“இன்னும் எவ்வளோ நேரம் அந்த ட்ரெஸ்ஸ தேய்ச்சிட்டே இருப்படி? எந்திச்சு காலேஜுக்கு கிளம்பற நெனப்பே இல்ல. சோம்பேறி கழுத…” என காலையில் இருந்து ராகவிக்கு வசவுகள் விழுந்தவண்ணம் தான் இருந்தது.
“சுடிதார் சுருக்கமா இருக்கு. நல்லா தேய்க்க வேண்டாமா?…” என அவள் பதிலுக்கு சலிப்பாய் கத்த,
“கரண்டி வருது இப்ப…” என மாற்றி மாற்றி மல்லுக்கு நின்றனர் பேச்சியும், ராகவியும்.
“வேற வேலையே இல்ல இவங்களுக்கு…” என நாச்சியார் சிரிக்க மீராவின் முகத்தில் யோசனை.
அன்று அவளுக்கு இரவு நேர பணி என்பதால் வீட்டில் இருந்தாள். ஒரு நோட்டை வைத்து கணக்கு பார்த்துக்கொண்டிருக்க,
“என்னத்தா, உனக்கு இன்னும் கணக்கு பார்த்து முடியலையா?…” என்றார் பேச்சி அவளிடம்.
“இல்ல பெரிம்மா, நீங்க பாட்டுக்கு வண்டிக்கு சொல்லிட்டீங்க. இப்ப மாசம் அதுக்கு வேற காசு கட்டனும். ஆயிரத்து இருநூறு ரூபாய் இடிக்குது. ரெண்டு நாள்ல சிலிண்டர் வந்துரும். அதுக்கு குடுக்கனும். சம்பளம் வர வரைக்கும் கொஞ்சம் இறுக்கி பிடிக்கனும்…” என்றாள் மீரா.
அங்கே அவர்கள் இடம்பெயர்ந்து வந்து மூன்று மாதம் ஆகவிருக்கிறது. வந்த ஒரே மாதத்தில் தரணிதரனிடம் சொல்லி மீராவிற்கு ஒரு வண்டியை வாங்கி தந்துவிட்டார் பேச்சி.
செலவுகள் அதிகமாகியிருக்க, ராகவியின் படிப்பிற்கு, அங்கே சேர்க்க, அவளுக்கு தேவையானவற்றை வாங்க என அதற்கும் கையிருப்பு கணிசமாகவே குறைந்துபோனது.
இன்று தரணிதரனுக்கு வட்டி பணம் தரவேண்டும். அவன் மொத்தபணம் கொடுத்து வாங்கிவிட்டான்.
வாங்கியவன் அதனை வட்டி போல பேச்சிக்கு முழுவிவரமும் சொல்லியே வந்திருந்தான்.
“இங்காருங்கம்மா, ஒங்களுக்கான்டி தான் மொத்த ரூவாயவும் குடுத்து நான் வண்டிய வாங்கி உங்களுக்கு வட்டிக்கு தாரேன். பாத்து தாமசமில்லாம காச கரெக்ட்டா கட்டுங்க. எதுக்க எதுக்க வீட்டுல இருக்கோம். முகம் பார்க்கனுமில்ல…” என்று சொல்லியிருந்தான்.
“அப்படி வாங்கனுமா பெரிம்மா? இதெல்லாம் வேண்டாமே? அதுவும் அந்த மெடிக்கல்க்காரன்கிட்ட அவ்வளோ பேச்சு வாங்கனுமா?…” என்றாள் மீரா.
மீராவின் மறுப்புகள் எல்லாம் எடுபடவே இல்லை. சவளுகுமே பேருந்தில் சென்று திரும்ப சில நேரங்களில் அலுப்பாகி போகும்.
இப்போது இதுவும் கூட சரி என்றுதான் தோன்றியது. அவசரம் என்றால் ஆட்டோவிற்கே அவ்வளவு பணம் கேட்டனர்.
