கண்சிமிட்டும் நேரத்தில் தன்னெதிரே அமர்ந்திருந்த அந்த பெண்ணின் உருவம் மாயமாகியிருக்க மீரா நிலைகுலைந்து போனாள்.
“ஹலோ உங்களை தான் கேட்கறேன்….” என தரணிதரன் மீண்டும் மீராவை சுயநினைவிற்கு கொண்டுவர,
“ஹாங், இங்க இப்ப இப்ப தான் பொண்ணு….” என சொல்லும்முன் அவள் உடலெல்லாம் சலசலவென்று வியர்த்துவிட்டது.
இருளடைந்த அந்த வீட்டின் ஜன்னலில் மீண்டும் அதே உருவம். ஆனால் முன்பிருந்த சாதாரண நிலையில் இல்லை.
அப்பெண்ணின் முகத்தில் உளி வைத்து சிறிது சிறிதாய் மீராவின் கண் முன்னாலேயே செதுக்கப்பட அவள் விழிகள் பயத்தில் உறைந்து போனது.
“ஆஆ…” என்னும் அலறலும், விசும்பலும் அந்த பெண்ணின் விழிகளில் தெரிந்த பரிதவிப்பும், அதற்கு சமமான பழிவெறியும் கண்டு மீராவின் கால்கள் வேரோடிவிட்டது அவ்விடத்திலேயே.
“எந்த பொண்ணு? சரோஜா அக்காவா? அவங்க வெளில வரமாட்டாங்களே?…” என தரணிதரன் கேட்க,
“அக்காவா? இல்ல, ஒரு சின்ன பொண்ணு….” என்றவள் உடல் வெடவெடவென நடுங்கியது.
“நான் கேட்டுட்டே இருக்கேன். என்ன பார்க்கறீங்க?…” என்றவன் அவளின் பேயறைந்த முகம் கண்டு யோசனையுடன் இன்னும் நெருங்கி வந்து நின்றான்.
“நான் தான் சொல்றேன்ல. கேட்கலையா உங்களுக்கு….” என்ற மீராவின் சத்தம் தொண்டையை விட்டு வெளியே வரவில்லை.
அவள் பேசியது எதுவும் தரணிதரனின் காதில் விழவில்லை. மீராவின் பார்வை வெறித்த திசையை காண அங்கே இருளடைந்த வீடும், அதன் நிசப்தமும் மட்டும் தான்.
ஆனால் மீராவிற்கு தெரிந்தது. அம்முகம் உயிரோடிருப்பதை போலவே தெரிந்தது. விழிகள் அசைந்து இமைகள் மூடி திறந்தது.
தன்னை அப்பெண் பார்ப்பது தெரிந்தது. அவள் முகம் பாதிவரை செதுக்கப்படுவது தெரிந்தது. சிதறிய துகள்கள் ஒவ்வொன்றும் ரத்த துளிகள்.
தரணிதரன் அருகில் நின்றும் அவனுக்கு அவள் பார்ப்பதை உணர்த்த முடியவில்லை.
அதை விட்டு முகத்தை திருப்ப முடியவில்லை. வார்த்தைகள் வெளிவரவில்லை. கண்களில் மரணபயம் மட்டுமே.
அந்த அமானுஷ்யத்தின் தாக்கத்தில் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருந்தாள் மீரா.
உடல் அதிர குனிந்து பார்க்க அந்த எதிர்வீட்டு பெண்ணின் குருதியும், வெட்டப்பட்ட சதைத்துணுக்கும் மீராவின் முகத்தில்.
பலம் திரட்டி வீறிட்டு அலறியவள் அப்படியே பின்னால் சாய்ந்து மூர்ச்சையாகினாள்.
“மீரா, மீரா என்னாச்சு?…” என தரணிதரன் கீழே விழுந்தவளை தடுமாறி பிடித்து சாய்த்தவன் மீராவின் வீடு சென்று கதவை தட்டினான்.
அவனின் அழைப்பில் வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே வர மீராவை பார்த்து அவர்கள் போட்ட சத்தத்தில் தெருவிலும் ஓரிருவர் வெளியே எட்டி பார்த்தனர்.
