“ஆனா மாமியார் வீடாக்கிடலாம் போல. உன் மேல அந்தளவு கம்ப்ளைன்ட் இருக்கே. ஆக்ஷன் எடுப்போமா?…” என்று பூச்சி கேட்கவும்,
“ஸாரி ஸார். அவங்க என்னவோ ஆவி, சாமின்னு நிக்கறாங்க. அதான் நம்ப முடியாம நான் எடுத்துக்கலை….” என வெலவெலத்து போய் கூறினான் சங்கரன்.
“அப்பறம் கழுத்துல, நெத்தியில, கையில எல்லாம் என்னவோ இருக்கே? என்னது அது?…” என பூச்சியப்பன் கேட்க விழி பிதுங்கி பார்த்தான் சங்கரன்.
“நீ செஞ்சா அது நம்பிக்கை. அதுவே மத்தவங்க பாதிப்புன்னு வந்தா அவநம்பிக்கையா? இந்த உலகத்துல எல்லாமே இருக்கத்தான் செய்யுது. அதை நாம அணுகற விதத்துல இருக்கு. நேரடியா பாதிக்கப்படிருக்காங்க. விஷயத்தை ஆதாரத்தோட சொல்றாங்க. நம்ப முடியலைன்ற…” என்றவன்,
“இதுல பொண்ணும், ஆணும் சேர்ந்து வந்தா அசிங்கமா பேசுவியா? என்ன வேலை பார்க்கற நீ?…” என்று காய்ந்துவிட்டான் பூச்சியப்பன்.
“ப்ளீஸ் ஸார்…” என்றான் சங்கரன்.
“ப்ளீஸ், இதை சொல்ல வெக்கமா இல்லையா?…” என அவனை அற்பமாக பார்த்த பூச்சியப்பன்,
“யார் சொல்லி இந்த கேஸை இவ்வளோ கேர்லெஸ்ஸா ஹேண்டில் பன்ற? யாருக்காக கம்ப்ளைன்ட் எடுத்துக்காம இருக்க?…” என்று நேரடியாக அவன் கேட்க,
“ஸார், அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்…” என்று சங்கரன் திணற,
“இந்த கேஸ் மட்டுமில்லை. இறந்து போனதா சொல்லப்படற அந்த பொண்ணு மகாலட்சுமி கேஸ் கூட முதல்ல நீ எடுத்துக்காம இருந்து அப்பறம் அந்த ஏரியா ஜனங்க பிரஷர்ல கேஸ் பைல் பண்ணினதா சொல்றாங்க…” என்று கேட்க பதிலில்லை அவனிடம்.
“அது வந்து ஸார்…” என வெகுநேரம் கழித்தே தயங்கி வாயை திறக்க,
“என்ன சேட்டா, கேட்டா பதில் வருது லேட்டா. இதுல உன் பங்கு இருக்குன்னு தெரிஞ்சது…” என்று சொல்லி கீழுதட்டை கடித்து விரல் நீட்டி எச்சரித்தவன்,
“இதுவரை அந்த சரவுண்டிங்ல எத்தனை பேர் காணாம போயிருக்காங்கன்னு கேஸ் குடுத்திருக்காங்க?…” என்றான்.
சங்கரனால் உடனடியாக சொல்ல முடியவில்லை. யோசித்து மூளையை கசக்கி பார்த்து நிற்க,
“ஒழுங்கா வேலை பார்க்க முடியலை. வாய் மட்டும் மத்தவங்களை கிழிக்கும். போய் அதை செக் பண்ணு. இதுக்குள்ள நீ இருந்தான்னு வை. மாமியார் வீடே தான் உனக்கு. கெட் அவுட்…” என சொல்லி அனுப்ப ஐயப்பன் பூச்சியப்பனுக்கு அழைத்துவிட்டார்.
“ஸார் கண்ட்ரோல் ரூம்க்கு வாங்க…” என்று சொல்ல உடனடியாக அங்கே விரைந்தான் பூசிச்யப்பன்.
மீராவும் தரணிதரனும் வெளியில் நின்றிருக்க அவர்களை அமரும்படி சொல்லிவிட்டு சென்றான்.
“என்ன எதுவுமே சொல்லாம போறாங்க…” என மீரா பதற,
“வெய்ட் பண்ணுவோம். நம்ம விஷயமா தான் போவாங்களா இருக்கும்….” என்றான் அவளிடம் தரணிதரன்.
