“வேற என்னலாம் தெரியும்? சொல்லுங்க கேட்போம்…” என நன்றாக சாய்ந்தமர்ந்து தரணிதரன் கேட்க மீராவிடம் மீண்டும் மௌனம்.
“வீட்டுல நாள் குறிக்க பேசறாங்க. நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன். வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு எல்லாம் சொல்ல தோணலை. எனக்கு வேற வயசாகுது பாரு…” என வெளிப்படையாக அவன் சொல்ல மீராவின் மனதில் சஞ்சலம்.
அதுவரை இருந்த தெளிவு அவளை விட்டு சென்றிருக்க மீண்டும் மனதிற்குள் பரிதியின் முகம் கலங்கலாக.
ஆம், தெளிவில்லாத நிழற்படமாய் தான் தோன்றினான் இளம்பரிதி. அதுவும் இத்தனை நாட்களுக்கு பின்.
மகாவின் விஷயம் அறிந்து மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து பரிதியின் மீதான எண்ணங்கள் அவளை அண்டவே இல்லை.
இதோ இன்று தரணிதரன் பேசும் வரையிலும் கூட அவள் மனதில் அந்த விருப்பம் எழவே இல்லை.
ஆனால் தான் ஒருவரை விரும்பி, அவரிடம் தன்னை ஏற்க கேட்டோம் தானே என்ற எண்ணமே அவளை தயங்க செய்தது.
அப்போது அந்த விருப்பத்திற்கு பெயர் என்ன என அவள் குழம்பியபடி கலக்கமாய் தரணிதரனை பார்த்தாள்.
அவனை மறுக்க காரணங்கள் எதுவுமில்லை. சொல்ல போனால் அப்படி ஒருவன் தன் வாழ்க்கையில் வருவான் என எதிர்பார்த்ததும் இல்லை.
ஆனால் வந்தான். யார் என்று தெரியாத பொழுதே அவர்களை தங்கமாய் பார்த்துக்கொண்டவன்.
அவனை மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் சிறு தடையோடு அவள் தடுமாற மெல்லிய புன்னகை தரணிதரன் முகத்தில்.
“இது போதுமே. நீ வேண்டாம்ன்னு சொல்லலை. அந்த வகையில் எனக்கு சந்தோஷம்…” என்றவன்,
அவன் கேட்டதுமே திடுக்கிட்டு அவள் பார்க்க அந்த அதிர்வே அவள் இதனை எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
“பேச்சியத்தை சொல்லிட்டாங்க. கடைசியா மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின்ல வச்சு பேசினியாமே? நீ கவனிக்கலை. உன் பெரிம்மா நீ பேசினதை கவனிச்சிருக்காங்க. ஆனா தெரியாதமாதிரி இருந்துட்டாங்க…” என்று சொல்ல மீராவின் முகம் கன்றி கண்ணீர் ததும்பியது.
“என்ன மனுஷன் அவர்? பொண்டாட்டியை தவிர மத்த பொண்ணுங்க தொடுகை அவர் மகளை போலன்னு சொல்றார். அப்படி வாழ்ந்தவர் இன்னொரு வாழ்க்கை பத்தி எப்படி யோசிப்பார்?…” என்றான் தரணிதரன்.
மீராவை பதமாய் அது தாக்கி செல்ல நடுங்கும் உள்ளத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.
“நான் உடைச்சே சொல்றேனே? உன்னோடது காதல் எல்லாம் கிடையாது மீரா…” என்றவனை பேச்சற்று பார்த்தாள்.
“ஆமா, உனக்கு இருந்தது குற்றவுணர்வு. உன்னால உங்கக்காவோட மரணம். அவங்க குடும்பம் பரிதவிச்சு நின்னது. குழந்தை தாயை இழந்து நின்னது. அதனால உண்டான உணர்வு. அதை நீ போக்கிடனும்ன்னு உனக்குள்ள ஒரு ஏக்கம்…” என்றவன்,
“அந்த குற்றவுணர்வுக்கு பரிகாரமா தாயில்லாத அந்த குழந்தைக்கு அம்மாவாக நினைச்சிருக்கிற. இதுல எங்க காதல் எல்லாம்? பரிதாபமும், பச்சாதாபமும் தான். நீ செஞ்ச பாவத்துக்கு பதிலா கல்யாணம் செய்ய நினைச்சிருக்க…” என்றவனின் கேள்வியில் ஸ்தம்பித்தவள் மறுகணம் உடைந்துவிட்டாள்.
