“ம்க்கும், ஒருத்தன் பேச்சையே தாங்கமுடியாது. இதுல இன்னொன்னா?…” என தோள்பட்டையை இடித்துக்கொண்டார் மங்களம்.
“ஆனாலும் விடறீங்களா நீங்க?…” என்ற கோகிலா தரணியிடம்,
“தரணி இவங்க தான் பேச்சியம்மா. மதுரைக்காரங்க. எதிர்வீட்டுக்கு குடி வந்திருக்காங்க. நேத்து தான் வந்தாங்க…” என அறிமுகப்படுத்தியவர்,
“தம்பி பேரு தரணிதரன். நம்ம தெரு முக்குல மெயின் ரோட்டுல தான் மெடிக்கல்ஷாப் வச்சிருக்காரு…” என பேச்சியிடமும் அறிமுகம் செய்தார் கோகிலா.
“நல்லது தம்பி, இந்நேரத்துக்கு நீங்க காபி கொண்டாறீங்க. பரவாயில்ல. நல்ல புள்ள. இப்படித்தான் இருக்கனும். எம்மவ கூட டாக்டர் தான். இங்க கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு மாத்தலாகி வந்திருக்கா…” என்ற பேச்சி,
“அந்தா நிக்கிதா எம்பொண்ணு. பேரு மீரா…” என தன் வீட்டை நோக்கி காண்பிக்க நைட்டியுடன் கையில் காபி தம்ளரை வைத்துக்கொண்டு நின்றவளை திரும்பி பார்த்தான்.
“நானும் நேத்தே பார்த்தேன் ம்மா. என் கடையில தான் வந்து மாத்திரை வாங்கிட்டு போனாங்க…” என அவன் சொல்லவும்,
“ம்க்கும், இது காபி இல்ல. டீ…” என்று மங்களம் பேச்சியிடம் கூற,
“ஒவ்வாயிக்கு குடுத்ததே தப்புங்கேன்….” என பேச்சி நக்கலாக சொல்ல,
“அடடா இதென்ன பார்த்ததுல இருந்து முட்டிக்கிட்டு இருக்கீங்க?…” என்றார் கோகிலா.
இன்னும் அவர் பேசிக்கொண்டே நிற்க மீரா தன் வீட்டு வாசலில் நின்றபடி அதனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சரி நீங்க பேசிட்டு இருங்க. வேலை இருக்கு…” என சொல்லி தரணிதரன் செல்லவும் மங்களமும் தம்ளரை கழுவி வைத்துவிட்டு நகர்ந்தார்.
“சரிங்கம்மா, நானும் வேலையை முடிச்சிட்டு வரேன்…” என்று கோகிலாவும் செல்ல பேச்சியம்மாள் வீடு திரும்பிவிட்டார்.
மிச்சம் மீதி வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மீரா ராகவியை அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிவிட நாச்சியார் அயர்ந்துவிட்டார்.
“நீயி படுத்து தூங்கு. நான் செத்த நடந்துட்டு வாரேன். எங்கங்க என்ன இருக்குன்னு பார்க்கனும்ல…” என கதவை சாற்றி விட்டு நடக்க கோகிலாவும் மதிய சமையலுக்கு காய்கறி வாங்க வந்து சேர்ந்தார்.
இருவருக்குள்ளும் பேச்சில் ஒரு நெருக்கம் வந்துவிட்டது. கோகிலாவிடம் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துகொண்டு அந்த வீதியையே ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்களுக்கும் மதியத்திற்கு சமைக்க காய்கறி வாங்கிகொண்டு வந்து சேர்ந்தார் பேச்சி.
பத்துநாட்களில் அந்த இடமே அவருக்கு அத்துப்படியாகிவிட்டது. அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்கு பேச்சியுடன் நாச்சியார் செல்வதோடு சரி. அவர் வேறு எங்கும் செல்வதில்லை.
ஆனால் பேச்சி எல்லாவற்றையும் தெரிந்துகொண்டார். தரணிதரன் வீட்டு விஷயத்தில் இருந்து அந்த தெருவில் உள்ளவர்கள் வரை அத்துப்படி.
