பூச்சியப்பனின் முன்னால் நின்ற காவலர் தலைகுனிந்து நிற்க அவன் முகத்தில் கோபத்தின் உச்சம்.
“ஒருத்தரை சந்தேகப்பட எத்தனை தான் எவிடென்ஸ் தேவைன்னாலும் சில நேரம் நம்ம உள்ளுணர்வு ஒன்னு சொல்லும். அதுக்கு கொஞ்சமாவது மதிப்பு குடுக்க வேண்டாமா?…” என்றவனின் கேள்வியில் செய்வதறியாது பார்த்தார் காவல்துறை ஆய்வாளர்.
“நான் வர நேரமாகிடும்ன்னு தானே உங்களுக்கு இன்பார்ம் பண்ணி இங்க கவனிக்க சொன்னது? இப்படி கோட்டை விட்டுட்டீங்களே?…” என எரிந்து விழுந்தவன் அங்கே முதலுதவி செய்யப்பட்டவர்களை எழுப்பும் முயற்சியை திரும்பி பார்த்தான்.
அச்சுத்கன் நம்பூத்ரியின் வீடு அது. அங்கே காவலர்கள் இருவரும் மயக்கத்தில் இருக்க எத்தனை முயன்றும் எழுப்ப முடியவில்லை.
“முதல்ல அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேருங்க…” என்று சொல்லிய பூச்சியப்பன் தன் தொடையை தட்டியபடி யோசித்தான்.
தரணிதரன், மீராவிடம் வந்துகொண்டிருப்பதாக சொல்லியவன் வரும்முன் விசாரணையை முடித்துக்கொண்டு திரும்பியிருந்த காவலர்களை எதிர்கொள்ளும் பொழுது தான் மீராவும், தரணிதரனும் அவர்களுடன் வராததே தெரிந்தது.
“வேற எங்கையும் போயிருப்பாங்களோ?…” என பூச்சியப்பனிடம் தாமஸ் கேட்க,
“இல்லை தாமஸ். திரும்பவும் இவங்க அங்கயே போயிருந்தா?…” என்ற சந்தேகத்தில் நம்பூதிரியின் வீடு வந்தால் அது ஊர்ஜிதமாகியிருந்தது.
“எவ்வளோ கேர்லெஸ்? நீங்கலாம் என்னன்னு வேலைக்கு வந்து சேர்ந்தீங்க?…” என கோபத்தில் அவர்களை பிடித்து ஏறிவிட்டான்.
“அத்தனைதடவை மீரா சொல்லியிருக்காங்கன்னா யோசிக்க வேண்டாமா? நம்மளையும் மீறிய ஒரு விஷயம் நடந்திட்டிருக்கு. எல்லாரையுமே சந்தேக கண்ணோட்டத்துல பார்த்து தான் ஆகனும். இங்க காவலுக்கு போடறதுக்கு பதில் விசாரணைன்னு அந்தாளை கூட்டிட்டு வந்து ஸ்டேஷன்ல உக்கார வைக்க முடியாதா?…” என்றவனுக்கு ஆத்திரம் மட்டுப்படவே இல்லை.
அந்த வீட்டை மீண்டும் மீண்டும் அலசி பார்த்துவிட்டான். அத்தனை சுத்தம். எந்தவித குறிப்பும் இல்லை.
“நாங்களும் தேடிட்டோம் ஸார்…” என்ற காவல்துறை ஆய்வாளரை முறைத்தவன்,
“திரும்ப திரும்ப தேடறதால தப்பில்லை. கண்டிப்பா ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். தேடுங்க…” என்று சொல்லியவன் பார்வை பூஜையில் இருந்த அந்த மலரின் மேல் பதிந்தது.
“இது…” என்று அதை தொட போனவன் கைகளை பின்னிழுத்தான்.
பூஜையில் விளக்குகள் எரிந்துகொண்டிருக்க அதன் அருகில் சிறிய உருளியில் அல்லி பூ. அதுவும் ஒரே தண்டில் மூன்று மலர்கள்.
“தாமஸ்…” என்றழைத்தவன் தனது கைகுட்டையை கையில் சுற்றி அதனை எடுத்துவிட்டான்.
“தாமரை பூ ஸார்…” என தாமஸ் சொல்ல,
“ப்ச், இல்லை. தள்ளி வச்சு பார்த்தா தாமரை மாதிரியே இருக்கு. ஆனா இது அல்லி. ம்ஹூம், இல்லை. ரெண்டும் இல்லாம புதியவகை பூ. ஆனா ஒரே தண்டுல எப்படி மூணு பூ? அதுவும் ரொம்ப வித்தியாசமா இருக்கே?…” என்றான் அதை பார்த்தபடி.
தாமரை பூ வண்ணத்தில் மலர்ந்திருந்த அந்த அல்லி மலரின் நடுவில் அடர்ந்த நீல வண்ணத்தில் சங்கு வடிவம் கொண்ட சிறு மொட்டு. அதை சுற்றி மஞ்சள் மரகந்த தூள்கள்.
