அந்த இடத்திலிருந்து வெளியே வந்தவர்களை முதலில் மீராவின் வீட்டிற்கு அழைத்து சென்றான் தரணிதரன்.
“இந்த பொண்ணோட ஆன்மா வெளிய போனா அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போயிரும். நமக்கிருக்கற ஒரே துருப்பு சீட்டும் இல்லாம போயிடக்கூடாது. எதோ ஒரு விதத்துல மகா இங்க தான் இருக்கனும்…” என்று சொல்லிவிட்டார் ஸ்ரீசக்திவித்யாதரன்.
“அந்த பொண்ணு வந்தாளாச்சும் எதாச்சும் பார்க்கலாம்ன்னா அதுக்கும் வேணாங்கறீங்க சாமி. அங்க என் பேத்தி என்ன பாடு படறாளோ?…” என பேச்சி தவிக்க,
“உங்களுக்கு புரியலைம்மா. இந்த பொண்ணு மகாலட்சுமி அவங்களோட மந்திரக்கட்டுக்குள்ள இருந்து தப்பிச்சு வெளில வந்திருக்கு. இந்த ஆன்மாவுக்கான வீரியம் இப்ப அதிகம். அது திரும்பவும் அவங்க கவனிப்புக்குள்ள போயிட்டா நம்ம கைமீறி எல்லாம் போகக்கூடிய அபாயம் இருக்கு…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன்,
“இத்தனை வருஷம் இந்த பொண்ணோட ஆன்மாவை அவங்க எப்படி விட்டுவச்சாங்கன்னு தெரியலை. ஒருவேளை இந்த பொண்ணு தப்பி வந்ததோட இப்படி ஆன்மாவா இருக்கறதை அவங்க கவனிக்காமலும் இருந்திருக்கலாம். இல்லை அதை கவனிச்சு அவங்களுக்கு தேவைப்படற நேரம் அவங்க கட்டுக்குள்ள கொண்டுவர காத்திருந்திருக்கலாம்….” என்றார்.
“அப்போ மகாவால அவங்களுக்கு பலம்ன்னா நமக்கு மகா இப்போ உதவ முடியாதா?…” மீரா வேகமாய் கேட்டாள்.
“அப்படியான சூழ்நிலை இருந்தா இத்தனை நேரத்துக்கு அந்த பொண்ணு காட்டி குடுத்திருக்கும். என்ன நடக்க போகுதுன்றதை தெரிஞ்சுக்கற சக்தி அவங்களுக்கு இருந்தாலும் அதை தடுக்க கூடிய முழுபலம் அந்த ஆன்மாவுக்கு இல்லை…” என ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்ல மகாவின் விசும்பல் அதிகமானது.
“நீங்க கிளம்புங்க. தாமதிக்கிற ஒவ்வொரு நேரமும் நமக்கு இழப்பு தான்….” என அவர்களை உடனே கிளப்பிவிட்டார் அவர்.
எங்கிருந்து எதிலிருந்து ஆரம்பிப்பது என மீரா தலைசுற்றி போய் நிற்க வீடு வந்ததும் முதலில் சரோஜாவை அழைத்தான் தரணிதரன்.
திண்ணையை விட்டு அசைவேனா என்பதை போல அமர்ந்திருந்த சரோஜாவை யார் சொல்லியும் வரவழைக்க முடியவில்லை.
“மகா இந்த வீட்டுக்குள்ள தான் இருக்கா. நீங்க உங்க பொண்ணை விட்டு வெளில போகாதீங்க. கூடவே இருங்க…” என்று மீரா சொல்லவும் தான் சரோஜாவின் முகம் தெளிந்தது.
“உள்ளயா இருக்கா? இங்கயா? இங்க உக்கார்ந்திருக்காளா?…” என அந்த வீட்டினுள் நுழைந்தவர் ஒவ்வொரு இடமாய் காண்பித்து கேட்க மீராவின் விழிகள் கலங்கிவிட்டது.
தொண்டையை கவ்வி பிடிக்கும் துயரத்தை விழுங்கிக்கொண்ட மீரா தன்னை மீட்டுக்கொண்டு,
“இங்க தான் இருக்கா. எங்கயும் போகமாட்டா. உட்காருங்க…” என்று சொல்ல,
“உனக்கு தெரியறாளா? என்ன ட்ரெஸ் போட்டிருக்கா என் பொண்ணு? எப்படி இருக்கா? எனக்கும் பார்க்கனும். எப்போ பார்க்க? கேளேன். கேட்டு சொல்லேன்…” என்று மீரா காண்பித்த இடத்திற்கும், மீராவிற்குமாய் அவர் அங்குமிங்கும் அலைபாய,
“ம்மா ப்ளீஸ்…” என்ற மீரா அவரை அணைத்துக்கொண்டாள் தாளமாட்டாத துக்கத்துடன்.
