“நீ போய்ட்டு வா டாக்டரே. நான் இங்கனவே இருக்கேன்….” என்று சொல்லிய மங்களம்,
“பாப்பா போட்டோவ நா சொல்லுத நம்பருக்கு அனுப்பு. என் வீட்டுக்கிட்ட இருக்கற மக்க, மனுசங்க கண்ணுல பாத்திருந்தாகன்னா…” என்று கேட்டு போட்டோவை ஒரு எண்ணை சொல்லி அனுப்ப சொல்லியவர் உடனே தன் கையடக்க போனில் இருந்து அவருக்கு அழைத்து பேச சென்றார்.
தரணிதரன் வந்ததுமே கோபியிடம் சொல்லி அவன் பக்கத்தில் தேட சொல்லியிருந்தான்.
தனது மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் பையனிடமும் சொல்லியிருக்க கோகிலாவின் கணவரும் தேட ஆரம்பித்திருந்தார்.
“கோபி கொல்லத்துல ஒரு இடம் விடக்கூடாது. எல்லார்கிட்டயும் விசாரிக்க சொல்லு….” என்று முடுக்கி இருந்தான்.
மீராவை அழைத்துக்கொண்டு முதலில் தன் கடைக்கு வந்தவன் வாசலில் இருந்த சிசிடிவி கேமராவை தான் பார்த்தான்.
“நாம வந்ததுக்கு ஒருமணி நேரம் முன்னாடி தான் ராகவி கிளம்பி இருக்கா…” என்று தங்களின் கடையை தாண்டி சென்ற பெண்ணை காண்பிக்க,
“ராகவி…” என்றவளின் கண்களில் மீண்டும் உடைப்பெடுத்தது.
“அழாதீங்க. நாம ஸ்டேஷன் போய் கம்பளைன்ட் குடுத்துட்டு எந்த வழி போனான்னு பார்த்து கண்டுபிடிப்போம்…” என சொல்லியவன் மீண்டும் மீராவை அமர சொல்லி கிளப்பினான்.
“விழுந்துடாம பிடிச்சுக்கோங்க. கவனமா உட்காருங்க…” என்று சொல்ல எதற்கும் பதிலில்லை அவளிடம்.
ஆனால் சொல்லியதை செய்தாள் இயந்திரமாய். இருக்கையை நன்றாக பிடித்தபடி அமர்ந்தவள் மனதெல்லாம் ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லியவை தான்.
மகாவிடம் மானசீகமாக உரையாடி அவர் தெரிந்துகொண்ட விஷயங்களை பகிர்ந்திருக்க மீண்டும் அவை மூளைக்குள் வலம் வந்தது.
“ஸ்கூல் முடிஞ்சு வந்திட்டிருந்த பொண்ணை நாலுபேர் கடத்தியிருக்காங்க. மூக்குல மயக்கமருந்தை வைக்கவுமே முடிஞ்சளவுக்கு அதை சுவாசிக்காம இருக்க முயற்சி பண்ணியிருக்கா மகா. ஆனாலும் லேசான மயக்கம் ஏற்பட்டிருக்கு அந்த பொண்ணுக்கு…”
“ஆளில்லாத வீதியில அந்த ஆம்னி போய்ட்டிருக்கும் போது மயக்கத்துல தான இருக்கான்னு அவங்க அசந்தநேரம் இந்த பொண்ணு முன்னாடி வண்டி ஓட்டிட்டிருந்தவன் தலையை இழுத்து திருக்க முயற்சி பண்ணினதுல வண்டி நிலைதடுமாறி போய் சுவத்துல இடிச்சு நின்னிருக்கு…..”
“அங்க இருந்து இறங்கி தப்பிச்ச பொண்ணை அவங்க துரத்திட்டு வர இந்த பொண்ணு மெயின் ரோட்டுக்கு ஓடி வரப்போ தான் இந்த தரணிதரனோட அப்பா வந்திருக்கார். பொண்ணை யாரோ துரத்தராங்கன்னு அவர் எதிர்த்து கேட்க அவரை அடிச்சு தூக்கி வீசினதுல லாரில அடிபட்டு விழுந்திருக்கார்…”
“அந்த அதிர்ச்சியில அந்த பொண்ணும் அவரை நெருங்க நினைச்சு ஓடி வர அந்த விபத்து ஏற்பட்டுருக்கு. விபத்தான ரெண்டுபேரையும் மருத்துவமனையில் அனுமதிச்சு சிகிச்சை குடுத்தப்போ தான் பொண்ணு பிழைக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சு திரும்பவும் அந்த கொலை முயற்சி நடந்திருக்கு…”
“ரொம்பவும் கொடூரமா கொன்னிருக்காங்க. அதுக்கு அந்த மருத்துவமனையில இருந்தவங்களும் உடந்தை. குருதிக்காக கழுத்தை அறுக்க முயற்சி பண்ணினவங்க யாரோ வர மாதிரி இருக்கவும் உயிரோட இருக்கற பொண்ணை பிணவறையில பதப்படுத்தற பெட்டியில போட்டு அடைச்சிருக்காங்க…” என்றிருந்தார்.
