“பண்ணனும் பெரிம்மா, எல்லாத்துக்கும் அட்ரஸ் மாத்தனும். அந்த ஆபீஸ் எல்லாம் எங்க இருக்குன்னு பார்க்கனும். டிவி கனெக்ஷன் குடுக்கனும். நிறைய வேலையிருக்கு. ஒன்னொன்னா செய்வோம்…” என்றாள்.
“மெல்லவே செய்யித்தா. மொத கேஸை மட்டும் மாத்து. சமைக்க வேணுமில்ல. மெதுவாவே ஒன்னொன்னா பாரு. நீ பாட்டுக்கு வரிசைக்கா இழுத்துவிட்டுக்காம. இந்த வேலைய முடிக்கவே நாலு நாளைக்கு எந்திக்க ஆவாது…” என சலசலவென பேசிக்கொண்டே வேலையை பார்த்தார் பேச்சி.
“பாட்டி என் ட்ரெஸ், புக்ஸ் எல்லாம் அடுக்கட்டா?…” மீண்டும் ராகவி கேட்க,
“இவ வேற, ஏன்டி? என்ன அவசரம் போகுதுன்னு பறக்கற? எந்த பிளைட்ட புடிக்க போறியாம்?…” என கடிந்தவர்,
“இங்கின எங்களுக்கு என்ன ஒத்தாசை செய்யனுமின்னு எல்லாம் பார்க்க மாட்டியே?…” என பேச,
“விடுங்க பெரிம்மா, அவ போய் செய்யட்டும். ஏதோ ஒரு வேலை முடிஞ்சா சரி…” என மீரா சொல்லவும் ராகவி பேச்சியை பார்த்து பழிப்பு கட்டிவிட்டு போக,
“பார்த்தா எனக்கே வக்கனங்காட்டிட்டு போறத. இரு வாரேன் அந்த வாய ஒடைக்க…” என மீராவிடம் சொல்லி பேத்தியை சத்தமாய் அதட்ட,
“இங்க தான் இருக்கேன். எங்கயும் போவல பாட்டி…” என்றாள் ராகவி உள்ளிருந்து சிரிப்புடன்.
“பார்த்தியா பேச்சை. எப்ப பாரு கூட கூட பேசிக்கிட்டு. கெரகத்துக்கு அவ ஆத்தா வாய் அப்படியே வந்திருக்கு…” என பேச்சி சொல்லவும் மீராவின் விழிகள் மேலெழும்பியது.
பேச்சி சாதாரணமாக சொல்லிவிட்டாலும் பெற்ற மகள் மீதான மனத்தாங்கலும், ஆற்றாமையும் இன்னும் அவரிடத்தில் இருந்துகொண்டு தான் உள்ளது.
குடும்பமாய் செய்த பாதகத்தின் வினையை இவர்கள் அறுத்துக்கொண்டிருப்பதாக அவ்வப்போது பேச்சி புலம்புவதுண்டு.
ஆனால் வைராக்கியம் மிக்க பெண்மணி. இன்றுவரை உறவுகளை சென்று பார்க்க அவர் விரும்பவில்லை.
“என்னத்தா, எம்மூஞ்சில என்ன ஒட்டியிருக்கு? மவள நெனச்சு மருகறேன்னு யோசிக்கிதியோ?…” என்றார் பேச்சி.
“ம்க்கும், அவளுகள நெனச்சு கலங்கினா ஒருவா சோறும் வெசமாவாதா? போடி போகத்தவளே. சோலிய பாரு…” என அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டார் பேச்சி.
இந்த பேச்சுக்கள் மீராவை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என அவரும் அறிந்தது தானே?
அவளின் மனதின் எண்ணம் புரியாதவரா? அன்றைக்கே சொல்லியும்விட்டாள் மீரா.
பேச்சி நினைத்ததை போல தான் மீராவும் தன் நினைவுகளை தூரதேசத்தில் உள்ள உறவுகள் மேல் கொண்டு செல்ல,
“அடடா கொட்டிருச்சு பாரு…” என்ற பேச்சியின் சத்தத்தில் மீண்டு வந்தாள்.
“காலையில தேடின ரவை பாக்கெட். இதுல கட்டி வைக்காம இருந்திருக்காங்க. நான் கிளீன் பன்றேன் பெரியம்மா…” என எழுந்தாள் மீரா.
“ஆமா, இங்க வா இதை செய். அந்த பெட்டியை நாளைக்கு பிரிப்போம். பாத்திரங்களை மட்டும் அடுக்கி வைப்போம். முதல்ல அதை செய்வோம்…” என மீராவை வேறு யோசிக்கவே விடவில்லை அவர்.
விடாமல் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தார். மாலைக்குள் ஓரளவு எல்லாமே முடிந்துவிட்டது.
ஆசுவாசமாய் அமர்ந்தவர்கள் டீயை போட்டுக்கொண்டு வந்து அமர்ந்தனர்.
நாச்சியாரும் எழுந்து வந்துவிட நால்வரும் பேசியபடி டீயை குடித்து முடித்து வீட்டு வாசலுக்கு சென்றனர்.
“நல்லா காத்தோட்டமா விசாலமா இருக்குல….” என்று அந்த திண்ணையில் அமர்ந்தார் பேச்சி.
