நாச்சியாரிடம் பேசி முடித்தவர் போனை கொண்டுவந்து தரணிதரனிடம் தர எழுந்து வந்து வாங்கிக்கொண்டான்.
அவன் மனதெல்லாம் ரணமாய் இருந்தது அவர்களின் நிலையில். தன்னால் இந்த உதவி தான் செய்யமுடியும்.
அதற்கு மேல் ஆறுதலை தவிர என்ன செய்துவிட முடியும் என மௌனமாய் அவனிருக்க அவனருகில் அமர்ந்துகொண்டார் பேச்சி.
அந்தநேரம் மருத்துவரும் வந்துவிட அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு மீராவை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைய,
“வாங்கம்மா, என்னன்னு பார்ப்போம்…” என பேச்சியுடன் முன்னே வந்தான் தரணிதரன்.
“அவங்க வெளில வந்து ஒருத்தர் தான் இருக்கனும்ன்னு சொன்னா நான் கீழே இருக்கேன். நீங்க இங்க இருங்க…” என்றான் அவன்.
“கீழன்னா எங்கின தம்பி?…”
“நாம வரும்போது இருந்த பெரிய ஹால் மாதிரி நிறைய சேர் போட்டிருந்தாங்க இல்ல. அங்க. அதுல தான் உக்கார்ந்திருப்பேன். நீங்க விசனப்படாம இருங்க…” என்றான் அவரிடம்.
“இங்கயே கூட இருக்க முடியாதா?…” என அவனிடம் கேட்டவர்,
“அட மனுஷனுக்கு மனுஷன் உதவி. போறப்ப என்னத்த கொண்டுபோவ போறோம். இது ஒரு செரமமா?…” என்றான் தரணிதரன்.
அவன் மீதான மதிப்பும், மரியாதையும் இன்னுமே அதிகமாக தான் செய்தது பேச்சிக்கு.
கஷ்டகாலங்களில் தான் தங்களுடன் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவரும். அப்படி ஒரு சூழ்நிலையில், புது ஊரில் இப்படி ஒருவனின் அனுசரணை அவரின் மனதிற்கு நிம்மதியை தந்தது.
ஆனால் தரணிதரன் மனமோ பெரும் கலவரத்தை தாங்கி இருந்தது. கையிலிருந்த காரின் சாவியை அவ்வப்போது இறுக்கமாய் பிடிப்பதும், அதில் குளிர் உள்ளதா என பரிசோதிப்பதுமாக இருந்தான்.
அதற்குள் மருத்துவரும் வெளியே வர அவரின் முகத்தையே ஆவலுடன் பார்த்தனர் தரணிதரன், பேச்சி இருவரும்.
“பயப்படற மாதிரி எதுவுமில்லை. பேஷன்ட் மீராவோட பாடி டெம்பரேச்சர் நார்மலுக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இப்ப மயக்கத்துல இருக்காங்க. நாளைக்கு சில டெஸ்ட் எடுத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்…” என்று சொல்ல,
“எதனால டாக்டர் இப்படியானது? இம்புட்டு வருஷத்துல இந்தமாரி எம்மகளுக்கு நடந்ததில்லையே…” என்றார் பேச்சி.
“அதை என்னன்னு நாளைக்கு சொல்லுவாங்க ம்மா. நீங்க உட்காருங்க…” என சொல்லிய தரணிதரன்,
“நீங்க உள்ள போய் பாருங்கம்மா. நான் இப்ப வந்திடறேன்…” என்றவன் மருத்துவருடன் சென்றான்.
“என்னன்னு ஏதாவது காரணம் தெரிஞ்சதா டாக்டர்?…” என கேட்க,
“ம்ஹூம் இல்லை தரணி. மிராக்கிளா இருக்கு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்துலையே மீராவோட உடம்புல இருந்த குளிர்ச்சி குறைஞ்சு நார்மலாக ஆரம்பிச்சிருச்சு. இது எப்படி சாத்தியம்ன்னு எங்களுக்கு இப்பவும் அதிர்ச்சியா இருக்கு…” என்றார்.