“ராகவி கிடைச்சிடுவாளா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு தரணி…” என விழிநீர் ததும்ப அவனை ஏறிட்டவளிடம் ஆறுதலாய் பார்வையை செலுத்தியவன்,
“கடவுள் விட்ட வழி. கண்டிப்பா கிடைக்கனும். தைரியமா இருங்க…”
“கடவுள் விட்ட வழியா?…” மீரா அதிர,
“அப்படி சொல்லலைம்மா. நம்பிக்கை இல்லாம இல்லை. இப்போ நெடுஞ்செழியன் ஸார் மூலமா இந்த ஹெல்ப் நமக்கு கிடைக்கும்ன்னு நாம நம்பினோமா? இல்லையே. எல்லாம் எதுக்கோ நம்மை கொண்டு செல்லுது. நான் அப்படித்தான் நம்பறேன். நல்லதே நடக்கும்…” என்றான்.
“தேங்க்ஸ்…” என்று அவனிடம் சொல்ல,
“இப்ப தேவையில்லைன்னு நினைக்கறேன். எத்தனை சொல்லுவீங்க? மொத்தமா சொல்லிக்கலாம்…” என்றான் மென்மையாக.
“வீட்டுக்கு பேசி அங்க என்ன பன்றாங்கன்னு கேளுங்க. நானும் கோபிக்கு கூப்பிடறேன்…” என்று சொல்லி போனுடன் நகர்ந்தான் தரணிதரன்.
“உங்க கூட தானே இருக்கேன். அப்பாவுக்கு புரியும்…” என இலகுவாய் வந்தது அவனின் வார்த்தைகள்.
சொல்லிய பின்பு தான் அவள் எதுவும் தவறாக நினைத்துக்கொள்வாளோ என்று பார்க்க மீரா அதனை அவன் சொல்லிய விதத்தில் உணரவில்லை.
எதிர்வீடு. பேச்சி நல்ல பழக்கம். அந்த விதத்தில் அவன் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டவள் பேச்சிக்கு அழைத்தாள்.
“கம்ளைண்ட் குடுத்தாச்சு பெரிம்மா. நம்ம அஜிக்கா கேஸ் நடத்தினார்ல ஏசிபி நெடுஞ்செழியன். அவர்கிட்ட தான் ஹெல்ப் கேட்டேன்…” என்று சொல்ல,
“ராகவி பத்தி ஏதாசும் தெரிஞ்சதா மீரா? என்ன சொல்றாங்க?…” என பேச்சி அழ,
“இப்பதான் விசாரிக்கிறாங்க. பெரிம்மா…” என்று அங்கே நடந்ததை எல்லாம் மேலோட்டமாக சொல்லியவள்,
“தரணிதரன் அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க பெரிம்மா. நமக்காக அவங்கப்பாவை விட்டுட்டு நம்ம கூட நிக்கிறார். நாம தான் பெரியவரை கவனிச்சுக்கனும்…” என்று மீரா சொல்ல,
“இதை நீ சொல்லனுமா கண்ணு?…” என்றவர் பேசி வைக்க தரணிதரன் இன்னும் பேசிக்கொண்டிருந்தான் தீவிரமான முகத்துடன்.
மீராவின் பார்வை பூச்சியப்பன் சென்ற திக்கில் பயணிக்க அங்கே பூச்சியப்பன் ஐயப்பன் காண்பித்த காணொளியை கவனித்தான்.
“இதை எடுத்துட்டு ரூம்க்கு வாங்க. அந்த கார் எந்த இடத்துல மிஸ்ஸாச்சோ அங்க இருந்து சுத்திலும் தேட சொல்லுங்க. க்விக்…” என்று சொல்லியவன் மீண்டும் தன்னறைக்கு வர மீரா எதிர்பார்ப்புடன் எழுந்து நின்றாள்.
“உள்ள வாங்க மீரா. தரணிதரனையும் கூட்டிட்டு வாங்க…” என உள்ளே நுழைந்தான்.
அறைக்குள் செல்லவும் ஐயப்பனும் வந்துவிட தனது கணினி திரையில் அதனை காண்பித்தான் மீராவிற்கும், தரணிதரனுக்கும்.
“ராகவி தானே?…” என கேட்க,
“ஆமா, ராகவி தான். ஸார் கண்டுபிடிச்சாச்சா?…” என மீரா பரபரக்க,
“இன்னும் இல்லை மீரா. இந்த வீடியோவை நல்லா பாருங்க. ராகவி வலுக்கட்டாயமா கடத்தப்படலை…” என்று சொல்லவும் தான் மீராவின் மூளைக்கே அது பதிந்தது.
ராகவி ரோட்டில் நடந்து செல்லும் பொழுது அவளின் அருகில் சென்ற கார் அவளை நெருங்க, அதை நின்று பார்த்தவள் ஓரிரு வினாடிகள் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
பேசியவள் மறுப்பாய் தலையசைத்து பின் புன்னகையுடன் அந்த காரில் ஏறி செல்வது தெரிந்தது.
பார்த்தவளுக்கு பதைபதைத்தது. யார் அந்த வாகனத்தினுள் இருந்தது எதுவும் தெரியவில்லை.
ஆனால் ராகவி தெரிந்து தான் ஏறி சென்றிருக்கிறாள். அது தெளிவாகவே இருந்தது.