“என்னாச்சு எம்பொண்ணுக்கு?…” என நாச்சியார் பதற,
“வேலைக்கு கிளம்பினவ இங்கின எப்படி?…” என பேச்சி மகளை எழுப்ப முயல அவளை அசைக்கவே முடியவில்லை.
எத்தனை எழுப்பியும் மயக்கம் தெளியாமல் இருக்க உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிடுவோம் என முடிவுக்கு வந்தனர்.
“நான் போயி காரை கொண்டுவரேன். போவோம்…” என்றவன் வீட்டிற்குள் சென்று கார் சாவியை எடுத்துவிட்டு வந்தவன் நான்கு வீடு தள்ளி இருந்த காலி இடம் நோக்கி சென்றான்.
தகப்பனின் உடல்நிலை இப்படியாகிவிட்ட பின்பு தான் அவனுமே அந்த காரை தங்களுக்கென்று வாங்கியது.
இப்போது அந்த ஷெட்டில் நிறுத்தியிருந்ததை உடனே எடுத்துக்கொண்டு வந்தவன் பக்கத்துவீட்டு கோகிலாவிடம்,
“எக்கா, நா இவங்கள கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன். கோபிய வர சொல்றேன் அப்பாவுக்கு துணைக்கு. அதுவரைக்கு கொஞ்சம் எட்டி பார்த்துக்கங்க…” என்று சொல்ல,
“நான் பார்த்துக்கறேன் தம்பி. இதை சொல்லனுமா? நீ முதல்ல மீராவை பாரு…” என்றார் கோகிலா.
“நன்றி க்கா…” என்றவன்,
“எம்மா, இந்த புள்ளைய தூக்கி உள்ள படுக்க வைங்க…” என்றான் தரணிதரன்.
“எங்களால முடியலையே தம்பி….” என பேச்சி சொல்ல கோகிலாவும் கைகொடுக்க மீராவின் உடல் சில்லிட்டு கனத்தது.
“இதென்ன ஐஸா இருக்கு?…” என கோகிலா சொல்லவும் தரணிதரன் முகத்திலும் கலவரம்.
வேகமாய் மீராவின் கைகள், கன்னம், நெற்றி என தொட்டு பார்க்க அந்த குளுமை ஊசியாய் விரல்களை துளைத்தது.
“நகருங்க. எம்மா நீங்க உள்ள உக்காருங்க…” என்றவன் மீராவை தூக்கினான்.
‘இத்தனை கனமா இந்த பெண்?’ என அவனுக்குள் பெரும் அதிர்வு. அவனாலேயே தூக்க முடியவில்லை.
உள்ளே அவளை சாய்த்து அமர செய்தவன் மீராவின் இருபுறமும் பேச்சியும், நாச்சியாரும் அமர்ந்துகொள்ள, ராகவி அவனோடு முன்னிருக்கைக்கு வந்தாள்.
“இரு ம்மா, என் போனை கொண்டுவாரேன்…” என்று உள்ளே சென்று தந்தைக்கு அழைத்து சொல்லிவிட்டு வெளியே வரும்பொழுதே கோபியுடன் பேசியபடி வந்தான்.
காரை எடுக்கும்முன் அவனின் பார்வை அந்த வீட்டை மீண்டும் ஒருமுறை துளைத்தது.
அதிக நேரமெடுக்காமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் மீராவை கொண்டு சென்றனர்.
“ஜிஹெச் இன்னும் தூரம் போகனும்மா. உங்களுக்கு தெரியும்ல. முதல்ல இங்க காமிப்போம்….” என்றவன் அதன் பொறுப்பை எடுத்துக்கொண்டான்.
மீராவை பற்றி முழுதாய் தெரியாது என்றாலும் பேச்சியின் மூலம் அவர்கள் குடும்பத்தை உதறிவிட்டு தனித்து வாழ்கின்றனர் என்பது மட்டும் தெரிந்திருந்தது தரணிதரனுக்கு.
என்ன காரணம் என எதுவும் அவன் கேட்டுக்கொள்ளவில்லை. அது அவர்கள் குடும்ப விஷயம்.