“மனித உடல் ஏத்துக்க முடியாத குளிர்ச்சி. மார்ச்சுவரில பிணத்தை பதப்படுத்த மட்டுமே இந்தளவுக்கு உறையவைக்க பயன்படுத்தப்படும் குளிர்ச்சி. அது எப்படி மீராவுக்கு? அதைவிட அவங்க உயிரோட இருந்ததும், திரும்ப சாதாரண சூட்டுக்கு உடம்பு வரதும் எனக்கே நடுக்கமாகிருச்சு…” எனவும் கூற தரணிதரன் பேச்சற்று நின்றான்.
“சரி என்னன்னு பாப்போம் தரணி….” என அவனின் தோளில் தட்டிவிட்டு செல்ல திரும்பி பேச்சியிடம் வந்தான் தரணிதரன்.
மீராவை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவர் முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டார்.
“நீங்க போய் பார்த்துட்டு வாங்க…” என்றார் அவனிடம் இலகுவாக.
‘நானா? ஏன்?’ என நினைத்தவனால் அதனை கேட்க முடியவில்லை. கண்ணாடி வட்டத்தின் வழியாக உள்ளே எட்டி பார்த்தவன் கைகள் கதவை திறந்துவிட்டது.
“நான் இங்கின இருக்கேன்…” என சொல்லி பேச்சி நகர்ந்து செல்லவும் தரணிதரனின் கால்கள் அந்த அறைக்குள் செல்ல உடனிருந்த நர்ஸ் அவனை பார்த்து தலையசைத்தாள்.
படுக்கையில் இருந்த மீராவின் முன்வந்து நின்றவன் உடலில் இன்னுமே நடுக்கமும், அவள் நிலை கண்டு பரிதாபமும் ஒருங்கே எழுந்தது.
ஏற்கனவே நல்ல நிறம் மீரா. இப்போது இன்னும் ரத்தப்பசையின்றி வெளுத்து காணப்பட்டாள்.
இப்போது இருப்பவளுக்கும் இதற்கு முன்பிருந்தவளுக்கும் சடுதியில் ஒரு ஒப்பனை உருவாக மனதை உலுக்கியது அந்த வேறுபாடு.
லேசாய் தலையை திருப்பி நர்ஸை பார்த்தவன் அவர் இங்கே கவனிக்கவில்லை என்று தெரிந்ததும் நிம்மதியுடன் மீராவை பார்த்தான்.
அவளின் கையை நடுக்கத்துடன் மெல்ல பிடித்தவன் லேசாய் தூக்கி பார்க்க இலகுவாய் இறகை போலிருந்தது அவளின் கைகள்.
அவன் அழுத்தி பிடிக்காததால் அவனின் விரலிலிருந்து அவள் கைகள் நழுவி தளர்ந்து விழுந்ததும் தான் தரணிதரனின் படபடப்பு கொஞ்சம் குறைந்ததை போலிருந்தது.
சட்டென தன் சட்டை பையிலிருந்து ஒரு பொட்டலத்தை பிரித்தவன் அதில் இருந்த விபூதியை எடுத்து மீராவின் நெற்றியில் பூசி, சாமி கயிற்றையும் கையில் கட்டிவிட்டான்.
“என்ன ஸார் பன்றீங்க? இதெல்லாம் நீங்க பண்ணக்கூடாது…” என நர்ஸ் பார்த்துவிட்டாள்.
“சிஸ்டர் அவங்க வீட்டுல இருந்து குடுத்துவிட்டாங்க இதை. ரொம்ப பயந்துட்டாங்க. ப்ளீஸ், இருக்கட்டுமே…” என சொல்லியவன் கட்டிய கயிற்றை நன்றாக அவிழ்ந்துவிடாமல் முடிச்சிட்டு முடித்தவனுக்கு அப்போது தான் நிம்மதியானது.
