அவர்கள் இருவரும் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வீடு வரவே மாலையாகியிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் தரணிதரன் மீராவை விட்டுவிட்டு தான் வீட்டிற்குள் சென்றான்.
இன்னும் நடராஜனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை அவன். சொல்லவும் நேரமில்லை.
ஆனால் பேச்சி எல்லாம் சொல்லியிருந்தார். அவரை பேச்சி தான் உணவு கொடுத்து பார்த்துக்கொண்டார்.
கோபியும் தன் நண்பர்கள், சில சொந்தங்களுடன் ராகவியை தேட கிளம்பியிருக்க பெரியவரை தனியே விடமுடியாதே நடராஜனை.
தரணிதரன் மீராவுடன் செல்லும் பொழுது கோகிலாவும், பேச்சியும் அவனின் வீட்டில் தான் இருந்தனர்.
தரணிதரன் வீட்டிற்குள் வந்ததுமே இருவரும் பரபரப்புடன் என்னவாகிற்று என்று கேட்க,
“மீராவுக்கு தெரிஞ்ச போலீஸ் மூலமா இங்க ஒருத்தரை பார்த்து பேசியிருக்கோம். அவங்களும் கண்டு பிடிக்கிறதா சொல்லியிருக்காங்கம்மா. கண்டுபிடிச்சிருவாங்க…” என்றான் அங்கே நடந்ததை பொதுவாய் சொல்லியபடி.
“நம்பிக்கையோட சொன்னாங்களா? என் நெஞ்செல்லாம் பதறுது தம்பி. அந்த சாமியார் என்ன சொன்னாக?…” என கேட்க,
“அவரை போய் பார்க்கனும் ம்மா. அதுக்கு முன்னாடி…” என்றவன் தன் பின்னந்தலையை பலமாய் தட்டிக்கொண்டான்.
“என்ன தம்பி?…” என கேட்க அவனின் விழிகள் கலங்கியது.
மறுநாள் நள்ளிரவுக்குள் ராகவியை கண்டுபிடிக்கவேண்டும். இன்று கடந்துவிட்டால் அதன்பின் நேரம் ஓடிவிடுமே?
உள்ளுக்குள் துரத்தும் பயத்தை விரட்டியடிக்க முயன்றான். எப்படியாவது ராகவியை மீட்க வேண்டும் என தன் தாயின் படத்தின் முன் வந்து நின்றான்.
“எனக்கு என்னவோ ஆழ் மனசுக்குள்ள தோணுதும்மா. ஆனா என்னன்னு விளங்கலையே. நேரம் போக போக உடம்பெல்லாம் நடுங்குது…” என்று முணுமுணுத்தபடி கை கூப்பி நின்றான் தரணிதரன்.
“என்னன்னு தெரியலையே?…” என பேச்சி அழுதுகொண்டே நிற்க நடராஜன் அழவேண்டாம் என்பதை போல தலையை அசைத்தார்.
“தைரியமா இருங்க. நாம போய் மீராவை பார்ப்போம்…” என வெளியே வர நன்றாகவே இருட்டி இருந்தது இப்போது.
மீராவும் நாச்சியாரின் உடல்நிலையை பரிசோதித்து அவரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தாள்.
“மீரா, கண்ணு என்ன சொன்னானுங்க? அந்த தம்பி கலங்கி போய் கண்ணீரோட நிக்குது. என்னத்தா?…” என்றார் அவளிடம் பேச்சி.
“ஸ்டேஷன்ல என்ன சொன்னாங்க மீரா? எதாச்சும் தெரிஞ்சதா?…” என்றார் கோகிலா.
“இன்னும் எதுவும் தெரியலையா?…” என பேச்சி இன்னும் அரற்ற,
“இல்ல பெரிம்மா. ராகவி யார் கூடையோ கார்ல ஏறி போயிருக்கா. யாருன்னு தெரியலை. அவளை கட்டாயப்படுத்த கூட இல்லை. அவளாவே ஏறி இருக்கா. அது யாருன்னு கண்டுபிடிக்கனும்…” என தயங்கி தயங்கி மீரா சொல்ல,
“யாத்தே என் தலையில கல்ல தூக்கி போடாதடி. யாரு கூட போனா? அப்ப அந்த சாமி சொன்னது?…” என பேச்சி இரைந்து அழவே ஆரம்பித்துவிட்டார்.
“பெரிம்மா, பொறுமையா இருங்க. தப்பா ஏன் யோசிக்கறீங்க?…” என்று மீரா அவரை அமைதிப்படுத்தும் முன் போதும் போதும் என்றானது.
“அப்ப ஒம்பெரியப்பன், இல்ல அண்ணேங்காரன் வந்திருப்பியானோ? ராகவி அப்பன் வந்திருப்பானோ? ஆனா ஒருத்தனும் இன்னும் ஜெயில விட்டு வரலேலே. பொறவு எப்படி?…” என தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான் பேச்சிக்கு.
“அவங்க யாரும் இல்லை. அவங்க இப்ப நம்மை யோசிக்கிற நிலமையில கூட இல்லை. ஆனா…” என்றவள் வாசலில் அரவம் கேட்க, எட்டி பார்த்தாள்.