“மொத்தமா அழுது முடிச்சிடு. மனசும் தெளிவாகும். புத்தியும் தெளிவாகும். இதை நீயே யோசிச்சிருந்திருக்கலாம். தானா எப்பவோ புரிஞ்சிருக்கும்…” என்று சொல்லி சில நிமிடங்கள் சென்று எழுந்துகொண்டவன்,
“உன்னை கட்டாயப்படுத்தலை. என்ன முடிவா இருந்தாலும் வீட்டுல தயங்காம சொல்லிடும்மா…” என சொல்லிவிட்டு,
“அந்த டாபிக் போதும். பிஸ்னஸ் பேசலாம்…” என அந்த வீட்டை சுற்றிலும் பார்த்தான்.
“இந்த ஹவுஸ் ஓனர் வீட்டை விக்கிற ப்ளான்ல இருக்கறார். நான் வாங்கலாம்ன்னு பார்க்கறேன். எந்தளவு உனக்கு க்ளினிக் வைக்க போதுமா இருக்கும்? சொன்னா அதுக்கேத்த மாதிரி ஆல்டரேஷன் ஆரம்பிச்சிடுவோம்…” என்று சொல்லியவனை கண்ணீரை துடைத்துக்கொண்டு முறைத்தவள்,
“இதுக்கு பேர் கட்டாயப்படுத்தறதா இல்லையா உங்களுக்கு?…” என்றாள் மீரா.
அந்த சில நொடிகளில் அவளின் மனதினை எப்படி திசைதிருப்புகிறான் என நன்றாகவே புரிந்தது மீராவிற்கு.
அதனை சொல்லியபடி மென்னகையுடன் தானும் எழுந்துகொள்ள தரணிதரன் முகத்தில் அவள் புன்னகையின் பிரதிபலிப்பு.
“எல்லாம் ஒரு பொதுநலம், அதுல என்னோடது கொஞ்சம் சுயநலம்…” என்று சொல்ல,
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தரணி. வேண்டாம்ன்னு சொல்ல இல்லை. நாள் பார்க்க சொல்றதுக்கு…”
“அப்போ கிளினிக்…”
“உங்க மெடிக்கல் ஷாப்பை டெவலப் பண்ண இது ஒரு யுக்தி…” மீரா சொல்லவும்,
“ஏற்கனவே சொன்னேனே? பொதுநலத்தில் என்னோடது கொஞ்சம் சுயநலம். எல்லாம் காசாச்சே? நாளைப்பின்ன என் பிள்ளைக்குட்டிக எனக்கு என்னப்பா சேர்த்து வச்சன்னு கேட்டுட்டா?…” என கிண்டலுடன் அவன் கேட்க,
“போதும், வேற பேசுங்களேன்….” என்று அந்த பேச்சை சிறு கூச்சத்துடன் தடுத்தவள் மனதில் அவன் சொல்லியதன் சாராம்சம் ஓடிக்கொண்டே இருந்தது.
உண்மை தானே? தன்னுடையது குற்றவுணர்வினால் உருவான உணர்வின் நீர்க்குமிழி.
அது உடையத்தானே வேண்டும்? அதுவும் என்றோ உடைந்திருக்க அதை புரிந்துகொண்டாலும் சட்டென ஏற்க மனதில்லை.
இப்போது தரணிதரன் பேசியதும் திரை விலகியதை போலிருந்தது மீராவின் மனதில்.
அந்த வீட்டின் பெரும்பகுதியையும், அருகில் இருக்கும் காலி இடத்தையும் சேர்த்து சிறிய அளவில் மருத்துவமனை கட்ட முடிவுக்கு வந்தனர்.
அதிலேயே மீராவின் சம்மதம் அவனுக்கு கிடைத்துவிட அவள் சொல்லட்டும் என காத்திருந்தான்.
அடுத்த ஓரிரு மாதங்களில் மீராவும் வெளிப்படையாகவே சம்மதம் தெரிவித்துவிட தரணிதரன் மீராவின் திருமணம் எளிமையாகவே நடந்தேறியது.
திருமணத்திற்கு நெடுஞ்செழியன் பூச்சியப்பனுடன் வந்து கலந்துகொண்டான் மீரா, தரணிதரன் அழைப்பின் பெயரில்.
ரத்தபந்தங்கள் இல்லாத அந்த உறவுகளின் சூழலில் சின்னஞ்சிறிய கூட்டில் ஒரே குடும்பமாய் ஒற்றுமையுடன் ஒருவர் மேல் ஒருவர் பற்றுதல் கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.