மடமடவென அந்த வீட்டின் கதவை தட்ட உள்ளிருந்து சில நொடிகள் அசாத்தியம் மௌனம்.
“கதவை உடைங்க…” என்ற அதிகாரியின் சொல்லில் கதவை உடைக்கும் முன் கதவு திறக்கப்பட்டது.
“யார் நீங்க? இந்த நேரம் என்ன வேணும்?…” என்றார் ஒரு வயோதிகர் மலையாளத்தில்.
“நீங்க தான் அச்சுத்கனா?…” என கேட்டு மடமடவென வீட்டினை சோதனை போட உள்ளே அனுமதியின்றி நுழைந்துவிட்டனர்.
தரணிதரனும், மீராவும் எதிர்பார்ப்புடன் பார்க்க அங்கே எந்த மாற்றமும் இல்லை.
வீடு வெகு சாதாரணமாக மற்றவர்கள் வீட்டில் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது.
அந்த வீட்டில் இருந்த அச்சுத்கன் நம்பூதிரி எனப்படுபவரிடம் விசாரணை மேற்கொள்ள சாதரூபம் அதிபர் யார் என்றே தெரியாது என்றார்.
எத்தனை கேட்டும் அவர் சொல்லியதையே சொல்ல மீண்டும் மீண்டும் வீட்டை சோதனை போட்டனர்.
மிக சிறிய வீடு. ஒற்றை ஆள் இருக்க போதுமான வசதியுடன் இருந்தது. நள்ளிரவு நேரத்தில் ஓரிருவர் வெளியே வந்து பார்த்து அச்சுத்கன் நம்பூதிரியை பற்றி நல்லவிதமாகவும் சொல்ல மீராவிற்கு மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது.
திடீரென வரம் கொடுத்து கையிலிருந்த வரத்தை பிடுங்கிக்கொண்டதை போல் பரிதவித்த குழந்தையாய் துடிதுடித்து நின்றாள்.
“தரணி…” என்றவள் அவனின் சட்டையை பிடிக்க,
“இங்க வேற யாரும் இதே பேர்ல இருக்காங்களா?…” என கடைசி நம்பிக்கையுடன் கேட்க,
“இல்லை…” என்றார் அவர் பரிதாபமாக.
“சாதரூபம் ஓனர் யாருன்னே தெரியலைன்னு சொன்னீங்க. அப்பறம் எப்படி நீங்க இங்க வீட்டை விக்க போறீங்கன்னு அவர் உங்க வீட்டு மேல ஈசி போட்டு பார்க்க வந்திருப்பார்?…” என மீரா கேட்கவும் அனைவருமே அவரை சந்தேகமாக பார்த்தனர்.
“நான் வீட்டை விக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன். ஒத்தை ஆள், இங்க உறவும் கிடையாது. அதான் வித்துட்டு கடைசி காலத்தை கோவில், குளம்ன்னு யாத்திரைலை கழிச்சுக்க நினைச்சேன். அதனால நிறையப்பேர்கிட்ட வீட்டை விக்கிறதை பத்தி சொல்லிவச்சேன்…” என்றார் அவர்.
அனைவருக்குமே அவர் சொல்வதில் நம்பிக்கை பிறக்க மீராவின் முகத்தில் சுத்தமாய் நம்பிக்கை இல்லை.
“அய்யா ப்ளீஸ் உங்க கால்ல வேணா விழறேன். எனக்கு இதை தவிர வேற வழியும் இல்லை. உண்மையை சொல்லுங்க. என்னோட ராகவி எங்க?…” என்று தளர்ந்து மண்டியிட்டு கைகூப்பி கும்பிட்டு கேட்க,
“மீரா என்ன பன்ற நீ?…” என அவளை எழுப்பினான் தரணிதரன்.
“என்ன பண்ணட்டும் தரணி? என்னால இவர் சொல்றதை நம்ப முடியலை. என் மனசு ஏத்துக்கலை. என்னவோ தப்பு இருக்கு….” என்று கதற,
“நீங்களே தேடி பார்த்தீங்களே? அப்பறமும் இப்படி சொன்னா நான் என்ன செய்யட்டும்? வேணும்னா இங்கயே இருங்க. ஆனா அந்த பொண்ணை தேடிட்டிருக்கற நீங்க இங்க இருந்து காலத்தை கடத்த வேண்டம். அந்த பொண்ணு கிடைக்கட்டும்ன்னு மனசார நான் வேண்டிக்கறேன்…” என்றார் கைகூப்பி.
“நானும் இறைவனுக்கு சேவை செய்யறவன் தான். ஒரு உயிரோட மதிப்பு எனக்கு தெரியாதா? கொடுக்கறவனுக்கு தான் எடுக்கற உரிமையும். அது மனுஷங்க நமக்கு இல்லை. இந்த பொண்ணோட கண்ணீர் எனக்கு கஷ்டமா இருக்கு…” என்றார் மீராவை பார்த்து.
