அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்து இருந்தாலும் வெளியே அந்த குற்றத்திற்கு துணை போனவர்களை எல்லாம் காவல்துறையினர் விசாரணை வைத்து கைது செய்தனர்.
மகாவின் வழக்கு மட்டுமல்ல, காணாமல் போன அத்தனை பெண்குழந்தைகளின் வழக்கும் மறுவிசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
அனைத்திற்கும் காரணமானவர்களின் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியது.
அதில் பூச்சியப்பனின் பங்கு பெரிது. ஒருவரையும் விடவில்லை. தங்களுடைய துறையில் இருந்தவர்கள் முதற்கொண்டு கூண்டில் நிறுத்திவிட்டான்.
மாநிலத்தையே புரட்டிபோட்டது அந்த வழக்கு. நூத்தி எட்டு கொலைகள். எவரின் பார்வைக்கும் உறுத்தாமல் செய்திருக்கின்றனர்.
நரபலி கொடுத்து அந்த உடல்களை தாமரை குளத்தை சுற்றி புதைத்திருந்தனர். அதையும் கண்டுபிடித்தாகிற்று.
அன்று வழக்கின் தீர்ப்பு. குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக வழங்கப்பட்டிருந்தது.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு நீதிமன்றத்தில் இருந்து கிளம்பினான் பூச்சியப்பன்.
செல்லும் வழியில் அவன் நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுக்க அவன் எடுத்ததுமே தீர்ப்பு பற்றி சொல்ல,
“எங்கண்ணே? கடைசி நேரம் தான் நாங்க போய் சேர்ந்தோம். அதுக்குள்ள அவ்வளோ கலவரமும் நடந்திருச்சு. அப்படியே உடம்பெல்லாம் ஆடிருச்சு…” என்றான் அன்றைக்கு நடந்ததை நினைத்து.
“இறந்த குழந்தைங்களோட ஆன்மா அப்போ தான் சாந்தியடைஞ்சிருக்கும் பூச்சி. அதுக்காக நீ லேட்டா போனதுல தப்பில்லை மேன். உண்மையான தீர்ப்பை அந்த ஆன்மாக்கள் கையில குடுத்து தண்டனை தர வாய்ப்பு தந்திருக்கீங்க. இதைவிட வேற எந்த தண்டனையில அந்த பலியான பிள்ளைங்க நிம்மதியடைவாங்க சொல்லு?…”
“அதானே? உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? என் உதார் எல்லாம் மண்ணா போச்சு மன்னா…” என்று சொல்ல,
“ரொம்ப கதறாதடா. அடுத்த வழக்குல காமிச்சிக்கலாம். ஆமா மீரா எப்படி இருக்காங்க? பேச முடியுதா?…”
“ஹ்ம்ம், பரவாயில்லை போல. இப்ப மீராவை பார்க்க தான் போய்ட்டிருக்கேன். நேர்ல பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன்…” என்றவன்,
“அவங்க ஆவேசமா எரிஞ்ச விளக்கால தான் கழுத்து வெட்டுப்பட்டிருக்கு. அத்தனை விளக்கையும் எல்லா பக்கமும் விசிறி அடிச்சிருக்காங்க. அதுல ஒன்னு அவங்க கழுத்தை பதம் பார்த்திருக்கு….” என்றான்.
“ஹ்ம்ம், எல்லாம் நமக்கும் மீறின சக்தி. குடுத்து வச்சவன் நீ. ஸ்பாட்ல இருந்திருக்க…”
“ஆஹா, நல்லவேளை ஜஸ்ட் மிஸ். இல்லைன்னா நானும் காலி…” என்று சொல்லிய பூச்சி,
“ஆனா இன்னும் மனசே ஆறலை ண்ணா. துடிக்க துடிக்க எத்தனை உயிர்? இவங்க மூடநம்பிக்கைக்கு அவங்க பலியா? இவனுங்களை கண்ணுக்கெதிர வச்சு டெய்லி அடிச்சே கொல்லனும். என்னை சாகடிச்சிடுங்கன்னு கெஞ்ச விடனும். அப்படி ஒரு குரூரமான தண்டனையை குடுக்க முடியாம போச்சே?…” என்றான் பெருமூச்சுடன்.
