அவளை எழுப்பி நிறுத்தவும் முடியவில்லை. எந்த உரிமையில் என யோசிக்காமலும் இல்லை.
ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லிய வார்த்தைகள் நடுநெஞ்சில் பச்சை குத்தியதை போல பதிந்து போனது.
தன் வயதென்ன? இப்பெண்ணின் வயதென்ன? இதென்ன விந்தை? என நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
அதைவிட பெரிய அழுத்தம். மீராவிற்கு இதில் பெரிய ஆபத்திருப்பதை ஸ்ரீசக்திவித்யாதரன் அவனுக்கு தனியே உணர்த்தி இருந்தார்.
“அந்த பொண்ணோட உடம்புல திரும்பவும் மகா வர வாய்ப்பிருக்கு. அப்படி வந்துட்டா அந்த நிமிஷம் அழிவு நிச்சயம். அது நடக்கக்கூடாதுன்னு நினைப்பாங்க. அதுக்கு மீரா இருக்க கூடாதுன்னு நினைக்கலாம். அதனால மீரா உயிருக்கும் ஆபத்து வரலாம். ஆனா ஒரு உயிர் போக போவது உறுதி…” என ஆணித்தரமாய் சொல்லியிருந்தார் ஸ்ரீசக்திவித்யாதரன்.
அதைவிட்டு அவனால் வெளியே வரமுடியவில்லை. மீராவை இதிலிருந்து எப்படி காப்பாற்ற போகிறோம் என உள்ளுக்குள் அலண்டு போனான்.
தேடும் இடங்களில் அவளுருவம் ஒரு நொடி மறைந்தாலும் துடித்து போய் தன் கண் முன்னே அவளை நிறுத்திக்கொள்கிறான்.
உயிர் வதை அவனுடலை உடலை வருத்திக்கொண்டிருந்தது. மனதை இறுக்கி பிழிந்தது.
எங்கு தேடியும் கிடைக்காமல் எங்கு தேடுவது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் உணர்வு.
இப்போது நட்டநடு ரோட்டில் தரையில் அமர்ந்து இலக்கின்றி பார்வைகளை விட்டு கண்ணீருடன் அமர்ந்திருப்பவளை காண முடியாமல் உள்ளம் கசிந்தது.
“மீரா எழுந்திரிங்க. சொல்றேன்ல, எழுந்திரிங்க…” என்று அவளின் தோளை பிடித்து எழுப்பி நிறுத்தியவன்,
“இன்னும் நேரமிருக்கு. மனசை விட்டுடாதீங்க….” என்று சொல்லி அவளை பைக்கில் அமர சொல்ல, தரணிதரன் போனில் அழைப்பு.
“கோகிலாக்கா தான்…” என சொல்லிக்கொண்டே அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்கக்கா…” என்றதும்,
“தரணி இங்க சரோஜாவுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிட்டல் கூப்பிட்டாலும் வரமாட்டேன்றாங்க. மகா இருக்கான்னு சொன்ன இடத்தை விட்டு எந்திக்கமாட்டேன்றாங்க…” என்றார் பதட்டமாய்.
“அவங்களை எங்களால தூக்கிட்டும் போக முடியலை…” என்றும் சொல்ல,
“நாங்க உடனே வரோம். கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என்றான் தரணிதரன்.
“என்னாச்சு? யாருக்கு என்ன?…” என மீரா பதட்டமாக,
“சரோஜாக்காவுக்கு சுகமில்லையாம்….” என்று மட்டும் சொல்லியவன் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
அலைந்துகொண்டே இருந்ததில் உடல் வலி தாளமுடியவில்லை. ஆனால் அதை நினைத்து யோசித்து தளர்ந்து அமர நேரமில்லை.
வீடு வந்து சேர மகா இருப்பதாய் சொன்ன இடத்தில் சரோஜா சுருண்டு படுத்திருந்தார்.
“என் பொண்ணு, என் பொண்ணு…” என்று அவர் சொல்லிக்கொண்டே இருக்க வந்ததுமே மீரா அவரை பரிசோதித்தாள்.
“ரெண்டுநாளா எதுவுமே சாப்பிடாம இருந்திருக்காங்க. அவங்களுக்கு அதுதான் மயக்கமா இருக்கு. ஆனா அவங்களா தூங்காம இருக்காங்க. கஷ்டப்படுத்திக்கறாங்க…” என்று சொல்லியவள் தன்னிடம் இருக்கும் மருந்துகளை ஆராய்ந்தாள்.
சரோஜா அந்த தூணை கட்டிக்கொண்டு படுத்திருக்க இத்தனை வலுவிழந்த உடலில் எத்தனை வலிமை என வியந்து தான் பார்த்தனர்.
“தாய்ப்பாசம். மகளை விட்டு இப்படி கூட பிரிய முடியலை அவங்களால…” என்றாள் மீரா.
“என்ன வேணும்ன்னு எழுதி தாங்க. நான் மெடிக்கல்ல இருந்து எடுத்துட்டு வரேன்…” என தன் வீட்டிற்கு சென்றான் தரணிதரன் சாவியை எடுக்க.
“இந்த புள்ளைக்கு எதுவும் ஆகிருமோ மீரா?…” என பேச்சி கேட்க,
“இருக்காது பெரிம்மா. இன்னைக்கு நைட் பார்ப்போம். இல்லைன்னா எப்படியாவது நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவோம்..” என்றவள் சுவற்றோடு மடிந்து அமர்ந்தாள்.
