“கோகிலா கூட பேசிட்டிருக்கா மீரா. இப்ப வந்திருவாங்க. உக்காருங்க தம்பி…” என்றவர் பிளாஸ்டிக் சேரை எடுத்து போட,
“இல்லைங்கம்மா. நான் கிளம்பனும். இன்னும் கடைக்கே போகலை….” என அமராமல் நிற்க,
“அட செத்த உக்காருங்க தம்பி…” என்ற பேச்சி,
“நீ போய் உன் சித்தியை வர சொல்லிட்டு தம்பிக்கு குடிக்க மோர் கொண்டா…” என்றார் பேத்தியிடம்.
மறுக்கமுடியாமல் தரணிதரன் அமர மீராவும் கோகிலாவும் பின் பக்கத்தில் இருந்து வந்துவிட்டனர்.
வெளிறிய முகத்தின் அச்சம் இப்போதும் விலகாதிருக்க கோகிலாவின் முகத்தில் பீதி படர்ந்திருந்தது.
அதுவே சொல்லியது மீரா அனைத்தையும் கூறிவிட்டிருக்கலாம் என்பதை. பெரியவர்கள் முன் எதுவும் பேசமுடியாமல் கோகிலா நிற்க,
“இப்ப பரவாயில்லைங்களா?…” என்றான் தரணிதரன்.
“எங்க தம்பி? வந்து ஒருவாய் காஞ்சி உள்ள இறங்கலை. பதறிட்டே இருக்கா. என்ன செய்யுதுன்னா எதுவும் சொல்லமாட்டேன்றா…” என பேச்சி வருத்தமாய் சொல்ல ராகவி வந்துவிட்டாள்.
“இன்னும் இந்த சீட்டு அட்டையை எடுத்து உள்ள வைக்கலையா நீ?…” என பேத்தியை பிடித்து பேச்சி திட்ட,
“இந்தா வைக்கறேன்…” என ராகவி அதனை எடுத்து உள்ளே செல்லவும்,
“நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நல்ல மனுஷி தான் அந்தம்மா. எம்புட்டு கனிவா பேசுது. மனுஷமக்க இப்படியும் இருக்கதால தான் நிம்மதின்னு ஒன்னு இருக்கு தம்பி…” என்றார் பேச்சி தரணிதரனிடம்.
“இப்ப என்னம்மா, குடும்ப சூழ்நில ஒத்துவரலன்னா அடுத்த மாசங்கூட சேர்த்து கட்டுங்கன்னு பெருந்தன்மையா சொல்லுது. பெரிய மனுஷின்னா இதேன்…” என்று சொல்லிக்கொண்டிருக்க மோரை குடித்துவிட்டு எழுந்தவன்,
“நான் அப்பறமா வந்து பார்க்கறேன் ம்மா. பார்த்துக்கோங்க…” என சொல்லி கிளம்பி வெளியே வர மகாலட்சுமி அமர்ந்திருந்தாள் அதே இடத்தில்.
தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றவன் வீதியின் முனைக்கு சென்று பார்க்க இப்போது ராகவியின் வீட்டு வாசலில் நின்றிருந்தாள் மகா.
“காலையில வியாபாரம் எப்படி போச்சு?…” என கேட்டு கடையில் கவனம் செலுத்த முயன்றான்.
————————————————-
“என்னால இன்னும் நம்ப முடியலை மீரா…” கோகிலா அரண்ட முகத்துடன் தான் இன்னும் இருந்தார்.
“நான் சொல்றதை நீங்க நம்பலையாக்கா?…” என மீரா பரிதவிப்புடன் கேட்க,
“முதல ஷாக் தான். ஆனா இப்ப தரணி தம்பி வந்துட்டு போகவும் தான் எனக்கே புரிஞ்சது. ஏன் அப்படி இன்னைக்கு இருந்துச்சுன்னு…” என்றார் கோகிலா.