‘என்ன உலகம் இது? தங்களின் சுயலாபத்திற்காக இப்படி சின்னஞ்சிறு உயிர்களை பலி கொடுக்கிறார்களே?’ என ஆத்திரமாய் இருந்தது.
“என்னம்மா? என்ன அழற? எனக்கு தான் அழுகை. நான் அழனும். என்ன பாவம் பண்ணேனோ என் பொண்ணு என் கண்ணுக்கு தெரியலையே. எனக்கு அவளை தவிர வேற யாருமில்லையே…” என்ற சரோஜா மீராவின் பிடியிலிருந்து விலகி,
“இங்கயா, இங்க தான இருக்கா?…” என அமர்ந்துகொண்டார் மீரா சொல்லிய இடத்தில்.
“எனக்கு தெரிய வேண்டாம். ஆனா என் மடில சாய்ஞ்சுக்க சொல்றியாம்மா? சொல்லேன்…” என்று கை கூப்பி கெஞ்சி கேட்டு,
“மகா அம்மா மடிக்கு வாடாம்மா. எங்கம்மால. வாம்மா. அம்மா அமடில படுத்துக்கோயேன்….” என்று இல்லாத வெற்றிடத்தை அவர் தடவ,
“சரோஜா என்ன பன்ற நீ?…” என்றார் கோகிலா அவரின் அருகில் அமர்ந்து.
“எனக்கு என் வயிறு என்னவோ பண்ணுது. ரொம்ப கனமா சுமக்கவே முடியாத மாதிரி என்னவோ செய்யுதே? என் பொண்ண சுமக்கும் போது அவளை எப்படி வளர்க்கனும்ன்னு எவ்வளவு கனவு. என் புருஷன் இறக்கவும் என் பொண்ண அவ விருப்பப்படி படிக்க வச்சு ஆளாக்கனும்ன்னு எவ்வளவு ஆசை தெரியுமா?…” என்ற சரோஜா,
“ஆனா எரியுதே. என் பெத்த வயிறு எரியுதே. என் புள்ளைய துள்ள துடிக்க வாரி குடுத்துட்டு இப்படி பைத்தியக்காரி மாதிரி கிடக்கேனே. என் உசுரும் அன்னைக்கே என் புள்ளையோட போயிருந்தா நிம்மதியா இருந்திருப்பேனோ?…” என பெருங்குரலெடுத்து அவர் அழ ஆரம்பித்துவிட்டார்.
யாராலும் சமாதானம் செய்யவே முடியவில்லை. நாச்சியார் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தார்.
ராகவியை காணவில்லை என்று பேச்சி வந்ததுமே நாச்சியாரை பிடித்துக்கொண்டு அழுது தீர்த்திருக்க, தான் கேட்ட விஷயங்கள் உண்மையா என நம்ப முடியாமலும், பேத்தியை தேடியும் அவர் அரை உயிராகி போயிருக்க இப்போது சரோஜாவின் இந்த கண்ணீர் அவரை வாட்டியது.
தன் பெண்ணையும் பறிகொடுத்துவிட்டு இப்படித்தானே தானும் துடித்தோம் என மகள் அஜிதாவின் நினைவில் நாச்சியார் மறுகிக்கொண்டிருந்தார்.
“என் புள்ளையை கொன்னுட்டு அவன் எங்கையோ நல்லா வாழ்ந்துட்டு இருக்கான்னு நினைக்கும் போதே என் நெஞ்செல்லாம் எரியுதே? இப்ப என் புள்ளை சாந்தியடையாம இருக்காளே. என்னால தாங்க முடியலையே…” என சொல்லி சொல்லி அழுத சரோஜா ஒருகட்டத்தில் மயங்கிவிட,
“தரணி முதல்ல நீங்க கிளம்புங்க. போகும் போது போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு போங்க…” என்ற கோகிலா மீராவை பார்க்க,
“ராகவி போட்டோ எடுத்துட்டு வரேன்…” என அவள் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
ராகவியின் போட்டோவை எடுத்துக்கொண்ட மீரா அலமாரியை அடைக்கவும் அதன் அருகில் மாட்டப்பட்டிருந்த அஜிதாவின் புகைப்படம் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.
கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. வார்த்தைகள் எதுவும் வராமல் பரிதவிப்பான பார்வையும், அலைமோதும் நெஞ்சமுமாய் தன் அக்காவின் புகைப்படத்தையே பார்த்தாள்.
“என்னால முடியலைக்கா. இன்னும் என்னென்ன எல்லாம் இருக்கு எங்களுக்கு? ஒடிஞ்சு போயிருவேனோன்னு பயமா இருக்குக்கா. மன்னிச்சிரு ப்ளீஸ், மன்னிச்சிரு…” என்றவள் மெல்லிய குரல் கேவலாக வெடிக்க வெளியில் நின்றிருந்த பேச்சியும், தரணிதரனும் உள்ளே சென்றனர்.