கேட்டவர்களின் ரத்தம் உறைந்து போயிருந்தது அந்த நொடி. எத்தனை மரண வேதனை மகாலட்சுமி அனுபவித்திருப்பது.
“அந்த பொண்ணை கடத்தவுமே மகா கையில மந்திர கயிறை கட்டியிருக்காங்க. அவங்க உயிருக்கு போராடும் போது சிகிச்சை அப்போ அதை கழட்டி இருக்காங்க. கொஞ்ச நேரமே அந்த மந்திரத்தோட கட்டுப்பாட்டுல இருந்ததால, அந்த பொண்ணோட குருதி அதுல பட்டதால அந்த பொண்ணோட ஆன்மாவை அவங்களால எப்ப வேணா அவங்க வசப்படுத்திக்க முடியும்…”
“அதனால தான் மகாவால யார்கிட்டயும் தன்னை வெளிப்படுத்திக்க முடியலை. இப்பவுமே மீரா கண்ணுல மகா தெரிய காரணம் மீராவால இதற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கறதால…” என்றவர்,
“ராகவியோட அதே ராசி, நட்சத்திரம், லக்கனம் தான் மீராவுக்கும்…” என்றிருந்தார் ஸ்ரீசக்திவித்யாதரன் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.
மீராவின் மனதிற்குள் மீண்டும் மீண்டும் அது மட்டுமே சுழன்றது. மகாவை இந்தளவிற்கு இரக்கமின்றி கொலை செய்தவர்கள் ராகவியை என்ன செய்ய போகிறார்களோ? அவளை காப்பாற்றிவிட முடியுமா? என்ற அச்சத்தில் தரணிதரன் தோளை அழுத்தமாய் பற்றிக்கொள்ள,
“ராகவியை கண்டு பிடிச்சிடலாம் தானே?…” என்று சஞ்சலத்துடன் கேட்க,
“கண்டிப்பா. ஆனாலும்…” என்றவனுக்கு கூட நம்பிக்கை இல்லை.
அந்த காவல்நிலையத்தில் மகாவின் கொலை வழக்கிற்கு எத்தனை முறை நடையாய் நடந்திருப்பான்.
பத்திரிக்கையில் விஷயம் பெரிதாக்கிய பிறகு தானே வழக்கை எடுத்தனர். அப்போதும் இது சாதாரண சாலை விபத்து, கவனமின்றி வந்ததனால் உண்டானது என்று சொல்லிவிட்டனரே.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. அழித்திருந்தனர்.
இப்போது மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று மனது மருகியது. ஆனாலும் புகார் செய்வது தானே சரி என்று வந்துவிட்டான் காவல்நிலையத்திற்கு.
வந்த இடத்தில் என்ன புகார் என்று கேளாமல் எத்தனை அபத்தமான கேள்விகள்?
“எதிர்வீட்டு பொண்ணுன்னா நீ கூட வந்திருக்க? எப்ப பாரு யாராவது ஒரு பொண்ணுக்கு தான் வருவியாப்பா நீ?…” என்று எள்ளலாய் அந்த இன்ஸ்பெக்டர் கேட்க,
“ஸார் பார்த்து பேசுங்க. இவங்க ஊருக்கு புதுசு. இவங்களுக்கு இங்க எதுவுமே தெரியாது. விஷயத்தை சொல்றோம். இவ்வளவு அலட்சியமா பேசறீங்க?…” என்றான் தரணிதரன் கொதிப்புடன்.
“உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் ஸார். ப்ளீஸ் என் அக்கா பொண்ணை கண்டுபிடிச்சு தாங்க. காலம் கடத்தறது நல்லதில்லை…” என்றாள் மீரா அழுகையுடன்.
