எந்த சத்தமும் கேட்காததில் மீரா ஒரு பெருமூச்சுடன் கதவை அடைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
இரு படுக்கை அறைகள் இருந்தாலும் அனைவருமே நடுக்கூடத்தில் தான் பாயை விரித்து படுத்திருந்தனர்.
விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை சரிபார்த்து தானும் ராகவியின் அருகில் வந்து படுத்துக்கொண்டாள் மீரா.
சிறிது நேரத்திற்கெல்லாம் சட்டென வீடே ஜில்லென்றானதை போல ஒரு குளுமை.
போர்வையை இழுத்து போர்த்தியவள் அதிலும் குளிர் தாளாமல் எழுந்து காற்றாடியின் வேகத்தை குறைத்து வைத்தாள்.
“ப்ச், என்ன இது நிம்மதியா தூங்கவும் முடியாம?…” என எரிச்சல் மண்டியது.
புது இடம் என மனதை தேற்றிக்கொண்டாலும் வெகுநேரம் கழித்து தான் உருண்டு பிரண்டு உறங்கவே அவள் ஆரம்பித்தாள்.
சத்தமின்றி மெல்லிய குரலில் ஓசைகள் கேட்டுக்கொண்டிருக்க இன்னும் கண்களை திறக்க முடியாமல் கண்களை சுருக்கினாள் மீரா.
“ஒரு அஞ்சு நிமிஷம் பெரிம்மா. இப்ப தான் தூக்கமே வந்துச்சு…” என மீரா முனக மீண்டும் அதே போலவே கேட்டது.
திடீரென கூச்சல்கள் அதிகமானதை போலிருக்க வெகுநேரமாகிவிட்டதோ என்பதை போல அசைக்க முடியாத உடலை நகட்டி மல்லார்ந்து படுத்து மெல்ல விழிகளை திறந்து பார்க்க எதிரே ராகவி நின்றிருந்தாள்.
“கவி…” என்றவள் மீண்டும் இமைகளை சுருக்கி விரித்து அந்த காட்சியில் விறுட்டென எழுந்துகொள்ள பார்க்க முடியவில்லை. இன்னும் சுற்றிலும் அதே இருள்.
ஆனால் ராகவி நின்ற இடம் மட்டும் கண்களை கூச செய்யும் அளவிற்கு பளிச்சென்ற வெண்ணிலவின் வெளிச்சம். அதுவும் வீட்டிற்குள்.
“கவி…” என அழைக்க முயன்றவளுக்கு குரலும் எழும்பவில்லை.
“ம்மா, பெரிம்மா பாருங்க…” என தன்னை அசைக்க முயற்சி செல்ல எதுவும் முடியவில்லை.
‘என்ன நடக்கிறது?’ என்ற அச்சத்தில் ராகவியை பார்த்தபடி எழ முயன்றாள் மீரா.
“சித்தி…” என்னும் ராகவியின் குரல் பெரிதாய் ஓங்காரமெடுத்து சட்டென மறைந்துவிட வெளிச்சமும் இருளடைய, தன் மொத்த கட்டுக்களும் விடுவிக்கப்பட்டதை போல படாரென்று எழுந்தமர்ந்த மீரா,
“கவி…” என அலறினாள்.
அவளின் சத்தத்தில் அருகில் படுத்திருந்த பேச்சி, நாச்சியார், ராகவி என அனைவரும் விழித்து எழுந்துவிட்டனர்.
“என்னடி மீரா, என்னாச்சுன்னு இப்படி கத்தின?…” என்று பேச்சி பதற மீரா தெப்பமாய் நனைந்திருந்தாள் வியர்வையில்.
உடலின் நடுக்கம் அவளை நிதானப்படுத்தவே இல்லை. உயிரெல்லாம் பதறியது. கண்ணில் நீர் வழிய ராகவியை பார்த்தவளுக்கு பேச்சே எழவில்லை.
‘வீட்டினருக்கு என்ன சொல்ல முடியும்? இப்படி பயம் காட்டிவிட்டால் அவர்களும் பயந்து போவார்களே?’ என யோசித்தவள் பார்வை இன்னும் ராகவியிடமே.
“என்னாச்சு சித்தி உங்களுக்கு?…” என கேட்ட பெண்ணை கைகள் நடுங்க தொட்டு பார்த்தாள்.
“ம்ஹூம்…” என்று மட்டும் தலையசைத்தவள் எதுவும் பேசவில்லை.
“என்னடி, இப்படி வேர்த்து போயிருக்கு? கனவுகினவு கண்டியா?…” என்றார் பேச்சி.