அதன் பின் எதுவும் சொல்லவில்லை மீரா. ஸ்கூட்டி வாங்கிய அன்று தரணிதரனை பார்த்தது.
அதன்பின் அவ்வப்போது வாசலில் பார்ப்பதுடன் சரி. முதல்நாள் பேசியது தான். அதன் பின் பார்த்தலும் கண்டுகொள்வதில்லை.
அவனிடம் எந்தவகையிலும் கடன்பட்டுவிட கூடாதென பணத்தை விரைவில் செலுத்த நினைத்தவள் அசலையும் சேர்த்தே சிறிது சிறிதாய் கட்ட முதல்மாதம் கொடுத்தாகிற்று.
இந்த மாதமும் அதை போலவே கொடுக்க நினைக்க பற்றாக்குறை இடித்தது. அந்த மாதம் முழுவதும் ஓட்டவேண்டும்.
அதற்கும் தனியே எடுத்து வைத்திருக்க அதில் கை வைக்க முடியாது. மாதம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த தலைவலியா என யோசித்தவள் அந்த மாதம் பெட்ரோலுக்கு தேவைப்படும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
“என்ன மீரா, எந்திச்சிட்ட?…” என பேச்சி எக்ட்க,
“பெட்ரோல் காசு இருக்குல பெரிம்மா. அதை சேர்த்துக்கலாம். கொண்டு போய் குடுத்துட்டு வந்திருங்க…” என அந்த பணத்தை எடுக்க,
“அதெல்லாம் வேண்டாம். இந்தா அந்தான்னு மிச்சம் புடிச்ச சுறுவாடு காசு இருக்கு. வீட்டு செலவுக்கு ஒதுக்கினதுல கொஞ்சம் எடுத்துக்குவோம்….” என காசை எடுத்து அவளிடம் தர,
“மாசக்கடைசில ரொம்ப சிரமமா போயிரும் பெரிம்மா…” என அவள் தயங்க.
“அதெல்லாம் நாங்க பாத்துப்போம். நீ இதை கொண்டுபோய் அந்த புள்ளைக்கிட்ட குடுத்துரு…” என பேச்சி சொல்ல,
“சரி நீங்களே குடுத்திருங்க பெரிம்மா. நான் போகலை…” என மீரா மறுக்க,
“அட எனக்கு முடிஞ்சா குடுக்கமாட்டேனா? காலெல்லாம் நோவுது. அந்த புள்ள வார நேரத்துக்கு எனக்கு மறந்துடும். நீ போயி குடுத்துட்டு அப்படியே அங்க பலசரக்கு வாங்கற கடையில உளுந்து வாங்கிட்டு வா. மாவுக்கு ஊற போடனும்…” என்றவர் காலை நீட்டி அமர்ந்துவிட்டார்.
“ஹ்ம்ம், இதுக்குத்தேன் அந்த புள்ள சொல்லுச்சு. ஓசில வைத்தியம் பககாதீங்க, காசு என்ன சும்மாவான்னு. இப்ப பாரு நாம தான தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கோம். எங்க கேட்கறா?…” என புலம்பிக்கொண்டே இருந்தார் பேச்சி.
அந்த பேச்சு மட்டும் குறையவே இல்லை. மீராவும் முன் வாசலுக்கு வர தரணிதரன் தனது பைக்கை துடைத்துக்கொண்டிருந்தான்.
மெடிக்கலுக்கு கிளம்புகிறான் என தெரிந்தது. அப்போதே பணத்தை கொடுத்துவிடலாம் என பணத்தை எடுத்துவிட்டு வரும்முன் அவன் கிளம்பியிருந்தான்.
“நானும் ரெடி…” என ராகவி கிளம்ப,
“இந்தாடி சாப்பாட்ட வாங்காம போற?…” என அவளுடன் பேசியபடியே பேச்சி எழுந்துகொள்ள,
“உக்காருங்க பாட்டி. நான் எடுத்துக்கறேன்…” என மதிய உணவை வாங்கிக்கொண்டு ராகவி வந்தாள்.