இத்தனை வருடத்தில் அனைத்தையும் மனதிற்குள் வைத்துக்கொள்வாளே தவிர இப்படி சத்தமிட்டு அழுததில்லை அவள்.
அதிலும் குடும்பத்திலிருந்து மொத்தமாய் வெட்டிக்கொண்டு வந்த பின்பு எப்போதாவது கண்கள் கலங்கும். ஆனாலும் தங்களுக்காகவே காண்பித்துக்கொள்ள மாட்டாள்.
இன்று மொத்தமாய் அவள் உடைந்து போய் அழுவதை காண அவராலே முடியவில்லை.
“நீயே அழுதா எப்படிம்மா?…” என பேச்சி அவளை தாங்கி பிடிக்க,
“அழாம? என்னாமா சுத்தமா முடியலை பெரிம்மா. எங்கையாவது இல்லாம போயிட்டா பரவாயில்லையோன்னு தோணுது. ஒரு அக்காவோட பொண்ணை அம்மா இல்லாம பண்ணிட்டேன். இப்ப இன்னொரு அக்காவோட பொண்ணையே தொலைச்சிட்டு நிக்கறேன். எல்லாம் நான் பண்ணின பாவம் தானே?…” என முகத்தில் அறைந்துகொண்டு மீரா அழ,
“இல்லடா கண்ணு. என்னத்துக்குடா இப்படிலாம் பேசற? மீராம்மா. நீ ஒன்னும் பண்ணலைடா…” என பேச்சி அவளின் கன்னம் தட்டி சொல்ல மங்களத்திற்கு அங்கிருந்த ஒருசில நாட்களிலேயே நாச்சியார் மூலமாக விஷயம் தெரிந்திருந்தது.
பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தவர்கள் மேல் இரக்கத்துடன் பார்வையை பதித்திருந்தார்.
‘தனக்கு யாருமில்லை. இவர்களுக்கு எல்லாம் இருந்தும் இல்லாத நிலை’ இப்படித்தான் நினைக்க முடிந்தது அவரால்.
“அஜிக்காவும் இப்படித்தானே அன்னைக்கு அழுதிருப்பா. துடிச்சிருப்பா. தன் பொண்ணுக்கு இனி தான் இல்லாம போக போறோமேன்னு. அந்த கண்ணீர் இப்ப வரைக்கும் நம்மளை விடலை. இதுக்கு விமோச்சனமே இல்லை பெரிம்மா…” என கரைந்து தீர்க்க,
“மீரா, நமக்கு நேரமில்லை. அழவும் உங்களுக்கு டைமில்லை. எழுந்திரிங்க…” என்ற தரணிதரன் சத்தத்தில் கண்ணீருடன் அவள் நிமிர்ந்து பார்க்க அவன் மனதிநோரம் ஒருவித பாரம் சூழ்ந்தது.
எப்போதும் அவள் முகத்தில் சிறு சோகம் இழையோடும் தான். ஆனால் இன்று எல்லாவற்றிகும் மேலான இந்த கதறல் அவனின் மனதை அசைத்தது.
“சரியாகிடும். கண்டுபிடிச்சிடலாம். வாங்க…” என்றான் மீண்டும் மனதை சமன் செய்துகொண்டு.
“அதான் தம்பி சொல்லுதுல. எழுந்திரி. அஜிதா நம்ம கூடவே தான் இருப்பா. உன்னோட அக்காவுக்கு நம்மளை தண்டிக்கவெல்லாம் தெரியாது. அதுவும் தப்பு பண்ணாதவங்களை அஜிதா காயப்படுத்த நினைக்கமாட்டா….” என்ற பேச்சி தன் முந்தானையால் அவளின் முகத்தை துடைத்துவிட்டு,
“நீ தைரியமா போ. என் தாய் மீனாட்சியும் உனக்கு காவலா இருப்பா…” என்றவர் சாமி படத்தின் முன்னிருந்த குங்குமத்தை மகளின் நெற்றியிலும் தரணிதரன் நெற்றியிலும் பூசியவர்,
“இதை கையில வச்சுக்கோ மீரா. பாதுகாப்பா இருக்கும்…” என்று ஒரு எலுமிச்சை பழத்தை அவளின் கையில் தந்தார்.
“அட என்னம்மா நீங்க? இப்படியா குடுக்கறது? சாமிக்கிட்ட வச்சு குங்குமத்தோட சேர்த்து முந்தில முடிச்சு போடுவீங்களா?…” என்று சொல்லியபடி மங்களம் அதை மீராவின் புடவை முனையில் முடிச்சிட்டார்.