“ஏன்டா பொய் சொல்ற? ஏன் பொய் சொல்ற? நீ சொல்றது நம்ப முடியலையே…” என்ற மீரா,
“தரணி ப்ளீஸ் இன்னொருதடவை உள்ள தேடுவோம்…” என்றாள் மீரா கெஞ்சுதலாக.
காவல்துறை அதிகாரியும் அவளை பரிதாபமாய் பார்த்தார். அச்சுத்கனிடம் மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம் என்று உள்ளே செல்ல ஒவ்வொரு இடத்தையும் பார்த்தாள்.
வீடு முழுவதும் கோவில், பூஜைக்கான பொருட்கள். வேறு எதுவும் சந்தேகத்திற்கு கூட கிடைக்கவில்லை.
சுவற்றை தட்டி தட்டி வேறு எதுவும் உள்ளே வழி இருக்கிறதா என மீரா தரையை கூட தட்டி மிதித்து பார்க்க எதுவும் இல்லை.
பின்பக்கம் குளியலறை மட்டுமே இருக்க அதை முதற்கொண்டு பார்த்து முடித்து ஓய்ந்து போய் வந்தாள் மீரா.
“நாம டைம் வேஸ்ட் பன்றோமோ மீரா. நேரமில்லை…” என்று தரணிதரன் வெளியே அழைத்து வர மீராவின் பார்வையெல்லாம் அந்த நம்பூதிரியிடம் தான்.
“எனக்கும் கஷ்டமா இருக்கும்மா. இந்த கடைசி நேரத்துல உங்களுக்கு எல்லார் மேலையும் சந்தேகம் வரும் தான். ஆனா என்ன பன்றது?…” என்று அவளின் தலையில் ஆசிர்வதிப்பதை போல கை வைக்க போக விலகி நின்றாள் மீரா.
“ஸார் இவனை அடிச்சு விசாரிச்சா ஒருவேளை உண்மை தெரியும்…” என்று காவல்துறை அதிகாரியிடம் மீரா பேச தரணிதரன் அவளின் செய்கையில் மிரண்டு பார்த்தான்.
ராகவி இங்கேயும் கிடைக்கவில்லை என்று மீராவிற்கு எதுவும் ஆகிவிட்டதோ என பயந்து தான் போனான்.
“நீங்க மனக்குழப்பத்தில இருக்கீங்க மீரா. வாரன்ட் இல்லாம எதுவும் பண்ண முடியாது. அது பின்னாடி பிரச்சனையாகும்…” என்றவர்,
“உங்க மன நிம்மதிக்காக வேணும்னா ஒன்னு பன்றோம். நாளைக்கு மார்னிங் வரைக்கும் அச்சுத்கன் வெளில எங்கயும் போகாம வீட்டை காவல் காக்க ரெண்டுபேரை நிறுத்திட்டு போவோம்…” என சொல்ல நம்பிக்கையின்றி பார்த்தாள் மீரா.
“அச்சுத்கன் நாங்க சொல்ற வரைக்கும் நீங்க எங்க கசட்டில தான் இருக்கனும். உங்க போன் எங்க? குடுங்க…” என வாங்கி வைத்துக்கொண்டவர்,
“கான்ஸ்டபிள்ஸ்…” என்று இருவரை முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இருக்க வைத்துவிட்டு கிளம்பினார்.
“இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு…” என்று தரணிதரன் முணுமுணுப்புடன் சொல்ல,
நிர்கதியாய் எதுவுமற்ற நிராயுதபாணியாய் நிற்பதை போலிருந்தது. அதை பார்த்தவனின் நெஞ்சம் பிசைய,
“தேடுவோம். நமக்கு கடைசி நேரம் வரை நேரம் இருக்கே?…” என்றான் அவன்.
“ஹைய்யோ…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழ,
“மீரா, இது அழற நேரமில்லை. புறப்படுவோம்…” என்றவன் கோபியின் நண்பனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு காவல்த்துறை அதிகாரிகளும் கிளம்ப தானும் கிளம்பினான்.
அவனின் பின்னே அமர்ந்தவள் விழிகள் சஞ்சலத்துடன் ஒவ்வொரு இடத்தையும் கூர்மையாக பார்க்க அப்போது தான் அதை உணர்ந்தாள் மீரா.
“தரணி தரணி வண்டியை திருப்புங்க…” என்று பதற,
“என்னம்மா? என்னாச்சு? எதுக்கு?…” என்றான் ஒருபக்கத்தில் காலை ஊன்றி.
