“இதுக்கு வேற எதுவும் பண்ண முடியாதா சாமி? மகா இங்க உங்களோட வட்டத்துக்குள்ள தானே இருக்கா? தெய்வ சக்தியை மீறியா நடக்கும்?…” மீராவிற்கு நம்பவே முடியவில்லை.
“சில நேரம் நிலவை இருள் சூழும் இல்லையா? அதை மாதிரி. சூரியனை கிரகணம் பிடிச்சுக்கற மாதிரி. காலநிலை எப்பவும், எப்படி வேணும்னாலும் மாறும்….” என்றார்.
“நீங்களே இப்படி சொன்னா எப்படி சாமி?…” என மீரா ஆற்றமாட்டாமல் கேட்க,
“நிதர்சனம் எதுவோ அதை தான் நான் சொல்றேன்…” என்றவர்,
“அதுக்காக தான் மகா உன்னோட உடம்புக்குள்ள தன்னை நுழைச்சுக்க பார்த்தது. ஆனா ரெண்டுநிமிஷம் கூட அந்த பொண்ணால உன் ஆன்மாவோட கலக்க முடியலை…” என்று சொல்ல மீராவின் விழிகள் தெறித்துவிடும் போல் விரிந்தது.
மருத்துவமனைக்கு தான் சென்றதை தான் குறிப்பிடுகிறாரோ என அவள் உணர்ந்ததோடு தரணிதரனை பார்க்க அவனும் தலையசைத்தான்.
“ஒருவேளை மகாவால உன் உடம்புக்குள்ள தங்கிருக்க முடிஞ்சதுன்னா இந்த சூழ்நிலையே ஏற்பட்டிருக்காமலும் போயிருக்கலாம். இல்லையா ராகவியை கடத்தினவங்க உன்னையும் சேர்த்தே கடத்தியிருக்கலாம்…”
“ஆனா மகா மந்திரக்கட்டுக்குள்ள இருந்ததால அவளோட முயற்சி பலனளிக்காம போயிருச்சு. அதன் தாக்கம் தான் நீ மூர்ச்சையாகி போனது. இப்ப அந்த கட்டுப்பாட்டுக்குள்ள மகாவோட ஆன்மாவை இழுக்கறாங்க. அது அவங்க வசமாகிட்டா அவங்களுக்கு சாதகம் அதிகமாகி போகும்…” என்றார் வேதனையுடன்.
“ஐயோ…” என்ற மீராவின் சப்தம் மகாவையும் தீண்ட தீனமாய் முணங்கினாள் மகா.
அவளால் அவள் உருவெடுக்கவும் முடியவில்லை. பனி சிற்பம் போலிருந்த பாறை கல்லாய் இல்லாமல் உருகி குழைவதை போல் நெளிந்தது.
“இந்த உலகத்தை விட்டு மறைஞ்சும் அந்த பொண்ணுக்கு மரண வலி தான். ரொம்ப கஷ்டப்படுது…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன்,
“இந்த பொண்ணுமட்டுமில்லை. அந்த பலியான எல்லா பொண்ணுங்களோட ஆன்மாவும் தெய்வத்தோட காலடிக்கு செல்லாம உயிர் வதையை அனுபவிச்சபடி தான் காலத்துக்கும் அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கும். இறப்பிலாவது அவங்களுக்கு சாந்தி அடையனும்…”
“இதுக்கு ஏதாவது பண்ணுங்க சாமி. ப்ளீஸ், என்னால இதை கேட்கவே முடியலை. பாவமில்லையா இவங்கல்லாம்? பழி,பாவத்துக்கு அஞ்சாம என்ன மனுஷங்க அவங்க. பலி குடுத்து எதை சாதிக்க பார்க்கறாங்க?…” என ஆவேசமாய் மீரா கேட்க ஸ்ரீசக்திவித்யாதரன் உடல் முறுக்கியது.
அவரின் ஆன்ம பலம் அவரின் இஷ்டத்தெய்வத்திடம் முறையிட மகாவின் குரலில் என்னென்னவோ வார்த்தைகள்.
“தாயே…” என்றவர் மூடிய விழிகளின் புருவங்கள் அசைந்தாடியது.
மேல்மூச்சு வாங்க அவர் உடலில் வியர்வை பெருக்கெடுக்க கண்ணில் கண்ணீரும் பெருக்கெடுத்தது.
“உனக்கு சாந்தி கிடைக்கட்டும் குழந்தை…” என்று உதடுகள் நடுங்க சொல்லியவர், கண்கள் திறக்க அங்கே மகா இருந்த வட்டத்தில் பனிப்பாறை முழுதாய் உருக உருகியதெல்லாம் குருதியாய் உருமாற கடைசி துளியும் பூமிக்கடியில் உறிஞ்சப்பட்டது.
“மகா…” என்ற மீராவின் அலறலில் தான் தரணிதரன் அந்த இடத்தையே பார்த்தான்.
அதுவரை ஸ்ரீசக்திவித்யாதரனின் பேச்சுக்களையும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று திகைத்து பார்த்திருந்தவன் மீராவின் சத்தத்தில் திடுக்கிட வெற்றிடமாகி இருந்தது மகாவின் இடம்.