இன்னும் எத்தனை சோதனைகள்? இதை எல்லாம் எப்படி தாண்டி ராகவியை மீட்க போகிறோம் என்று நடுக்கத்துடன் அமர்ந்திருந்தவள் தலையில் கை வைக்க அதற்குள் தரணிதரன் வந்துவிட்டான்.
“என்ன வேணும்? நான் எடுத்துட்டு வரவா? இல்லை நீங்க வரீங்களா?…” என கேட்டவன்,
“இல்லை, என்ன வேணுமோ நீங்களே வந்து எடுங்க…” என்று சொல்லி அவளை அழைத்து சென்றுவிட்டான்.
நேரம் அதிகாலை மூன்றுமணி இருக்கும். கடையை திறந்து மீரா கேட்கும் மருந்துகள் எங்கே என்று காண்பித்து எடுத்துக்கொண்டு வீடு வந்து உடனடியாக சரோஜாவிற்கு சிகிச்சை ஆரம்பித்தனர்.
அந்த தூணை விட்டு அசையவில்லை அவர். மீராவை பார்க்கும் விழிகளில் பரிதவிப்பு.
தன்னை அழைத்து சென்றுவிட வேண்டாம் என்னும் கெஞ்சல் அதில் நிரம்பி தெரிந்தது.
“உங்களை எங்கயும் கூட்டிட்டு போகலை. கொஞ்சநேரம் தூங்குங்கம்மா…” என்று சொல்ல மெல்ல கண்ணை மூடினார் சரோஜா.
நாச்சியாரும் மருந்தின் உபயத்தில் உறங்கிக்கொண்டிருக்க தரணிதரன் கோபியின் நண்பர்களிடம் பேசினான் எதுவும் தகவல் தெரிந்ததா என்று.
அதைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மாயம் போல எல்லாம் மறைந்திருந்தது.
“தேடி போனீங்களே? என்னாச்சு மீரா?…” என்று கோகிலா கேட்க,
அப்போது தான் அவள் கையில் கட்டப்பட்டிருந்த அந்த கயிற்றை பார்த்தார் கோகிலா.
“இது என்னது?…” என்று அதனை தொட்டு காண்பித்து கேட்க பேச்சியும், மங்களமும் அப்போது தான் அதனை கவனித்தனர்.
கோகிலா கேட்டதும் தரணிதரன் தடுமாறி பார்க்க மீரா அவனை தான் நிமிர்ந்து பார்த்தாள்.
“தரணி என்னன்னு கேட்டேன். எதுவும் பிரச்சனை இல்லையே?…” என்று மீண்டும் கோகிலா கேக்க,
“என்னன்னு சொல்லுங்க தம்பி?…” என்றார் பேச்சி.
“தப்பா நினைச்சுக்காதீங்க ம்மா…” என்ற தரணிதரன் ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லியவற்றை எல்லாம் கூற அத்தனைபேரும் அதிர்ந்து பார்த்தனர்.
இப்படி ஒரு பந்தம் இந்த சூழ்நிலையில் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னணியில் இருந்த எச்சரிக்கையில் மனது பதைபதைத்தது.
“தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. இப்போதைக்கு மீராவுக்கு எந்த ஆபத்தும் வராம பார்த்துக்கனும். எனக்கு வேற வழி தெரியலை…” என்றான் வருத்தம் மேலிட.
“இதுக்கு தான் அந்த மீனாட்சி எங்களை இங்க கொண்டுவந்து விட்டிருக்காளோ? அந்த சாமி போட்ட முடிச்சு. இது தான் விதிப்பயன்னா எனக்கு சந்தோசம் தம்பி. மனசார சொல்லுதேன்…” என்றார் பேச்சி அழுகையினூடே.
“இப்ப இதை எல்லாம் பேச வேண்டாம். ராகவியை முதல்ல கண்டுபிடிப்போம்…” என்று தரணிதரன் சொல்ல மீராவின் மனதிற்குள் பெரும் கேள்வி.
ஒவ்வொன்றாய் யோசித்து யோசித்து பார்த்துக்கொண்டே வந்தவள் மனதிற்குள் சட்டென்று அது பூதாகரமாக எழுந்தது. அவள் யோசிக்கும் பொழுதே,
“கோகிலாக்கா எனக்கு ஒன்னு மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு. எங்கையோ பார்த்திருக்கேன். ஆனா சட்டுன்னு இதுதான், இங்க தான்னு தோணவே இல்லை…” என தன் பின்னந்தலையை தட்டிக்கொண்டே கேட்டான்.
“என்னன்னு சொல்லு தரணி. எனக்கு தெரியுதான்னு பார்ப்போம்…” கோகிலாவும் கேட்க,
“சாமியார் சொன்னாரே, தாமரை மொட்டு, தங்க பஸ்பம். தாமரை விளக்கு. எங்கையோ பார்த்திருக்கேன். ரொம்ப பக்கமா, ரொம்ப பக்கமாவே. என் நேரம், எனக்கு யோசிக்க யோசிக்க அதை எட்டி பிடிக்க முடியலை க்கா…” என்றான் ஆற்றமாட்டாமல்.
“தாமரை விளக்கு. மாலை. தாமரை உருளி..” என மெல்ல மெல்ல சரோஜா குரல் தீனமாய் வெளியே வந்தது.
கோகிலாவும் யோசித்து பார்க்க சரியாய் ஞாபகமில்லை. ஆனால் அவரும் எங்கோ பார்த்ததை போல மங்கலாய் தோன்றியது எதோ ஒரு இடம்.
“தாமரை விளக்கு. தரணி…” என சரோஜா கஷ்டப்பட்டு அழைக்க இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவர் செல்லவில்லை.