“கிளம்பறேன் சித்தி. பை…” என வாசலில் நின்ற மீராவிடம் சொல்ல,
“பத்திரமா போய்ட்டு வா. வெயில் அதிகமா இருக்கு. தண்ணி குடி…” என சொல்ல,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சித்தி. பை…” என ராகவி கையசைத்து கம்பி கேட்டை திறந்துகொண்டு செல்ல எதிர்வீட்டில் அமர்ந்திருந்த பெண் அவளுடனே சென்றாள்.
“ரொம்ப ரிசர்வ் டைப்போ? பார்த்தா கூட பேசறதில்லை. பேசினாலும் பார்க்கறதில்லை…” என்று நினைத்த மீரா போன் வரவும் பேசிக்கொண்டிருந்தாள் திண்ணையில் அமர்ந்தே.
பேசி முடித்தவள் தரணிக்கு கொடுக்க பணத்தையும் ஒரு பையையும் எடுத்துக்கொண்டு கிளம்ப,
“வண்டி சாவிய எடுக்கலையா?…” என்றார் நாச்சியார்.
“இல்லம்மா, இந்த தெரு முக்கு தானே? நடந்தே போய் குடுத்துட்டு வரேன்….”
“என்ன மீரா, இன்னைக்கு நைட் ட்யூட்டியாம். தூங்காம என்ன இந்த பக்கம்?…” என கேட்க,
“கடைக்கு தான் போறேன் க்கா….” என அவைடமும் ஓரிரு வார்த்தைகள் நின்று பேசிவிட்டு கிளம்பினாள்.
சில நேரங்களில் அதுவுமே சலிப்பாக இருந்தது மீராவிற்கு. பேச ஆரம்பித்தாலே இப்படி செய்கிறது, அப்படி செய்கிறது என அதையே பிரதானமாகி பேச அலுப்பு தட்டியது.
இப்போதும் கோகிலா சொல்லிவிட்டு சென்றதும் அதுதான். இரவு சரியாக உறக்கம் வரவில்லை, எதுவும் இருக்குமோ என.
இதனை யோசித்துக்கொண்டே மெடிக்கலுக்கும் வந்துவிட அகர்பத்தியின் மனம் நாசியை நிறைத்தது.
தரணிதரன் கம்ப்யூட்டரில் வேலையாய் இருக்க கடையில் பணிபுரியும் இன்னொரு பையன் கண்ணாடியை எல்லாம் துடைத்துக்கொண்டிருந்தான்.
“ம்க்கும்…” என மீரா தொண்டையை செரும நிமிர்ந்து பார்த்தான் தரணிதரன்.
“சொல்லுங்க, மருந்து வேணுமா?…” என கேட்டவன்,
“டேய் தம்பி…” என அந்த பையனை அழைத்தான்.
“இல்ல உங்கள தான் பார்க்க வந்தேன்…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவன்,
“சொல்லுங்க…” என்றதும் கொண்டுவந்த பணத்தை தர,
“உங்க பெரிம்மாக்கிட்டையே குடுத்துவிட்டிருக்கலாமே?…” என எழுந்து வந்தவன் பணத்தை வாங்கி எண்ணி பார்த்தான்.
“கரெக்ட்டா தான் இருக்கு…” மீரா சொல்ல,
“அதத்தான் எண்ணி பார்த்துட்டிருக்கேன்…” என்றான் அவனும் விடாக்கண்டன்.
“சரி குறிச்சுக்கோங்க…” என மீரா கிளம்ப போக,
“அட இருங்க டாக்டர். சரியா இருக்கான்னு பார்க்கனும்ல. உங்க கண்ணு முன்னுக்கவே குறிச்சுக்கறேன்…” என நோட்டை எடுத்து அவளின் முன்னே குறித்துக்கொண்டவன்,
“வேற எதாச்சும் வேணுமா? வாங்கறீங்களா? மருந்து மாத்திரை, ஊசி…” என அவன் கேட்க மீரா முறைத்து பார்த்தாள்.
