“எனக்கு எதுவுமே புரியலை. இப்ப எதுக்கு தரணி என்னை இங்க கூட்டிட்டு வரனும். எனக்கு என்னென்னவோ தோணுதே?…” என்றவர் மீராவும், தரணியும் தங்கள் வீட்டு திண்ணையை பார்த்திருக்க,
“அங்க என்ன? என் பொண்ணு இருக்காளா? இருக்காளா அங்க?…” என்று அங்கே செல்ல முயன்றார் சரோஜா.
“இரும்மா, நான் சொல்றதை நீ பொறுமையா கேளு…” என்றவர் பேசும்முன் தரணிதரன் மகாவின் பீதியில் உறைந்த விழிகள் செல்லும் திசையை கண்டு,
“நீங்க வீட்டுக்குள்ள போங்க. நான் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன்…” என கைலியை மடித்துக்கொண்டு வேக நடையிட்டு செல்ல சரோஜாவை உள்ளே அழைத்து வந்தனர் மீராவும், கோகிலாவும்.
மெல்ல விஷயத்தை மீரா சொல்ல சொல்ல சரோஜாவால் நம்பவே முடியவில்லை.
“ஐயோ, என் பொண்ணு இங்கயே இருந்திருக்கா, எனக்கு தெரியலையே. தெரியலையே….” என முகத்தில் அடித்துக்கொண்டவர் வீட்டிலிருந்து வெளியேறி திண்ணைக்கு ஓட மகாவும் தாயை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
“மகாம்மா, அம்மாவை பாருடா. மகா அம்மா கைக்குள்ள வாயேன். எங்கடா இருக்க? மகா. அம்மாவை தொட்டு பாரேன். அம்மாடி, மகா…” என்று காற்றில் கைகளால் துழாவ அவரின் தொடுகையை உணரமுடியாத அரூபத்தில் அலைந்த கைகளை பிடிக்க முயன்று கண்ணீரில் கரைந்தனர் இருவருமே.
“மகாவால அவங்கம்மாவை தொட முடியலை கோகிலாக்கா. அவ அழறா….” என மீரா சொல்ல கோகிலாவுக்குமே தாளமுடியவில்லை.
“உங்களை வீட்டுல தான இருக்க சொன்னேன்? இங்க என்ன?…” என்றபடி வந்தவன் பார்த்த காட்சி அவனின் உயிரை உலுக்கிவிட்டது.
சரோஜாவை அமைதிப்படுத்தவே முடியவில்லை. அடிவயிற்றை பற்றியபடி கதறிய அவரின் கதறல் மூவரின் கண்ணிலும் நீரை வார்த்தது.
‘என் பொண்ணு என் மடில வரமாட்டாளா? என் பொண்ணு. என் சாமி’ என சொல்லி சொல்லியே மயங்கியிருந்தார் சரோஜா.
“அங்க யார் இருந்தாங்க தரணி? வேகமா போனியே?…” கோகிலா கேட்க,
“எந்த விளக்குக்கும் வெளிச்சமூட்ட பல விஷயங்கள் தேவைப்படும். விளக்கு, எண்ணெய், திரி, அதை ஏற்ற இரு கரங்கள். அப்படித்தான் எல்லாத்துக்கும் காலநேரங்கள் அவசியப்படுது….” என்றார் அவர் மீராவிடம்.
“இப்போ நீ இந்த ஊருக்கு வந்த மாதிரி. இங்க நடக்க போறது உன் மத்தில இருக்கறது மாதிரி. இதன் காரணியான உயிர் உன் உறவுல வளர்ந்த மாதிரி. அது வெல்லுமா, கொல்லுமா? என் தாய் அவள் மட்டுமே அறியக்கூடிய ரகசியம்….” என்றார் அவர் மீராவிடம்.
“மீரா இரு புள்ள. அவர் என்னமோ சொல்றாரே. எனக்கு என்னன்னு வெளங்கலை. ஏற்கனவே வர வழில கோகிலா சொன்னதுலையே எனக்கு கிறுகிறுத்து போச்சு…” என்றார் பேச்சி.