“அவங்களுக்குமே இத்தனை நாள் தெரியலை போல. ஆனா நான் வந்தன்னையில இருந்து பார்க்கறேன். பெருசா இங்க யார்க்கிட்டயும் பேசிக்கிட்டதில்லை உங்களை தவிர. அதனால தெரியாமலே போயிருச்சு…” மீரா வியர்த்தபடி எல்லாம் சொல்ல,
“எப்படி இருந்த பொண்ணு தெரியுமா? இந்த தெருவுல அந்த புள்ளை மேல படாத கண்ணே இல்லை. உன் மக மட்டும் எப்படி இப்படி படிக்கிறான்னு பொறாமையில பொசுங்கி போய் பேசுவாளுங்க பொம்பளைங்க…” என்ற கோகிலாவின் மனதிற்குள் சுருக்கென்ற வலி.
தரணிதரன் முதல்நாள் மீராவிற்கும் அவளின் குடும்பத்திற்கும் உதவிய விதமும், இரவெல்லாம் உடன் இருந்து பார்த்துக்கொன்டதும் என அதிகாலை வாசல் தெளிக்கும் நேரமே அம்பலப்பட்ட ரகசியமாய் காதில் விழுந்துவிட்டது.
“இம்புட்டு நாலு ஒத்த உதவி செஞ்சிருக்குமா இந்த தரணி? இன்னைக்கு டாக்டரு பவுசுக்கு ஓடி ஓடி பார்க்கறதென்ன? பதறி துடிச்சு கையில தூக்கிட்டு போறதென்ன? கூடவே இருந்து ரா தங்கலென்ன?…” என கண்ணு காது மூக்கு வைத்து உருவகமே செய்துவிட்டனர்.
இப்படி என கேட்டதுமே அத்தனை பேரையும் பிடித்து மங்களம் தான் சாமியாடி இருந்தார்.
“வெக்கமாயில்ல, பொம்பளைங்களா நீங்கலாம்? சீவி சிங்காரிச்சுக்கிட்டா போதுமா? மனசு அம்புட்டும் குப்பை. அந்த புள்ள சாமியாட்டம் உதவுதேன்னு நினைக்காம என்னங்கடி பேச்சு இது?…” என ஒவ்வொருவரையும் பிடித்து எகிறிவிட்டார்.
“இப்ப என்னத்த தப்பா சொல்லிட்டோம் மங்களம்? தரணிக்கும் வயசாகி போச்சு. அந்த புள்ளையும் பார்க்க கண்ணுக்கு அழகாட்டம் இருக்கா. மனுசன் விழத்தான செய்யுவான்? நல்லது தான?…” என்று அதையும் பேச,
“இந்த பாருங்க மங்களத்தம்மா? இல்லாத ஒன்னை, நாங்க பார்க்காததையா பேசறோம்? இம்புட்டு சனங்க இருக்கோம்? ஒருத்தவங்களுக்காச்சும் தரணி செஞ்சிருக்குமா? அந்த புள்ளை வரவும் தான எல்லாம் தானாவே தேடி போயி செய்யுது. உண்மைய சொன்னா கசக்குதோ?…” என்று இன்னொருத்தி பேச,
“போயி ஓசி வைத்தியம் பார்க்கேல இனிச்சது. ரவைக்கு அந்த புள்ள நெடுமரமா விழுந்து கெடக்கேன்னு கிட்ட வந்தீங்களாடி? ஓசின்னா என்னத்த வேணா அள்ளி திம்பீங்களோ? அம்புட்டு ரோச எரும இருக்கறவ இனி அந்த புள்ளைக்கிட்ட ஓசில வைத்தியம்ன்னு பார்க்காத….” என்று மங்களத்தை நிறுத்த முடியவில்லை.
“விடுங்க நீங்க. இவங்களை எல்லாம் தெரியாதா? இதுக்கு போய் பதில் குடுத்துக்கிட்டு…” என கோகிலா தான் அவரை அமர வைத்தார்.
“கேக்க ஆளில்லைன்னா பேசுவாளுங்களா. இனி அந்த டாக்டரையும், தரணி புள்ளையவும் எவளாச்சும் பேசட்டும், அவ அவ வீட்டு வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்துல ஏத்திருவேன். கைக்காசா போட்டு போஸ்ட்டரை அடிச்சு ஓட்டிற போறேன்…” என்று நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார் மங்களம்.
