ஆம், போட்டது போட்டபடி அப்படியே வந்திருந்தனர். கதவை கூட அடைக்கவில்லை.
“நான்தான் சொல்லுதேமில்ல. போ நாச்சி. மீராவுக்கு ஒன்னுமாவாது. என் தாய் மீனாட்சி பாத்துக்கிடுவா…” என பேச்சி சொல்லிவிட்டு கையெடுத்து மேல் நிக்கி கும்பிட,
“எப்புடி வளந்த புள்ள, எம்புட்டு கஷ்டம் பாருங்கக்கா…” நாச்சியார் அழுதுகொண்டே கதவிலிருந்த சிறிய கண்ணாடி வழியே மகளை பார்த்தார்.
அழுது புலம்பிக்கொண்டே நாச்சியார் வர ராகவி அவரை சமாதானம் செய்ய என வீடு வரும் வரை இதுதான்.
அதற்குள் கோகிலாவிடம் சொல்லியவன் பின் எதற்கும் இருக்கட்டும் என மங்களத்துக்கும் அழைத்தான்.
“அதனால என்னய்யா. எத்தன நாளைக்கி துணைக்கு இருக்கனும்ன்னு சொல்லு. ராத்திரி டான்னு வந்துடறேன்…” என மங்களம் உடனே சம்மதிக்க,
“இந்தா அங்க தொணைக்கு இருக்க காசு கீசு கேட்டு வைக்காம. எதுவானாலும் எங்கிட்ட கேக்கனும்…” என அதட்டி வரவழைத்தான் தரணிதரன்.
“யாத்தே…” என்ற ஆச்சரியமும் வியப்பும் குறையாமல் வந்து சேர்ந்துவிட்டார் மங்களம்.
“இந்தம்மா இருக்கும் துணைக்கு. எதுவானாலும் ஒரு போனை போடுங்க. நான் வரேன்…” என சொல்லியவன் தன் வீட்டிற்கும் சென்று தந்தையிடம் சொல்லிவிட்டு வந்தான்.
அதற்குள் கோகிலாவும் அவரின் கணவரும் வந்து மீராவை விசாரிக்க மேலோட்டமாய் விவரம் சொல்லிவிட்டு அந்த தெருவை பார்த்தான்.
வீதியில் அத்தனைபேரும் அவரவர் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர நாச்சி வரவும் என்ன ஏதேன எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள் என்னவாக இருக்கும் என்றும், மீராவிற்கு தரணி உதவியதும் தான் அங்கே முக்கிய இடம் வகித்தது.
“இதுக்குத்தேன் இதுங்களை ஒண்டவே விட கூடாதுங்கறது. பாத்தீங்களாக்கா? அந்த டாக்டர் புள்ளைக்கிட்ட பல்லை காட்டி ஓசில வைத்தியம் பாத்துட்டு இப்ப என்ன எதுன்னு கேட்காம நிக்கிறத?…” என பொறுமிவிட்டான்.
“விடுப்பா, அவங்களுக்கு அதுமட்டுமா எண்ணம்? நீ ஹெல்ப் பன்ற இல்ல?…” என கோகிலாவின் கணவர் சடகோபனும் சொல்ல,
“சரியா சொன்னீங்க…” என்றார் கோகிலா.
“சரி நான் கிளம்பறேன். மங்களத்தம்மா வந்திருக்காங்க. இருந்தாலும் நீங்க ஒரு எட்டு பார்த்துக்கோங்க க்கா…” என தரணிதரன் இறங்கி வந்து கேட்க,
“நல்லதுங்கண்ணா. நாளைக்கு வாங்க. இப்ப அங்க பார்க்க விடமாட்டாங்க…” என பேசிக்கொண்டே கண்ணுக்கு முன்னால் பறந்த பூச்சியை கைகொண்டு அவன் தள்ள மீண்டும் அவனின் முகத்தை வட்டமிட்டது அந்த பூச்சி.
“இதுவேற…” என கார் சாவியை வைத்துக்கொண்டே கையை வேகமாய் வீச சாவி அந்த வீட்டின் திண்ணையில் போய் விழுந்தது.
