“என்ன தம்பி அங்கயே நின்னுட்டீங்க? உள்ள வரத்தான…” என அழைத்தார் பேச்சி.
மீராவும் தரணிதரன் நிற்பதை அப்போது தான் கவனித்து திரும்பினாள். பார்த்ததுமே இன்னும் அவள் விழிகள் அச்சத்தில் விரிந்தது.
“வாங்கண்ணா…” என ராகவியும் அழைக்க உள்ளே வந்தான் அவன்.
அவனை அவர்கள் மட்டுமின்றி அந்நிழலும் கவனிப்பதை அவனால் அப்பட்டமாய் உணர முடிந்தது.
“ராத்திரி இந்த தம்பி தான் கூடவே இருந்துச்சு மீரா. இல்லன்னா அலண்டு போயிருப்போம் த்தா….” என பேச்சி சொல்ல நாச்சியார் கண்ணீர் உகுத்தபடியே இருந்தார்.
மீராவால் எதற்கும் பதில் சொல்லமுடியவில்லை. உடலில் அப்படி ஒரு வலி. நூறுபேர் அவள் மீது நடந்து சென்றதை போல வேதனையில் முகம் மாறாமல் இருக்க சிரமம் மேற்கொண்டாள்.
“நேரமே கிளம்பி வந்துட்டாங்க. இன்னும் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டாங்க. நீங்களும் போய் சாப்பிடுங்க…” என்று அவர்களை அனுப்ப நினைத்தான் முதலில்.
இப்போது ராகவியை ஒட்டி அதே நிழல். ‘நீதான்ய்யா இந்த குடும்பத்துக்கு காவலா இருக்கனும்’ என மனதிற்குள் இறைவனை வேண்டியபடி பார்த்தான்.
“சரி தம்பி சொன்னா சரியாத்தான் இருக்கும். வா நாச்சி…” என அவர்களை அழைத்து சென்றார் பேச்சி.
மூவரும் கிளம்ப கதவை பார்த்தான் தரணிதரன். இரு நொடிகள் மட்டுமே திறந்திருந்து பின் பட்டென்று கதவு அடித்து சாற்றியது.
தரணிதரன் நடுங்கிவிட்டான் ஒரு நிமிடம். நிச்சயம் இந்த அறையில் இப்போது இல்லை.
ஆனால் இவர்களை மட்டுமே பின் தொடர்கிறதா? என்ன என யோசிக்க கூட முடியவில்லை.
திரும்பி மீராவை பார்க்க அவள் வெறித்த பார்வையுடன் தன் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை பார்த்தாள்.
“நான்தான் கட்டிவிட்டேன்…” என அவனே சொல்ல புருவம் உயர்ந்து விழிகள் அவன் முகம் பார்த்தது.
“நேத்து நீங்க என்ன பாத்தீங்கன்னு சொல்ல முடியுங்களா?…” என்று தயக்கமும், பரபரப்புமாய் கேட்க மீண்டும் மீராவின் முகத்தில் அதிகபட்ச அச்சமும், கலவரமும்.
“அங்க ஒரு பொண்ணு இருந்துச்சுன்னு சொன்னீங்களே? பொண்ணு தானா? என்ன வயசு?…” என்றான் அடுத்ததாக.
அவன் கேட்க கேட்க மீண்டும் மீராவின் கண்ணுக்குள் அந்த பெண்ணின் செதுக்கப்படும் அவ்வுருவம்.
“அம்மா…” என முகத்தை மூடிக்கொண்டவள் உடல் உதற பயந்து எழுந்துகொள்ள முயன்றாள் இப்போது கண்டுவிட்டதை போல.
“ஏங்க, ஏங்க கத்தாதீங்க…” என்று அவளை அமைதிப்படுத்த முடியாமல் தரணிதரன் திணறி போனான்.
“அம்மாவ கூப்பிடுங்க. ப்ளீஸ். ப்ளீஸ்…” என மீரா இன்னும் பயத்தில் நடுங்க,
“வருவாங்க. இருங்க நான் இருக்கேன் இல்ல…” என அவளின் கையை பிடித்துக்கொண்டவன்,
“ஒண்ணுமில்ல, இங்க யாருமில்ல. உங்க கையில சாமி கயறு இருக்கு. ஒன்னும் இல்ல…” என அவன் சொல்ல சொல்ல அப்போது தான் அவன் பேச்சின் திசையை அவளால் உணரவே முடிந்தது.
மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்தவள் உடல் வியர்த்திருக்க மூச்சை இழுத்தபடி தரணிதரனை பார்த்தாள்.
“இந்த தண்ணிய குடிங்க மொத. நான் என்னன்னு சொல்லுறேன்…” என்றான் கரிசனையாக.
“என்ன பார்க்கறீங்க? குடிங்க…” என நீரை பருக தந்தவன் சில நொடிகள் அமைதியாகி,
“இங்க பாருங்க டாக்டர், நான் கேட்கறதுக்கு மட்டும் பதட்டமில்லாம பதில் சொல்லுங்க…”
“ஹ்ம்ம்…”
“நீங்க பார்த்ததா சொன்ன பொண்ணு வயசு என்ன இருக்கும்? உங்ககிட்ட பேசுச்சா?…” என்றான்.
“ம்ஹூம், பேசலை. ராகவி வயசு தான் இருக்கும்…” என நடுக்கத்துடன் சொல்லியவள் தரணிதரனின் கையை விடவே இல்லை.
“ராகவி வயசா?…” என்றவன் விழிகள் கலங்கிவிட்டது.
“சரி அதுக்கு முந்தி ஒன்னு சொல்லுறேன். கவனமா மனசுல வச்சுக்கோங்க. உங்க வீட்டு மனுஷங்க ஏற்கனவே பயந்து போயிருக்காங்க. ரெண்டுபேரும் வயசானவங்க. சின்ன பிள்ளை ஒன்னு. எதையாச்சும் சொல்லி அவங்களை அச்சப்படுத்த வேண்டாம். மொத நாம என்னனு இத கவனிப்போம்…”
அவன் சொல்லியதன் அர்த்தமும் மீராவிற்கு புரிய தலையை மட்டும் அசைத்தாள்.
அவளுக்குமே வீட்டினரை சொல்லி பயம் காட்ட விருப்பமில்லை. எதுவும் தெரியவில்லை என்றால் இந்த ஊரே வேண்டாம் என முடிவுக்கு வந்திருக்க அது அவள் எடுக்க கூடிய முடிவல்லவே?
அவளுக்கு மேலான சக்தி மீராவின் மனதை கண்டுகொண்டு பரிதாபம் தாண்டி உறுத்து விழித்தது.
இன்னும் பார்க்கவேண்டியவை எத்தனையோ இருந்தது. காரண, காரியங்களின்றி அவள் குடும்பத்துடன் இங்கே வரவழைக்கப்படவில்லையே.
“என்ன நான் சொல்றது புரியுதா?…” என்றான் தரணிதரன்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைக்க,
“எவ்வளோ நாளா அந்த பொண்ணை பார்க்கறீங்க? எப்ப இருந்து?…” என மனதை திடப்படுத்தியபடி கேட்டவன் தனது போனை எடுத்தான்.
“நாங்க குடிவந்த அன்னைல இருந்து பார்க்கறேன்….” என மீரா சொல்லவும் போனில் எதையோ தேடியவன் விலுக்கென்று நிமிர்ந்தான்.
“என்ன? என்ன சொல்றீங்க?…” என அதிர்ந்து,
“இவ்வளோ நாளா ஏன் சொல்லலை?…” என கேட்க,
“என்ன சொல்லனும்? அந்த பொண்ணு உங்க வீட்டு பக்கத்து வீடுன்னு நினைச்சேன். எப்பவும் திண்ணையில இருக்கும். சில நேரம் இருக்காது….” என்றவள்,
“நான் சொல்றதை நம்ப முடியுமான்னு தெரியலை. ஆனா உண்மை. அந்த பொண்ணு நேத்து அதையே முகத்தை கொஞ்ச கொஞ்சமா…” என்றவள் மீண்டும் மயங்கும் நிலைக்கே சென்று விட,
“மீரா மீரா. இங்க பாருங்கம்மா…” என அவளின் கன்னத்தை தட்டி தண்ணீர் தெளித்து குடிக்க தந்து ஆசுவாசப்படுத்தினான்.