“இப்படி ஒரு பூ இருக்கா?…” என்று தாமஸ் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க அதற்குள் பூஜை மேடையின் பின்னால் ஒரு பாதத்தின் காய்ந்தும் காயாத ஈரச்சுவடுகள்.
“தாமஸ், இதை கவனிக்கலையா? யாரோ கொஞ்சம் முன்னாடி தான் போன மாதிரி இருக்கு….” என்றவன் அந்த பக்கம் பார்க்க முன்னால் பின்னால் இருந்த கதவுகளை தவிர்த்து பெரிதாய் வைத்திருந்த அந்த பூஜை மேஜையின் பின் என்னவோ தெரிந்தது.
“இதை நகர்த்துங்க…” என்றவன் சொல்ல அவை அப்புறப்படுத்தப்பட்டது.
அந்த மேஜையின் பின்னால் நான்கைந்து முறை தள்ளியதும் ஒரு கதவு திறந்துகொண்டது.
சிறு திறப்பான். அத்தனையும் மஞ்சளும், சாமி புகைப்படங்களும் என்று அலங்கரித்திருக்க நிச்சயம் அதை கதவு என்று சொல்லவே முடியாது.
“கிரிமினல் மைன்ட்…” என்றபடி பல்லை கடித்தவன் அதற்குள் இறங்கி செல்ல வீடுகளை கடந்த ஆள் நடமாட்டமில்லாத நீண்ட பாதை சவுக்கு தோப்பை காண்பித்தது.
“இந்த வழியா தான் போயிருக்கனும். தேடுங்க தாமஸ். ஒருவேளை மீராவும், தரணிதரனும் கூட அவங்கட்ட மாட்டியிருக்கலாம்…” என்றபடி முன்னேறினான்.
கையில் இன்னும் அந்த அல்லி மலர் இருக்க மூளைக்குள் ஒரு யோசனை. அப்படி இருந்தால்?
“தாமஸ் இங்க பக்கத்துல பூ பூக்கற குளம் எங்கன்னு பாருங்க…” என்றான் பூச்சியப்பன் அந்த நடுநிசியில்.
“ஸார் இங்க பக்கத்தில எப்படி ஸார் நல்லதண்ணி குளம்? இது ஸீ ஷோர்…” என்று சொல்ல,
“இல்லை இங்க இருக்கனும். அதுவும் இப்படி ஒரு அரிய பூ. அதை பறிச்சி சாமிக்கு வச்சிட்டு தான் அந்த ஆசாமி போயிருக்கான். இந்த பூவுல ஏதோ விசேஷம் இருக்கனும்…” என்றபடி சுற்றிலும் பார்வையை விட அந்த பூவின் வாசம் நாசியில் என்னவோ செய்தது.
“இந்த ஒத்த பூவே இவ்வளோ மணமா?…” என தாமஸ் கேட்க,
“க்விக் தாமஸ். இதை யோசிக்க நேரமில்லை. மீரா சொன்ன நேரத்துக்கு இன்னும் சில நிமிஷங்கள் தான் இருக்கு. எனக்கு என்னமோ இங்க பக்கம் தான்னு தோணுது….” என்றவன் அனைவரையும் துரிதப்படுத்த அவர்கள் தேடிய அந்த குளம் தென்பட்டது.
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு அதற்கு இரண்டுபேர் காவலிருக்க நெருங்கிவிட்டனர் காவல்துறையினர்.
வந்தவர்களை உள்ளே விடமுடியாது என அந்த முரட்டு தடியாள் இருவரும் மறுக்க பூச்சியப்பன் விட்ட அறையில் பூச்சி பறக்க பார்த்தனர்.
“கொன்னுடுவேன் ராஸ்கல். யாரோட தோட்டம்டா இது?…” என்று கேட்டான் பூச்சியப்பன். அடித்த அடியில் அவர்கள் ஒருவரின் பெயரை சொல்ல,
“ஸார் அந்த கிருஷ்ணனோட தம்பி தோட்டம் இது…” என்றான் தாமஸ்.
“அச்சுத்கன் நம்பூதிரி எங்க?…” என்று கேட்க அங்கே தீனமான குரலும், என்னவோ உருளும் சப்தமும்.
“தாமஸ் அங்க போய் பாரு…” என்று சொல்லி திரும்ப தூரத்தில் அந்த குளமும், குளம் நிறைய மலர்களும் ஜொலித்தது.
அங்கே தீப்பந்தம் ஒன்றை நட்டு வைத்திருக்க அதன் பிரதிபலிப்பு நீரில் பட்டு வெளிச்சம் தர,
“அங்க போய் பாருங்க…” என்றான் பூச்சியப்பன்.
“ஸார் தரணிதரன்…” என்றான் தாமஸ் ஓடி வந்து.
அங்கே அடித்து கட்டி வைத்திருந்தனர் தரணிதரனை. தலையிலும், முகத்தில் நல்ல காயம்.
“தரணி மீரா எங்க?…” என பூச்சியப்பன் கேட்க, பதில் பேச முடியாமல் தரணிக்கு கழுத்து எல்லாம் இறுகியது.