“சரி சரி. எல்லாம் காரணத்தோட நடந்திருக்கு. அதான் சாமியார் சொல்லியிருக்காரே? பேசாம உனக்கு பொண்ணு எங்க இருக்குன்னு அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுகோ. வசதியா இருக்கும்…” என நெடுஞ்செழியன் கிண்டல் பேச,
“அவமானம், அவமானம். பொண்ணு பார்க்க வேண்டியவங்க இன்னும் சின்னப்பையன், பொறுப்பு வரட்டும்ன்னு சொல்றாங்க. நீங்க ஆணவத்துல பேசறீங்க. இருக்கட்டும். காட்டுப்பூச்சிக்கு ஒரு காட்டுமல்லி கிடைக்காமலா போவா?…” என்றான் சலிப்பும், எதிர்பார்ப்புமாக.
“இப்ப கல்யாணம் நடந்தா தான் அறுவதுல நடக்கும். இல்லைன்னா அதுவும் இல்லை…”
“போதும் நான் ஏற்கனவே டோட்டல் டேமேஜ். மத்ததை ஊருக்கு வரும்போது பேசிக்கறேன். இப்ப ஹாஸ்பிடல் வந்துட்டேன்…”
“ஓகே, நீ மீராவை பார்த்துட்டு சொல்லு. ப்ரீயாகிட்டு நானும் பேசறேன்…” என நெடுஞ்செழியன் அழைப்பை துண்டித்தான்.
அந்த மருத்துவமனைக்குள் நுழையவும் பேச்சி ராகவியுடன் கீழே வரவும் சரியாக இருந்தது.
“வாங்க தம்பி நல்லாருக்கீங்களா?…” என்றார் பூச்சியிடம்.
“நான் நல்லாயிருக்கேன் ம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?…” என்றவன்,
“ஹவ் ஆர் யூ ராகவி?…” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம், ஓகே ஸார்…” என்று சொல்லியவள் விழிகள் உள்ளடங்கி போயிருந்தது.
ஆள் அடையாளமே தெரியாதவிதமாய் உடல் கருத்து, உருகி வெறும் எலும்பு மட்டுமே துருத்திக்கொண்டிருந்தது.
பேச்சி பேத்தியை எங்கும் விடுவதிவில்லை. எங்கு சென்றாலும் தன் கைக்குள் வைத்துக்கொள்கிறார். பயத்தில் அவளுமே யாருடனாவது அண்டி நின்றபடி தான் நாட்கள் கழிந்தது.
இன்னும் அவள் அந்த அதிர்வில் இருந்து முழுதாய் மீளவில்லை. அதற்கு இன்னும் சில நாட்களாகும் என்று சொல்லியிருந்தார் ஸ்ரீசக்திவித்யாதரன்.
நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவிடுவாள் என்றும் சொல்லியிருந்தார்.
இன்று பார்க்கையில் இன்னும் பரிதாபமாய் இருந்தது அவள் நிலை. தலையசைத்து புன்னகைத்தவன்,
“நான் மீராவை பார்க்க வந்தேன். இப்ப எப்படி இருக்காங்க?…” என்றான்.
“கொஞ்சம் முன்னாடிதான் கண்ணு முழிச்சா தம்பி. மேல போங்க. நான் இப்ப வந்திடறேன்…” என்று சொல்லி செல்ல பூச்சியப்பன் வேக நடையிட்டு மேலே சென்றான்.
அங்கே நாச்சியார் அமர்ந்திருக்க மீரா சாய்வாக அமர வைக்கப்படிருந்தாள். கழுத்தில் கட்டு போடப்பட்டு இருந்தது.