தரணிதரன் தான் வேகமாய் உள்ளே வந்துகொண்டிருந்தான். அவன் முகம் பதட்டத்தில் இருந்தது.
“வாங்க…” என மீரா அழைக்கவும்,
“கிளம்புங்க, சாமியார் உங்களை கூட்டிட்டு வர சொன்னார்…” என்றான் தரணிதரன்.
“நானும் வரேன்…” என பேச்சி சொல்ல,
“இல்லைங்கம்மா. நீங்க இருங்க. இங்க நீங்க வேணும். நாங்க போய்ட்டு என்னன்னு சொல்றோம்…” என்றவன் மீராவை அழைத்துக்கொண்டு கிளம்ப சரோஜா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
மங்களம் அவரிடம் ராகவியை காணவில்லை என்றும் யாரோ கடத்தியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
அதற்கு மேல் அவர் தெரிந்துகொண்டால் என்னவாகுமோ என யாரும் எதுவும் சொல்லவில்லை.
முக்கியமாக மகாவை பற்றி சொல்லவே இல்லை. மகா அங்கே அவரின் அருகில் இருக்கிறாள் என்பது மட்டுமே அவர்கள் கூறியிருந்தது.
அதனால் சரோஜாவின் கவனம் எல்லாம் அந்த இடத்தில் மகளுடன், அவளருகில் இருப்பது ஒன்றே.
ராகவியை பற்றிய கவலையும் இல்லாமல் இல்லை. மகளிடம் அவளை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறும் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தார்.
சுற்றி சுற்றி வேதனைகள் மட்டுமே அவ்விடத்தை சூழ்ந்திருந்தது. பிள்ளை என்னவெல்லாம் கஷ்டப்படுகிறாளோ என்று அரற்றியபடி வெளியே வந்தனர்.
வீதியில் இருந்தவர்கள் அனைவருமே இதனை கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.
ராகவியை காணவில்லை என்றதும் அதற்கொரு பேச்சுக்கள். சிலர் வருத்தத்துடனும், சிலர் வழக்கம் போல எள்ளலுடனும் பேசத்தான் செய்தனர்.
யாரின் பேச்சையும் காதில் வாங்கி அதற்கு வருந்தும் நேரம் இதுவல்லவே. தரணிதரனுடன் மீரா செல்வது கூடுதல் பேச்சாகி போனது.
தரணிதரன் மீராவுடன் அந்த வீதியை விட்டு செல்லவும் முணுமுணுவென்ற பேச்சுடன் அவர்களை கொத்தி பிடுங்கும் பார்வை பார்த்தவர்களை,
“கட்டையில போவ. கண்ணு முழிய நோண்டிப்புடுவேன். போங்கடி அங்கிட்டு…” என மங்களம் புடவையை தூக்கி சொருகியபடி பார்த்து நாக்கை மடிக்கவும் தோளை குலுக்கிவிட்டு சென்றனர் அனைவருமே.
“இந்தா வாசல்ல நின்னு கண்ண கசக்காம உள்ள போங்க. நா அந்த மனுசன ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன்…” என்றார் மங்களம்.
இங்கேயும் அங்கேயுமாய் அவர் தான் இரு வீட்டையும் பார்த்துக்கொள்வது. அவருக்கு வார்த்தைகளில் எதுவும் சொல்லாமல் மங்களத்தின் கையை பிடித்து பேச்சி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள,
“ம்க்கும், அழுதா மட்டும் ஆச்சா? போத்தா போ, போ…” என்று பேச்சியின் தோளில் தட்டிவிட்டு எதிர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தரணியுடன் சாமியாரை பார்க்க வந்தவர்கள் உள்ளே நுழைய மகாலட்சுமி அமரவைக்கப்பட்டிருந்த இடத்தில் அவளுருவமே இல்லை.
சின்னதாய் மிக சிறியதாய் பாறை போல பனியாய் இருக்க அதனை பார்த்த மீராவிற்கு திக்கென்றானது.
“வாம்மா…” என அழைத்த ஸ்ரீசக்திவித்யாதரன் மீராவை அமர சொன்னார்.
“மகாவுக்கு என்னாச்சு சாமி?…” என்ற மீரா,
“ஐஜி முன்னாடி கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்திருக்கோம். ஆனா ராகவி யாரோடையோ கார்ல ஏறி போயிருக்கா…” என்றாள் அங்கே நடந்தவற்றை எல்லாம் விளக்கமாக சொல்லியபடி.
“தானாகவே எல்லாம் நடக்கும் ம்மா. ஆனா அவங்களை நெருங்கறதுக்குள்ள உங்களுக்கும் ஆபத்து வரும். கவனம்…” என்று எச்சரித்தவர்,
“மகாவோட சக்தி கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள போய்ட்டிருக்கு. நாளைக்கு அவங்க அர்த்தஜாம பூஜை பண்ணும் போது மகா முழுமையா அவங்க கட்டுக்குள்ள போயிருவா…” என்றார் வருத்தத்துடன் எச்சரிக்கும் விதமாய்.