எதிர்வீடான தரணிதரன் வீட்டு வாசலை மாலை ஒருவேளை பெருக்க வந்திருந்த மங்களம் அவர்களை பார்த்ததும் வந்துவிட்டார்.
“புதுசா குடி வந்திருக்கீங்களா?…” என சிரித்துக்கொண்டே கையில் பெருக்குமாருடன் வந்து நிற்க,
“ஆமாங்க…” என்றாள் மீராவும்.
“வீட்டு வேலைக்கு ஆளு எதாச்சும் வேணுமா? காலையில வாச, கூட்டி, தெளிச்சு கோலம் போட. மேவேலை இதுக்கெல்லாம் வேணுமா?…” என மங்களம் கேட்க,
“இப்போதைக்கு வேலைக்கு எல்லாம் வேண்டாம் ம்மா. தேவைன்னா சொல்றேன்…” என்றாள் மீரா தன்மையாக.
“சரி சரி. இந்த எதுத்தவீட்டுக்கு நான் தான் காலையில, சாய்ந்தரம்ன்னு வாசல கூட்டி கோலம் போடுவேன். அவங்க மெடிக்கலுக்கும் நான் தான். அதான் உங்களுக்கு தேவைன்னா சொல்ல சொல்லி கேட்டேன்…” என்று சொல்லும் பொழுதே பேச்சி எழுந்துகொண்டார்.
“டீய குடிச்சிட்டு செத்த அக்கடான்னு ஒக்கார்ந்தேன். அதுக்குன்னு வாச கூட்ட முடியாம இல்ல. போமா அங்கிட்டு…” என்றவர் தான் தன் வீட்டு வாசலை பெருக்க ஆரம்பிக்க நாச்சியாருக்கு புன்னகை.
“பாட்டிய பத்தி தெரியாம வந்து பேசுதே இந்தம்மா?…” என்றாள் ராகவி நாச்சியிடம் கிசுகிசுப்பாக.
“நானே எட்டூரு வேலையை ஒத்தாளா பார்ப்பேன். எவ்வீட்டுக்கு வேலைக்காம்ல…” என பேச்சி வரட்டு வரட்டு என வாசலை பெருக்க,
“இப்ப என்ன கேட்டுட்டேன்னு இந்தம்மா இம்புட்டு கோவிக்குது. சரித்தேன்…” என்ற மங்களம் நகர போக,
“ம்மா ஒரு நிமிஷம்…” என்ற மீரா அவர் நின்றதும்,
“இங்க பால்க்காரங்க யார் வருவாங்க? பாக்கெட்டா, இல்ல கறந்த பால் ஊத்த வருவாங்களா?…” என கேட்க,
“ரெண்டுமே இருக்கும்மா. உனக்கு எது வேணும்ன்னு சொல்லு நானே வர சொல்லுறேன்…” என்றார் மங்களம்.
“கறந்த பாலுக்கு சொல்லு. அந்த பாசை தெரியாத ஊருல பாக்கெட் பாலுலையே நாக்கு செத்துருச்சு…” அதற்கும் பேச்சி அதட்டி சொல்ல,
“எம்மாடியம்மா, இதென்ன இம்புட்டு பேசறாங்க?…” என மங்களம் வாயில் கை வைக்க மீரா சிரித்துவிட்டாள்.
“கறந்த பாலுக்கே சொல்லுங்கம்மா. எந்த நேரம் வருவாங்க…” என மீரா விவரமாய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள்.
அந்த வீதியில் காய்கறி கடையில் இருந்து எங்கே எதுவெல்லாம் அந்த ஊரில் மலிவாகவும் தரமானதாகவும் விற்கும் என கேட்டு தெரிந்துகொண்டாள்.
மங்களத்திற்கு அத்தனையும் அத்துப்படியாக இருந்தது. எல்லாம் சொல்லி முடிக்க,
“என்ன மங்களத்தம்மா தரணிக்கிட்ட காலையில வாங்கினது பத்தாதுன்னு சாயந்தரமும் வாங்க போறீங்க போல?…” என்று வந்தார் தரணியின் பக்கத்து வீடான கோகிலா.
“அட ஆமா…” என தலையில் கை வைத்தவர்,
“ஆத்தீ வாசல கூட்டாம உன்கிட்ட பேசிக்கிட்டே நின்னுட்டேன். இந்த தரணி பயலுக்கு தெரிஞ்சா மொதல்ல என்னைய வேலையை விட்டு பொண்ணு சொல்லிருவான். சரியான முன்கோவி…” என மீராவிடம் சொல்லிவிட்டு சென்றார்.
கோகிலாவை பார்த்ததும் மீரா சிநேகமாய் புன்னகைக்க அவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அந்த தெருவை பார்த்தாள்.
என்னவோ ஒரு புதிய உணர்வு நூதனமாய். யாரோ தன்னை பார்த்துக்கொண்டே இருப்பதை போலிருக்க மீண்டும் பார்வையை சுழற்றினாள்.
மங்களம் கோலம் போட்டுக்கொண்டிருக்க கோகிலா பேச்சியிடம் பேசிக்கொண்டிருக்க மற்ற வீடுகளில் எல்லாம் ஆள் நடமாட்டம் ஒன்றிரண்டு தான் இருந்தது.
அவர்களும் கவனிப்பதை போல தெரியவில்லை. மிக அருகில் என்னவோ ஒரு இரைச்சல் போலிருந்தது மீராவிற்கு.