“உங்க வீட்டுல வந்துருவாங்க…” என கதவையும் பார்த்துக்கொண்டவனுக்கு கைகள் நடுங்கியது அந்த புகைப்படத்தை எடுப்பதற்கு.
“நான் சொல்றது பிரம்மை இல்லை. நிஜமா சொல்றேன்…” என அவன் நம்பவில்லையோ என்று பதட்டமானாள் மீரா.
தரணிதரன் போனில் கவனமாகயிருக்க தான் பேசியதை அவன் பொருட்படுத்தவில்லையோ என யோசிக்க,
“இந்த போட்டோவ பாருங்க. இந்த பொண்ணா? நல்லா பார்த்து சொல்லுங்க….” என மத்தளமிடும் நெஞ்சத்தை இறுக்கி பிடித்துக்கொண்டு கேட்க அதை உற்று நோக்கினாள் மீரா.
இரட்டை ஜடையில் பூரண நிலவாய் புன்னகைத்த அதே சின்னஞ்சிறு பெண் தான் இவள்.
“இந்த பொண்ணு தான், இந்த பொண்ணு தான்…” என மீரா மீண்டும் மீண்டும் சொல்ல தரணிதரன் சில்லிட்டு போனான்.
“டெய்லி உக்கார்ந்திருக்கும். நான் வாய் பேசாத பொண்ணுன்னு நினைச்சேன். அதான் பேசலையோன்னு. ஆனா ஆனா…” என்றவள் கைகளை மடக்கி முகத்தை அதில் புதைக்க,
“மகாலட்சுமி…” என்றான் தரணிதரன்.
அவனின் வேதனை நிரம்பிய முகம் பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவள் நிச்சயம் தங்களை போலில்லை என்று மட்டும் புரிந்தது.
“எங்க பக்கத்து வீட்டு பொண்ணு தான். ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப சுட்டி. ஸ்கூல்லயே அவ தான் பர்ஸ்ட். அப்பா கிடையாது. அம்மா மட்டும். சரோஜாக்கா தனியா தான் பிள்ளையை வளர்த்தாங்க…” என்று சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவள் முகம் இன்னும் வெளிறிக்கொண்டே இருந்ததது.
“இதை பாருங்க…” என்று மீண்டும் இன்னொரு செய்தி துணுக்கை அவளிடம் காண்பிக்க அதை பெரிசுபடுத்தி பார்த்தாள் மீரா.
‘சாலை விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பள்ளிமாணவி மகாலட்சுமி மருத்துவமனையில் திடீரென மாயம்.’ என்று இருந்தது முதலில்.
‘மாயமான பள்ளி மாணவியின் உடல் கண்டெடுப்பு. அதே மருத்துவமனையில் மார்ச்சுவரியில் பிணங்களை வைக்கப்பட்டிருந்த குளிரூட்டும் பெட்டியில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.’
‘சிகிச்சையில் உடல் தேறி வந்துகொண்டிருந்த மாணவி மாயமானதும், மீண்டும் பிணவறையில் கண்டெடுக்கப்பட்டதும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மாணவியின் மரணத்தின் மர்மங்கள் விலகுமா?’
‘பள்ளி மாணவி மகாலட்சுமியின் மரணம் கொலை என்று கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது தாய் சரோஜாவும் மனநிலை பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளார்.’
இப்படியான அத்தனை செய்திகள் மகாலட்சுமி பற்றி அதில் இருக்க அதன் தேதியை பார்த்தவள் கைகள் உதறியது.
“அஞ்சு வருஷமா?…” என விழியே தெறித்துவிடும் அளவிற்கு தரணிதரனை நிமிர்ந்து பார்த்தவள் கையிலிருந்த போனை நழுவவிட்டு மீண்டும் மயக்கமானாள்.
மருத்துவரை உடனடியாக வரவழைத்து என்னவென்று பார்க்க அதிர்ச்சியில் மயக்கம் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.