ஆனால் இப்போது தனியார் மருத்துவமனையின் கட்டணம் எல்லாம் யோசித்து கலங்கி நிற்க மனதிற்குள் ஒரு உந்துதல் அவர்களுக்கு உதவ சொல்லி.
‘நல்லா வாழ்ந்த குடும்பம் போல. கஷ்டப்படறாங்க’ என பரிதாபமாய் பார்த்தான் மீராவின் குடும்பத்தினரை.
மீராவை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கே தெரியவில்லை அவள் உடலில் ஏன் இந்த குளுமை குறையவில்லை என.
முழுமையாக பார்த்தாகிற்று. நிச்சயம் உடலுக்கு எதுவுமில்லையே தவிர இது என்ன என அவர்களுக்கே புரியவில்லை.
தரணிதரனுக்கு அங்கிருந்த மருத்துவர்கள் அநேகம்பேர் தெரிந்தவர்கள். அதில் சிலர் நல்ல பழக்கவழக்கமும் கூட.
“கம்ப்ளீட்டா செக் பண்ணியாச்சு தரணி. அவங்களோட பாடில டெம்பரேச்சர் கூடவே இல்லை. ப்ரீசர்ல வச்ச மாதிரி இறுகி போயிருக்கு. ஆனா உயிரோட தான் இருக்காங்க…” என்றதும் நாச்சியார் நெஞ்சை பிடித்துவிட்டார்.
“என் பொண்ணுக்கு இன்னும் என்னலாம் சோதனை இருக்கோ?…” என அவர் அரற்ற,
“சரியாகிடும் ம்மா. பதட்டப்படாதீங்க…” என அவர்களை தேற்றினான் தரணிதரன்.
“டாக்டர் அவங்ககிட்ட எதுவும் சொல்லவேண்டாம். பாவம். என்கிட்ட சொல்லுங்க…” என மருத்துவரை தனியே அழைக்க,
“அதெப்படி சொல்லாம இருக்க முடியும் தரணி? நீ எனக்கு தெரிஞ்சவனா இருக்கலாம். ஆனா பேஷன்ட்டோட பிளட் ரிலேட்டிவ்கிட்ட தானே அவங்க ஹெல்த் கண்டிஷனை சொல்லமுடியும்?…” என்றார் மருத்துவர்.
“என்னை அவங்களோட வெல்விஷர்ன்னு வச்சுக்கோங்க டாக்டர். என் வீட்டு எதிர்வீடு தான் அவங்க. அதோட எனக்கும் நல்ல பழக்கம். இதெல்லாம் விட உள்ள இருக்கற பொண்ணுக்கு இவங்க மட்டும் தான் இருக்காங்க. இவங்களுக்கு ஆதரவே அந்த பொண்ணு மீரா தான்…” என்றவன்,
“நீங்க என்ன ட்ரீட்மென்ட் வேணும்னாலும் பாருங்க. நான் சைன் பன்றேன். என்னை தெரியாதா உங்களுக்கு? என் மேல நம்பிக்கை இல்லையா? நான் அவங்ககிட்ட பக்குவமா சொல்லிக்கறேன். ப்ளீஸ்…” என்று கெஞ்சவே செய்தான் தரணிதரன்.
“இதை எப்படி சொல்லன்னு தெரியலை. இந்த பேஷன்ட்டோட உடம்புல இருக்கற இந்த குளிர் உயிரோட இருக்கறவங்களுக்கு சாத்தியமில்லை. இறந்து போனவங்களை மார்ச்சுவரி பாக்ஸ்ல நாங்க வைக்க பயன்படுத்தற அளவுக்கான குளிர்ச்சி இருக்கு. மெடிக்கல் மிராக்கில்ன்னு தான் சொல்லனும்…”
மருத்துவர் இதனை சொல்லிவிட்டாலும் அவரின் நெற்றியெல்லாம் வியர்த்து போயிருந்தது.
தரணிதரன் மனதில் அந்த வீட்டின் முன் நின்ற மீராவின் பார்வையும், அந்த பயமும் தான் சுருக்கென தோன்றியது.
“எனக்கு வேற என்ன சொல்றதுன்னே தெரியலை தரணி…” என்றார் கவலையுடன்.