“இதை பார்த்தா நல்லா தெரிஞ்சவங்களோடவோ இல்லை, ப்ரெண்ட் கூடவோ ஏறி போன மாதிரி தானே தெரியுது…” என பூச்சியப்பன் சொல்ல பதறிவிட்டாள் மீரா.
“இல்லை ஸார், அப்படி எல்லாம் அவளுக்கு இங்க யாரையும் தெரியாது. நிச்சயம் இது கடத்தல் தான். நானே பூஜையப்போ கண்ணால பார்த்தேன். அந்த விளக்கும், அதுக்குள்ள நினைவு தப்பின மாதிரி ராகவியை உட்கார வச்சிருந்தாங்க. நம்புங்க ஸார்…” என்ற மீரா,
மீரா தரணிதரனின் கையை பிடித்து உலுக்கியவள் அவன் தோளில் சாய்ந்து அழுகையில் கரைய,
“மீரா இங்க பாரு. மீரா அழாத. ஒண்ணுமில்லம்மா…” என தரணிதரன் அவளை நிமிர வைக்க பார்த்தான்.
“என்னோட கடைசி நம்பிக்கையும் காணாம போயிரும் போல. நான் என்ன பண்ண போறேன்?…” என்று மீரா நம்பிக்கையிழந்து மனதில் வலுவிழந்து அரற்ற,
“மிஸ் மீரா. காம் டவுன். எதுக்கு இந்த அழுகை?…” என்று அமைதியாக கேட்டான் பூச்சியப்பன்.
“நீங்க தானே யாரோ ப்ரென்ட்…” என்று மீரா திக்கி திணறி ஒற்றை ஒற்றை வார்த்தைகளாக பிரித்து பேச முடியாமல் சொல்ல,
“நான் சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சுக்கலை. ராகவி இவ்வளோ ஈஸியா அந்த கார்ல இருந்தவங்களோட போயிருக்காங்கன்னா அப்போ அவங்க நல்லா தெரிஞ்சவங்களா தானே இருக்க முடியும்?…” என்று கேட்க மீரா தலையசைத்தாள்.
“குட், நீங்க இங்க வந்து ரொம்ப கம்மியான நாட்கள் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள இத்தனை நம்பிக்கையோட போயிருக்காங்கன்னா அது யார்ன்னு நாம கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி…” என்றான் பூச்சியப்பன்.
மீராவிற்கு அப்போது தான் அவன் சொல்லவந்ததன் அர்த்தமே விளங்கியது. கண்களை நன்றாக துடைத்துக்கொண்டவள் அவனை பார்க்க அவளிடம் ராகவி பழகும் நபர்கள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டான்.
“இங்க நிறையவே இந்த மாதிரி வழக்கு இருந்துட்டே தான் இருக்கு. ஆனாலும் புதுசு புதுசா முளைச்சுட்டே தான் இருக்காங்க…” என பல்லை கடித்தான்.
“சொந்தக்காரங்களே அவங்க சுயலாபத்துக்கு குழந்தைங்களை, பெண்களை பலி குடுக்கறது, நீண்ட ஆயுசுக்கு பலி குடுக்க, சக்தி வேணும், தீய சக்திகளை கைப்பற்றனும் இப்படி எத்தனையோ. எப்போ தான் இதெல்லாம் ஒழியுமோ?…” என்ற பூச்சியப்பன்,
“அந்த ஸ்ரீசக்திவித்யாதரன் சொன்னதா சொன்னீங்களே? திரும்ப சொல்லுங்க…” என்று கேட்டான்.
மீண்டும் மீரா சொல்ல சொல்ல தரணிதரன் அந்த கணினியில் மீண்டும் அந்த காணொளியை ஓடவிட்டு கூர்மையாக பார்த்தான்.
“தாமரை பூ, விளக்கு, தங்க பஸ்பம்…” என நெற்றியை தட்டிக்கொண்டே பூச்சியப்பன் யோசனையுடன் சொல்ல தரணிதரன் உள்மனது எதையோ சொல்ல விழைந்தது.
மீண்டும் அந்த காட்சியில் இருந்த ஒன்றையும், அந்த வார்த்தைகளையும் அவன் மூளை எங்கிருந்தோ உருவி காண்பிக்க முயன்றது.
“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் வேற எதுவும் தகவல் இருந்தா கூப்பிடறேன். தைரியமா போங்க…” என்று பூச்சியப்பன் சொல்லி அனுப்ப இன்னும் தரணிதரன் மீளவில்லை.
“தரணி போலாம்….” என மீரா அழைக்க,
“ஹ்ம்ம், போகலாம்…” என்று அவனும் எழுந்துகொண்டான்.
அவன் யோசிக்க யோசிக்க அந்த காட்சி அவன் நினைவிலிருந்து பின்னே தான் சென்றுகொண்டிருந்தது.