“தரணி மகா எங்க? மகாவை காணுமே?…” என்று அவனிடம் அவள் அழ,
“தாயே தென்திசை நோக்கி போ. உனக்கான வழி கிடைக்கும். இது உன் கையால முற்று பெறனும்ன்றது தான் அந்த தாயோட கட்டளை. நேரம், காலம் பார்க்காமல் நீ போய் சேரவேண்டிய இடம் சென்று சேரு. மனசுல என் தாய் துர்க்கையை இருத்திக்கோ. தைரியமா நில்லு. உன்னோட பலத்துக்கு என் பூஜை பலம் சேர்க்கும். போ…” என கத்தியவர் உடனடியாக தன் உதவியாளர்களை அழைத்தார்.
பூஜைக்கு தயார் படுத்தும்படி சொல்லியவர் மீராவின் கையில் குங்குமத்தை தந்துவிட்டு,
“தைரியமா போ. எந்த இடத்துலையும் சோர்ந்து போயிடாதம்மா. இப்போ உன் கைக்குள்ள இருக்கறது நூத்தி எட்டு பெண் குழந்தைங்களோட ஆன்மாக்கள் மட்டும் இல்லை. இனி இதை போல பலியாகாம இருக்க போற உயிர்களும் தான்…” என்று சொல்லியவர்,
“நீ அந்த இடத்தை நெருங்க நெருங்க மகாவோட ஆன்மா உன்னை இன்னும் தன் பக்கத்துல இழுத்துக்கும். அதே நேரம் உன் உயிரும் பத்திரம் ம்மா…” என்றார் கலக்கம் சுமந்த விழிகளுடன்.
“உனக்கு இன்னும் கல்யாணமாகலைல…” என அவளிடம் கேட்க ‘இல்லை’ என்று தலையசைத்தாள் மீரா.
“அம்மா, துர்கா தேவி…” என அன்னார்ந்துபார்த்து சஞ்சலத்துடன் சொல்லியவர்,
“ஒரு நிமிஷம் ம்மா…” என்று உள்ள சென்று தாயின் பாதத்தில் இருந்த மஞ்சள் கிழங்கு கட்டப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து வந்தார்.
“இந்த ரட்சையை இந்த பொண்ணு வலது கையில கட்டி விடுங்க தம்பி…” என்று சொல்லி தர இருவருமே திடுக்கிட்டு திகைத்தனர்.
“காரணமா தான் சொல்றேன் ம்மா. கட்டிக்கோ. உன் எதிர்காலத்தோட தான் உனக்கு முடிச்சு போடறேன். இதை உன் உயிருக்கான கவசம்ன்னு கூட சொல்லலாம்…” என்றவர்,
“கட்டிவிடுப்பா….” என தரணிதரனிடம் தர அவர் சொல்லியதில் இருவருக்குமே அதிர்ச்சி தான்.
ஆனாலும் அந்த நேரம், அவர்களின் அந்த சூழ்நிலை. வேறு எதையும் யோசிக்கவிடவில்லை.
மீரா தரணிதரனை நோக்கி தன் கையை நீட்டி கட்டும்படி தலையசைக்க தரணிதரனும் அந்த ரட்சயை மீராவின் கையில் கட்டினான்.
“கூட போங்க தம்பி. கூடவே இருங்க. இனி இந்த பொண்ணு உங்க பொறுப்பு. காலத்துக்கும்…” என்று சொல்லி அனுப்பி வைத்தார் தரணிதரனையும்.
இருவரும் வெளியே வந்து நிற்க மீராவிற்கு கண்ணை கட்டி விட்டதை போலிருந்தது.
“தென்திசை நோக்கின்னா? எங்கன்னு போய் தேடுவேன்?…” என்றாள் மீரா தரணிதரனிடம்.
இருண்ட அந்த வீதியில் தென்திசை பக்கம் அவர்கள் வேகமெடுக்க அதன் வேகத்தில் தரணிதரன் மூளைக்குள் வண்டாய் குடைந்த அந்த கேள்விக்கான விடை இன்னும் கிடைத்த பாடில்லை.
பூச்சியப்பனுக்கு அந்தநேரம் மீரா அழைத்து சாமியார் சொல்லியதை பகிர அவனுக்குமே பதட்டம் தான்.
“இந்த நைட் முடிஞ்சதுன்னா நாளைக்கு மிட்நைட்க்குள்ள நாம கண்டுபிடிக்கனும் மீரா…” என்றான் பூச்சியப்பன்.
“அந்த கார் அதை பத்தி எதுவும் தெரிஞ்சதா?…” என மீரா தவிப்புடன் கேட்க,
“இல்லைம்மா. தெரியலை. கார் கண்ணை விட்டு எப்படி மறைஞ்சதுன்னு யாருக்குமே தெரியலை. கேமராக்குள்ள பதிவாகவே இல்லை. ஆனா அந்த திசையில தேடிட்டிருக்கோம்…” என்றான்.
“நாங்களும் தான் ஸார். தென்திசையில தேட சொன்னாங்க. நம்பிக்கையா சொன்னாங்க…” என்று மீரா சொல்ல,
“நீங்க தேடுங்க. நாங்களும் அந்த திசைல தான் தேடறோம்…” என்றான் பூச்சியப்பன்.
அவர்கள் தேடும் திசையின் நேர் எதிர்திசையில் காரிருள் சூழ்ந்த மயான அமைதியில் குருதியின் மிதந்த தாமரை மொட்டுக்களின் நடுவில் ஒவ்வொரு உயிர்களும் ஓலமிட்டு விடுதலைக்காக பரிதவித்துக்கொண்டிருந்தது.