உறக்கம் என்பது கண்களை அண்டினால் தானே? பேச்சியின் இன்றைய பேச்சில் மீண்டும் அவர்களின் நினைவு.
அஜிதா, அஞ்சலி, இளம்பரிதி. ஒவ்வொருவரையும் நினைக்கையில் இறுதியாய் பரிதியின் மீதான தன் விருப்பம்.
எப்போதும் போல் மளுக்கென்று கண்ணீரை நிறைத்துவிட்டது அவளின் கண்களில்.
அஞ்சலிக்கென்று தான் அவள் அவனிடத்தில் சென்று தன்னை ஏற்றுக்கொள்ள கேட்டது.
அந்த கூட்டிற்குள் தனக்கொரு இடம் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில், ஏக்கத்தில் நின்றது.
‘உன்னோட தொடுகை மட்டுமில்லை, எந்த பொண்ணோட தொடுகையும் எனக்கு என் பொண்ணு அஞ்சலி தொடறது மாதிரி தான் இருக்கும்’ என்றவனின் பரிசுத்த அன்பு கிடைக்க தன் அக்கா அஜிதா எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும்?
அவளில்லை என்ற நினைவுகள் அவனை அறுத்து குவித்தாலும் அந்த நினைவிலும் அவளுடன் மட்டுமே வாழ்வேன் என்றவனின் மேல் மரியாதை இன்னுமே அதிகமாகியது.
எதற்கு துளிர்த்ததோ இந்த விருப்பம்? ஆனால் மறக்க முடியவில்லை. முதல்முதலாய் மனதளவில் தன்னை யாருமற்றவளாய் அவள் நினைத்தது இளம்பரிதியிடம் இறுதியாய் பேசிய அன்று தான்.
இப்படி ஒரு காதலும், அன்பும் தனக்கு கிடைத்துவிடாதா என நினைக்காத நாளில்லை.
தனது போனை எடுத்தவள் சமூக வலைதளத்தில் அவர்களை தேட குடும்பமாய் அவளின் விழிகளுக்குள் நிறைந்தனர்.
ஆம், குடும்பமாய் தான். அந்த புகைப்படத்தில் அஜிதாவும் சேர்ந்தே இருக்க மீராவின் விழிகளில் இருந்து கண்ணீர் கரைபுரண்டது.
தன் அக்காவின் சிரித்த முகத்தை புகைப்படத்தில் காணும் பொழுது நெஞ்சை கவ்வி கசக்கும் வேதனை தான் மீராவிற்கு.
“ஸாரி க்கா. அஜிக்கா என்னை மன்னிச்சிடு…” என மெல்லிய குரலில் அவள் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்தபடியே இருந்தாள்.
தன் உயிர் மரிக்கும் வரையும் இந்த குற்ற உணர்வு தன்னைவிட்டு அகலாது என ஒவ்வொரு நாளும் வலிக்க உணர்ந்துகொண்டிருக்கிறாள் மீரா.
‘அஞ்சலி பெரிய பொண்ணாகிட்டா. வளர்ந்துட்டா. பரிதி மாமா இப்பவும் அப்படியே இருக்காங்க. என் ஞாபகம் எல்லாம் இவங்களுக்கு இருக்குமா?’ என்று தன் போக்கில் தான் அவளின் சிந்தனைகள்.
பரிதியின் தாய் சுந்தரவல்லியின் மூப்பை கண்கூடாக பார்த்துக்கொண்டிருந்தாள். உடல் நலிந்திருக்க முகம் தொய்வை காண்பிக்க அப்போதும் அந்த கண்களில் எத்தனை தன்னம்பிக்கை.
அது தான் அந்த குடும்பத்தை துவழாமல் வழிநடத்துகிறது என எண்ணியபடி அடுத்த படத்திற்கு சென்றாள்.
ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறையேனும் அவர்களை பார்த்துவிட மாட்டோமா என்னும் ஏக்கம் விருட்சமாய் வளர்ந்துகொண்டே தான் செல்கிறது.
‘திரும்ப என்னை சேர்த்துக்கோங்கன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா ஒரே ஒருதடவை நேர்ல பார்க்கனும். என் அக்கா பொண்ணை ஆசையா அணைச்சுக்கனும். ஒரே ஒரு முத்தம் அவ நெத்தியில குடுக்கனும். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு. ப்ளீஸ்’ என மனதார தன் அக்காவிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள்.
