“தாமரை மாலை…” என விட்டு விட்டு ஒவ்வொரு எழுத்துக்களாய் சொல்லியவர் கண்கள் கலங்கியது.
“சொல்லுங்கம்மா, மகாவையும் காப்பாத்தனும். மகாவை இப்படி பண்ணினவங்க அவங்க தான். சொல்லுங்க. நல்லா நியாபகப்படுத்தி பாருங்க. ப்ளீஸ்…” என்று மீரா அவரின் கன்னம் தட்டி எழுப்ப முயன்று கதற, சரோஜா கண்ணை அழுத்தி மூடி விழித்தார்.
“உங்களுக்கு தெரியுதா? யாருன்னு தெரியுமா? எங்க பார்த்தீங்கன்னு தெரியுமா?…” என்று கேட்க ‘ஆமாம்’ என தலையசைத்தார் சரோஜா.
“அய்யோ இப்ப என்ன செய்யறது?…” என்று பதறினான் தரணிதரன்.
“முன்னாடியோ நாம சரோஜாக்கிட்ட சொல்லியிருக்கனுமோ?…” என கோகிலா சொல்ல,
“இந்த பாடுபடனும்ன்னு இருக்கோ? தாயே மீனாட்சி…” என பேச்சி வெதும்ப,
“செத்த நவரு. நவரு…” என்ற மங்களம் மீராவின் அருகில் அமர்ந்து,
“இந்தா தண்ணிய முழுங்கு…” என இரண்டு மடக்கு குளிர்ந்த நீரை சரோஜாவின் வாயில் புகற்றி அவரின் முகத்தில் நீர் தெளித்து துடைத்துவிட்டார்.
“எதாச்சும் சொல்லுத்தா. குறிப்பாச்சும் காமியேன் சரோசா…” என மங்களம் சொல்ல மகளை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தவர்கள் என்னும் எண்ணமே சரோஜாவை முயன்று வர செய்தது.
மீராவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை இழுத்தார். மீரா முகம் அவரின் அருகில் நெருங்க இன்னுமே அதனை சுருட்டி இழுத்து காண்பித்தவர் விழிகள் உறக்கத்திற்கு கெஞ்சியது.
கண்கள் மேலே சொருக ஆரம்பிக்க நாவை சுழற்றியவர் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் காற்றில் கலந்தது.
“அக்கா என்ன என்ன சொன்னீங்க? இன்னொருதடவை சொல்லுங்க…” என்று சொல்ல சரோஜாவின் கண்ணில் நீர் வடிந்து மீண்டும் அதனை சொல்லி முழுதாய் முடிக்கும் முன் மயங்கிவிட்டிருந்தார்.
“என்னம்மா? என்ன என்ன புரிஞ்சது?…” என்று பேச்சி கேட்க,
“தெரியலையே பெரிம்மா. இதை விதின்னு சொல்றதா என்னன்னு சொல்ல? என் கையாலையே அவங்க தூங்க மருந்தை குடுக்க வச்சு, அவங்ககிட்டயே நாம தேடறதுக்கான வழியையும் காமிக்க வச்சு. ஐயோ…” என தலையில் அடித்துக்கொண்டவள் வேறு என்ன செய்வது என்று யோசிக்க மூளைக்குள் அத்தனையும் இருளடைந்தது.
அந்த கருமையில் சிறு புள்ளியாய் ஒரு கேள்வி. ‘இதை எப்படி யோசிக்காமல் விட்டோம்?’ என்று தன்னையே நிந்தித்துக்கொண்ட மீரா,
“தரணி நாங்க இங்க வந்தே மூணு மாசம் தான் ஆகியிருக்கு. எங்க குடும்பத்தோட பெருசா யாருக்கும் பழக்கமும் கிடையாது. அப்பறம் எப்படி ராகவியோட ராசி நட்சத்திரம் எல்லாம் யாருக்கோ தெரிஞ்சது?…” என்று படபடவென்று கேட்க தரணிதரன் திகைத்து பார்த்தான்.
“மகாவுக்கு தெரியுதுன்னா அது வேற. அவ ஆன்மா. அவளால சொல்லாமையே உணர முடியும். ஆனா…” என்று மீரா கேட்கவும்,
“இதை தான் இதையே தான் நானும் யோசிக்கறேன். எப்படி?…” என்றான் அவனும் பரபரப்புடன்.
எங்கே ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கான விடை கிடைத்ததை போலிருந்தது அவனுக்கு.
தன்னை குடைந்துகொண்டிருந்த அந்த விடையில்லா கேள்விக்கு பதில் இங்கே ஒளிந்திருந்தால்?