“மீரா என்னம்மா?…” என நாச்சியாரும் கேட்க,
“ஹ்ம்ம் கனவு தான் போல…” என எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவள் கூற மனதோ ‘கனவா அது?’ என்றது.
இல்லையே? அது என்ன அப்படி ஒரு வெளிச்சம். கவி, அவளுக்கு ஏன்? இப்படி ஒரு கனவா? இதுவரை இதெல்லாம் வந்ததே இல்லையே? மனது முழுவதும் இப்படியான சந்தேகமும், பதட்டமும்.
மீண்டும் வீட்டினை சுற்றி பார்த்தாள் மீரா. இன்னும் இருள் பிரியவில்லை. நேரத்தை பார்க்க மூன்றை தொடவிருந்தது கடிகாரத்தில்.
“எந்திச்சு வேற உடுப்பை மாத்திட்டு வா. இப்படியா வேர்க்கும்?…” என பேச்சி அவளை எழுப்ப தலையை அசைத்தவள் எழுந்துகொண்டாள்.
“ஆமா யாரு பேனை குறைச்சு வச்சா?…” என கேட்க,
“நான் தான் பெரிம்மா. ரொம்ப குளிரா இருந்துச்சு…” என்றவளை விநோதமாக பார்த்தார்.
“பேனு முழுசா ஓடுனாலே இங்க வெக்க தாங்கல. அதுக்குத்தேன் ரூமுல உறங்காம கீழ பாய விரிச்சு படுத்திருக்கோம். இந்த கூடத்துல தான் கொஞ்சம் குளுகுளுன்னு இருக்குன்னு. நீ என்னடான்னா குளுருதுன்னு பேனை குறைச்சியா? சரித்தேன்…” என்றார் அவர்.
“அதான் சித்திக்கு வேர்த்திருக்கு போல?…” என ராகவியும் சொல்ல நாச்சியார் எழுந்து சென்று சாமியை கும்பிட்டுவிட்டு வந்தார்.
மீராவும் வேறு இரவு உடையை மாற்றிக்கொண்டு வந்ததும் மகளின் நெற்றியில் விபூதி, குங்குமத்தை பூசிவிட்டவர்,
“தாயே மீனாட்சி என் மகளுக்கு நிம்மதியை குடு…” என வேண்டிக்கொண்டார்.
“அதெல்லாம் மீனாட்சி குடுப்பா. நீயி கம்முன்னு படு….” என நாச்சியாரை அதட்டியவர்,
“யே கவி நீயும் படு…” என பேத்தியையும் கடிந்து படுக்க சொல்லி மீராவின் பக்கம் வந்து அமர்ந்துகொண்டார்.
“ரவையில அக்கா போட்டோவ பாத்தியாக்கும்?…” என கேட்டு அவளின் தலையை வருட மீரா மௌனமாக இருந்தாள்.
“எதையோ நினைச்சிட்டே படுத்திருந்திருப்ப, கனவா வந்திருக்கும். அதான். சரி இன்னும் கொஞ்சநேரத்துல கோழி கூப்புட்டுடும். நீ செத்த உறங்கு. நானும் உம்பக்கத்துல கட்டைய சாய்க்கறேன்…” என்றார் அவர்.
“நீங்க அங்க போய் தூங்குங்க பெரிம்மா…” என்றவளை முறைத்தவர்,
“எல்லாம் எனக்கு தெரியும். கம்முன்னு படு…” என்று அவளை படுக்க சொல்லி மெல்லிய போர்வையை போர்த்தியவர் தானும் அவளை ஒட்டியதை போலவே படுத்துக்கொண்டார்.
“பெரிம்மா இந்த நேரம் வர கனவு பலிக்குமா?…” மெல்லிய குரலில் மீரா கேட்க,
“அப்புடி என்னத்த கண்ட? சொல்லேன்…” என்றார் பேச்சி.
“அதுவா அது அது…” என திணறியவள்,
“மறந்துட்டேனே…” என்றதும் பேச்சி சிரித்துவிட்டார்.
“எது நடக்கனும்ன்னு இருக்கோ அதாம்த்தா நடக்கும். சில நேரத்துல நமக்கு இந்த கனவெல்லாம் குறிப்பு காட்டும். சுதாரிப்பா இருக்கவாக இருப்பாக. அதுக்குன்னு எல்லாமே பலிக்கும்னு எல்லாம் இல்ல…” என்றார்.
“ஓஹ், சரி…” என சொல்லியவளுக்கு இன்னும் உடலில் நடுக்கம் மறையவில்லை.