“நீங்க திருப்புங்க. இப்ப வந்த வழியே போங்க. ப்ளீஸ். நான் சொல்றேன்ல…” என்று சொல்ல,
“என்னான்னு சொல்லாம?…” என்றாலும் அவள் சொல்லியதை செய்தான் தரணிதரன்.
வந்தவழியில் மீண்டும் ஒரு பயணம். அச்சுத்கன் நம்பூதிரி வீட்டை நெருங்க நெருங்க மீராவின் கையில் தரணிதரனால் கட்டப்பட மஞ்சள் ரக்சை கொஞ்சம் கொஞ்சமாய் இறுகியது.
இதை முதலில் செல்லும் பொழுது மீரா உணரவே இல்லை. இப்போது கண்டுகொண்டவள் விழிகள் பெரிதாக,
“ஸ்ரீசக்திவித்யாதரன் சொன்னது எத்தனை பெரிய உண்மை….” என்றாள் அவனிடம்.
“தரணி நாம வந்தது சரிதான். அந்த அச்சுத்கன் தான் ஏமாத்தி இருக்கான்…” என்றவள் தன் கையில் உணர்ந்ததை சொல்ல,
“இதை நீ அப்பவே கவனிக்கலையா மீரா?…” என இன்னும் வேகமாய் சென்றவன் பார்வையில் தூரத்தில் யாரோ அச்சுத்கன் வீட்டின் பின்பக்கம் நடந்து செல்வது தெரிந்தது.
“மீரா அங்க பாரு…” என்று வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டான்.
————————————–
ராகவியின் கழுத்தில் மாலையிடப்பட்டு அமர்த்தி வைத்திருக்க அத்தனை விளக்குகள் மத்தியில் ராகவியின் அருகில் மிகப்பெரிய பானையில் தங்கபஸ்பம் தடதடவென கொதித்துக்கொண்டிருந்தது.
கைகள், கால்கள் கட்டப்பட்டு மீரா வெறித்த பார்வையுடன் அதனை பார்த்திருந்தாள்.
“சக்திக்கு சக்தி சேர்க்க சக்திவாஹினியா அந்த காளிதேவியே உன்னை அனுப்பியிருக்காம்மா. எல்லாம் எங்கள் அதிர்ஷ்டம்…” என்றார் காஞ்சனமாலா.
கருப்பு நிறத்தாலான உடையில் பார்க்கவே அத்தனை அச்சமூட்டும் விதமான முகபாவனை.
“என்ன பார்க்க? தேடி வந்து சாகறதுக்குன்னு இந்த ஊருக்கு வந்திருக்கீங்க நீயும், ராகவியும். உங்களை தான் கஷ்டப்பட்டு தேடிட்டிருந்தோம். நீங்களே வந்துட்டீங்க…” என்றவர் மீராவின் பார்வையில்,
“எங்க கடையில உனக்கும், அந்த பொண்ணுக்கும் சேர்த்தே சின்னதா தங்கத்துல சிலை செஞ்சு நெய்வேத்தியம் பன்றோம். உனக்கு வேற எதுவும் ஆசை இருக்கா? சாகறதுக்குள்ள சொல்லிட்டா அதை நிறைவேத்திடுவோம்….” என்றார் இளக்காரமாக.
“இப்படி இரக்கமே இல்லாம சின்ன சின்ன குழந்தைங்களை பலி குடுக்கற நீங்களாம் மனுஷங்களா?…” என்றாள் சீற்றத்துடன்.
“என்னைக்கா இருந்தாலும் சாக போறவங்க தானே? இதுல என்ன குறைஞ்சிடுவாங்க?…” என்று காஞ்சனமாலா அவ்விடம் அதிர சிரிக்க,
“இன்னைக்கு இத்தனை பேர் உயிரை எடுக்கற நீங்களும் நாளைய பிணங்கள் தான். இன்னைக்கே செத்துட வேண்டியது தானே?…” என்றாள் மீரா சீற்றம் குறையாமல்.
“காஞ்சனா. அனாவசிய பேச்சை வளர்க்காதே….” என்ற உறுமலுடன் கொழுந்துவிட்டு எறிந்த அக்கினியின் முன் வந்தமர்ந்தார் அச்சுத்கன் நம்பூதிரி.
“இங்க நாங்க நினைக்கிற விஷயம் நிறைவேறினதும் உன் கூட வந்தவன் உயிர் அங்க பிரிஞ்சிரும்…” என்று சொல்லிய அச்சுத்கன் மந்திரங்களை உச்சாடனம் செய்ய தாமரையில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளின் பிரகாசம் இன்னும் மேம்பட்டது.
அதிகமாய் ஜொலித்த அந்த ஜோதியின் நடுவில் ஒலித்த ஓலங்கள் மீராவின் காதில் இரைய சட்டென அந்த இடமே மஞ்சள் வண்ணமாய் தங்கத்தில் ஜொலித்தது.