“ப்ச்…” என்ற சலிப்புடன் திண்ணையில் கிடந்த சாவியை எடுக்க அதை தொட்டவன் மின்சாரம் தாக்கியதை போல கையை இழுத்தான்.
சாவி பனியில் உறைந்திருந்ததை போல திண்ணையில் குளிர்ச்சியுடன் ஒட்டிக்கொண்டிருக்க தரணிதரன் முகத்தில் அதிர்ச்சி.
“என்னப்பா? இருட்டா இருக்கா?…” என சடகோபன் தனது போனை எடுத்து வெளிச்சம் காண்பித்து அருகில் வர எச்சிலை கூட்டி விழுங்கியபடி மீண்டும் சாவியை எடுத்தான்.
மீராவின் மேல் அவன் உணர்ந்த அதே குளிர்ச்சி. உயிரை உறைய வைக்கும் பனியின் தாக்கம் அந்த சாவியில் இருந்தது.
உள்ளுக்குள் உதறல் தான். நடுக்கத்துடன் அவ்விடம் பார்க்க எப்போதும் போல தான் இருந்தது அந்த திண்ணை.
கைகளுக்குள் ஜில்லென்ற குளிர் பரவ சடகோபன் தரணிதரனின் தோளை தட்டிக்கொடுத்து,
“அவரசம்ன்னா கால் பண்ணு தரணி. என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன்…” என்றதும் தலையசைத்தவன்,
“சரி நான் கிளம்பறேன்…” என்றவன் மீண்டும் அந்த வீட்டையும், மீராவின் வீட்டையும் பார்த்துவிட்டு கிளம்பினான்.
இத்தனை வருடங்களில் அவன் உணராத ஒன்று. இதுவரை அவன் கவனிக்காத ஒன்று என நினைத்தவனுக்கு மனது படபடத்தது.
மீண்டும் காரை விட்டு இறங்கி வீட்டிற்கு சென்று தன் அம்மாவின் படத்தையும் கடவுள்களையும் கும்பிட்டு விபூதியை நெற்றியில் பூசியவன் மீண்டும் மருத்துவமனை வந்தான்.
நிச்சயம் இதை தான் மீராவும் உணர்ந்திருக்க கூடும். அந்த அதிர்ச்சியின் விளைவு தான் இது என புரிந்துபோனது தரணிதரனுக்கு.
“என்ன தம்பி வீட்டுல விட்டுட்டீங்களா?…” என பேச்சி அவன் வரவும் கேட்க,
“ஆமாம்மா…” என்றவன் விவரமாய் சொல்லிவிட்டு வந்தமர்ந்தான் அவரின் எதிரில்.
“டாக்டர் திரும்ப வந்தாங்களா?…” என கேட்க,
“வந்து பார்த்துட்டு போனாங்க தம்பி. இன்னும் மயக்கம் தெளியலைன்னு சொன்னாங்க…” என்றார் தழுதழுப்புடன்.
“சரியாகிடும். பதறாதீங்க…” என்று மட்டுமே சொல்லமுடிந்தது அவனால்.
“சரி, நீங்க இந்த பெஞ்ச்ல படுத்துக்கோங்க. நான் அப்படி தள்ளி இருக்கேன்…” என சொல்ல,
“இருங்கம்மா இந்தா தரேன்…” என அந்த நம்பருக்கு அழைத்தவன் அவரிடம் நீட்டினான்.
“போவுதா, எடுத்துட்டாங்களா?…” என கேட்டுக்கொண்டே வாங்கி காதில் வைக்க,
“அலோ…” என்றார் நாச்சியார் இன்னும் விசும்பலுடன்.