நாச்சியார் பேசிக்கொண்டிருக்க ஆமாம், இல்லை என்று தலையசைத்து மட்டுமே பதில் அவளிடம்.
“உள்ள வரலாமா?…” என்றான் பூச்சியப்பன்.
கதவை தட்டும் சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க நாச்சியார் எழுந்துகொண்டார்.
“உள்ள போகலாம் ஸார்…” என்று தரணிதரன் குரல் பூச்சியின் பின்னிருந்து கேட்டது.
“ஓஹ் நீங்களும் வந்தாச்சா தரணி?…” என்று கேட்டபடி இருவரும் உள்ளே வந்தனர்.
“வாங்க தம்பி. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை…” என்றார் நாச்சியார் அவனுக்கு கை கூப்பி.
“இருக்கட்டும் ம்மா…” என்றவன்,
“என்ன மீரா, எப்படி இருக்கீங்க?…” என்றதும் அவள் தலையசைக்க,
“இன்னும் பேசலை. ரெண்டுநாள் போகட்டும்ன்னு சொல்லியிருக்காங்க. பேச்சுக்குழல் பக்கத்துல ஆழமா வெட்டியிருக்கு. அதனால ரொம்ப கழுத்தை அசைக்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க டாக்டர்ஸ்…” என தரணிதரன் பதில் சொல்ல,
“கோர்ட்ல உங்களை பார்த்தேன் தரணி. வழக்கு முடிஞ்சதும் கிளம்பிட்டீங்களே. இப்ப தான் வரீங்க?…” என்றான் பூச்சி.
“ஆமா ஸார், நேரா மகா, சரோஜாக்கா ரெண்டுபேரோட சமாதிக்கும் போய் மாலை வாங்கி போட்டுட்டு கும்பிட்டுட்டு வரேன்…” என்று சொல்லியவன் குரல் கரகரத்தது.
“அதை நானுமே எதிர்பார்க்கலை. சரோஜா அவங்களோட மரணம் இன்னும் வருத்தமா இருக்கு…” என்றான் பூச்சியப்பன்.
மீராவின் ஜீவமரண போராட்டத்தோடு தரணிதரன் மருத்துவமனைக்கு வந்திருக்க அங்கே வீட்டில் சரோஜாவின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்திருந்தது.
“நல்லா தூங்கறாங்கன்னு நினைச்சோம் தரணி. தூங்கிட்டே இருந்தவங்க லேசாய் சிரிச்சுக்கிட்டே மகாம்மான்னு அந்த தூணை இறுக்கி அணைச்சாங்க. என் பொண்ணு. என் பொண்ணை பார்த்துட்டேன். என் பொண்ணு மடில சாய்ஞ்சிட்டேன்னு சொல்லி முணங்கிட்டே இருந்தாங்க. அடுத்து அசைவில்லை…” என கோகிலா அழுதுகொண்டே தரணிதரனுக்கு விஷயத்தை தெரிவித்திருக்க கல்லாய் சமைந்து போனான் அவன்.
“பெத்த பொண்ணோட இத்தனை நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்திருச்சுன்னு தெரிஞ்சுக்காமலே போய்ட்டாங்களா? மகாவோட இறப்புக்கு காரணமானவங்க சாம்பலாகிட்டாங்கன்னு சொல்லி அவங்களுக்கு நிம்மதியை தர நினைச்சேன். அது முடியாதா?…” என்றவன் கண்ணீர் குரலில் கோகிலா இன்னும் சத்தமாய் அழ,
“போகட்டும், பொண்ணு இல்லாம தனியா அவங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தான். மகாவே அழைச்சிட்டு போயிருப்பா…” என்று சொல்லி மனதை தேற்றிக்கொண்டான் தரணிதரன்.
மகாவின் நினைவிடத்திற்கு அருகிலேயே சரோஜாவையும் சகல மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
நடந்து முடிந்த இந்த நிகழ்வுகளில் தாக்கம் பெருமளவு பாதித்திருந்தது அவர்களை.