“இல்லீங்களா? சரி…” என நோட்டை மூட்டி வைத்தவன் ‘கிளம்பவும்’ என்பதை போல நிற்க விருட்டென மீரா கிளம்ப தரணிதரன் மீண்டும் இருக்கைக்கு வந்தமர்ந்தான்.
“இங்க என்னடா பார்வை? போய் வேலையை பாரு….” என அவனையும் அதட்டிவிட்டு வேலையை பார்த்தான்.
மீண்டும் மீரா உளுந்தை வாங்கிக்கொண்டு செல்லும் பொழுது மீண்டும் அங்கே பார்க்க தரணிதரன் கடை பையனின் தலையில் தட்டி என்னவோ அதட்டிக்கொண்டிருந்தான்.
“சரியான முசுடு…” என்றபடி அதை தாண்டிக்கொண்டு சென்றாள் மீரா.
வீட்டிற்கு வந்ததும் ச்பபிட்டுவிட்டு படுத்துறங்கி மாலை மருத்துவமனை கிளம்பி வெளியே வர ராகவி அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.
“சரிம்மா நான் கிளம்பறேன். நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்க…” என சொல்லியவள்,
“கவி ரொம்ப நேரம் டிவி பார்க்காம தூங்கனும். புரியுதா?…” என சொல்ல,
“சரிங்க சித்தி. இப்ப படுத்துருவேன். எனக்கும் டயர்டா இருக்கு…” என சொல்லவும் பேச்சியிடமும் சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வர தெருவே அமைதியாய் இருந்தது.
“எல்லாம் சீரியல் பார்க்கறதுல பிசி போல…” வழக்கம் போல சொல்லிவிட்டு செருப்பை அணிந்தவள் அருகில் சட்டென ஒரு வெப்ப காற்று.
யாரோ அருகில் நிற்பதை போலிருக்க திரும்பி பார்த்தவள் அந்த எதிர்வீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தாள்.
மெல்லிய விசும்பலுடன் கண்ணீர் முகமாய் அவள் அமர்ந்திருக்க இதென்ன இத்தனை மெல்லிய சத்தம் எனக்கருகில்? என நினைத்தபடி அவளின் அருகே சென்று கேட்பதா வேண்டாமா என மீரா யோசிக்க இன்னும் அதிகமாய் அந்த சத்தம்.
சரி கேட்டுவிடுவோம், அப்படியே செல்ல மனது வரவில்லை. கேட்போம் என அவளின் அருகில் சென்றதும் அப்பெண்ணின் முகம் அப்பட்டமான வேதனையை காட்டியது.
“என்னம்மா, ஏன் அழற?…” என கேட்க பதிலில்லை.
“பேசுவியா? என்னன்னு சொல்லு…” என்றவள்,
“உங்கம்மா எங்க?…” என கேட்டாள் மீரா.
ஒருவேளை அந்த பெண்ணுக்கு பேச வராதோ என்று வேறு சந்தேகத்துடன் கேட்க,
“யார்ட்ட பேசிட்டிருக்கீங்க?…” என்ற குரலில் திடுக்கிட்டு மீரா பார்க்க நின்றிருந்தது தரணிதரன்.
“உங்களை தான். இங்க என்ன பன்றீங்க?…” என கேட்க,
“இந்த பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருக்கேன்…” என்றவள் திரும்பி பார்க்க அங்கே அந்த பெண் இல்லை.
அவள் அமர்ந்திருந்த திண்ணை வெற்றிடமாக, வீட்டின் வெளிச்சம் இருளாகிவிட அந்த அமானுஷ்யத்தில் முதுகுவடம் குளிரெடுத்து ஜில்லென்றாகி போனது மீராவிற்கு.
“இங்க இருந்த பொண்ணு?…” என தரணிதரனிடம் கேட்டவளின் விழிகள் பெரிதாய் அகன்றது பயத்தில்.