இந்த விஷயத்தை பக்குவமாக மீராவிடம் சொல்லி இனி யாருக்கும் இலவசமாக வைத்தியம் பார்க்காதே என சொல்லலாம் என்றிருந்த கோகிலாவிற்கு இப்போது சொல்வது சரியாக படுமா என்றானது.
ஏற்கனவே பயந்து போயிருப்பவளை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம், பின்னால் பார்த்துக்கொள்வோம் என மீராவிற்கு ஆறுதல் கூறினார்.
“மகா ரொம்ப நல்ல புள்ளை. உன் கண்ணுக்கு தெரியுதுன்னா என்ன காரணம்ன்னு தெரியலை மீரா. உன் மன ஆறுதலுக்கு வேணா ஒன்னு பண்ணுவோம். எனக்கு தெரிஞ்ச சாமி இருக்காங்க. உனக்கு உடம்பு சரியாகவும் போய் பார்த்துட்டு வருவோம்…” என கோகிலா சொல்ல,
“உனக்கு உடம்பு சரியாகட்டும் மீரா. சொன்னா கேளு. கண்டிப்பா போவோம். அதுக்கு முன்னாடி நானும் அவர்கிட்ட சொல்லிடறேன். ஒரு ரெண்டுநாள் போகட்டுமே?…” என்றதும் மீராவால் மறுக்க முடியவில்லை.
“அப்பறம் அக்கா, அம்மா, சித்திக்கு…” என மீரா சொல்ல,
“கண்டிப்பா சொல்லமாட்டேன். நீ தைரியமா இரு. எல்லாமே நல்லதுக்குன்னு நினை…” என்ற கோகிலா,
“மகா இறந்து போய் அஞ்சு வருஷமாச்சு. நாங்க யாருமே இதுவரைக்கும் பார்த்ததில்லை. இங்கயே இருந்தவ யாருக்கும் ஒரு தொந்தரவும் குடுத்ததும் இல்லைன்னு நினைக்கறேன். எனக்கே இப்ப தான் தெரியுது மகா இங்க தான் இருக்கான்னு. அதனால தைரியமா இரு…”
“சரிங்கக்கா…” என மீரா சொல்லவும் மாலை வருவதாக சொல்லி கிளம்பி வெளியே வந்தார் கோகிலா.
என்னதான் மீராவிற்கு தைரியம் சொல்லிவிட்டாலும் வாசலுக்கு வரவும் அவரின் உடலெல்லாம் நடுக்கம் பெற்றது.
எதிரிருந்த திண்ணையை பார்க்க அவரின் விழிகளுக்கு எதுவும் தெரியவில்லை. வாசலில் கழற்றி போட்டிருந்த காலணியை அணிந்துகொண்டே மீண்டும் பார்க்க அவர் தேடுவது தன்னை தான் என உணர்ந்த மகா அவரின் மிக அருகில் தான் நின்றிருந்தாள்.
“எல்லார்க்கும் துணையா இருப்பா ஆண்டவா…” என்று வேண்டிக்கொண்டே விறுவிறுவென அவரின் வீட்டிற்குள் சென்று மறைய அதை பார்த்தபடி மகா மீராவின் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டாள்.
கோகிலா சொல்லியதை போலவே மீராவுடன் அந்த சாமியாரை பார்க்கக் செல்ல உடன் தரணிதரனும் வந்துவிட,
“நீங்க முன்னாடியே வந்திருக்க வேண்டாமாம்மா?…” என்றார் அவர் அவர்களிடம்.
ஆம், காலம் கடந்திருந்தது. கண்ணை மறைத்து விதி ஒருபுறம் விளையாட, சதி ஒருபுறம் அரங்கேற உடன்பட்டவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ராகவியை தேடிக்கொண்டிருந்தனர்.
அருகில் இருந்தும் சூழப்பட்ட இருளின் பிடியில் ராகவி இருக்குமிடம் ஒருவருக்கும் புலப்படவில்லை.
எல்லாம் தெரிந்திருந்த ஆத்மாவோ ஆற்றாமையில் அலறி துடித்துக்கொண்டிருந்தது.
இனி நடந்தேறபோகும் பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டிய கட்டாயம். விளிம்பு நிலையில் நின்றனர் உறவுகள்.