ஜீரணிக்க நிறையவே சிரமம் மேற்கொண்டனர். ஆனாலும் கடந்து தானே ஆகவேண்டும்.
இதோ கடந்து வந்துகொண்டிருக்க எல்லாம் நினைத்ததை விட வேகமாகவே நடந்துவிட்டது.
இன்னும் ஒருவாரத்தில் மீராவுமே மருத்துவமனையில் இருந்து கிளம்ப வேண்டும்.
பரிபூரணமாக குணமானதும் கிளம்ப ஆயத்தமாகினார்கள். வீடு வந்ததும் மீராவை அழைத்துக்கொண்டு கோகிலாவும், தரணிதரனும் ராகவி, பேச்சியுடன் ஸ்ரீசக்திவித்யாதரனை பார்க்க வந்துவிட்டனர்.
தரணிதரன், மீராவை மனதார ஆசிர்வதித்தவர் ராகவியை அமர வைத்து தைரியம் கூறினார்.
“நடக்கவிருந்தது நல்லவிதமாகவே நடந்தேறியது. இதை போல பல இன்னல் வரலாம். எல்லாவற்றையும் எதிர்க்க மனதைரியம் வேண்டாமா?…” என்று புன்னகையுடன் சொல்ல ராகவி தலையசைத்தாள்.
“உங்க திருமணம் முடிந்ததும் வந்து பாருங்க…” என்றும் மீரா, தரணிதரனிடம் சொல்ல இருவருமே மௌனம் சாதித்தனர்.
“நாங்க பேசறோம் சாமி. கண்டிப்பா கூட்டிட்டு வரோம்…” என பேச்சியும், கோகிலாவும் சொல்ல,
“நல்லது…” என்றார் அவர்.
“அப்பறம் சாமி, இனிமே இந்த மாதிரி மகா புள்ள வராதுல….” என மீண்டும் அவரிடம் கேட்க,
“மகா வந்தாலும் மீராவோட ஆன்மாவோட கலக்க முடியாதும்மா. நான் சொன்னது தான். அந்த சில நாழிகை. அதுக்கு இன்னொரு ஆன்மபலம் அவளுக்கு தேவைப்பட்டது. அதுதான் மீரா. மகாவோட ஆன்மா இளைப்பாறியாச்சு. நீங்க அச்சப்பட அவசியமில்லை…” என்றார்.
பேச்சியின் கேள்விகளுக்கு சளைக்காமல் அவர் பதில் சொல்ல எல்லாம் கேட்ட பின்னர் தான் அங்கிருந்து கிளம்பினார் பேச்சி.
“நன்றி சாமி. வரோம்…” என மீரா கிளம்ப தலையசைத்து விடைகொடுத்தார் ஸ்ரீசக்திவித்யாதரன்.
ஆகிற்று இரண்டுமாதங்கள் இலகுவாய் கடந்துவிட்டது. வெறும் வார்த்தையளவில் மட்டுமே.
கொஞ்சம் கொஞ்சமாய் அந்த நிகழ்வில் இருந்து வெளிவர முயன்றனர். ஆனாலும் எதிர்வீட்டை பார்க்கையில் நெஞ்சை பிசையும்.
அந்த திண்ணையின் வெறுமை சட்டென மனதின் கலக்கத்தோடு கண்ணையும் கலங்கடித்துவிடும்.
அங்கிருக்கும்வரை அதன் நினைவு என்றும் மறையாது. அதற்காக அதனை விட்டு கிளம்பவும் மனதில்லை மீராவிற்கு.
சரோஜாவின் இறப்பு இன்னுமே அவளை பாதித்திருந்தது. மகள் மகள் என்று அவளுக்காகவே வாழ்ந்து, அவளை தேடியே அவரின் உயிரும் பறந்துவிட்டிருக்க, அதனை நினைத்தால் தொண்டை அடைத்தது.
ராகவியும், பேச்சியும் தினசரி அந்த வீட்டின் மாடத்தில் விளக்கை ஏற்றி கும்பிட்டு வருவார்கள்.