“அது தெரிஞ்சிட்டா போதும்….” என்று மீரா கழுத்தில் கிடந்த சங்கிலியை யோசிக்க,
“சரோஜாக்கா என்ன சொன்னாங்க?…” என மூளையை தட்டி அந்த வார்த்தைகளை கோர்க்க,
“சரோஜாக்கா காமிச்ச தங்க சங்கிலி. சாமியார் சொன்ன தங்க பஸ்பம். ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்கு மீரா…” என்று தரணிதரன் சொல்ல பேச்சியின் முகம் அதிர்ந்து வெளிறியது.
“சா ரூபா. சாரூபா…” என சரோஜா சொல்லியதில் தனக்கு கேட்டதை மீரா சொல்ல,
“சாரூபாவா? இந்த வார்த்தையை அவங்க முழுசா சொல்லலை. ஆனா இதுக்குள்ள தான் இருக்கு…” என்று தரணிதரன் சொல்லவும்,
ஆமா, அதே தான். அங்கே தான் அவர்கள் அந்த தாமரை மொட்டு மாலையை பார்த்திருந்தனர்.
அகன்ற அலங்கார தங்கத்தினாலான தாமரை போன்ற வடிவில் பெரிய உருளியில் நீர் ஊற்றி அதில் குங்குமம் சேர்க்கப்பட்டு மலர்ந்த தாமரை இதழ்களின் மேல் விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கும்.
அதை தான் லக்ஷ்மி கடாட்ஷம் என்பார் அதன் அதிபர் காஞ்சனமாலா. சாதரூபம் கொல்லத்தில் இரண்டு இடங்களில் பிரமாண்டமான நகைமாளிகை. அங்கே பிரசித்தி பெற்றதும் கூட.
தொண்டைக்குள் என்னவோ அடைபட்ட உணர்வு. தரணிதரன் அகன்ற சிவந்த கண்களால் பேச்சியை பார்க்க,
“தரணி தம்பி சொன்னதா சொல்லவும் இன்னுமே நல்லா பேசுச்சு. ராகவிய பக்கத்துல நிப்பாட்டி என்ன படிக்கிறது என்னன்னு வெவரம் கேக்க பேச்சுவாக்குல அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு சொல்லி அவக புருசென் கைரேக பாப்பாருன்னு சொல்லுச்சு…”
“நமக்கு நேரங்காலந்தேன் சரியில்லையே? நல்லவகளாவும் இருக்காகன்னு என்னன்னு அவளுக்காச்சும் என்ன அமையும்ன்னு பாக்கட்டும்ன்னு நின்னேன். அப்பத்தேன் எல்லாத்தையும் சொன்னேன் கண்ணு…” என்றார் பேச்சி தலையில் அடித்துக்கொண்டு.
“ஏம்மா அம்புட்டு பேச்சு பேசுத? யாரு கேட்டாலும் புள்ளை ராசி, நட்சத்திரத்த சொல்லிருவியா? கைய வேற பாக்க விட்டிருக்க….” என மங்களம் பிடித்து பேச்சியை பேச,
“இல்ல மங்களத்தம்மா. அவங்க எம்மேல உள்ள நம்பிக்கையில சொல்லிட்டாங்க…” என்ற தரணிதரன் மனதளவில் வெகுவாய் தொய்ந்து போனான்.
“யாரை சொல்லியும் எதுவும் பிரயோஜனமில்லை. இது நடக்கனும்ன்னு இருந்திருக்கு. அடுத்து என்ன செய்யன்னு ஆகறதை பாருங்க. அழறதை நிப்பாட்டுங்க…” என்று சத்தம் போட்டார் கோகிலா.
“அய்யோ சாமி. என்னய்யா என்ன வார்த்த பேசுத? நீ அறிஞ்சா செஞ்ச?…” என தரணிதரன் கையை பிடித்துக்கொண்டு பேச்சி சொல்ல,
“தரணி ப்ளீஸ். நீங்க இதை யோசிக்காதீங்க. முதல்ல அவங்களை பத்தி இன்பார்ம் பண்ணுவோம்…” என்று மீரா சொல்லவும் உடனடியாக பூச்சியப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடுதல்படை இன்னும் தீவிரமாகி சாதரூபம் நகைக்கடையையும், அதன் முதலாளிகளான காஞ்சனமாலா, கிருஷ்ணன் இருவரையும் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
அந்தநேரமே கடையையும், வீட்டையும் சோதனை போட அங்கே ஒருவருமில்லை.
மறுநாள் மாலை வரை அவர்கள் எங்கே என்று கண்டுபிடிக்கமுடியாமல் மீண்டும் ஸ்ரீசக்திவித்யாதரனிடம் சென்று நிற்க,
“என்ன காரியம் பண்ணிட்டம்மா? நான் உனக்கு தென்திசையை சொன்னேன். நீங்க எதிர்பக்கமா தேடியிருக்கீங்களே?…” என்று சொல்ல கடைசி நம்பிக்கையும் கரைந்துகொண்டிருந்தது.
“இன்னும் மூன்று மணி நேரம் தான் இருக்கு…” என்று அவர் சொல்ல மீரா செயலற்று பார்த்தாள் அவரை.