இதில் நாச்சியிடம் இதுவாம், அதுவாம் என சொல்லி சொல்லி கதை பேசுபவர்,
“என்னன்னாலும் நாம பாக்கலையில நாச்சி. அவகளுக்கு அங்க என்ன நொட்டோ? நமக்கென்ன தெரியும்? பாக்குதவக பக்கம் பக்கமா அவகளுக்கு அம்பட்டதை சொல்லத்தான் செய்யிவாக. கேக்குதப்ப நாமளும் சரின்னு போவனும்…” என்பவர்,
“இந்தா ஒத்த வீட்டுக்குள்ள இருந்தோம். நம்ம வீடு குப்பக்கழுதைய இப்படி செய்யும்ங்கன்னு கண்டோமா? அப்பிடித்தேன். அவகவகளுக்கு அவகவக நாயம்…” என்றும் தீர்ப்பு சொல்லிக்கொள்வார்.
மீராவிடம், ராகவியிடம் இந்த கதைகள் எதையும் சொல்லுவதில்லை. மீராவிற்கு கேட்க நேரமில்லை, ராகவி சிறுபிள்ளை. வயதான இருவரும் மட்டும் பேசிக்கொள்வார்கள்.
நாள்ப்பட நாள்ப்பட பேச்சியம்மாவிற்கு அந்த பகுதி ஓரளவிற்கு நன்றாக பழகவும் செய்தது.
அக்கம்பக்கத்தினர் மீரா மருத்துவர் என்பதால் அவசரத்திற்கு அவளிடம் தங்கள் உடல்நிலை பற்றிய கேள்விகளை கேட்டுக்கொள்வதோடு சின்ன சின்ன சிகிச்சையும் பெற்றுக்கொண்டனர்.
“பேசாம உங்க மகளை வீட்டுல பகுதி நேர கிளினிக் மாதிரி ஒன்னு போட சொல்லுங்க. எல்லாம் பழகறோம், பக்கத்து வீடுன்னு ஓசில ட்ரீட்மென்ட் பார்த்துட்டு போகுதுங்க. இதெல்லாம் ஆரம்பத்துலையே முடிச்சு வைங்கம்மா…” என்றான் தரணிதரன்.
“சரிய்யா, நீ சொன்னா சரியாத்தேன் இருக்கும்…” என்னும் அளவிற்கு தரணிதரன் மீது பேச்சிக்கு அப்படி ஒரு அபிப்ராயம்.
மீராவிடமும் இதனை சொல்ல அவளுக்கு அதில் உடன்பாடில்லை. சின்ன சின்ன உதவிகளில் என்னவாகிவிடும் என அவள் மறுத்துவிட்டாள்.
“வயசு புள்ளைய வச்சிருக்கீங்க. நாளைப்பின்ன உங்களுக்கு ஒரு பெரிய உதவி தேவைன்னா இந்த தெருவுல ஒருத்தனும் முன்ன வரமாட்டான். வாய கேளுங்க, உங்க வாசவரைக்கு நீளும். காசு சம்பாதிக்கவா சொல்றேன்? கைச்செலவுக்காவது ஆவும்ல. படிக்கிற புள்ளை போக்குவரத்துக்காவது தேறும்…” என்று சொல்லி அனுப்பினான் தரணிதரன்.
“ப்ச், அந்த மெடிக்கலுக்கு வேற வேலையே இல்லையா? சும்மா இருக்க சொல்லுங்க பெரிம்மா. என்கிட்ட இந்த கதையெல்லாம் சொல்லாதீங்க…” என்று சொல்லியவளுக்கு வீட்டிலேயே கிளினிக் வைப்பது சரியாகுமா என்ற கேள்வி நிறையவே இருந்தது.
வேலை நேரம் போக மற்ற நேரம் தான் இருந்தாலும் அவளுக்கு முடியவில்லை. அங்கே என்னவோ அவளின் நிம்மதி என்பது முழுமையாகவே இல்லை.
சரியான உறக்கமில்லை. முதல்நாள் போலான கனவுகள் அவளுக்கு அவ்வப்போது தொடர்வதும், அதுவும் ராகவியை குறிப்பிட்டு வருவதும் பெரிய பயத்தை விதைத்திருந்தது.
வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீடு பார்ப்போமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருந்தாள் மீரா.
வந்து ஒரு மாதமிருக்கும். அன்றைக்கு மதியம் பர்மிஷன் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள் மீரா.
நாச்சியாருக்கு திடீரென மூச்சு திணறலாக இருக்க பேச்சியின் அழைப்பில் வந்துவிட்டவள் அவரை கவனித்துவிட்டு தாய் உறங்கவும் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
“திரும்ப போனுமா மீரா?…” என தட்டில் அவளுக்கு உணவை கொண்டுவந்து பேச்சி தர,
“காலையில நீங்க கட்டி குடுத்ததே இருக்கு பெரிம்மா. அதை சாப்பிட்டுக்கறேன்…” என மீரா சொல்ல,
“அதெல்லாம் இருக்கட்டும். சூடா சாப்பிடு. இங்க இருந்து பஸ்ல போகனும்…” என்றவர்,
“ஒன்னு சொன்னா கோவிக்க மாட்டியே?…” என பூடகமாக கேட்டார் அவளிடம்.
“என்னவாம்? சொல்லுங்க…” என சாதத்தை பிசைந்துகொண்டே மீரா கேட்க,
“இல்ல தரணி தம்பிட்ட சல்லிச்சான விலையில உனக்கு ஒரு வண்டி கிடைக்குமான்னு கேட்டிருக்கேன். பார்த்து சொல்லுதேன்னு சொல்லிருக்காரு. கெடச்சா வாங்கிருவோம். போவ வர சுளுவா இருக்கும்…” என சொல்ல,
“இப்ப எதுக்கு பெரிம்மா? அதுவும் இப்ப ஸ்கூட்டி விக்கிற விலையில….” என அவள் சலிக்க,
“ஒன்னொண்ணுக்கும் பஸ் புடிச்சு நீ வரதுக்கு, வண்டின்னா நல்லது தான?…” என்றார்.
சாப்பிட்டபடி பேசி முடித்தவள் மேலும் அரைமணி நேரம் அங்கே தான் இருந்தாள்.
“சரி இப்ப போனேன்னா நான் பஸ் புடிச்சு போக சரியா இருக்கும்…” என சொல்லிவிட்டு கிளம்ப,
“அம்மா நல்லா தூங்கி எழுந்துக்கட்டும் பெரிம்மா. அதிக உஷ்ணம். அதான் அவங்களுக்கு படபடன்னு வந்திருச்சு…” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
பேச்சி உள்ளே நாச்சியாரின் அருகில் இருந்துகொள்ள மீரா வாசலுக்கு வந்து கதவை சாற்றிவிட்டு திரும்ப இன்றும் எதிர்வீட்டில் அதே பெண்.
திண்ணையில் அமர்ந்திருந்தவள் பார்வையில் மீரா மட்டுமே. அவள் வருவதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவளை மீராவும் பார்த்துவிட்டாள்.
அந்த வீதியில் உள்ளவர்கள் அனைவரிடமும் பேசியிருந்தவள் இந்த பெண்ணிடம் இன்னும் பேசியதில்லை. அவளும் பேசியதில்லை.
இன்று தன்னை விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தவளை மீரா புன்னகையுடன் பார்த்து,
“ஹலோ…” என்றாள்.
ம்ஹூம் பதிலில்லை. ஆனால் அவளை தான் பார்த்தாள். அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உங்க பேர் என்ன?…” என இப்போது மீரா அங்கே நெருங்கி சென்று கேட்க அந்த பெண்ணின் முகம் மாறியது.
“நான் மீரா, உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே. எதிர்வீட்டுல தான் இருக்கேன்…” என்று சொல்ல அப்போதும் அவளிடம் மௌனம் தான்.
அதற்குள் மீராவின் போன் அழைக்க அதனை எடுத்து பார்த்தவள் மருத்துவமனையில் இருந்து என்றதும் காதில் வைத்தபடி அந்த பெண்ணிற்கு கையசைத்து விட்டு நடக்க ஆரம்பிக்க மீராவின் நிழலோடு இன்னொரு நிழல்.