“அதான பார்த்தேன். இப்ப தான அரிசியை போட்டிருக்க? அதை மட்டும் வடிச்சுக்கோ. காயை அப்படியே தூக்கி ப்ரிட்ஜ்ல வை. நாளைக்கு செஞ்சுக்கோ. நான் சாம்பார் வச்சிருக்கேன். போய் கொண்டுவரேன்…” என அவன் மறுத்தும் கேளாமல் சென்றுவிட்டார்.
“ப்ச், இப்ப என்ன செய்யறது?…” என தலையை பிய்த்துக்கொல்லாத குறை தான் தரணிக்கு.
மீராவிடம் முதலில் பேசவேண்டும் இதை பற்றி என நினைத்தவனுக்கு எப்படி என்று எதுவும் தெரியவில்லை.
ஆனால் மிகப்பெரிய ஆபத்து எதுவோ அது அவர்களுக்கா, இல்லை வேறு யாருக்குமா? அவர்களின் மூலம் எதையும் உணர்த்த முற்படுகிறதா என யோசித்து கலங்கி போயிருந்தான்.
உலை கொதித்து லேசாய் ஒருபக்கமாய் மூடி வைத்திருந்த அரிசி பானையின் மூடி கீழே விழுந்துவிட சிந்தனை வளையம் அறுபட்டு அடுக்களை சென்றான்.
கடைக்கு வேறு செல்லவேண்டும். என நினைத்தபடி சாதத்தை வடித்துவிட்டு வெளியே வர கோகிலா வந்துவிட்டார்.
“இந்தா சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கி அப்பறமா கடைக்கு போ…” என சொல்ல,
“என்னக்கா சாம்பாருன்னு மட்டும் சொன்னீங்க? கோஸ் பொரியலும் இருக்கு?…”
“ஏன் சாப்பிட மாட்டியா என்ன? காயெல்லாம் அவருக்கும், பிள்ளைங்களுக்கும் குடுத்தனுப்பிட்டேன். அதான் உனக்கு வெறும் குழம்ப எப்படி குடுக்கன்னு கோஸ் செஞ்சேன் கொஞ்சமா. சாப்பிட்டுக்கோ…”
“என்னக்கா இதெல்லாம்?…” என சங்கடமாய் பார்க்க,
“இன்னைக்கு உனக்கு என்னமோ ஆகிடுச்சு போ. சரி நான் போய் மீரா வீட்டுல இருக்கேன் கொஞ்ச நேரம்…” என்று எதிர் வீட்டிற்கு சென்றுவிட்டார் கோகிலா.
பெருமூச்சுடன் உள்ளே வந்தவன் கோகிலா கொடுத்ததை மூடி வைத்துவிட்டு நடராஜரின் எதிரே வந்தமர்ந்தான்.
நேரம் சென்றதே தெரியாமல் யோசனையில் இருக்க கோபியின் சத்தத்தில் தான் திடுக்கிட்டு பார்த்தான் அவன்.
“என்னண்ணே இந்நேரம் கடைக்கு கிளம்பிருப்பீங்கன்னு பார்த்தா இன்னும் லுங்கியும் பனியனுமா இருக்கீங்க?…” என்ற கோபியின் கேள்வியில் தன்னை குனிந்து பார்த்தவன்,
“இப்ப கிளம்பனும் டா…” என்று சொல்லிவிட்டு எழுந்து நிற்க,
“பொறவு அண்ணே, கோவிச்சுக்க கூடாது. உங்கட்ட கேட்காம ஒரு காரியம் பண்ணிட்டேன்…” என கோபி தயங்கி நின்றான்.
“என்னடா? நான் கேட்டேன்னு வேற யார்கிட்டயும் சொல்லிட்டியா?…” என முறைக்க,
“இல்ல இல்ல. அதெல்லாம் உசுரே போனாலும் சொல்லுவேனா? இது வேற…” என தனது பேக்கில் இருந்து டிபன் கேரியரை எடுத்தான்.