நள்ளிரவு வரை இப்படியே நேரம் செல்ல அமர்ந்தவாக்கிலேயே தலை சாய்ந்து கண்ணயர்ந்திருந்தாள் மீரா.
சுளீரென என்னவோ விழுந்து உடையும் சத்தம் வாசலில் கேட்க பதறி கண் விழித்தாள் அவள்.
வீட்டிற்குள் தான் என்னவோ விழுந்துவிட்டதோ என கண்ணை கசக்கிவிட்டு பார்க்க அந்த சத்ததிற்கும் கேட்காமல் அப்படி ஒரு உறக்கம் உறங்கிக்கொண்டிருந்தனர் மூவரும்.
காதுக்குள் மிக அருகில் அல்லவா கேட்டது அந்த சத்தம். எழுந்து வீடு முழுவதும் சுற்றி பார்த்தவள் உள்ளே எதுவும் விழவில்லை என அமர போக மீண்டும் அதே போல் பலத்த சத்தம்.
“பெரிம்மா…” என பேச்சியை எழுப்ப அவர் அடித்து போட்டதை போல உறங்கிக்கொண்டிருந்தார்.
வாசலில் வெளியே தான் எதுவும் உடைந்துவிட்டதோ? வெளியே மாட்டப்பட்டிருக்கும் விளக்காக இருக்குமோ என கதவை திறந்து வெளியில் வர திண்ணை விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
“எல்லா லைட்டையும் அமத்திட்டேன். நீ தூங்கேல இந்த லைட்டை அமத்திக்கோ. நான் படுக்கறேன்…” என படுத்திருந்த பேச்சியின் குரல் இப்போதும் ஞாபகம் வர,
“இதை அமத்த மறந்துட்டாங்க போல…” என்றபடி இன்னும் வெளியில் கேட்டின் அருகே வந்தாள்.
எதிரிருந்த தரணிதரன் வீடு, அதன் அருகில் இருக்கும் கோகிலாவின் வீடு என பார்வை சுழல தரணி வீட்டின் இடதுபக்கத்தில் தான் மதியம் பார்த்த அந்த பெண்ணின் வீடு என எல்லாவற்றையும் பார்த்தாள்.
வெளியே விளக்குகள் கூட எரியவில்லை. ஊசியை போட்டால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் மட்டுமே.
அந்த வீதியில் பகலில் ஆங்காங்கே சுற்றிவந்த நாய்களையும் இப்போது காணவில்லை.
வீட்டினுள் இருக்கையில் கேட்ட சப்தம் இப்போது வெளியில் வந்து நின்றதும் கேட்கவில்லை.
அந்த வீதியே வெறிச்சோடி இருந்தது. நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் மட்டுமின்றி எந்தவித பிராணிகளின், பட்சிகளின் அரவம் கூட இல்லை.
சற்றுமுன் கேட்டது தனது மனபிரம்மையோ என நினைத்தவள் மீண்டும் வீட்டிற்குள் செல்ல முற்பட துணுக்குற்றது மனது.
கதவை திறந்துகொண்டு உள்ளே திரும்பியவளின் முதுகின் பின் யாரின் பார்வையையோ உணர்ந்தாள் மீரா.
திரும்பி பார்க்க பயந்து முன்னெச்சரிக்கையாய் கதவின் கம்பியை தள்ளி உள்ளே வந்து நின்ற பின்னர் தலையை மட்டும் நீட்டி எட்டி மீரா பார்க்க அங்கே எதுவுமில்லை.
ஆனால் அவளின் தொண்டைக்குழி அச்சத்தில் சுழன்றுகொண்டிருந்தது. அவளறியாமல் எதிரில் இருந்த திண்ணையில் பார்வை பதிய வெறுமை தான்.
ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கதவை சாற்றிய நொடி அந்த திண்ணையில் அந்த வரிவடிவம் மீண்டும் பனிகள் கூடிய உருவமாய் உருவகம் பெற்றது.
சட்டென்ற குளிர் அப்பகுதியை சூழ்ந்து பனியாய் உறைய வைப்பதை போலிருக்க அந்த உருவம் மீராவின் வாசலை தான் வேதனையுடன் பார்த்தது.