“நீ சொல்றதெல்லாம் நம்பற மாதிரியாம்மா இருக்கு? பேய்ன்ற, ஆவி, பலி, மந்திரம்ன்னு என்ன கட்டுக்கதையா சொல்லிட்டிருக்க? எதுவும் பெரிய இடத்துல காசு பார்க்கனுமா? வந்துட்டா புகார் குடுக்கேன்னு. போம்மா வெளில….” என புகார் தாளை கிழித்து தூக்கி எரிந்து பேச,
“மனுஷங்களா நீங்கலாம். மனசாட்சியே இல்லையா? எப்படி தவிச்சு போய் வந்து உங்ககிட்ட உதவின்னு நின்னா இப்படித்தான் பேசுவீங்களா? இதுக்கு தான சம்பளம் வாங்கறீங்க? என்னவோ சும்மா தேடி தர மாதிரி பேசறதோட, அசிங்கமா நடந்துக்கறீங்க?…” என தரணிதரன் எகிறிக்கொண்டு போக,
“தரணி ப்ளீஸ், இருங்க…” என்று மீரா அவனின் கையை பிடிக்க,
“என்னடா ஏத்தமா? கண்டுபிடிக்க முடியாது, என்ன செய்வ? அவளை பேசுன பொத்துக்கிட்டு வருதோ உனக்கு? என்ன பொண்டாட்டியை சொன்னதாட்டம் துள்ளிட்டு வர…” என இன்னும் அங்கிருந்த அதிகாரி பேச,
“அப்படியே வச்சுக்கோங்க ஸார். இப்ப நான் குடுத்த கம்ப்ளைண்டை எடுத்துக்க முடியுமா முடியாதா?…” என்றவளின் குரலில் வெளிப்பட்ட ஆவேசத்தில் மீராவின் பிடியில் நின்ற தரணிதரன் அசந்து பார்த்தான்.
“என்ன மிரட்டலா? முடியாது. என்ன செய்யிவ? உன்னால ஆனதை செஞ்சுக்கோ. போம்மா…” என்று விரட்டியடிக்க அவர்களை வெறித்து பார்த்தவள் அங்கிருந்து வெளியேற,
“என்னங்க நீங்க. நான் தான் கோவமா பேசினா நீங்களுமா? பொறுமையா இருந்திருக்கலாமே?…” என்று தரணிதரன் சொல்ல மீராவின் முகம் வெகுவாய் தளர்ந்துவிட்டது.
“தெரியலையே. இப்ப என்ன செய்ய போறேன் நான்?…” என்றவள் விசும்பலில் தரணிதரன் மனது கலங்கியது.
“இங்கயே இருக்க முடியாதுங்க மீரா. இருங்க யாரையாவது தெரியுமான்னு கேட்போம்…” என்றவன் உடனடியாக அந்த நகைக்கடை முதலாளிக்கு போனை போட அவர் எடுக்கவில்லை.
“கோகிலாக்கா வீட்டுக்காரருக்கு தெரிஞ்ச யாராவது மேலதிகாரி இருக்காங்களான்னு பார்ப்போம்…” என்று அவருக்கு அழைக்க மீராவின் மனதினுள் ஒருவித தேடல்.
ஐந்து வருடமாகிவிட்டது. தன்னை ஞாபகம் இருக்குமா? என யோசித்தவள் தனது போனில் இருந்து அந்த நபரை தேடினாள்.
‘எப்பவாச்சும் உதவின்னா, ப்ச், அப்படின்னும் நினைக்க வேண்டாம். அவசியமிருந்தா கூப்பிடுங்க மீரா. கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன். நீங்க உண்மையை சொன்னதுக்காக மட்டுமில்லை, இளம்பரிதிக்கு ஒரு அமைதி கிடைக்கவும் நீங்க காரணமா இருந்ததுக்காக’ என்றிருந்தான்.
அந்த குரல் இப்போது செவியோரம் கேட்க அவனை விட வேறு யார் உதவிக்கு வந்துவிட முடியும் என்று தோன்ற வலைதளத்தில் அவளின் தேடலுக்கு விடை கிடைத்தது.
முகத்தில் சிறு நம்பிக்கை பரவ உடனே அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தவள் எப்படியும் இணைப்பு கிடைத்துவிட வேண்டுமென்ற வேண்டுதலுடன் கண்ணை மூடி பிராத்தித்துக்கொண்டே இருக்க பிராத்தனையின் பலன் கிட்டியது.
“நெடுஞ்செழியன் ஸ்பீக்கிங்…” என்ற அழுத்தமான குரலில் முழுமையான நம்பிக்கையும் பிறக்க,
“நான் நான் மீரா. நெடுஞ்செழியன் ஸார்…” என்றவள் தழுதழுத்த பேச்சில் மறுமுனையில் சிறு அமைதி.
“ப்ளீஸ், போனை வச்சிடாதீங்க ஸார். நான் மீரா. அஜிதா, பரிதி மாமா. அஞ்சலி. என்னை தெரியுதா? நான் மீரா…” என்று மன்றாடியவளின் அழுகை குரல் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.
“சொல்லுங்க மீரா, எதுவும் பிரச்சனையா?…” என்றவன் கேள்வியும் அதிலிருந்த அனுசரணையும் அவனை கடவுளாய் தோற்றுவித்தது மீராவிற்கு.