“அம்மா வீட்டுல புளிரசமும், தேங்காய் துவையலும் பண்ணிருந்துச்சு. நீங்க எதுவும் செஞ்சீங்களான்னு தெரியல. செஞ்சிருக்க மாட்டீங்களோன்னு கொண்டுவந்துருக்கேன். உங்களுக்குன்னு சொல்லவும் அம்மா சட்டுன்னு கொஞ்சம் பீர்க்கங்கா கூட்டும் செஞ்சு குடுத்துச்சு…” என அவனிடம் நீட்ட தரணிதரன் மனநிலையே வேறானது.
எப்போதும் கோபியிடம் கெடுபிடி காண்பிப்பவன் தான். ஆனால் இப்படி எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.
கண்கள் கலங்கிவிடும் போலிருந்தது அவனுக்கு. உறவுகள் எல்லாம் தூற்றி செல்ல இப்படி சொந்தமில்லாத பந்தங்கள் அரவணைக்க தரணிதரன் நெகிழ்ந்து போனான்.
“என்னண்ணே கோவம்ங்களா?…” என கோபி தயக்கமாய் கேட்க,
“அட போடா கிறுக்கா…” என்றவன்,
“சரி கொண்டு போய் அடுப்பு மேடையில வை. நான் வரேன்…” என விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் முகத்தை காண்பிக்காமல்.
உள்ளே வந்தவன் தன் அறையின் ஜன்னல் வழியே எதிரே தெரிந்த வீட்டை பார்க்க அமைதியாய் காட்சி அழைத்தது அந்த வீட்டின் முகப்பு.
அங்கேயே அவன் நின்றிருக்க நாச்சியார் கையில் எதையோ தூக்கியபடி வந்தார்.
திண்ணையில் துணியை விரித்து அரிசியை பரவி விட்டவர் மீண்டும் உள்ளே சென்றுவிட மீராவை எப்படி தொடர்புகொள்வது என மீண்டும் அந்த யோசனைக்கே வந்தான்.
முதலில் கடைக்கு கிளம்புவோம். அதன் பின் பேசலாம் என்று வேகமாய் கிளம்பி தந்தைக்கு உணவை கொடுத்துவிட்டு தானும் உண்டுவிட்டு வெளியே வர ராகவி போனில் பேசியபடி நின்றாள். அருகில் அந்நிழல் இரட்டையாய்.
தரணிதரனை பார்த்ததும் நிழல் உருவம் பெற கோபமும் ஆவேசமுமாய் வீதியின் ஆரம்பத்தை வெறித்துக்கொண்டு நின்றாள் மகாலட்சுமி.
“மகா…” என்றவன் சத்தம் அவளை அடைய மகா மட்டுமல்லாது ராகவியும் திரும்பி பார்த்தாள்.
“மகாவா? யாரண்ணா?…” என காதில் இருந்த போனை எடுத்துவிட்டு கேட்க தரணிதரன் மகாலட்சுமியை பார்த்தான்.
“இன்னைக்கு காலேஜ்க்கு போகலைல. அதான் க்ளாஸ்மேட்க்கு கால் பண்ணேன். லஞ்ச டைம்ல தானே ப்ரீயா இருப்பா. உள்ள எல்லாரும் பேசிட்டிருக்காங்க. அதான்…” என்று ராகவி சொல்ல மகாவின் விழிகள் கண்களுக்குள் கரகரவென உருண்டது.
மூச்சடைக்க அவளை பார்த்தவன் அந்த திசையும் பார்க்க அங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை.
ராகவியை வைத்துக்கொண்டு மகாவிடம் கேட்கவும் முடியவில்லை. மூச்சு வேகமாய் எடுக்க கழுத்தின் கீழ் கோடாய் ஒரு கீறல் கொஞ்சம் கொஞ்சமாய் விழ ஆரம்பிக்க தரணிதரனுக்கு பதட்டம் கூடியது.