மீண்டும் மீரா கண்விழிக்கையில் குடும்பத்தினர் உடன் இருக்க தரணிதரன் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“என்ன கண்ணு, திரும்ப மயங்கிட்டியாம்?…” என்றார் பேச்சி.
“சாப்பிடாம இருந்ததுக்கும் அதுக்கும் வந்திருக்கும். கொஞ்ச நேரத்துல பொறப்படுவோம்…” என தரணிதரன் வந்து சொல்ல,
“சரிங்க தம்பி…” என்றவர்,
“எதனால இப்படியாச்சுன்னு எதாச்சும் சொன்னாவலா? நான் கேட்டதுக்கு வாய தொறப்பேனான்னு நிக்கிதாங்களே?…” என கவலையுடன் பேச்சி கேட்டார்.
“சரியா உண்ணாம, உறங்காம இருந்திருப்பாக போல? மேலுக்கு அசத்திருக்கு. அதான் ரெண்டுமூணு நாள் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பறமா வேலைக்கு போக சொல்லுங்க…” என்று சொல்லியவன் சற்று நேரத்தில் அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
மீராவின் ஒருபக்கம் ராகவி இருக்க மறுபக்கம் நாச்சியார் இருக்க தன் கால்களில் ஜில்லென்ற உணர்வை தாங்கினாள் மீரா.
“ம்மா…” என அலறி சட்டென காலை உதற அதில் காரின் கட்டுப்பாடு ஒருநிமிடம் சிதறி பின் பிரேக்கடித்து நிறுத்தினான் தரணிதரன்.
“என்னாச்சுத்தா? என்னாச்சு?…” என முன்னிருந்த பேச்சி கேட்க,
“இல்ல கால்ல ஜில்லுன்னு…” என்று சொல்லியவள் கலக்கத்துடன் தரணிதரனை பார்த்தாள்.
கையி கட்டப்பட்டிருந்த அந்த கயிறு? ஒன்றுமில்லையா? எப்படி தொட முடிந்தது? தரணிதரன் முகத்தில் கிலி படர்ந்தது.
“என்னமோ பார்த்து பயந்திருக்கா. புள்ளைக்கு என்னன்னு சொல்ல தெரியலை. ஆத்தா மீனாட்சி எங்களுக்கு கூடவே இருத்தா…” என்று வேண்டினார் பேச்சி.
“நீங்க வண்டியை எடுங்க தம்பி…” என்றவர் வீடு செல்லும் வரை வேண்டிக்கொண்டே தான் வந்தார்.
மீராவின் வீட்டு வாசலில் கார் நின்றதும் தரணிதரன் முன்னிருந்த கண்ணாடியில் பார்க்க ஒவ்வொருவராய் இறங்க சரேலென அந்த புகைபோன்ற உருவம் இறங்கி சென்றது.
இதை எப்படி கையாள்வது என தெரியாமல் தரணிதரன் நிலைகுலைந்து போயிருந்தான்.
மகாலட்சுமியின் விபத்து அவளுக்கு மட்டுமல்ல, தன் குடும்பத்தையும் ஆட்டம் காண செய்ததே.
நினைக்கையில் கண்கள் கலங்கும் போலிருக்க தொண்டையை செருமிக்கொண்டவன்,
“என்ன மகா வேணும்?…” என ஆற்றமாட்டாமல் வாய்விட்டே கேட்க,
“ண்ணா…” என்ற அசரீரியில் உடல் விரைக்க சட்டென்று திரும்பி பார்த்தான் பின்னிருக்கையை.
அங்கே எதுவுமில்லை. ஆனால் அந்த சத்தம். அண்ணா என்ற அழைப்பிற்கு பின் ஹக், என்று மூச்சுக்கு திணறுவதை போல பேச முடியாமல் குரல்வளை இருக்கும் வேதனையில் முணங்க அவனால் அதை கேட்க முடிந்தது.
சற்று முன் பார்த்த ஞாபகத்தில் மீண்டும் முன்னிருந்த கண்ணாடியை பார்க்க பனி சிலையென அமர்ந்திருந்த பெண் தன் கழுத்தை தானே திருகியபடி துடிதுடிக்க,