுக்காதீங்கக்கா. நீங்க அந்த சாமியார்கிட்ட பேசின வரை போதும். இனி நாங்க பார்த்துக்கறோம். நீங்க உதவறோம்ன்னு நின்னு உங்களுக்கு எதுவும்ன்னா இன்னும் மனசுக்கு வேதனையா போயிரும்…” என தரணிதரன்.
“பயமா தான் இருக்கு. அதுக்குன்னு அப்படியே விட்டுட்டு போறதா? நாளைக்கு கோவிலுக்கு போற வரைக்கும் போவோம்…” என்று சொல்ல உள்ளே சரோஜா ராகவியை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.
மீரா சரோஜாவை பார்த்தபடியே இருந்தாள். மகாவின் உருவம் அப்படியே இருந்தது அவரிடம்.
தாயை போல பெண் என நினைத்தவளுக்கு வேதனை சரோஜாவின் இந்த நிலை கண்டு.
வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க பேச்சிக்கும், நாச்சியாருக்கும் கூட ஏன் எதற்கு என புரியவில்லை.
மீராவின் நடுக்கம் கொஞ்சம் குறைந்திருக்க தரணிதரன் கோகிலாவுடன் உள்ளே வந்தான்.