“இதெல்லாம் பண்ணக்கூடாது ஸார். டாக்டர் பார்த்தா எங்களை தான் திட்டுவாங்க…” என்றவள்,
“நாங்களே இந்த பொண்ணுக்கு என்னன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம்…” என சொல்லி முணுமுணுக்க,
“ஏன் சிஸ்டர், வெறும் கயறு தானே கட்டிவிட்டேன். அதுவும் அதுல எந்த மெட்டலும் இல்லை. சாமி கயிறு. நெத்தில கோடா விபூதி. இதுல உங்க ட்ரீட்மென்ட் எந்தவிதத்துல டிஸ்டர்ப் ஆகிடுச்சு?…” என்று ஆரம்பித்துவிட்டான் தரணிதரன்.
“அதுக்கில்லை ஸார்…” என நர்ஸ் அவனின் பட்டென்ற பேச்சில் திகைக்க,
“நீங்க மருத்துவம் பார்க்கறீங்க. நாங்க உங்களோட சேர்த்து கடவுளையும் நம்பறோம். ஏன் யாராலையும் எதுவும் முடியலைன்னா கடைசில டாக்டர்ஸ் சொல்றதில்லையா இனி கடவுள் தான் காப்பாத்தனும்ன்னு. அதை தானே செஞ்சேன்…” என்று,
“மெதுவா பேசுங்க ஸார். பேஷண்ட் முழிச்சுக்க போறாங்க…” என்று நர்ஸ் சொல்லவும் தான் அமைதியானான்.
“இந்தாங்க. உங்களுக்கும் உதவும்…” என்று அந்த விபூதி பொட்டலத்தை அந்த நர்ஸ் கையில் கொடுத்துவிட்டு மீராவை ஒரு முறை பார்த்துவிட்டு வெளியேற போனவன்,
“நான் போகவும் கயறை கழட்டிடாதீங்க…” என்று எச்சரித்து கண்களை உருட்டி செல்ல நர்ஸ் தான் பேந்த பேந்த முழித்தார்.
“என்ன தம்பி பார்த்துட்டீங்களா?…” என பேச்சி கேட்கவும்,
“ஆமாம்மா, நல்லா தூங்கறாங்க. டாக்டர் எதுவுமில்லைன்னு சொல்றாங்களே. நீங்க இந்த பெஞ்ச்ல படுங்க. நான் இப்படி உக்கார்ந்திருக்கேன்…” என்றான்.
“எங்க தம்பி தூக்கம் வருது? வீட்டுக்கு போனவக நிம்மதியா இருக்கனுமே?…” என பேச்சி புலம்ப தரணிதரன் மனது திடுக்கிட்டது.
‘நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்துலையே மீராவோட உடம்புல குளிர்ச்சி குறைஞ்சு நார்மலாக ஆரம்பிச்சிருச்சு’ என சொல்லிய மருத்துவரின் பேச்சு காதில் கேட்க நெஞ்சமெல்லாம் உதறியது.
“நாங்க கிளம்பவும்ன்னா?…” என யோசித்தவன் பதட்டம் அதிகமாக அதை பேச்சியிடம் காண்பிக்காமல் தன்னை நிதானப்படுத்த முனைந்தான்.
பேச்சி என்னென்னவோ பேசி புலம்பியபடி கண்ணீரை துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி இருக்க,
“ம்மா, ஒரு போன் போட்டுட்டு வரேன். அய்யா தூங்கிட்டாங்களான்னு கேட்கனும்…” என்று சொல்லியவன்,
“கீழே கடை இருக்கு. குடிக்க டீ எதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா?…” என கேட்டான்.
“இல்லய்யா, நீயி கேட்டதே எம்மனசு நெறைஞ்சு போச்சு…” என்று மீண்டும் கண்ணீர் விட,
“சரி, இப்ப வாரேன்…” என்று சொல்லி தடதடவென படியில் இறங்கியவன் வீட்டிற்கு அழைத்தான்.
தந்தையை பார்த்துக்கொள்ள வரும் நர்ஸான கோபிக்கு அழைக்க அவன் உடனே எடுத்துவிட்டான்.