“அமைதியா இருங்கம்மா…” என்ற தரணிதரன்,
“சாமி நாங்க சாதாரண மனுஷங்க. எல்லாமே எங்க சக்திக்கு மேல நடக்குது. அது என்ன சக்தின்னு தான் எங்களுக்கு தெரியலை. எங்க பக்கத்துவீட்டு பொண்ணு மகாலட்சுமி…” என்று சொல்லியவனை பார்த்து புன்னகைத்து தலையசைத்தவர்,
“சிறு மொட்டு ஒன்று துர்மரணம் அடைஞ்சு இப்பவும் ஆத்மா சாந்திகொள்ளாமல் அலைபாயுது. அதன் நோக்கம் நிறைவேறாமல் இந்த உலகை விட்டு போகாது…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன்,
“ஆனா அந்த சக்தி என் தாய் பாதத்தில் சேருமா, இல்லை அழிக்கப்பட்டவர்களோட பாவங்களோட கலந்துவிடுமான்றது தான் அறியாத விஷயம்….” என்றார் அவர்.
“எங்களுக்கு புரியலை. எங்களை சுத்தி என்ன நடக்குது. ப்ளீஸ், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணைன்னு சொல்லுவாங்க. இப்ப எங்களுக்கு அந்த தெய்வம் துணை நிற்குமா? எல்லா சக்தியும் இழந்து நிராதரவா வாழ்ந்துட்டு இருக்கோம்…” என மீரா கதற,
“நடந்த விஷயங்கள் நீங்கள் அறியவேண்டிய சமயம் இதுதான். ஆனால்…” என்றவர் முகம் மீண்டும் வேதனையானது மீராவையும், பேச்சியையும் பார்த்து.
“நாங்க தெரிஞ்சுக்கனும் சாமி. எங்களுக்கு உதவுங்க. மகா என்ன சொல்ல வரான்னு எங்களுக்கு தெரியனும்…” என்றவளின் கை கூப்பிய கண்ணீர் வேண்டுகோளை அவரால் மீற முடியாதே.
“இதுதான் விதிக்கப்பட்டது. அதற்கு முன் எல்லோரும் அற்ப மானிடர்கள் தானே?…” என்றவருக்கு அடுத்து நடக்கவிருக்கும் விபரீதமும் கண்களில் படமாய் விரிய அதை தடுக்கும் முயலவில்லை.
நடக்கவேண்டியது நடேந்தேறினால் தான் விடிவும், முடிவும். கோள்கள் வேறு திசையில் சுழல ஆரம்பிக்க கண்ணை மூடியவரின் மந்திர உச்சாடனங்கள் அங்கே மகாலட்சுமியை வளைத்து அழைக்க ஆரம்பித்தது.
“ம்மாஹ்ஹ்ஹ்ஹ்…” என்றவளின் கழுத்தின் வளைவு இருக்கப்படுவதை போலிருக்க அவளை சுற்றிலும் மந்திர கம்பிகள்.
மகள் படும் அவஸ்தை தெரியாமலே அவளின் தாய் அங்கே அந்த திண்ணையை வருடிக்கொண்டே அமர்ந்திருந்தார்.
விடாமல் ‘மகாம்மா, மகாம்மா’ என மகளை அழைத்துக்கொண்டே இருந்தார் அவளை ஒருமுறை பார்த்துவிடமாட்டோமா என்று.
மகாலட்சுமியின் ஆத்மாவை மொத்தமாய் மந்திரங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க விழிகள் வெளிவரும் அளவிற்கு அவள் திமிற முயன்றாள்.
ஒவ்வொரு அசைவுகளிலும் தாயையும், எதிர்வீட்டையும் பார்த்தபடி தன்னை விட்டுவிட கெஞ்சியவள் ஆத்மா விளக்காய் உருமாறி அந்த வீதியை விட்டு கடந்தது கதறலுடன்.
ஸ்ரீசக்திவித்யாதரன் முன்னே மகாலட்சுமியின் பனிசிற்பம் உருவமெடுக்க அங்கே ராகவி தன் கையில் போனுடன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.
“அந்த பொண்ணோட குருதி இந்த மண்ணுல சிந்தாம கொண்டுட்டு வாங்க…” என்ற குரலில் துர்வேதங்கள் ராகவியை சூழ்ந்துகொண்டது.
“இனி எல்லாம் விதிவசம் மகளே…” என்றார் ஸ்ரீசக்திவித்யாதரன் மீராவிடம்.
தீப்பந்தமொன்று தீயவைகளை அழிக்க சக்தியான ஜோதியை தீண்ட ஆரம்பித்திருந்தது.