“இப்ப என்னத்துக்கு இன்னும் உசும்புத? நீயும் மேலுக்கு முடியமா படுத்துக்காத தாயி. அவ சரியாகி வருவா…” என துக்கத்தை அடக்கிக்கொண்டு அதட்டிய பேச்சி,
“மாத்திரைய போட்டியா நீயி? நாளைக்கு ராகவிய காலேசுக்கு அனுப்ப வேணாம்த்தா. அங்கன போயி மட்டும் என்ன நிம்மதியா இருப்பா புள்ள? இருக்க சொல்லிரு…” என்றவர்,
“பொறவு நாச்சி, அந்த நகச்சீட்டுக்கு காசு எடுத்து வச்சிருந்தோமில்ல. நாளைக்கு வரும்போது அத கொண்டாந்துரு. இங்க பில்லு கட்ட சொன்னா ஆகும்…” என்றார் பேச்சி.
“சேரி…” என நாச்சியார் சொல்ல,
“நேரத்த பாரு. இந்த புள்ளைக்கு இம்பிட்டிம்புட்டா நகைய சேத்து ஒரு நல்லத பண்ணிப்புடுவோம்ன்னு பார்த்தா ஆகுதா? போன மாசதேன் சீட்டுல சேந்தோம். இந்த மாசம் கெட்ட ஆவாம நம்ம கெதி…” என்று மூக்கை உறிஞ்சியவர் தான் அழுதால் இன்னும் நாச்சியார் விசனப்படுவார் என அடக்கிக்கொண்டார்.
“நகக்கடையில சீட்டு காசு கேக்க மாட்டாவளா?…”
“அதெல்லாம் அடுத்த மாசம் பாத்துக்கிடுடுவோம். அங்கின போயி விவரத்த சொன்னா புரிய போகுது. இல்லன்னா போன மாசம் கெட்டினத வாங்கிட்டு விடவேண்டியதேன்…” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
சற்றே தள்ளி இருந்த தரணிதரனின் காதிலும் இந்த பேச்சுக்கள் விழுந்தது தான். அவரை பரிவாய் பார்த்தான் தரணிதரன்.
பேச்சியிடம் பேசிவிட்டு போனை வைத்ததும் கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு நாச்சியார் படுக்கைக்கு தயாராக ராகவி இன்னும் அழுதுகொண்டே இருந்தாள்.
“அதான, என்னத்துக்கு அழுகனும்? அதான் தரணி தம்பி கூட இருக்குல?…” என்ற மங்களம்,
“ஏம்மா உங்களுக்கு இந்த தம்பி தூரத்து உறவு முறையா என்ன?… என வாயடிக்க ஆரம்பித்துவிட்டார் மங்களம்.
பதில் சொல்ல நாச்சியாருக்கு தான் தெம்பில்லை. இல்லை என தலையை அசைத்ததுடன் கண்களை மூடிக்கொண்டார் அவர்.
அனைவரும் உறங்கியதும் நடுநிசியில் பேரிரைச்சலாய் அந்த வீதியில் காற்றடித்து கண்களை திறக்க முடியாதவண்ணம் புழுதியை கிளப்பியது.
பேய்க்காற்று என்பதற்கு சரியாக காற்று வீச அந்த தெருவிற்குள் நுழைந்தவர்கள் முகத்தில் மணல் துகள்கள்.
“என்னடா திடீர்ன்னு இப்படி காத்தடிக்குது?…” என்றபடி கண்களை தேய்த்துக்கொண்டு அடுத்த அடி வைக்கமுடியாமல் காற்று தள்ளியது.
“அதான இவ்வளவு நேரம் இல்லையே…” என முன்னேற பார்க்க, முடியவில்லை.
“இப்ப என்ன செய்யறது?…” என்றவனிடம்,
“குடுத்த வேலையை முடிக்க வேண்டாமா?…”என்றான் இன்னொருவன்.
“நோட்டம் பார்க்க தான? நாளைக்கு பார்ப்போம். இப்ப கண்ணே திறக்க முடியல. என்னத்த பார்க்க?…” என்று புழுதி அடித்த முகத்தை மூடிக்கொண்டு கண்களை கசக்கியபடி திரும்பி செல்ல இன்னும் மணல் பெருந்தூறலாய் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது.
அவளால் முடிந்த, அவள் சக்திக்குட்பட்ட சிறு செயல். நிம்மதியுடன் அவ்வுருவம் காவலாய் மீராவின் வீட்டின் முன்.