“மீரா எங்க?…” என்று மீண்டும் அவனை ஆசுவாசப்படுத்தியவன்,
“தாமஸ் அவனுங்களை சாத்தி விசாரிங்க. சீக்கிரம்…” என்று சொல்ல தாமஸ் அங்கே விரைந்தான்.
“எழுந்திரிங்க தரணி…” என்றவனிற்கு தண்ணீர் தந்து எழுப்ப தரணிதரன் மனமெங்கும் மீராவின் நினைவு.
“மீரா சொல்லவும் நம்பூதிரி திரும்பி வந்திட்டிருந்தோம் ஸார். அவன் வீட்டுக்கு வரதுக்குள்ளவே இந்த காட்டை நாங்க க்ராஸ் பண்ணும் போது அந்த நம்பூதிரியை பார்த்துட்டோம். பின்தொடர்ந்து வந்தப்போ தான் இப்படியாகிருச்சு…” என்று எழுந்து நின்றவன் நேரத்தை பார்த்தான்.
“இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு…” என்றவன் பூச்சியப்பனோடு வெளியில் வர,
“ஸார் என்ன செஞ்சும் வாயை திறக்கமாட்டேன்றாங்க…” என்றான் தாமஸ்.
“சொல்லலைன்னா உயிரோட தீயை வச்சி விடுங்க. குற்றத்துக்கு அதுவும் நரபலிக்கு துணை போற யாரும் உயிரை வச்சிட்டு இருக்கனும்ன்னு அவசியமில்லை…” என்று பூச்சியப்பன் சொல்ல,
“ஸார்…” என்றொரு சத்தம் தூரத்தில் குளத்தின் அருகில்.
“தாமஸ் இவனுங்களை முடிச்சிடு வாங்க. ஆக்ஸிடென்ட்ன்னு சொல்லி கேஸை பார்த்துக்கலாம். விசுவாசிங்க இந்த உயிரையும் அவனுங்களுக்கே குடுக்கட்டும்…” என்றதும் அந்த இரு காவலாளிகளும் பதறிவிட்டனர்.
“ஸார் ஸார் சொல்லிடறோம் ஸார்…” என்று சொல்லி குளத்தை பார்க்க,
“அப்ப விஷயம் அங்க தான் இருக்கு. நீ சொல்லவே வேண்டாம். நாங்க பார்த்துக்கறோம்…” என்று பூச்சியப்பன் நகர,
“நீங்க போனாலும் அந்த பாதையை கண்டுபிடிக்க முடியாது ஸார். நாங்க சரணடையிறோம். எங்களை உயிரோட விட்டுடுங்க…” என்று கெஞ்ச,
“சொல்லுடா, எங்க மீரா? எந்த இடத்துல பூஜை நடக்குது?…” என்று பூச்சியப்பன் ஒரு அறை விட,
“அந்த குளத்துக்குள்ள தான்…” என்றனர் அவ்விருவரும்.
“என்ன விளையாடுறியா?…” தரணிதரன் கோபமாக,
“நிஜமாவே தான். நிஜமாவே. நான் காமிக்கறேன்…” என்றான் அவர்களில் ஒருவன்.
“இங்க பூஜை நடக்குதுன்னு எப்படி யாருக்கும் தெரியாம போச்சு? அதுவும் இத்தனை வருஷம்? நூத்தி எட்டு குழந்தைங்க…” என்ற பூச்சியப்பன் வேக ஓட்டத்துடன் அதனை நெருங்கிவிட்டான்.
கொடியுடனான மலர்கள் படர்ந்த அந்த குளத்தில் சொன்ன சின்னதாய் கற்கள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்க அந்த இருவரில் ஒருவன் புற்களை தள்ளி ஒரு பட்டனை தட்ட அந்த கற்கள் நீண்ட படியாய் மாறியது.
“தாமஸ் எல்லாமே வீடியோவா ரெக்கார்ட் பண்ணுங்க. கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணனும்…” என்று சொல்லி அந்த இருவரை முன்னே நடக்கவிட்டு தரணிதரனுடன் பூச்சியப்பன் செல்ல குளத்தின் ஐந்தாம்படியில் கால் வைத்தனர்.
அதுவரை குளத்தில் தண்ணீர் இருக்க அந்த படியின் அழுத்தத்தில் அலங்காரம் போல் படர்ந்திருந்த சங்கு பூ கொடியின் பின்னால் என்னவோ திறக்கும் சப்தம்.
அதனை விலக்கி நுழைய அறை போன்ற காட்சி. அனைவருமே உள்ளே செல்ல செல்ல பாதை நீண்டது.
விளக்குகள் எரிந்துகொண்டிருக்க அடுத்த கதவு திறக்கப்பட அங்கே நிகழ்ந்ததை பார்த்தவர்களின் உயிர் ஒருநிமிடம் நின்று ஸ்தம்பித்தது.
——————————————————
மீராவின் விழிகளில் நொடிக்கு நொடி வேதனைக்கு நிகராய் ஆவேசம் பெருக அதை கண்ட காஞ்சனாவின் முகத்தில் இகழ்ச்சி புன்னகை.